Monday, May 25, 2020

மன்னாரின் உடன் பிறப்புகளே

மன்னார் மாவட்டத்தில் வாழும் 
என் உயிரினும் மேலான சைவத்தமிழ் உடன்பிறப்புகளே

சிவசேனை அமைப்பின் பொறுப்பாளராக 
மறவன்புலவு சச்சிதானந்தன் உங்களுக்கு எழுதுகிறேன்

கண்ணியமாகக் கருத்துத் தெரிவிக்கும் கடமை வீரர்
கண்ணியமாக எழுதுமாறு கயவரைக் கேட்கும் திண்ணியர்

என் அன்புக்கும் மதிப்புக்கும் பாசத்துக்கும் உரிய சைவ உடன்பிறப்பு திரு செல்வகுமாரன் அவர்கள்

மன்னாரின் தான் சார்ந்த அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து உதவிகள் பெற்று தரவேண்டும் அதற்காக எனது தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டும் என என் பெயர் சுட்டிக் குறிப்பை சிவமயம் குழுமத்தில் எழுதி இருந்தார்

மன்னார்ச் சைவர்களின் கடைநிலை வாழ்வு காண்பேன்
கழிவிரக்கம் கொள்ளுவாரும் இல்லையே என ஏங்குவேன்

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்திலுள்ள சைவ ஆர்வலர்களையும் அன்பர்களையும் சந்தித்து உரையாடிக் குறை கேட்டு குறை நீக்கும் என் அறிவுக்கு எட்டிய கருத்துக் கூறி வருகிறேன்

எனக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உண்டு என்றார் திரு செல்வகுமாரன். 62 நாடுகளுக்குப் பயணித்து இருக்கிறேன். 23 அரசுகளுக்குப் பணிபுரிந்து இருக்கிறேன். எங்கெல்லாம் சென்றேனோ அங்கு என் உயிரும் உடலும் இருக்கையில் என் உள்ளமோ இலங்கையிலேயே இருக்கும்.

இலங்கைச் சைவத் தமிழர்களுக்காக அரசுகளை உதவக் கேட்டிருக்கிறேன். சைவத் தமிழரல்லாத ஆர்வலர்கள்க் கேட்டிருக்கிறேன். இந்து அமைப்புகளைக் கேட்டிருக்கிறேன். தமிழ் அமைப்புகளைக் கேட்டிருக்கிறேன்.

உமா மகேஸ்வரன் தலைமையில் ஆறு பேர் மொரிசியஸ் சென்றனர். அரசின் உதவி பெற்றனர். இணைப்புப் பாலம் ஆனேன்

ஆர் சம்பந்தன் தலைமையில் இருவர் ஏமன் அரசின் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். உதவி கேட்டனர். இணைப்பு பாலம் ஆனேன்.

மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, இராஜிவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய ஐந்து இந்தியப் பிரதமர்களுக்கு சைவத் தமிழருக்காக இணைப்புப் பாலமாக ஆனேன்.

அப்துல் கலாம் யாழ்ப்பாணம் வருகிறார். பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இந்துக் கல்லூரியில் உரையாற்றுகிறார். அக்காலத்தில் நான் ஆத்திரேலியாவில் இருந்தேன். என்னுடைய நண்பர் மறவன்புலவு க சச்சிதானந்தன் எங்கே? என இரு கூட்டங்களிலும் உரையாற்றுகையில் கேட்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் தொடர்பாக இருந்திருக்கிறேன். எனக்காக எதுவும் கேட்டதில்லை. இலங்கை தமிழர்களுக்காகக் கேட்காத காலப்பகுதி, கேட்காத தலைவர், இல்லை என்னும் அளவிற்குத் தொடர்புகளை வளர்த்து உங்களுக்காக்கி இருக்கிறேன்.

சிங்கப்பூர் வெளிநாட்டு அமைச்சர் திரு இராசரத்தினம் இலங்கை வந்த பொழுது அவருக்கு முழுக்க முழுக்க இந்து சமய முறைப்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்புக் கொடுத்தோம். 

இலங்கைத் தமிழர்களுக்காகச் சிங்கப்பூர்ப் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் தொடர்ச்சியாக் குரல் கொடுத்து வந்தமைக்கு திரு இராசரத்தினம் அவர்களுடன் இலங்கைச் சைவத் தமிழர்கள் சார்பில் நான் கொண்ட தொடர்புகளும் காரணம்.

மலேசியாவில் சிங்கப்பூரில் ஆத்திரேலியாவின் இங்கிலாந்தில் இந்தியாவில் அமெரிக்காவில் மொரீசியசில் சீசெல்சுஇல் இந்து மாநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். 

200 ஆண்டுகளாகச் சைவத் தமிழர் வாழும் சீசெல்சு நாட்டில் முதல் முதலாக அருள்மிகு பிள்ளையார் கோயில் ஒன்றை அமைப்பதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தேன். அரசு வானொலியில் தமிழ், அரசுத் தொலைக்காட்சியில் தமிழ், பொங்கலுக்கும் தீபாவளிக்கும் விடுமுறை என சீசெல்சு நாட்டில் சைவ தமிழர்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்தேன்.

இவற்றையெல்லாம் பட்டியலிடுவது உங்களிடம் நான் பாராட்டுப் பெற அன்று. எங்கெங்கெல்லாம் இவ்வாறு சென்று பணிபுரிந்தேன், தொடர்புகளை வைத்திருந்தேன், இன்றுவரை அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் என்னோடு தொடர்பாக இருக்கிறார்கள், நல்லெண்ணம் பேணுகிறார்கள், என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே.

கடந்த நான்கு ஆண்டுகளாக மன்னாருக்கு நான் அழைத்து வந்த வெளிநாட்டவர்கள் 
ஆத்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் 
கனடாவைச் சேர்ந்தவர்கள் 
இந்தியாவின் மராட்டியம் கோவா கர்நாடகம் கேரளம் வங்காளம் மேகலாயா பீகார் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 
மலேசியாவைச் சேர்ந்தவர்கள். 
சுவிட்சலாந்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களை அழைத்து வந்தேன். மன்னாரைக் காட்டினேன், சென்றேன், என்றில்லாமல் அழைத்து வந்த ஒவ்வொருவரையும் மன்னாரில் உள்ள சைவ ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்தேன். திருக்கேதீச்சரத்தில் நான்கு கூட்டங்கள் நடந்தன. மன்னாரில் ஒரு கூட்டம் நடந்தது.

எட்டு அடி உயரமான திருவள்ளுவர் சிலை ஒன்றை அன்பளிப்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இந்தியாவில் இருந்து வரவழைத்து நிறுவினேன்.

மன்னாரின் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு நந்திக்கொடி, சைவ  வழிபாட்டு நூல், எனத் திட்டமிட்டு உலக இந்துக்கள் உதவ முன்வருகிறார்கள். 2500 நந்திக் கொடிகளை அன்பளிப்பாகத் தந்துள்ளார்கள்.

2500 தடிகளைத் தாருங்கள் 
2500 அடித்தளங்களை அமையுங்கள் 
ஒவ்வொரு வீட்டிலும் கட்டுவோம் எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்!!

இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த இந்து மாநாட்டுக்கு முருங்கனிலிருந்து திரு தினேசுவரனை, அவருக்கு எந்தச் செலவும் இல்லாமல், அனுப்பி மீட்டேன்.

இந்த நாடுகளில் இருந்து வந்தார்கள். மன்னாருக்கு உதவ நுழைந்தார்கள். உங்களோடு பேசினார்கள். நான்காண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது

திருக்கேதீச்சர வளைவு உடைத்த பொழுது இந்திய அரசின் இந்துப் பணித் தொடர்பாளருள் அனைத்துலக பணி இணைப்பாளரான சுவாமி விக்ஞானந்தா தில்லியிலிருந்து கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையின் மாதிரி வரவை எழுதிக் கொடுத்தேன்.

திருக்கேதீச்சரத்தில் எஞ்சிய கருங்கல் பணிகளை முடித்துவைக்கத் தாமே முன்வந்த நன்கொடையாளர்கள் குறித்துச் சபைக்குச் சொல்லியிருக்கிறேன். ஊழலற்ற வெளிப்படையான அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட  மன்னாரைத் தாயகமாகக் கொண்ட தொண்டர்கள் சபையைப் பொறுப்பு எடுத்தால் கொழும்பை மையமாகக் கொண்டு இராமல் திருக்கேதீச்சரத்தை மையமாகக்கொண்டு  சபை  செயற்பட முன்வந்தால் அந்த நன்கொடையாளர்கள் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

இலங்கை முழுவதும் உள்ள முகமதியர் கிறித்தவர் புலம்பெயர்ந்து வாழும் கிறித்தவர் என்மீது தாங்கொணாத சினம் கொண்டுளர். கடந்த நான்காண்டுகளில் சிவசேனையின் பணி அவர்களின் கனவிலும் நனவிலும் அச்சத்தை கொண்டுவந்துள்ளது.

இலங்கையில் சமய நல்லிணக்கம் உள்ளதா? சமயம் சார்ந்து மனித உரிமைகள் பேணுகின்றனரா? என்பவற்றையெல்லாம் அறிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழு இலங்கைக்கு ஒருவரை அனுப்பியது.

அவரது அறிக்கையை 2019 மார்கழியில் எழுதிக் கொடுத்தார். 20 20 பங்குனியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் உறுப்பினர் அனைவருக்கும் அந்த அறிக்கையைக் கொடுத்தனர்.

மதமாற்றத்திற்கு எதிராக சைவர்கள் மீதான கிறித்தவ முகமதிய மேலாதிக்கத்தை உடைத்தெறிய இலங்கையில் சிவ சேனை ஆற்றுகின்ற பணிகளை அந்த அறிக்கையின் 33ஆவது பந்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். உங்கள் அனைவரின் பணிகளை ஐநா அமைப்பிலேயே கூறுகிறார்கள்.

இவ்வளவு தொடர்புகளைக் கொண்டு வந்தேனே? இவ்வளவு பேருக்கு அறிமுகப்படுத்தினேனே? பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தேனே? மேலும் பல திட்டங்களை வைத்து இருக்கிறேனே?

ஒலி வேண்டுமானால் இரு கைகளும் அல்லவா தட்ட வேண்டும்? ஒருகையால் தொடர்ந்து வீசிக்கொண்டால் ஒலிக்குமா?

இந்தத் தொடர்புகளை வளர்க்க உலக இந்துக்களை மன்னாருக்கு தொடர்ச்சியாக கொண்டுவந்து மன்னாரைச் சிவபூமியாக நிமிர்த்த மன்னாரிலுள்ளோர் மனம் உவந்து ஒத்துழைக்க வேண்டும் அல்லவா.

உங்களிடமிருந்து போதுமான ஆதரவு எனக்குக் கிடைக்கவில்லை என்று அடிக்கடி உங்களிடம் சொல்வேன்.

தலைமன்னாரில் ஆச்சிரமம் அமைக்க வங்காளத்தில் இருந்து வந்தார்கள் 
மாந்தை மேற்கில் ஆச்சிரமம் அமைக்கக் கர்நாடகத்தில் இருந்து வந்தார்கள் 

மன்னாரில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் இன்றைக்கு கத்தோலிக்கர் அஞ்சும் அளவிற்கு முகமதியர்கள் வியக்கும் அளவிற்கு சைவர்களின் சிவபூமியாக நிமிர்ந்திருக்கும் மன்னார்.

என் மீது அன்பும் பாசமும் மதிப்பும் கொண்டு என்னை அழைத்த திரு செல்வகுமாரனாருக்கு நோக்கம் சிறந்தது. அவரது நோக்கம் நிறைவேற நான் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் மன்னாரில் உள்ள சைவ ஆர்வலர்கள் முன்வருவார்களா?

No comments: