Thursday, December 15, 2016

அப்துல் கலாம் கனகசுந்தரம்பிள்ளை

13.12.2014 மாலை 1600 மணி.
இராமேச்சரம் நடுத்தேரு, 14ஏ எண் இல்லம்.
சிவத்திரு பட்சி வேங்கடசுப்பிரமணிய சாத்திரியார் இல்லம்.
அப்துல் கலாமின் உடன் வகுப்பு மாணவர் பட்சி சாத்திரியார்.
அப்துல் கலாமுக்குக் கணிதம் கற்பித்த யாழ்ப்பாணத்தவர் கனகசுந்தரம்பிள்ளை பற்றிய விவரங்களைக் கேட்க அவரிடம் சென்றேன்.
நடுத்தெருவின் மேற்கே கோடிலிங்க சாத்திரியார் இல்லத்தில் அக்காலத்தில் சாமியார் பள்ளி என்ற தனிவகுப்புப் பள்ளியை நடத்தியவர் கனகசுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணத்தவர்.
முழுக்கைச் சட்டை அணிந்திருப்பார், வேட்டி கட்டியிருப்பார்.
உச்சி பிரித்துத் தலைவாரி இருப்பார். திருமணமாகாதவர்.
புலர் காலை கணித வகுப்புகள் நடத்துவார். அந்த வகுப்புகளில் அப்துல் கலாம் மாணவர். சாத்திரியார் வேதம் படிக்கப் போனதால் அப்துல் கலாமுடன் கணக்கு வகுப்புகளுக்குப் போவதில்லை.
நடுத்தர வயது கடந்து 50 வயதளவில் காவி தரிக்கத் தொடங்கிய கனகசுந்தரம்பிள்ளை, சாமியாராகி வடக்கே போனதால் சாமியார் பள்ளியும் மூடப்பட்டது.
கனகசுந்தரம்பிள்ளையைப் பற்றிய தகவல்களைத் தரக்கூடியவர் இப்பொழுது உயிரோடு அப்துல் கலாம் மற்றும் தன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்றார் சாத்திரியார்.
கனகசுந்தரம்பிள்ளை பள்ளி நடத்திய கோடிலிங்க சாத்திரியார் இல்லத்தில் தவமணிதேவி வாழ்ந்தவர். 1941இல் திரையான வனமோகினி திரைப்படமே இணுவில் சிவாச்சாரியார் பரம்பரையினரான தவமணிதேவிக்குப் புகழைத் தேடித்தந்தது.
கனகசுந்தரம்பிள்ளையும் இணுவிலைச் சேர்ந்தவரோ? வேறெந்த ஊரவரோ?

No comments: