Wednesday, February 24, 2016

மறவன்புலவில் நான்

மறவன்புலவில் நான் 04-11-2012
வீசு மென்காற்றும்
காலை இளவெயிலும்

இரவுத் தூறலும்
மின்னலும் இடியும்

மழைபெய்து வயல்களில்
கிளம்பிய வண்டல் வாசமும்

மழைபெய்து ஓய்ந்த நிலத்தில்
புதிதாய் அமைத்த
ஒற்றையடிப் பாதையும்

பசுக்கள் மனிதருடன்
பேசும் மொழியும்

என்னை அன்று பள்ளிக்கு
அழைத்துச் சென்ற
விரல்கள் இன்று சுருங்கியதையும்

என்னை அன்று தோளில் தூக்கியவர்
கால்கள் வீங்கியவாறையும்

வரலாற்றின் பதிவாக முதன்முதலாக
ஊருக்குள் வந்த மின்சாரத்தையும்

1941இல் ஆங்லேயக் காப்பிலிப் படை
அமைத்த நெடுந்தெருவுக்குத்
2010இல் முதன்முதல் அமைத்த
தார்க் கம்பள விரிப்பையும்

பார்த்தவாறும் கேட்டவாறும்
முகர்ந்தவாறும் சுவைத்தவாறும்
உணர்ந்தவாறும்

ஐம்பொறிகளும் ஐம்புலனுக்குத் தெரிவிக்கும்
செய்திகளால் உள்ளம் பூரிக்க

அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையாருக்கு
நாளை முழுநிலா நாள் பொங்கலிட
மறவன்புலவில் உள்ளேன் ஐயா!!


No comments: