Wednesday, December 07, 2016

செயலலிதாவின் இறுதி நிகழ்வில் நான்

கார்த்திகை 21, 2047 (06.12.2016) சென்னை, இராசாசி மண்டபம்.
காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அவர்களுக்கு ஈழத் தமிழர் சார்பில் நேரில் அஞ்சலி.
அம்மையாரின் உடல் இருந்த இடம் அடைந்தேன். அவர்களின் கால்கள் இருந்த பக்கத்தில் நின்று வணங்கி அஞ்சலித்தேன். பால்நினைந்தூட்டும் திருவாசக வரிகள் சொன்னேன்.
துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் செயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன், அமைச்சர் பாண்டியராசன், மேனாள் அமைச்சர் பொன்னையன், வைகைச் செல்வன் என எனக்கு அறிமுகமான நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றேன்.
ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த துயரத்தைத் தெரிவித்தேன். துயரமான இப்பொழுதில் ஈழத் தமிழர் யாவரும் தமிழக மக்களோடு இருக்கிறார்கள் எனத் தெரிவித்தேன்.
வெளியேறும் வழியில் அமைச்சர் வெங்கையா நாயுடு, அமைச்சர் இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் இல கணேசன், பாசக தமிழகப் பொறுப்பாளர் முரளீதர ராவ், திண்டிவனம் இராமமூர்த்தி, குமரி அனந்தன், அம்மையாரின் ஆலோசகரும் தமிழகத்தின் மேனாள் காவல்துறைத் தலைவருமான இராமானுசம், என எனக்கு நன்கு அறிமுகமான அன்பர்கள் யாவரிடமும் ஒவ்வொருவராகச் சென்று ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துரைத்தேன்.
ஊடகத்தார் அரங்கில் நான்கு மணித்துளிகள் கருத்துரைத்தேன். ஒவ்வோர் ஈழத் தமிழர் நெஞ்சமும் கனத்திருப்பது, கண்கள் குளங்களாகி இருப்பது, செயலலிதா அம்மையார் சட்டசபையில் அண்மைக் காலங்களில், ஐநா மனித உரிமை, பொது வாக்கெடுப்பு, தமிழீழம் அமைதல் தொடர்பான தீர்மானங்களை இயற்றிமைக்கு நன்றியும் கடப்பாடும் உடையராய் இருப்பது என விளக்கினேன். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் நலம் பேணிய வரலாறு சொன்னேன். தொடர்ந்தும் அதிமுக ஈழத் தமிழர் நலம் பேணும் எனவும் கூறினேன்.

No comments: