Sunday, July 12, 2020

வன்னி மண் தந்த வாழ்வு

வன்னி மண் தந்த வாழ்வு
இந்த மண். இந்தக் காற்று. இந்த வானம். இந்த நீரோடை. இதில் பூத்த மக்கள். மலர்த்து விரிந்த பண்புகள். சிறந்து முகிழ்ந்த இயல்புகள். காலம் காலமாகக் கூர்மையாகி வந்த கற்பனைகள்.

மண்ணோடு கலந்த நம்பிக்கைகள். மனத்தைச் செம்மையாக்கிய நெறிகள். வாழ்வுக்கு இனிமை சேர்த்த தோழமைகள். தோழமைகள் முகிழ்த்ததால் காதல் நெறி.

பிறந்தோம். தமிழ் மொழி பயின்றோம். பின்னெல்லாம் காதலில் சிறந்தோம். சிவன் சேவடியே சேர்ந்தோம். (காரைக்காலம்மை)

என்ன இல்லை? என்ன வேண்டும்? எது குறை? எல்லாமே பெற்றோம். எதுவுமே குறையில்லை.

புறத் திணிப்பு
நீ முட்டாள். நீ மடையன். நீ அறிவில்லாதவன். என்னைப் பார். என் வளர்ச்சி பார். என் உயர்ச்சி பார்.

உன் வாழ்வியலைக் கைவிடு. பண்பாட்டைப் புறந்தள்ளு. நெறிகளை ஒதுக்கி வை. என் பின்னே வா. என்னைப் பின்பற்று. நான் வாழ்வு தருவேன். ஒளி ஏற்றுவேன். நெறி காட்டுவேன்.

இவை கொடுமைகள். இந்த மண்ணின் மீது திணித்த, திணித்துக் கொண்டிருக்கிற, திணிக்கப் போகிற கொடுமைகள்.

சவால்
வாழ்வதா? வீழ்வதா? சவால்களாக எதிர்கொண்டன. சந்திப்பதா? பணிவதா?

செய்வதா? செத்து மடிவதா? வினாக்களாக முன்னின்றன. பதிலடி கொடுப்பதா? படுத்து உறங்குவதா?

இவை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் முன்னுள்ள சவால்கள். தமிழும் சைவமும் காலம் காலமாக எதிர்கொள்ளும் சவால்கள்.

கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிய சவால். நீற்றறையில் அடைத்த சவால். யானையால் மிதித்த சவால். (அப்பர்)

திருமடத்தைத் தீயிட்டுக் கொளுத்திய சவால். (சம்பந்தர்)

ஈனர், எத்தர்
இவர்களை எத்தர் என்றோம், ஈனர் என்றோம் (சம்பந்தர்). இவர்கள் நெறிகள் இந்த மண்ணுக்கு ஏற்றதல்ல என்றோம். புறந்தள்ளினோம்.

புத்தராய்ச் சில புனைதுகில் அணிபவரை எத்தர் என்றோம். அல்லல் சேர் சமணரை ஈனர் என்றோம். நாத்தழும்பேற நாத்திகம் பேசியோரை விரட்டினோம். சவால்களைச் சந்தித்தோம். எத்தனை, ஈனனை, நாத்தழும்பானை ஓட ஓட விரட்டினோம். அனைத்து முனைகளிலும் அரண் அமைத்தோம்.

சோழர்
இந்த மண் ஈந்த நெறிகள். இந்த மக்கள் செதுக்கிய நம்பிக்கைகள். இந்த இயற்கை தந்த கற்பனைகள் மீண்டும் நமக்காயின. அடுத்த ஓராயிரம் ஆண்டுகள் நாம் அமைத்த அரண் நமக்குக் காப்பாயது. நன்றி சோழர்கள்.

முகலாயர்
700 ஆண்டுகளின் முன்னர், முகலாயர் அனுப்பிய மாலிக் கபூர் தமிழையும் சைவத்தையும் சிதைத்தான். கோயில்களை இடித்தான்.கொள்ளையடித்தான்.

சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலில் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழிபடமுடியவில்லை. மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக அடியவர் போகமுடியவில்லை.

யாழ்ப்பாண அரசு
60 ஆண்டுகள் நீடித்த இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொணர்ந்தோம். மீண்டும் சைவம் நிலைபெற்றது. நெறிகள் மீளமைந்தன. தமிழப் பண்பாடு தன் இயல்பான வழித்தடத்தில் பயணித்தது. (நன்றி நாயக்கர் அரசு, யாழ்ப்பாண அரசு).

மேனாட்டார்
400ஆண்டுகளின் முன் திருக்கேதீச்சரம் கோயிலை அழித்து ஒழித்தனர். திருக்கோணேச்சரம் மண்ணோடு மண்ணாயது. ஈழத்தின் பண்பாட்டுச் செல்வத்தை, தமிழ்த் தேசியத்தை, மொழி வளத்தை, நம்பிக்கை நெறிகளைச் சிதைக்க மேனாட்டார் முயன்றனர்.

ஆடி அமாவாசை விரதம். வாழை இலையில் உணவருந்தி வெளியே வீசினால் தெரிந்துவிடும் என, விரதமிருந்து, வாழையிலை விரித்துச் சாப்பிட்டுக் கூரை இறப்பில் செருகிக் கைகழுவினோம்.

வீட்டுக்கு ஒரு மாடு இறைச்சிக்குக் கேட்டபொழுது, கொடுக்க மறுத்தோம். வீடுகளை விற்று, இரவோடிரவாக அக்கரை சென்றோம். புலம்பெயர்ந்து பண்பாடு பேணினோம், போற்றினோம்.

ஆறுமுக நாவலர்
காரைக்காலம்மை, அப்பர், தமிழ் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார் எனக் காலம் தந்த வீரர்கள், போராளிகள் வரிசையில் மண் காக்க, மண்ணின் மரபு பேண, மொழி காக்க, நெறி போற்ற வீறு கொண்டெழுந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.

காரைக்காலம்மைக்குக் காடவர்கோன். தமிழ் ஞானசம்பந்தருக்கு ஆதித்த சோழன். மணிவாசகருக்கு அரிமர்த்தனன். சேக்கிழாருக்குக் குலோத்துங்கன். ஆறுமுக நாவலருக்கு இராமநாதன்.

இராமநாதன்
கல்வி கற்ற தமிழருக்கு இலங்கைச் சட்ட சபையில் பேராளர் யார்? இராமநாதனை அனுப்புவோம் என்றார் ஆறுமுக நாவலர். கிறித்தோபர் பிரிட்டோவை அனுப்புவோம் என்றனர் ஆங்கில அரசின் அடிவருடிகள்.

1879 மே 22ஆம் நாள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுக நாவலர் ஆற்றிய உரையே இராமநாதன் சட்ட சபைக்குத் தேர்வாகக் காரணம்.

கிறித்தவத் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர். அதனால் பிரிட்டோவை நிராகரித்தார். இராமநாதனை ஆதரித்தார்.

சிவ சேனையின் கோரிக்கை

2016 ஐப்பசியில் சிவ சேனையின் தொடக்க நிகழ்வு. மூன்று முடிபுகளை எடுத்தோம். அவற்றுள் ஒன்று:

இலங்கையில் எந்த மூலையில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலிலும், ஊர்ச் சங்கமாயிலென், கிராம சபையாயிலென், உள்ளூராட்சிச் சபையாயிலென், மாகாண சபையாயிலென், நாடாளுமன்றத் தேர்தலாயிலென், குடியரசுத் தலைவர் தேர்தலாயினென், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாயிலென், தமிழ்ச் சைவ வாக்காளர், தமிழ்ச் சைவ வேட்பாளருக்கோ, தமிழ்ச் சைவ நன்மை பேணும் வேட்பாளருக்கோ, கட்சிக்கோ மட்டுமே எந்தச் சூழலிலும் எந்த நெருக்குவாரத்தையும் மீறி, எந்தக் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி வாக்களிக்கவேண்டும் எனக் கோருவது என முடிபு செய்தோம். ஒரு மனதாக முடிபு செய்தோம்.

இலங்கையில் அகில இலங்கை இந்து மாமன்றம் தொடங்கி, நூற்றுக் கணக்கான தமிழச் சைவ நலன் பேண் அமைப்புகள் உள. அவற்றுள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அமைப்புகளே இத்தகைய கோரிக்கையை வைக்கும் முடிபுகள் கொண்டன.

இந்த மண் தமிழ்ச் சைவ மண். புத்தர் முதன் முதலாக இலங்கையில் கால்வைத்த நாள் தைப் பூச நாள்.

தமிழும் சைவமும் மணக்கும் விழா நாள். தமிழர் இலங்கையின் தென்கோடியில் கூடயிருந்த நாள். முருகனுக்கு விழா நாள். (மகாவமிசம் படிக்க)

புத்தம் வந்தது, பாளி வந்தது.
சமணம் வந்தது, பிராகிருதம் வந்தது.
நம்பூதிரிகள் வந்தனர், வடமொழி வந்தது.
இசுலாம் வந்தது, அரபு வந்தது.
கிறித்தவம் வந்தது, இலத்தீன், போர்த்துக்கேயம், ஒல்லாந்தம், ஆங்கிலேயம் வந்தன.

தமிழ்ச் சைவர் இந்த வந்தேறிகளின் இலக்கு. மதம் மாற்றுவதே இந்த வந்தேறிகளின் இலக்கு. தமிழரின் மரபுவழித் தாயகத்தைத் தமதாக்குவதே இந்த வந்தேறிகளின் இலக்குஇவர்களின் மேலாதிக்க முயற்சியை மீறிச் தமிழும் சைவமும் வாழ்கிறது.

தமிழும் சைவமும் தொடர்ந்து வாழ, வளர, தேமதுரத் தமிழோசை பரவ, மேன்மை கொள் சைவ நீதி வழங்க, இவை பின்னிப்பிணைந்த தமிழ்த் தேசியம் செழிக்க, தமிழ்ச் சைவ வேட்பாளர்களுக்கே தமிழ்ச் சைவ வாக்காளர் வாக்களிக்கவேண்டும்.   

தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சிக்கே வாக்களிப்போம்.
வெல்வோம் வெல்வோம்.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: