Monday, May 25, 2020

மாடு கட்டினேன்

எடேய் மாடு படியடா, தந்தை மகனிடம் சொல்வார்.
அடேய் மாடு படியடா, ஆசிரியர் மாணவரிடம் சொல்வார்.
செல்வம் பெருகும் படித்தால் என இருவரும் வளர்ச்சி நோக்கிச் சொல்வர்.
மாடு அல்ல மற்றையவை என்றவர்
கேடில் விழுச்செல்வம் கல்வி என்றார்.
மாடு என்றாலே செல்வம் என்று பொருள்.
மாடு என்றால் கல்வி என்றும் பொருள்.
புலர் காலை. கருக்கல் பொழுது.
அடேய் நிலம் வெளிச்சிட்டதடா! தம்பி எழும்படா, வாடா. ஆச்சியின் குரல் என்னைத் துயில் எழுப்பும்.
எனக்கு ஆறு அல்லது ஏழு வயது. ஆச்சிக்கு 55 அல்லது 60 வயது.
எம் தந்தையாரின் தாயாரை ஆச்சி என்று அழைப்போம். அவர் மேல் சட்டை போட்டதை நான் கண்டதே இல்லை. குறுக்காகக் கட்டுவார் அல்லது சேலையின் நுனியைத் தோளில் போடுவார்.
ஆளுக்கு ஒரு கடகத்தைக் கையில் எடுப்போம். படலையைக் கட்டவிழ்ப்போம். நேரே வயலுக்குப் போவோம்.
இருபத்தைந்து பெரிய வெள்ளை நிறக் கற்கள். கல்லில் ஓட்டை இருந்தால் அதற்குள்ளாகக் கயிறு விட்டு முடிச்சு. அல்ல வெனில் கல்லுக்குக் குறுக்கே கயிறு கட்டி முடிச்சு.
கயிற்றின் மறுமுனையில் உருவு தடம். ஒவ்வொரு உருவு தடத்திலும் ஒவ்வொரு மாட்டின் ஒரு முன்னங்கால்.
ஆச்சி மறைவு தேடி வயல் வரப்புக்குள் போய்விடுவார். ஒவ்வொரு உருவு தடமாக இளக்குவேன்.
தாமாகக் காலை எடுக்கும் மாடுகள் ஒவ்வொன்றாக் கலைந்து நேரே குளக்கரைக்குப் போவன.
கடகத்துள் மாட்டுச் சாணத்தை அள்ளிப் போடுவேன். அதற்குள் ஆச்சியும் வந்துவிடுவார். அவரும் தனது கடகத்துள் மாட்டுச்சாணங்களை அள்ளிப் போடுவார். இரண்டு மூன்று குவியல்கள் ஆக்குவோம்.
கீழ்வானத்தில் தொலைவில் பனம் கூடல் வழியே மஞ்சள் அரை வட்டம் தெரியும். சிறிது சிறிதாக அந்த அரை வட்டம் முக்கால் வட்டம் ஆகி முழு வட்டம் ஆகும்.
கதிர்கள் சிதறி முகில்களின் பின்புறத்தை ஒளிமயமாக்கும். கீழ்வானம் எங்கும் மஞ்சள் வண்ணம். மஞ்சள் திரையில் வெள்ளை முகில்கள் மிதந்து காற்றோடு மெல்ல மெல்ல நகரும்.
நகரும் முகில்கள் ஊடாக ஒளிக்கீற்றுக்கள் சிதறும். அந்த ஒளிக்கீற்றுகளில் ஒழுங்கு இல்லாவிட்டாலும் அழகு மிளிரும்.
காலைக் கதிரவனின் எழுச்சி. ஒழுங்கற்ற ஒளிச்சிதறல். முகில்களின் நகர்வு. இவற்றைப் பார்த்தவாரே சாணங்களை அள்ளிக் கடகத்துள் சேர்ப்பேன்.
சில நாள்களுக்கு முன்பு குவித்து இருந்தேன். வறண்டு இருந்தன சாணங்கள். வறண்ட சாணத்தை உடைத்துத் தூளாக்கி வயலில் பரவுவேன். சாணி தட்டியாச்சா? தானும் சாணி தட்டியவாறே ஆச்சி கேட்பார்.
வெற்றுக் கடகங்களுடன் வள்ளைக்குளம் செல்வோம். ஆச்சி குளத்தில் நீச்சல் அடிப்பார். நான் இடுப்பு எட்டும் தண்ணீரில் நின்றவாறு உடலைத் தேய்த்துக் குளிப்பேன்.
பிள்ளையாரிடம் செல்வோம் வாயிலில் குடுவைக்குள் திருநீறு இருக்கும். அள்ளி நெற்றியில் பூசுவேன் ஆச்சியும் பூசுவார். சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் நீர் தெளித்து சந்தனம் குழைத்து நெற்றியில் இடுவேன். நெல்லி மரத்தில் இலையும் புன்னை மரத்தில் பூவும் எடுத்துப் பிள்ளையாரை வழிபடுவோம்.
படலையைத் திறந்து வீட்டுக்குள் வருவேன். அக்காவுக்குத் தலைவாரிக் கொண்டிருப்பார் அம்மா. எனக்கு உடைகள் தயாராக இருக்கும். அணியச் சொல்வார். அப்பாவோ வெள்ளுடையில் தேநீர் அருந்துவார். ஈருருளியில் தன் ஆசிரியர் தொழிலுக்கு 16 கிமீ மிதிக்கப் புறப்படுவார்.
இன்று காலை மாடுகளுடன் நின்றேன். நேற்று ஈன்ற தவலைகள் கன்றுகள் நாம்பன்கள் நாகுகள் பசுக்கள் எருதுகள் ஆக 175 மாடுகள் என் வயல் பட்டிக்குள்.
என் 79 ஆவது வயதில் 72 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அசை போட்டவாறே படங்கள் எடுத்துக்கொண்டேன்.
அக்காலம் இரண்டாம் உலகப் போர் முடிந்த காலம். இக்காலம் தீநுண்மிப் போர் நடக்கும் காலம்.

வெறும் தட்டு. வெறும் வாழை இலை.
சாப்பிட்டு முடித்த பின் தட்டில் அல்லது வாழை இலையில் இருக்கக்கூடியவை கறிவேப்பிலை மிளகாய் முருங்கைச் சக்கை போன்றவையே!
ஒரு பருக்கை சோறு வீணாக்கக்கூடாது. உணவாக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்த காலத்தில் பழகியவை.
யேர்மனியில் உணவு விடுதியில் சாப்பிட்ட தட்டில் மீதம் வைத்தாலோ விட்டுச் சென்றாலோ தண்டம் என்கிறார்கள்.
வேளாண்மை செய்வோருக்கு உணவின் அருமை தெரியும். ஒவ்வொரு நெல் மணியையும் உற்பத்தியாக்க உழவு உரம் விதைப்பு அறுவடை சூடு மிதித்தல் எனத் தொடர்ச்சியாக வேளாண்மை செய்வோர் கடும் உழைப்பாளிகளாக இருப்பர். முயற்சியாளர்களாக மாறுவர்.
நிலத்துக்கு மேலே பயன்தரும் செடிகளில் வரும் காய்கறிகள் ஆயிலென் நிலத்துக்கு கீழே விளையும் கடலை வெங்காயம் கிழங்கு ஆயிலென் உழைப்பும் முயற்சியும் இடைவிடாதன.
நெல் அறுவடை முடியும். சூடுகளை மிதிப்பர். மூடைகளாக நெல் வேளாண்மையர் வீட்டுக்குப் போகும். சூடு மிதித்த கதிர்ப் பாய்கள் சுருளும். வயலில் காய்ந்த அடிக்கட்டைகள் மிஞ்சும்.
என் தந்தையாருக்கு ஒன்றுவிட்ட அக்கா. பெயர் முத்தம்மா. முத்து மாமி என நாங்கள் அழைப்போம். கடகம் ஒன்று எடுப்பார். வெயில் தலையில் சுடாமல் இருக்கச் சேலையால் மூடிக் கொள்வார். அறுவடை முடிந்து சூடும் மிதித்த வயல்களுக்கு செல்வார். குந்தியவாறே அரக்கி அரக்கி நகர்வார். கடகத்துள் உதிர்ந்த கதிர்கள் சிதறிய நெல்மணிகள் யாவையும் சேகரிப்பார். இரண்டு மூன்று நாள்கள் இவ்வாறு தொடர்வார். அவர் வீட்டில் ஒரு மூடை நெல் சேர்ந்துவிடும்.
விளைந்த நெல்லில் ஒரு மணியை எனும் வயலுள் விடக்கூடாது என்ற வீறாப்பு.
இன்று காலை பின் கதவைத் திறந்தேன். என் வயலுள் ஒருவர் வாளியுடன். சென்று பார்த்தேன். முத்து மாமியின் நினைவுகள். யேர்மனியில் வீணாக்கும் உணவுக்கு தண்டம் அறவிடுவராம்!

No comments: