Thursday, February 23, 2017

2016

24 தை 2047 (07.02.2016) ஞாயிறு
சென்னை திருவான்மியூர் கலாசேத்திராக் கலை அரங்கம்.
கலாசேத்திரா அறக்கட்டளை மற்றும் சுருதி அமைப்பு நடாத்திவரும் கலை விழா.
பிரியா முரளி, ரோசா கண்ணன், அசுவதி, சிறீகாந்தர் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி் மரபு. சென்னையின் மிகச் சிறந்த பரத நாட்டியக் கலைக் குழு.
புல்லாங்குழல் வாசித்த யுவகலாபாரதி சுருதி சாகரின் குழலிசையில் எப்பொழுதும் மயங்குவேன். சிறீகாந்தரின் குரலிசை, சசிரேகா பாலசுப்பிரமணியன் நட்டுவாங்கம் என அசத்தினர்.
திரு. முரளி, திரு. பாலசுப்பிரமணியன். திரு. சுருதி சாகர் திரு. சீறீகாந்தர் ஆகியோருடன் படத்தில்


மாசி 1, 2047 (13.02.2016) சனி, காலை 1100 மணி
சென்னை எழும்பூர் எனதில்லம்.
1948உக்குப் பின்னர், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்ற ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த
(1) அறப் போர்களை வரிசையாக்கி,
(2) 1961 பிப். 21 தொட்ங்கி ஏப். 17 வரை நீடித்த அறப்போரை எடுத்துக் கூறி,
(3) அதில் நான் அஞ்சல் கொண்டோடிப் 'பொடியனாக', மல்லாகம் வழக்குரைஞர் நடராசா அவர்களின் தொண்டனாக, என் 18 வயது முடிந்த நாள்ககளில் இருந்ததை நினைவுகூர்ந்து,
(4) அறப்போரை ஒவ்வொரு முறையும் வன்முறையால் அடக்க முயன்ற அரசு சார்பாளர்களைச் சுட்டி,
(5) அரச பயங்கரவாதமே தமிழரை எதிர் வன்முறைக்குத் தூண்டியதைச் சாட்சியங்களாக்கி,
(6) அறப்போராட்டங்களே பிரிந்த தமிழருள் ஒற்றுமைக்கு வழிவகுத்தன எனவும் கூறி,
புதிய தலைமுறைத் தொலைக் காட்சியினருக்குப் 10 மணித்துளிகள் செவ்வியளித்தேன.

1961 அறப்போர் முற்றுகையின் தொடக்க நாளை, 55 ஆண்டுகளுக்குப்பின் நினைவு கூர்ந்து, 2016 பிப். 21ஆம் நாள் காலை 0600 மணிக்கு இச் செவ்வி புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். பார்க்க, கேட்க.
அன்று எனதில்லம் வந்தவர், மலேசிய இந்தியக் காங்கிரசு சார்பில் உள்ளூராட்சி மன்றம், மாநிலச் சட்டமன்றம், நாட்டின் நாடாளுமன்றக் கீழவை, மேலவை, நாட்டுக்காக ஐநா அவைக்கு என யாவிலும் உறுப்பினராகி, மக்களுக்காகத் தொண்டாற்றி மலேசிய ஊரக வளர்ச்சி அமைச்சராகத் திகழ்ந்த பெருமகனார் தான்சிறீ கருணாகரன் குமரன் அவர்கள்.
மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாகி 60 ஆண்டுகள் நிறையும் நினைவு நாள் பெப் 15 என்பதால் அந்த நாளில் காலையில் 0600 மணிக்கு புதிய தலைமுறையில் ஒளிபரப்ப அவரின் 10 மணித்துளிச் செவ்வியையும் பதிந்தனர்.


மாசி 2, 2047 (14.02.2016) ஞாயிறு காலை 0900 மணி
சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் சந்து சிறீ இராம் திருமண மண்டம்.
சென்னை நகர மேனாள் மேயர் சா. கணேசனார் இல்லத் திருமணம். அவருக்குப் பெயரனுக்குத் திருமணம். கலந்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திரு. சா. கணேசனாரை 1986 தொடக்கம் அறிவேன். எனக்கு இனிய நண்பர்.
அறிஞர் அண்ணா அவரைச் சென்னையின் மேயராக்கினார். மொரிசியசு நாட்டுக்குப் போய் வந்தவர். அதனால் அங்குள்ள தலைவர்களை அறிவார்.
1992இல் என் அருமை நண்பரான போல் பெரெஞ்சே (அப்பொழுது அவர் மொரிசியசு நாட்டின் துணைப் பிரதமர்) சென்னை வந்த பொழுது, கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க விழைந்தார். கலைஞரிடம் நேரம் கேட்டு அழைத்துச் சென்றேன். அப்பொழுது சா. கணேசனாரும் உடனிருந்தார். கோபாலபுரம் கலைஞர் வீட்டு முன்னறையில் சா. கணேசனாருடன் போல் பெரஞ்சேயும் நானும் படத்தில் உள்ளோம்.
ஈழத் தமிழர் நல்வாழ்வில் ஆர்வமுள்ள சா. கணேசனார் ஈழத் தமிழருக்குச் சென்னையில் உதவியதால், சிறப்பாகச் சென்னை வானூர்தி நிலையக் குண்டு வெடிப்பில் கைதானோர் வெளிவரப் பிணை நின்றதால் இன்னல்களுக்கு உள்ளானவர்.

மாசி 3, 2047 (15.02.2016)
கொழும்பிலிருந்து வந்த செய்தி.
திரு. ரெசினால்டு கூரே வடமாகாண ஆளுனரார்.
அவர் எனக்கு நல்ல நண்பர்.
அவர் அழைத்து அவரது களுத்துறை இல்லம் சென்றேன்.
அவரும் மனைவியும் விருந்தோம்பினர்.
என்னுடன் வந்தவர் கைதடி நவபுரம் திரு. தங்கராசா.

2014இல் அவரது அமைச்சகத்தில் அவரைச் சந்தித்தேன்.
அதே அன்பு, அதே ஆர்வம்.
தொலைக்காட்சி, திரைப்படத்தில் நடித்த நாள்களை நினைவுகூர்ந்தவர் தன் இசைப்புலமையையும் தபேலா வாசிப்பதில் உள்ள தணியா ஆர்வத்தையும் கூறினார். தான் நடித்த சின்னத்திரைத் தொடர் குறுந்தட்டு ஒன்று எனக்குத் தந்தார்.
பொதுவுடைமைச் சிந்தனையுடன் இனவாதம் அறவே தொற்றாத பற்றாத சிங்கள அரசியல் வாதி. மேற்கு மாகாண முதலமைச்சராக இருந்தவராதலால் அதிகாரப் பரவலாக்கத்தின் குறைகளை நன்கறிந்தவர்.



மாசி 6, 2047 (18.02.2016) வியாழன்
சென்னை ஆள்வார்ப்பேட்டை நாரத கான சபைச் சிற்றரங்கம்.
2010இல் தில்லித் தமிழ்ச் சங்கம் விழாவுக்கு என்னை அழைத்தபொழுது, என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைக்குமாறு விதந்துரைத்தவர் யாராக இருக்கும்? என எனக்குள்ளே எழுந்த வினா.
விழா முடிந்தபின் என் வினாவுக்கு விடையைத் தெரிந்துகொண்டேன்.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர், கவிஞர், இசைவல்லுநர், திரைப்பட இயக்குநர், வினைத்திறன் ஆளுமைகளை அடையாளம் காண்பவர், அறிவுத் தேடலர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இனிய பண்பாளராம் இரவி சுப்பிரமணியம் அவர்களே என் பெயரை விதந்துரைத்திருந்தார்.
முன்பின் அறியாதவர், பார்த்துப் பேசித் தெரியாதவர், தில்லியில் முதன்முதலாக அவரைச் சந்திக்கிறேன். கார் வண்ணராய், கடும் உழைப்பாளராய், நிகழ்ச்சிகளின் திரை மறைவு இயக்குநராகிய அவரைச் சந்திக்கிறேன்.
அதற்குப் பின் பல சந்திப்புகள். ஒவ்வொரு சந்திப்பும் அன்னாரின் ஆற்றல், திறமை, வினைத்திட்பம், வினைநுட்பம், நெறியாள்கை யாவற்றின் எடுத்துக்காட்டு நிகழ்வுகள்.
எழுத்தாளர் செயகாந்தனைப் பற்றிய ஆவணப் படம், சேக்கிழார் அடிப்பொடி பற்றிய ஆவணப் படம், என அவரின் தொகுப்புகள் என்னை வியக்கவைத்தன. கவிஞர் திருலோக சீதாராம் பற்றிய ஆவணப் பட வெளியீட்டுவிழாவில் மீண்டும் சந்திக்கிறேன்.
ஆவணப்படம், குறும்படம் தயாரிப்போர் அன்னாரிடம் கற்றுக்கொள்ளவேண்டியன ஏராளம் ஏராளம். தோள் கண்டார், தோளே கண்டார் என்பான் கம்பன். பன்முறை பார்த்தாலும் அன்னாரின் முழுமையான கலைத்திறனைப் பிரித்துத் தனித்தனியாக உணர முடியாத கவிதை ஓவியம் அந்த ஆவணப் படம். பல்கலை வித்தகராய் இரவி சுப்பிமணியம் அவர்கள் அண்ணாந்து பார்த்தாலும் எட்டாமல் நிமிர்ந்து நிற்கிறார்.
தயாரிப்பில் பங்காற்றிய ஆளுமைகள், மேடையில் பேசிய ஆளுமைகள், அரங்கை நிறைத்த ஆளுமைகள் அவர்களுடன் கூனிக் குறுகினனாய் நானும் ஒருவனாய்.


மாசி 8, 2047 (20.02.2016) சனிக்கிழமை காலை 1000 மணி
சென்னை இராப்பேட்டைநல்வாழ்வு திருமண மண்டபம்.
இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு இரண்டும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கிப் பாராட்டிய முதல் தமிழாசிரியர் புலவர் ப. அரங்கநாதனார் நூற்றாண்டு நிறைவு விழா.
தியாகதுருகம் ஊரில் காந்தியடிகளை வரவேற்றவர், வினோபாவை வரவேற்றவர், ஆண் மக்கள் நால்வரையும் பெண் மக்கள் நால்வரையும் பெற்றவர், இவ்வெண்மரும் சேர்ந்து நூற்றாண்டு விழாக் கொண்டாடினர்.
பேராசிரியர் அரங்க இராமலிங்கம் எண்மருள் ஒருவர். எனக்குத் தமிழாசான். அவர் அழைத்தார் விழாவுக்குச் சென்றிருந்தேன்.


மாசி 11, 2047 (23.02.2016) செவ்வாய் மாலை 1530 மணி
சென்னை ஈஞ்சம்பாக்கம், விசீப்பியின் தங்கக் கடற்கரைச் சதுக்கம்.
திருக்குறள் தந்த திருவள்ளுவரை உலகமெலாம் கொண்டு செல்லும் ஆர்வத்தினர் விசீப்பி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியர், முதுமுனைவர், கவிச்சக்கரவர்த்தி, கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தென்னிந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் வி. ஜி. பி. சந்தோசம் அண்ணாச்சி.
குடிசையின் கோடியிலே ஒதுங்க இடம் கிடைக்காமல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கோடானுகோடிகளைக் குவித்து மாடமாளிகையில் வாழும் செந்தமிழர் வி. ஜி. பி. சந்தோசம் அண்ணாச்சி.
கந்தலராயிருந்த தமிழர் செல்வந்தச் செந்தமிழராய் மாறிய சிறப்புக்கு (from rags to riches) சந்தனம்மாள் பெற்றெடுத்த மக்கள், வி. ஜி. பி. உடன்பிறப்புகள் ஓர் அரிய எடுத்துக்காட்டு.
சைதாப்பேட்டையில் 1960களின் தொடக்க ஆண்டுகளில் வணிகம் தொடங்கிய இவர்கள், மர்பி வானொலிப் பெட்டியைத் தவணைக் கடனுக்குக் கொடுத்த காலங்களில் நான் இவர்களின் முன்னோடி முயற்சியைப் பார்த்திருக்கிறேன். சைதாப்பேட்டைப் பாலத்தின் நீள்சுவரில் மர்பி விளம்பரமும் இவர்கள் வணிகப் பெயரும் விளம்பரமாக நீண்டதைக் கண்டிருக்கிறன்.
கிழக்கே ஆத்திரேலியா சிட்னி தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரை பல நாடுகளில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்துத் திருக்குறள் பரப்பி வரும் திருத்தொண்டர் வி. ஜி. பி. சந்தோசம் அண்ணாச்சி.
அண்மையில் சென்னை வந்த தாய்லாந்து அரச குருவுக்கு இவர் கொடுத்தது வெள்ளிக் கவசத்திலானான 50 செமீ. உயரமான திருவள்ளுவர் சிலை.
தில்லி இராச பவனத்தில் இவர் கொடுத்து அப்துல் கலாம் திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கிறார். இன்றும் அங்குண்டு.
அத்தைகைய முயற்சியின் தொடர்ச்சியாக, கயிலாயம் முதல் கதிர்காமம் வரை பல்லின மக்களிடையே திருவள்ளுவர் சிலைகளை அமைக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். சில நூறு சிலைகளை வடித்து அகண்ட பாரதத்தில் அங்கங்கே அமைக்க அன்பளிப்பாகக் கொடுக்க உள்ளார்.
புகழ்பெற்ற சிற்பிகள் சானகிராமன், சீனிவாசன் இருவரும் மாதிரிச் சிலையை அமைத்து வருகிறார்கள். தமிழ் அறிஞர்களை அழைத்துச் சிலையின் மாதிரியைக் காட்டிக் கருத்துக் கேட்டார். பூவோடு நாராக என்னையும் அழைத்தார்.
245 செமீ. உயரமான சிலை அமைப்பு. 125 செமீ. அகலம் 195 செமீ. நீளமான 45 செமீ. உயரமான பீடத்தில் 200 செமீ. உயரச் சிலை. பார்த்து வியந்தேன். இலங்கைக்கும் சிலைகள் தாருங்கள் எனக் கேட்டேன்.


மாசி 13, 2047 (25.02.2016) வியாழன் காலை 1000 மணி
சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில்.
மாசி உத்தரம், திருவள்ளுவர் திருநாட் பூசனை.
பேரா. சாமி தியாகராசனாரின் அரும்பணி. ஆண்டுதோறும் திருநாட் பூசனை வழிபாடு. வழமைபோல அழைத்தார், சென்றேன். வழிபட்டேன். அன்பர்களோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் பகிர்ந்த நேரம்.



மாசி 19 2047 (02.03.2016) புதன் காலை
மின்னஞ்சலாக வந்த மீட்டுருவாக்கச் செய்தி.
அஃது அழைப்பிதழல்ல.
கண்ணுக்கு விருந்து, 
செவிக்குத் தேன்,
மனத்துக்கு ஒத்தடம்,
புண்ணுக்கு மருந்து.
புலமைக்குக் களன்
மறுமலர்ச்சிக்கு மறுமலர்ச்சி.

06.03.2016 யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்
புத்தக வெளியீட்டு விழா.
இணைப்பில் அழைப்பிதழ்.
கேட்க இனிக்கும் செய்தி.
இழக்காமல் மீட்டுருவாக்கும் முயற்சி.
இருப்பதைப் பேணும் முயற்சி.
காலத்தின் பெட்டகங்கள்.
கருத்துகளின் கருவூலங்கள்.
கற்பனைகளின் சிறகுகள்.
இலக்கியத்தின் மறுமலர்ச்சி
படைப்பாளிகளின் புறாக்கூடு
எழுத்துகளின் ஏட்டுக்குவியல்.
கோப்பாய் சிவத்தாரின் தந்தையார்
முதலாகப் புலமைக் களஞ்சியங்கள்
அதுவும் ஈழம் ஈந்த களஞ்சியங்கள்
பண்பாட்டுப் பேழைகள்
பரந்து பார்த்த உள்ளங்கள்
விட்டுச் சென்ற திறன்திரள்
இலக்கிய முதுசம் என்பேனா?
மண்ணின் விளைபொருள் என்பேனா?
வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
பாராட்டுகிறேன் புகழ்கிறேன்
பணிசெய்தார்முன் தலைபணிகிறேன்
தொய்யோம் தோற்கோம் தொடர்வோம்
வளமான மனிதம் நோக்கி வளர்வோம்.
எப்படி இப்படிச் சிந்தித்தீர்கள்.
இணையத்தில் உலவவிடுங்கள்
விலைகொடுத்து வாங்குவார்கள்
அமேசன் (amazon.com) அமைப்பினருக்குக்
காந்தளகம் சென்னை வழி விற்கலாம்
சசிரேகா tamilnool@tamilnool.com
உலகம் முழுவதும் சென்றடையும்
கேட்பவர்களுக்கு இணையமுகவரி சுட்டலாம்.
கிளிநொச்சியில் காந்தளகம் விற்றுத் தருவார்கள்
கமலராணி குணசிங்கம் 0776135602
விற்றால்தான் மீண்டும் இப்பணிகள் தொடரலாம்.


மாசி 22, 2047 (05.03.2016)
படங்கள் வழி நிழலாடும் நினைவுகள்.
1969 ஆனியில் தோக்கியா போனேன்.
அறிவியல் ஆய்வுகூடத்தில் பயிற்சிக்குப் போனன்.
சிங்கப்பூர் - என் அண்ணன் இல்லத்தாருடன்.
தாய்ப்பேயில் தங்கல்
தோக்கியோவில் 6 மாதமும் சைவ உணவு சமைத்தல்
6 மாதங்கள் தங்கினேன்.
யப்பான் மொழி பேசக் கற்றேன் (வேறு வழியில்லை)
யப்பானில் சுற்றினேன்.
ஒசாகாவுக்கு மிகை வேகத் தொடர்வண்டி,
அரண்மனை நகர் கியோத்தோ,
சக்காலினைக் காட்டிய ஒக்கைடோவின் வக்கனை,
நீல் ஆம்சுரோங்கர் நிலவில் இறங்கியதைத் தொக்கா நேரடி ஒளிபரப்பு,
தோக்கியோவில் 6 மாதமும் ஆய்வுகூடப் பணி
யப்பானிய மொழியில் என் ஆய்வுக் கட்டுரை
திரும்பும் வழியில்
1. கோலாலம்பூர் - பெரியப்பாவுடன் தங்கல்,
2. கடாரம் - மலேசிய இந்து இளைஞர் மாநாட்டில் பங்குபெறல்.

மாசி 27, 2047 (10.03.2016) வியாழக்கிழமை.
மணவையாரின் மகன் பேசுகிறேன்.
மங்கையர்க்கரசி அக்கா காலமானார்.
செய்தியை மருத்துவர் பகீரதன் சொல்லச்சொன்னார்.
1963 ஐப்பசியில் அமிர்தலிங்கம் இணையரை,
கொழும்பு, கறுவாக்காடு, ரோசுமீது இடத்தில் ஒருநாள் மாலை திருச்செல்வம் வீட்டில் முதன்முதலாகச் சந்தித்தேன். அவர்களைத் திருச்செல்வம் எனக்கு அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர்களோடு இடைவெளியற்ற தொடர்பு. பெரியவர் செல்வநாயகம் இல்லத்தில், யாழ்ப்பாணத்தில் என அமிர்தலிங்கம் இணையருடன் நெருங்கிய தொடர்பு.
இலங்கையின் பல பாகங்களில் நானும் அவர்களும் சந்தித்துக்கொள்வோம். மறவன்புலவுக்கு எனதில்லம் இருவரும் வருவர். யாழ்ப்பாணம் காந்தளகத்துக்கு இருவரும் வருவர். சென்னை இல்லத்துக்கு இருவருமாக வருவர்.
1977இல் என் அரசுப் பதவியைத் துறந்த பின், தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழு, தமிழர் பொருளாதார இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி யாவற்றிலும் என்னை முழுமையாக அமிர்தலிங்கம் சேர்த்தார்.
சென்னைக்கு வந்தபின் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவில் சேர்த்தார்.
அவரோடு எனக்குப் பல நிலைகளில் உடன்பாடு குறைவு. உமக்கென்ன அரசியல் தெரியும் எனப் பலர் முன்னிலையில் சில முறை என்னைச் சாடியுமுள்ளார். அதன் பின்னர் சாடிய அன்று மாலையே இருவரும் என் வீட்டுக்கு வந்து, அரசியலில் தடித்த தோல் வேண்டும், தன்னைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பார்.
1989இல் அமிர்தலிங்கத்தைக் கொன்றனர். நான் யாழ்ப்பாணம் விரைந்து இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். சென்னை திரும்பியதும் இறுதி நிகழ்வுக்கு ஏன் போனீர்கள் என என்னிடம் வலிந்து பேசியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
மருத்துவர் பகீரதனும் தாயார் மங்கையர்க்கரசியாரும் சென்னைக்கு வந்தால் என்னிடம் வருவர். காண்டீபனை எனக்கு நேரில் பழக்கமில்லை.
ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் மங்கையர்க்கரசியார் பங்கு பதிவுக்குரியது. அவரது பிரிவால் வாடும் காண்டீபன், பகீரதன் மருமக்கள் பெயரர்கள் யாவருடைய துயரத்திலும் பங்குகொள்கிறேன்.


07-10.03.2016
24, 27 மாசி 2047 (07,10/03/2016) திங்கள், வியாழன் இரு நாள்கள்.
திருஇடைச்சுரம், திருக்கச்சூர், திருக்கச்சிமேற்றளி, திருக்கச்சிஅநேகதங்காவதம், திருக்கயிலாயநாதர், காமாட்சி அம்பாள் கோயில்களில் வழிபாடு.
அமெரிக்கா, நியூசெர்சி திருமுறை அன்பர் விசுவநாதன் சுப்பிரமணியம் அவர்களுடன் வழிபாட்டுப் பயணம்.
'இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே' எனத் திருஞானசம்பந்தர் வியந்த (01078) திருஇடைச்சுரம். குன்றுகளின் நடுவே கற்சுரமாக அமைந்த கோயில்.
தெருவெங்கும் இரந்தார். சோறு கொணர்ந்தார், விருந்தளித்தார். சிவனார் சுந்தரருக்கு இரந்து விருந்தளித்த திருக்கோயில் திருக்கச்சூர். கீழே இரந்தீசர் குன்றின்மேல் மருந்தீசர் ஆக இரு கோயில்கள். சுந்தரர் பாடிய திருக்கோயில் (07031)
திருஞானசம்பந்தர் பாடலால் (பாடல் கிடைக்கவில்லை) திருமால் வரம்பெற்ற கோயில் திருக்கச்சிமேற்றளி. திருநாவுக்கரசரும் (04043) சுந்தரரும் (07021) பாடியன உள.
வடக்கே கேதாரம் செல்லும் வழியில் கௌரி குண்டத்தோடு அநேகதங்காவதம். கச்சியிலும் அநேகதங்காவதம். சுந்தரர் பாடிய (07010) திருக்கோயில்.
பல்லவன் நரசிம்மவர்மன் (பூசலார் நாயனார் மனக்கோயில் கட்டிய காலத்தில) கட்டிய (திபி 716-736, கிபி 685-705) திருக்கயிலாயநாதர் கோயில்,


ஆனி 2002 (யூன் 1971)
பசிபிக் கடலில் பலாவு தீவில்
ஐநா ஆலோசகராக அங்கிருந்தேன்.
பணிக்காகப் படகுச் சவாரி
ஐப்பசி 2014 (அக்தோபர் 1983) எகிப்து, கெய்ரோ
ஐநா ஆலோசகராகக் கெய்ரோவுக்குத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் (1979-1983) பயணித்தேன்.
பாலைவனத்தில் பிரமிடுகளின் அருகே
ஓய்வுக்கு ஒட்டகச் சவாரி.
நினைவில் நிழலாடும் படங்கள்

பங்குனி 7, 2047 (20.03.2016) ஞாயிறு
திருவனந்தபுரம் திரு. சந்திரசேகரன் நாயர் இல்லம் மற்றும் அருள்மிகு பத்மநாதசுவாமி திருக்கோயில்.
9 அருளாளர் அருளிய 301 பாடல்கள் கொண்ட.
ஒன்பதாம் திருமுறையைத் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தருமபுரம் ஆதீனத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.

பேராசிரியர் மலர்விழி கன்னடத்துக்குக் கொண்டுசென்றார். www.thevaaram.org பார்க்க
பேராசிரியர் சங்கரநாராயணன் ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றார். www.thevaaram.org பார்க்க
பேராசிரியர் சத்தியவாணி தெலுங்குக்குக் கொண்டுசென்ரார். www.thevaaram.org பார்க்க
பேராசிரியர் சிங்காரவேலன் ஓரிரு பதிகங்களை மலாய்மொழிக்குக் கொண்டுசென்றார். www.thevaaram.org பார்க்க.
சிங்கள மொழிபெயர்ப்பை மட்டக்களப்புக் கல்லடி திரு. வடிவேல் முடிக்கும் நிலையில் உள்ளார்.
திருவருள் துணையுடன் தருமபுரம் ஆதீனத்துக்காக நான் இதுவரை ஒருங்கிணைத்த பணிகள் இவை.
20.03 ஞாயிறு திருவனந்தபுரத்தில் திரு. சந்திரசேகரன் நாயர் இல்லத்தில் ஒன்பதாம் திருமுறையின் மலையாள மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொண்டேன். 301 பாடல்களையும் மங்கல மலையாளக் கவிதைகளாகத் தந்துள்ளார் திரு. நாயர்.
கேரளத்தில் புகழ் பெற்ற பதிப்பகம் இடிசி புக்சு http://www.dcbooks.com. கோட்டையத்தைத் தலைமை இடமாகக் கொண்டு உலகெங்கும் பரந்து வாழும் மலையாள மக்களுக்கு அருமையான நூல்களைப் பதிப்பித்து வழங்குபவர்கள் இடிசி புக்சு நிறுவனத்தார்.
ஏற்கனவே திரு. நாயரின் 3,000 பாடல்கொண்ட திருமந்திரம் மலையாள மொழிபெயர்ப்பை வெளியிட்டவர்கள்.
திரு. நாயரின் இல்லத்துக்கு இடிசி புக்சு பதிப்பாசிரியர் திரு. அரவிந்தன் வந்திருந்தார். மொழிபெயர்ப்பும் பதிப்பும் பற்றிக் கலந்துரையாடக் கோட்டையத்திலிருந்து வந்திருந்தார். ஒன்பதாம் திருமுறையின் மலையாள மொழிபெயர்ப்பையும் தருமபுரம் ஆதீனத்துக்காக இடிசி புக்சு பதிப்பகமே வெளியிட ஒப்பினார்கள்.
திருவாசகம் (658 பாடல்கள், www.thevaaram.org பார்க்க), ஒன்பதாம் திருமுறை (301 பாடல்கள் விரைவில் www.thevaaram.org தளத்தில்), பத்தாம் திருமுறை (திருமந்திரம் 3000 பாடல்கள்) முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தநிலையில் திருக்கோவையார் (400 பாடல்கள்) மலையாள மொழிபெயர்ப்பைத் தொடங்கத் திரு. நாயர் ஒப்பினார்.

பங்குனி 8, 2047 (21.03.2016) காரைக்குடி
கல்லுக்கட்டி கிருட்டிணா திருமண மண்டபத்தில்
கம்பன் விழா,
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் வழி கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்களின் பெருமுயற்சி.
தொடக்க நாளில் பங்கு கொள்ளும் பேறு எனக்கு.

24.03.2016
பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன்
காலை 1030 மணி.
அழைக்கிறேன் வாய்ப்பிருப்பின் வருக


பங்குனி 11, 2047 (24.03.2016) வியாழன்
சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் இலக்கியத் துறை

கம்போடியாவில் காரைக்காலம்மையார்.
மலேசிய அறக்கட்டளைச் சொற்பொழிவு


பங்குனி 12, 2047 (25.03.2016) வெள்ளி
சென்னை, ஈஞ்சம்பாக்கம், விசிபி தங்கக் கடற்கரை
இலங்கையில் 16 மாவட்டங்களில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவ 16 சிலைகளை அன்பளிப்பாக வழங்குகிறார் செவாலியார், கலைமாமணி முதுமுனைவர், தொழிலதிபர் வி சி சந்தோசம் அண்ணாச்சி.
2015 ஆவணியில் ஒருநாள் அவரிடம் கருத்துச் சொன்னேன், பஞ்சில் நெருப்புப் பொறியாகியது அவர் உள்ளம். உடனே செயலில் இறங்கினார்.
இலங்கையின் மாண்புமிகு கல்வி இராசாங்க அமைச்சர் கே எசு இராதாகிருட்டிணன் அவர்களிடம் ஒப்புதல் பெற்றேன். அவர் வழி்காட்டலில் இலங்கையில் திருவள்ளுவர் சிலைகளை ஏற்றுத் தம் செலவில் சிலைதாங்கிகளை அமைத்துத் திறப்புவிழா நடத்த ஒப்பிய 16 அமைப்புகள்.
01. பண்டாரவளை மத்திய கல்லூரி பண்டாரவளை
02. ஹைலண்ட்ஸ் கல்லூரி அட்டன்
03. கதிரேசன் மத்திய கல்லூரி தெரணியகல்
04. பரி. யோவான் தமிழ் மகா வித்தியாலயம் இறக்குவானை
05. கதிரேசன் மத்திய கல்லூரி நாவலப்பிட்டி
06. மாத்தளை இந்துக் கல்லூரி மாத்தளை
07. நால்வர் கோட்டம் கல்முனை
08. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், மட்டக்களப்பு
09. விபுலானந்த வித்தியாலயம், கட்டைபறிச்சான், திருகோணமலை
10. விசயரத்தினம் நடுவண் இந்துக் கல்லூரி, நீர்கொழும்பு
11. புத்தளம் இந்துக் கல்லூரி புத்தளம்
12. சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி உப்புக்குளம், மன்னார்
13. புளியங்குளம் இந்துக் கல்லூரி, புளியங்குளம் வவுனியா
14. முள்ளியவளை வித்தியாநந்தா கல்லூரி, முல்லைத்தீவு
15. கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், கிளிநொச்சி
16. தென்மராட்சிக் கலை மன்றம், சிவன்கோயில் வீதி சாவகச்சேரி
இச்சிலைகள் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தயாராகி வருகின்றன. வி சி சந்தோசம் அண்ணாச்சியுடன் நான் 25.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 1600 மணிக்குப் பணியைப் பார்த்தேன்.

பங்குனி 25, 2047 (07.04.2016) வியாழன்
கொழும்பு பத்தரமுல்லை இசுருப்பாய
கல்வி அமைச்சு நான்காம் மாடியில் கூடலரங்கு.
சென்னைத் தொழிலதிபர் செவாலியர், முனைவர், கலைமாமணி, கவிச்சக்கரவர்த்தி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் வி சி சந்தோசம் அண்ணாச்சி இலங்கையில் 16 மாவட்டங்களில் அமைக்க அன்பளிப்பாக வழங்கும் 2 மீ. (7 அடி உயர) 16 திருவள்ளுவர் சிலைகளை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்.
பங்குபற்றியோர்:
1. மாண்புமிகு அமைச்சர் வி எஸ் இராதாகிருட்டிணன்.
2. திருவள்ளுவர் சிலைகளை அமைத்தல் தொடர்பான இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர், மறவன்புலவு க. சச்சிதானந்தன்,
3. கல்வி அமைச்சுச் செயலர்
4. இயக்குநர், தமிழ்ப் பாடசாலைகள், கல்வி அமைச்சு
5. மாண்புமிகு அமைச்சரின் தனிச் செயலர்,
6. மாண்புமிகு அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர்,
7. மாண்புமிகு அமைச்சரின் இணைப்புச் செயலர்,
8. மாண்புமிகு அமைச்சரின் ஊடகச் செயலர்,
9. முதல்வர், ஐலண்ட்சு கல்லூரி, அட்டன்,
10. முதல்வர் பரி யோவான் தமிழ் மகா வித்தியாலயம், இறக்குவானை,
11. முதல்வர் வித்தியானந்த கல்லூரி, முள்ளியவளை,
12. முதல்வர், கதிரேசன் நடுவண் கல்லூரி நாவலப்பிட்டி,
13. முதல்வர், விபுலானந்த வித்தியாலயம், கட்டைபறிச்சான்,
14. முதல்வர், புளியங்குளம் இந்துக் கல்லூரி, புளியங்குளம்,
15. முதல்வர், இந்துத் தேசியப் பாடசாலை, மாத்தளை,
16. முதல்வர், கதிரேசன் தமிழ் மாவித்தியாலயம், தெரணியகல்,
17. செயலாளர், கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம்,
18. முதல்வர், புத்தளம் இந்து நடுவண் கல்லூரி.
கூட்டத்தில் எடுக்கும் முடிபுகளை ஏற்பதாகக் கூறிக் கூட்டத்துக்கு வர இயலாதிருந்தமையைத் தெரிவித்தோர்.
19. தலைவர், தென்மராட்சிக் கலை மன்றம்
20. முதல்வர் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மன்னார்.
21. முதல்வர் பண்டாரவளை நடுவண் கல்லூரி.
22. தலைவர் மட்டக்களப்புத் தமிழச் சங்கம்
23. முதல்வர் விசயரத்தினம் இந்து நடுவண் கல்லூரி நீர்கொழும்பு


04.04.2047 (17.04.2016) ஞாயிறு மாலை 1500 மணி
கைதடி நவபுரம் எருதிடல் பாடசாலை
தொடக்கால ஆசிரியர்கள் இருவர்
சின்னத்தம்பி அவர்களும் 
அவர் மனைவி மங்கையர்க்கரசி அவர்களும்
ஓய்வுக்குப் பின்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள்
பழைய மாணவர் வரவேற்றனர், விருந்தோம்பினர்.
ஒவ்வொரு மாணவராக வந்து கால் கழுவிப் பாலால் அட்டி அடி தொழுது ஆசிபெற்ற காட்சி நெஞ்சை உருக்கியது.
வாழ்த்துரை வழங்க அழைத்திருந்தார்கள், சென்றேன்.


சித்திரை 8, 2047 (21.04.2016) வட்டுக்கோட்டை
சித்திரை முழு நிலா நாள் + புத்தாண்டு விழா
முனைவர் சிதம்பரம் மோகன் எனக்கு அன்பர். என்மீது அளப்பரிய அன்பு காட்டுபவர். வட்டுக்கோட்டை அவரது ஊர்.
பொதுவுடைமைக் கொள்கையுடன் வாழ்பவர்.
இலங்கை சமசமாசக் கட்சியுடன் இணைந்தவர்.
வாசுதேவ நாணயக்காரருடன் நெடுநாள் பணிபுரிந்தவர்.
அவரது அமைச்சில் தமிழ்த் தொடர்பாளராக இருந்தவர்.
முன்பு மனித உரிமை ஆணையத்தின் யாழ்ப்பாணப் பொறுப்பாளராக இருந்தவர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும் தெளிவாக எழுதவும் சம காலத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்த்துக் கூறவும் வல்லவர்.
21.04.2016 விழாவுக்குத் தலைமை ஏற்கக் கேட்டார். மகிழ்வுடன் ஏற்று விழாவை நடத்திக் கொடுத்தேன்.
வடமாகாண ஆளுநர், இந்தியத் துணைத் தூதர், மேனாள் துணைவேந்தர், பிரதேசச் செயலர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சிவாசாரியார்கள், அருட்தந்தையர், இசைக் கலைஞர், வட்டுக்கோட்டைப் பொதுமக்கள் என விழாவுக்கு அணிசெய்தோர் முனைவர் மோகனின் அன்புக்குக் கட்டுப்பட்டோரே.

சித்திரை 18, 2047 (01.05.2046)
மன்னார் நகர மண்டபம்.
மே நாள் விழா.
27.04.2016 அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மன்னாரில் கை விலங்குத் தளையிடல்.
28.04.2016 நண்பகல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பிணையில் விடுவிப்பு.
வழக்கறிஞர் எவரும் பேசவில்லை.
மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தமே அரசே ஒப்பி விடுவிக்கக் காரணம்.
இவ்வாறான நிகழ்வு இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்ட நடைமுறையில் இதுவரை இல்லை. வரலாறு படைத்தவர் மன்னார் வி ச சிவகரன்.
மன்னார் பொது அமைப்புகளின் தலைவர் வி ச சிவகரன். மே நாள் விழா நடத்தியவர் அவரே.
விழாவில் உரையாற்ற ஒரு வாரத்துக்கு முன்னரே் என்னை அழைத்திருந்தார். ஒப்பியிருந்தேன்.
தளையிடலால் விழா சிதறுமோ எனக் கேட்டோரிடம் எப்படியும் சிவகரன் விழாவை நடாத்துவார் எனக் கூறினேன். அவ்வாறே வெற்றிகரமான விழாவாகச் சிவகரன் நடாத்தினார், கலை நிகழ்ச்சிகளுடன்.

05 வைகாசி 2047 (18.05.2016) புதன் காலை 1000 மணி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
முள்ளிவாய்க்கால் கிழக்குத் தமிழ்ப் பாடசாலைக்கு வடக்கே உள்ள திடலில் விளக்கு ஏற்றல்
வடமாகாண சபை உறுப்பினர் திரு. சிவாசிலிங்கத்தாருடன்.

20.05.2016
07 வைகாசி 2047 (20.05.2016)
மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு,
வணக்கம்
வரலாறு காணாத வெற்றியைச் சுமந்து பூரிக்கும் உங்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெஞ்சாரத் தெரிவிக்கிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் எதிர்காலம் யாவும் உங்கள் தலைமையில் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் தொடரும் என்பதில் ஈழத் தமிழருக்கு என்றும் நம்பிக்கை இருந்தே வந்தது. தமிழக வாக்காளப் பெருமக்கள் அந்த நம்பிக்கையை வலுவூட்டினர்.
தமிழக மீனவர் வாழ்வாதாரம், கச்ச தீவு, ஈழத்தமிழரின் எதிர்காலம் யாவிலும் தாங்கள் கொண்ட கொள்கையும் கோட்பாடும் ஈழத்தமிழருக்கு உகந்தது. உங்கள் வழியே ஈழத்தமிழராகிய நாமும் சிந்திக்கிறோம். இச்சிந்தனைகள் நடைமுறைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
பாண்டிய அரச சின்னங்களை எடுத்துச் சென்ற சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றிப் பாண்டிய அரசுச் சின்னங்களை மீட்டு, சிங்களத்தின் அரசு, ஆட்சியையும் கைப்பற்றிய தமிழகத்தின் பேராண்மை அறியாத, வரலாற்றை மறந்த, இன்றைய சிங்களத் தலைவர்கள் தமிழகத்தைச் சீண்டி வருகிறார்கள், தமிழக மீனவரைத் தாக்குவதையும் சுடுவதையும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கிறார்கள். ஈழத் தமிழரைக் கொடுமைக்கு உள்ளாக்குவதை அரசுக் கொள்கையாக முன்னெடுக்கிறார்கள்.
உங்களின் சாணக்கியமும் பொறுமையும் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலும் கொடுமை நோக்குடைய தமிழக எதிர்ப்பும், தமிழர் எதிர்ப்பும் கொண்ட சிங்களத் தலைவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் காலம் விரைவில் கனியும்.
மீண்டும் ஈழத் தமிழரின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கூறி அமைகிறேன். தமிழகத்தில் நல்லாட்சி தொடர்வதாக. ஈழத் தமிழருக்கு அரணாகத் தொடர்வீர்களாக.
நன்றி
அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சி.

22.05.2016
09 வைகாசி 2047 (22.05.2016) ஞாயிறு, மாலை 1600 மணி
சென்னை, 100 அடிச் சாலை, வடபழனி, அம்பிகா எம்பையர் விடுதி.
இலங்கையில் 16 மாவட்டங்களில் 16 திருவள்ளுவர் சிலைகள். அன்பளிப்பவர் தமிழ்நாட்டின் தொழிலதிபர், செவாலியர், டாக்டர், கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், கவிச்சக்கரவர்த்தி வி சி சந்தோசம் அண்ணாாச்சி.
சிலைகளைக் கொழும்புத் துறைமுகத்தில் பெற்று, உள்ளிரும்புச் சட்டம் அமைத்து, 16 மாவட்டங்களுக்கும் அனுப்புவோர் இலங்கைக் கல்வி அமைச்சினர்.
இப்பணியை நான் ஒருங்கிணைக்கிறேன். மறவன்புலவில் இருந்தவாறு 16 மாவட்டங்களிலும்
1) இறக்குவானை, இரத்தினபுரி;
2) முள்ளியவளை, முல்லைத்தீவு;
3) நாவலப்பிட்டி, கண்டி;
4) கட்டைபறிச்சான், திருகோணமலை;
5) புளியங்குளம், வவுனியா;
6) மாத்தளை, மாத்தளை;
7) தெரணியகல், கேகாலை;
8) கிளிநொச்சி, கிளிநொச்சி;
9) புத்தளம் புத்தளம்;
10) சாவகச்சேரி, யாழ்ப்பாணம்;
11) உப்புக்குளம், மன்னார்;
12) நீர்கொழும்பு, கம்பகா;
13) தம்பிலுவில், அம்பாறை;
14) மட்டக்களப்பு, மட்டக்களப்பு;
15) அட்டன், நுவரெலியா;
16) பண்டாரவளை, பதுளை;
சிலைதாங்கி அமைக்கவும் திறப்புவிழா நடத்தவும் உள்ள பணிகளைக் கவனித்து வருகிறேன். சென்னையில் காந்தளக மேலாளர் என் சார்பில் சென்னைப் பணிகளைப் பார்க்கிறார்.
இலங்கைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு அகிலா விராசர் காரியவாசம் என் அழைப்பை ஏற்றார். சென்னை சென்றார். 16 சிலைகள் உருவாகும் பணியைத் தமிழ்நாட்டின் தொழிலதிபர், செவாலியர், டாக்டர், கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், கவிச்சக்கரவர்த்தி வி சி சந்தோசம் அண்ணாாச்சியிடம் கேட்டறிந்தார்.
இச்ந்திப்புக்கு முனைவர் வாசுகி கண்ணப்பன், பேரா. விசயலட்சுமி ஆகியோர் சந்தோசம் அண்ணாச்சியுடன் வந்திருந்தனர். கட்டைபறிச்சான் க. இரத்தினசிங்கம், கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் இருவரும் என் சார்பில் சென்றனர்.

22.05.2016
சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இடம் பெறும். இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் ஏற்பாடு செய்கிறார்.
காந்தளகம் பதிப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் அழைப்பை ஏற்று அவர் சென்னைக்குச் சென்றார். பதிப்பாளர் சங்கத்தாரைச் சந்தித்துப் பேசினார்.
சூன் 1 தொடக்கம் சூன் 13 வரை, சென்னை தீவுத் திடலில் 39ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (தெபுவிபச) ஆண்டுதோறும் இக்காட்சியை நடத்தி வருகிறது. 600க்கும் கூடுதலான அரங்குகளில், பல கோடி ரூபாய்களுக்கு விற்பனையாக, ஒரு கோடி மக்களுக்கும் கூடுதலானோர் பார்வைக்கு வருவர்
தெபுவிபசவின் இப்பொழுதைய தலைவர் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். இன்று 22.5.16 ஞாயிறு மாலை 3 மணிக்குக்குக் காந்தி கண்ணதாசன் தலைமையில் எசியன் சுரேசர், அம்மன் சத்தியநாதன், காந்தளகம் சசிரேகா மற்றும் கட்டைபறிச்சான் இரத்தினசிங்கம், கஸ்தூரி அரங்கன் ஆகியோர் இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசத்தை, சென்னை அம்பிகா எம்பையயர் சொகுசு விடுதியில் சந்தித்தனர்.
நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
1. ஈழத்தில் தமிழகப் பதிப்பாளரின் புத்தகக் காட்சி நடத்துதல்,
2. யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்குத் தமிழகப் பதிப்பாளர் 1,000 தலைப்புகளை அன்பளிப்புச் செய்தல்
ஆகியன இக்கலந்துரையாடலில் இடம்பெற்றன. அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் கொழும்பு திரும்பியதும் ஈழத்துப் படைப்பாளிகளை அழைத்துப் பேசுவதாகவும் இலங்கைக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைப் படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களைச் சென்னைப் புத்தகக் காட்சிக்கு அனுப்ப விரும்பின் இலங்கைக் இராஜாங்கக் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரணை 0094 11 2784870 தெபுவிபச தலைவர் காந்தி கண்ணதாசன் 0091 44 - 24338712 / 24332682, சென்னை காந்தளகம் திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் 0091 44 28414505 ஆகியோரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்க.

வைகாசி 18, 2047 (31.05.2016)
செவ்வாய் மாலை 1730 மணி.
சாவகச்சேரியில் இருந்து தெற்காகத்
தனங்களப்பு நோக்கும் சாலை.
கிழக்கே சாலையைத் தழுவிக் 
கரைமோதும் உவர்க் கடல்.
யாழ்ப்பாணக் கடனீரேரியின்
உள்நீட்டமான கச்சாய்க் கடல்.
நெடிய கால்கள்.
மென்சிவப்புக் கால்கள்,
செங்கால்கள்.
தவம் செயும் தவத்தோர் ஒரு காலில் நிற்பர்.
மஞ்சள் மூக்கு நாரைகள்
ஒற்றைக் காலில் நின்றன.
மற்றக் காலை மடித்து
நிற்கும் காலில் ஊன்றினவோ?
தீயின் தழல் எடுத்து,
சாயம் வரக் குழைத்து,
தூரிகை மயிர் சிதற,
சிறகை இறகுகளாக விரிக்க,
இக்கால ஓவியர் போல
இறகு நுனிகளைத் தழல் வண்ணமாக்கி
("செந்தழல் புரை திருமேனி...."
என்பார் திருப்பள்ளியெழுச்சியில்
மாணிக்கவாசகர்)
சிறகின் இடையைச் சாம்பல் நிறமாக்கி
கொள்ளை அழகைக் காட்சியாக்கும்
இயற்கையின் பெரும் பெற்றி.
பனங்கிழங்கைப் பிளக்குக
இரு பாதிகளையும் சொண்டுகளாக்குக.
கூர்முனையை ஒடித்து வளைக்க.
வெண் சாயத்தைக் கிழங்குக்கும்
கருஞ் சாயத்தைக் கூர்முனைக்கும்
தடவுக.
நீருள் துழாவி உணவு கொள்ளும்
அழகைக் காட்சியாக்கும
இயற்கையின் பெரும் பெற்றி.
எட்டிக் கால் வைத்துத்
தாவித் தாவி
நடக்கும் நடை அழகா?
உணவுக்குக் குனிந்து கொறிக்க
வளையும் கழுத்து அழகா?
இறகை உதறிச் சிறகை விரித்து
வண்ணக் கலவையாய்ப் ஒருசேரப்
பறக்கும் மஞ்சள் மூக்கு நாரைகள் அழகா?
கண்கள் இமைக்கவில்லை.
எண்ணம் கலையவில்லை
நினைவு மயங்கி நின்றேன்.
உள்ளம் ஒடுங்கி நின்றேன்.
கச்சாய்க் கடலின் கரையெங்கும்
மஞ்சள் மூக்கு நாரைகள்
சார்ந்த செந்நெல் வயலெங்கும்
மஞ்சள் மூக்கு நாரைகள்
Painted Stork
Mycteria leucocephala
நேற்றைய பதிவில் பூநாரைகள் / செங்கால் நாரைகள் எனத் தவறாக எழுதினேன். உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஆய்வாளர், என் அருமை நண்பர் பொள்ளாச்சி பேரா. முனைவர் நா. கணேசன் அவர்கள் மின்தமிழ்க் குழுமத்தில் பின்வரும் குறிப்பை எழுதினார்.
அன்பார்ந்த சச்சிதானந்தம் ஐயா,
இந்தப் பறவைகள் Painted Stork எனப்படுபவை. இவை வலசை போகாத பறவைகள். https://en.wikipedia.org/wiki/Painted_stork
Mycteria leucocephala - பறவையியற்பெயர்.
இங்கே பாருங்கள்: https://www.google.com/search…
செங்கால் நாராய் என சத்திமுற்றப் புலவர் பாடுபவை White Stork இவை குமரியில் இருந்து இமயத்திற்கு வலசை செல்பவை.
இப்பாடல் பற்றி நிறைய திரு. தியடோர் பாஸ்கரனிடம் பேசியுள்ளேன். https://en.wikipedia.org/wiki/White_stork
அ. மாதவையா மகன், இயற்கையாளர் மா. கிருஷ்ணன் செங்கால் நாரை இதுவென விரிவாக எழுதியுள்ளார். திரு. தி. பாஸ்கரன் மூலமாக, மா. கிருஷ்ணனின்
https://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan மொழிபெயர்ப்பை ஒருமுறை தேடிப் பிடித்தேன்.
அச்சாகாத பாடல் அது. மின்தமிழ் குழுமத்தில் குறிப்பு எழுதினேன். செங்கால் நாரை வலசை போகும் நாடுகள்:
https://en.wikipedia.org/wiki/White_stork… தென்னிந்தியாவில் செங்கால் நாரைகள் (வலசை செல்பவை) வருமிடங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றன.
நா. கணேசன்
வடமாகாணச் சுற்றுச் சூழல் அமைச்சர் என் கெழுதகை நண்பர், திரு. ஐங்கரநேசன் முகநூலில் என்னைத் திருத்தினார்.
Ayngaranesan Ponnudurai
Dear Sir, This is not a Flamingo [poonaarai]- This is known as Painted stork = manchal mookku naarai. Flamingo = Poonaarai
அன்னாருக்கும் கணேசனாருக்கும் நன்றி.
தொலைவில் இருந்து பார்த்தேன். கைப்பேசியில் படமாக்கினேன். சாயம், ஓவியம், தூரிகை என Painted Stork ஆக என் குறிப்பிலும் எழுதினாலும் நினைவு மயக்கத்தில் பூநாரை எனத் தவறாக எழுதினேன். பொறுத்தருள்க.


வைகாசி 29, 2047 (11.06.2016) சனிக்கிழமை நண்பகல்.
கொடிகாமம் தொடர்வண்டி நிலையம்.
மறவன்புலவில்
மண்ணின் மணத்தில் 
மகிழ்ந்து தோய்ந்து
மனத்தை வருட
07.06.தொடக்கம் 11.6 வரை
கேசவனும் சிவகாமியும் தங்கியிருந்தனர்.
சிந்தையில் அன்புச் செழுமை
சிவகாமி சிரிக்கும் செழுமை
முந்தையர் முன்னோர் வாழ்ந்த
முழுநிலா வெள்ளை மண்ணில்
தந்தையைப் பார்க்கத் தவழ்ந்த
மண்தேடி உவூல்வேர்த்துச் (Woolworth)
சந்தையை விலைக்கு வாங்கி்க்
கப்பலாய்க் கொண்டு வந்தார்.
11.6 நண்பகல் கொழும்புக்குப் புறப்பட்டார்.


வைகாசி 30, 2047 (12.06.2016) ஞாயிற்றுகிழமை.
கொழும்பு வெள்ளவத்தை, மயூரபதி மண்டபம்.
என் நண்பர் தெ. ஈசுவரனுக்கு,
கிவாஜ அறக்கட்டளை விருது.
என் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
ஈசுவரன் மீது நான் 19.07.2014இல் எழுதிய
40 வரிகளை மேடையில் வாசித்தேன்.
நாவன்மை நலிந்தோரை நவில்விக்கும் நல்லிதயம்
தேவனிவன் எனவியக்கும் தெளிந்தோர் வாழ்த்து
யாவரையும் அரவணைத்து அன்புகாட்டித் துயர்போக்க
ஈவதையே வாழ்வாக்கும் ஈசுவரனார் வாழ்கவாழ்க
அன்றலர்ந்த தாமரைபோல அழகுமுகம் கோடைநிழல்த்
தென்றலெனத் தேனாகித் தெம்மாங்காய்த் தெவிட்டுமான்
கன்றனைய கட்டவிழ்த்த கவிதையுள்ளம் கற்றோரெல்லாம்
என்றுகாண்ப எனவேங்கும் என்னிளவ எழிலீசுவரனே.
ஊரெல்லாம் உனைவாழ்த்தும் காலங்களில் உறங்கினேனுன்
சீரறியேன் சிறப்பறியேன் சிற்றறிவேன் தெளிந்தேனின்று
பாரறியப் பாராட்டு மழைபொழிவேன் தண்ணிலவின்
பேரெழிலே பெற்றியனேன் பிழைபொறுக்க ஈசுவரனே.
சொல்லெலாம் சுவையனாகி சோர்விலா உழைப்பனாகி
வெல்வதே வாழ்வதாக்கி வெளிநாட்டு வணிகனாகி
இல்லையே என்னாதுன்றன் இயல்பதை ஏத்துவேனோ
பல்வகை ஆற்றலானே பல்கலையே ஈசுவரனே.
ஆணவமற்ற ஆண்மையன் அழகனென்று அந்தநாளில்
மாணவப்பருவத் தோழர்சொல்ல மகிழ்ந்தனை மாணவியர்
வேணவாக்கொள்ள விரைந்தனைநீ மணக்கோலத் திலகாவைப்
பேணவந்தனை பீடுநால்வர் பெற்றனை ஈசுவரனே.
கணேசனாரும் கனகலல்லியும் குணச்சுப்புவும் கோலப்பிரியாவும்
கருணையுடன் திலகவதியார் பெற்றுவந்தார் பேறுற்றாய்
அருள்நிதியம் அன்புள்ளம் அவர்பண்பால் செம்மைபெறப்
பொருள்பொதிந்த வாழ்வினராய்ப் பொலிவித்தாய் ஈசுவரனே.
இன்பவாழ்வே இதயக்கனிவே இனிமைக்குழைவே ஈசுவரனே
அன்புப்பெருக்கு அருளுமுருவே அறிவுத்தேடல் ஆனவனே
முன்பின்னறியா இனமாயினென் முகமாயினென் அவரவர்
துன்பம்நீங்கித் துயரைப்போக்கத் துணியும்துணிவே ஈசுவரனே
புகழ்வேண்டா பெயர்வேண்டா பரிசும்வேண்டாத் தொண்டனே
சுகம்வேண்டா சொத்துவேண்டா பிறர்நலமே வேண்டுவனே
நகம்காக்கும் விரல்நுனிபோல் நீகாப்பாய் நலிந்தோரை
மகம்புக்க சனியானோர் மயல்போக்கும் ஈசுவரனே
மிதிக்குமன மிக்குடையோர் தனைக்கண்டு உள்ளம்
கொதிப்பாய் மிதிகாலைத் தொட்டிறைஞ்சி மிதியாதீரென
விதிப்பாயே வன்முறையும் வஞ்சகமும் போக்கவந்து
உதித்தாயே உறைபனியைக் கரைத்துருக்கும் ஈசுவரனே
அடக்குமுறை ஆணவங்கள் அவிழ்த்துவிடும் அவலங்கள்
கடக்கும்வழி அறிவாயே அன்பூற்றாய்ச் செறிந்தபுத்தர்
நடக்கும்வழி நடப்பாயே நெடுஞ்சிலையை அமைப்பாயே
நடக்கும்வழி நல்வழியே நடப்பாயே ஈசுவரனே
செம்மைமனங் கொண்டாய் சிவன்தாளிணை கொண்டாய்
இம்மைதருஞ் செல்வமெலாம் இறைவனே தந்தானென்பாய்
அம்மையுமாய் அப்பனுமாய் அருள்பெருக்கும் எம்பெருமான்
நம்மையுமாட் கொண்டானென நம்புகிறாய் ஈசுவரனே

ஆனி 02, 2047 (16.06.2016)
சென்னை, சைதாப்பேட்டை, விசிபி சதுக்கம்.
இலங்கைக்குப் 16 திருவள்ளுவர் சிலைகள்.
என் வேண்டுகோளை ஏற்று அன்பளிப்பவர் தமிழ்நாட்டின் தொழிலதிபர், செவாலியர், டாக்டர், கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், கவிச்சக்கரவர்த்தி, வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி.
இந்த வாரம் சிலைகள் கொழும்புக்குக் கப்பலேறுகின்றன.
கொழும்பு கல்வியமைச்சின் இராசாங்கச் செயலாளர் திரு. தீச ஏவவிதானை சென்னை வருகிறார். இலங்கைக்குப் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்குவது தொடர்பாகச் சென்னையில் 18.6இல் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
நானும் காந்தளக மேலாளர் கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியனும் சைதாப்பேட்டையில் சந்தோசம் அண்ணாச்சியைச் சந்தித்து அடுத்த நிலை ஒழுங்குகளைப் பேசினோம்.

ஆனி 5, 2047 (19.06.2016) ஞாயிற்றுக்கிழமை
இந்தியா கோவா மாநிலம் பொண்டா
இராமநாதர் கோயில் வளாகம்
இந்து வழிப்புணர்வு மாநாடு.
300 பேராளர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்
இருந்து வந்த
இந்து சமய அடியார்கள், தொண்டர்கள்.
இலங்கையில் இருந்து நான்.
நேபாளத்திலிருந்து மூவர்.
25.6 வரை நடைபெறும் மாநாடு.
22.6 அன்று நான் பேசுகிறேன்.
தொடக்க நாள் நிகழ்வுகள் படங்கள்.
ஏஎன்ஐ தொலைக்காட்சியருக்கு என் செவ்வி.

21.06.2016
19.06.2016 தொடக்கம் 25.06.2016 வரை
இந்து விழிப்புணர்வு மாநாடு.
இந்தியா, கோவா மாநிலம்,
பொண்டா நகருக்கு அருகே
இராமநாதர் கோயில் மண்டபம்
நேபாளம் (3), இலங்கை (1) நாடுகளில் இருந்து நால்வர்.
காசுமீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்ட,
கட்சுக் களப்பிலிருந்து அந்தமான் வரை அகன்ற
இந்தியாவின் 28 மாநிலங்களில் இருந்து 304 பேராளர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்தியில்.
சிவாசி வடேக்கர் எனக்குப் பக்கலில் இருப்பார்,
உடனுக்குடன் மொழிபெயரப்பார்.
இந்தி தெரியாத அனைவருக்கும் இவ்வாறான ஏற்பாடு.
கேரளத்தில் இருந்து ஒருவர்,
கர்நாடகத்திலிருந்து ஒருவர்
என இருவர் மட்டுமே ஆங்கிலத்தில் உரையாற்றினர்.
21.06 செவ்வாய்க்கிழமை மாலை 1730 மணிக்கு
என் உரை. ஆங்கிலத்திலா?
எத்தனை பேருக்குப் புரியும்?
இந்தியில் செய்தி சொன்னால் பெரும்பாலோர் புரிந்து கொள்வர்.
20.6 மதியம் 1300 மணிக்கு
நானும் சிவாசி வடேக்கரும் கணிணியுமாகச் சேர்ந்தோம்.
நான் பேசுவதெல்லாம் இந்தியில்
புரிந்துகொள்ளுமாறு 1700 மணி வரை
படக் காட்சி தயாரித்தோம்.
பிபிசியின் ‘இலங்கையின் கொலைக்களம்’
48 மணித்துளிகள் நீண்டது.
தேவையானதை வெட்டி எடுத்தேன்,
இந்தித் தலைப்புகள் கொடுத்தேன்.
பிபிசிக்கு நன்றி என எழுதினேன்.
15 மணித்துளிப் படமாக்கினேன்.
20 காட்சிகள்,
25 மணித்துளி எனக்கு ஒதுக்கினர்.
15 மணித்துளி படத்துக்கு.
5 மணித்துளி என் காட்சி உரைக்கு.
5 மணித்துளி வினா விடைக்கு.
குனித்த புருவம் எனத் தொடங்கும்
தேவாரத்துடன் தொடங்குவேன்
அனைவரையும் இலங்கைக்கு அழைத்து முடிப்பேன்.
அன்று மராட்டிய உடை அணிந்தேன்.
என் இனிய இலங்கை இந்து உடன் பிறப்புகளுக்காக… இவை.

21.06.2016
ஆனி 05/06, 2047 (19 / 20.06.2016)
இலங்கைக்குத் திருவள்ளுவர் சிலைகள்
சென்னைச் செய்தி ஏடுகளில் இருந்து.
விழாவில் வி.ஜி.சந்தோசம் வர வேற்றுப் பேசும்போது,
“இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வள்ளுவர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று இலங்கை எழுத்தாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வைப்பதற்காக இந்த 16 வள்ளுவர் சிலைகளை வழங்குகிறோம்.
இந்தச் சிலைகள் செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் வழியாகக் கொண்டுசெல்லப்படும்.
இதைத் தொடர்ந்து இலங்கையில் நடத்தப்படும் மாநாட்டில் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், நீதிபதிகள் என 60 பேர் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.

21.06.2016
07 ஆனி 2047 (21.06.2016) செவ்வாய்க்கிழமை
நண்பகல் 1400 மணி
கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
காசுமீரம், வங்காளதேசம், நேபாளம், இலங்கைப் பேராளர்களைக் கோவாச் செய்தியாளர் சந்தித்தனர்.

22.06.2016
08 ஆனி 2047 (22.06.2016) புதன்ழகிழமை
கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
காலைச் செய்தி இதழ்கள் தந்த செய்தி வெட்டுகள்

22.06.2016
08 ஆனி 2047 (22.06.2016) புதன்ழகிழமை
கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
காலைச் செய்தி இதழ்கள் தந்த செய்தி வெட்டுகள்


25.06.2016
11 ஆனி 2047 (25.06.2016) சனிக்கிழமை
கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
இறுதி நாள் நிகழ்வுகள்.

வங்காள தேசம் மற்றும் இந்திய மாநிலங்களில் இருந்து வந்து என்மீது அளவற்ற அன்பு சொரிந்த 
இந்துக்களுக்கு இடர் போக்க விழையும்
இனிய புலமையாளர், அடியவர்


27.06.2016
27.06.2015 சனிக்கிழமை மாலை 1500 மணி
சுவிற்சர்லாந்து நாடு, உலூசோன் மாநிலம்
இலேமன் ஏரிக்கரை, மலைவெளி மண்டபம்.
Glace de Malley, Chemin du Viaduc 14, 1008 Prilly, Switzerland

நமசிவாயத்தாருக்கு விழா. பெரு விழா.
பொது வாழ்வுக்குத் தன்னை ஈந்த தமிழருக்கு விழா.
அழைக்கிறார் அனைவரையும்.
அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பு அலுவலகம் அமைந்த நகர் உலூசோன். அந்த மாநகரசபையில் உறுப்பினர் நமசிவாயம்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்தவர்.
சிங்களப் படங்களில் நடிகர்.
பின்னர் தமிழ்ப் படமான குத்துவிளக்கு - கதாநாயகர்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாகச் சுவிற்சர்லாந்து சென்றவர்.
பிரஞ்சு மொழி பேச, எழுதக் கற்றார், வல்லுனரானார்.
இலங்கைத் தமிழர் நலம்பேணச் செனீவாவுக்குச் செல்வோர் அனைவருக்கும் நமசிவாயம் உற்ற துணைவர். அவர் வாழும் உலூசோனுக்கு அடுத்த பெரு நகர் செனீவா.
வீடகக் கடமைகள் ஆற்று விரகரன்றோ
வியத்தகு நடிகராய் விளங்கு கலைஞரன்றோ
ஊடகப் பிரஞ்சினை உரைக்கு முகமன்றோ
உலுசோன் மாநகர உறுப்பினரும் அன்றோ
ஆடகச் சீர்மன்றார் ஆர்க்கும் அருளன்றோ
அன்பின் வடிவமாய் அழைக்க நிகருண்டோ
நாடக வாழ்வல்ல என்வாழ்வு என்பார்
நயந்து பழகுநம சிவாயத்தார் வாழ்க.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
புலமையாளர் எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.
சான்றோருக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்.
நமசிவாயம் கற்றவர், புலமையாளர், சான்றோர்.
இராமன் வாழுமிடமெல்லாம் அயோத்தியானால்
நமசிவாயம் வாழுமிடமெல்லாம் தமிழ்ப் பொழிலே.
அழைக்கிறார் அனைவரையும், விழா சிறப்பதாக.







29 கார்த்திகை 2047 (14.12.2016) புதன்கிழைமை பிற்பகல் 14 மணி.
யாழப்பாணம், சேந்தான்குளம் – சண்டிலிப்பாய் சாலை. இளவாலையில் காவல் நிலையம். கிறித்தவ பெந்தக்கோசு அருட் தந்தை. என் மீது முறையிட்டிருந்தார். விசாரணைக்கு அழைத்தார்கள். சென்றேன்.
தமிழ்நாடு சிதம்பரம் கோயிலுக்குச் சொந்தமான மேட்டு நிலம். சுற்றிவர வயல்கள். அந்த மேட்டு நிலத்தில் கடம்பனும் தோழர்களும் திருப்பணியில். அங்கிருந்த கோயிலை மீளமைக்கும் பணி.
சிதம்பர நிலத்துக்குச் சொந்தமான காணிக்குச் செல்லும் மணல் சாலையின் தொடக்கம். தனியார் காணி. கடந்த ஆண்டு முதன்முறையாய அங்கு பெந்திக்கோசுத் தேவாலயம் அமைத்தவர் அருட் தந்தை.
சிதம்பர நிலத்தில் திருக்கோயில் மீளமைப்புத் திருப்பணியால் தேவாலயத்துக்கு ஊறு. சமய நல்லிணக்கத்துக்கு ஊறு. எனவே திருப்பணியை நிறுத்தவேண்டும். இளவாலை காவல் நிலையத்தில் அருட்தந்தை கொடுத்த முறைப்பாட்டின் சாரம்.
காவலர் கடம்பனிடமும் தோழர்களிடமும் சென்றனர். நாங்கள் கூலிகள், கட்டச் சொன்னவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன். கடம்பனின் விடை. எங்கே அவர்? காவலர் கேட்க, சென்னையில் உள்ளார். கடம்பன் விடை. அவர் வந்ததும் வரச் சொல்க, காவலர் பணிப்புரை. தொலைப்பேசியில் சென்னைக்கு அழைத்து நடந்ததைக் கடம்பன் கூறினார். 10.12.2016இல் சென்னையிலிருந்து மறவன்புலவு வந்தேன்.
14.12இல் இளவாலை காவல் நிலையம் சென்றேன். கடம்பனும் காண்டீபனும் உடன் வந்தனர்.
சிங்களவரான ஆய்வாளர், தமிழ்க் காவலர் மூலம் என்னைக் கேட்கிறார். திருப்பணி செய்வதை ஒப்புக்கொண்டேன். கருவறையில் என்ன கடவுள் என்றார்.
தந்தை, தாய், மக்கள், கடல், வானம், ஆறு, கல், மரம், பாம்பு என இயற்கையின் கூறுகள் அனைத்திலும் கடவுள் உள்ளார். கருவறையில் ஏதாவது ஒன்றின் படிமம் அமையும் என்றேன். அப்பரின் தேவாரம் என் கண்முன் கருத்தில் விடையாயிற்று.
மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
அப்பர் தி06094007
நிலத்துக்கு உறுதி உண்டா? யார் உரிமையாளர்? ஆய்வாளர் வினா. தில்லை நடராசரின் அடியவன் நான். அவரே என்னை அனுப்பினார். உறுதிகள் போர்க்காலத்தில் அழிந்தன. பக்கத்து வயல் உறுதியில் எல்லை சிதம்பர நிலம் என்றுளது. அது போதாதா? என்றேன்.
உரிமம் இன்றித் திருப்பணி தொடங்கலாமா? ஆய்வாளர் வினா. புராதன இந்துக் கோயில்களில் திருப்பணிக்கு உரிமம் தேவை இல்லை. புத்த சாசனத் துறையின் அரசாணை உண்டே என்றேன்.
தொலைப் பேசியில் யாரையோ அழைத்தார். சிங்களத்தில் பேசினார்.
அருட்தந்தையை ஆய்வாளர் அழைத்தார். திருக்கோயில் திருப்பணியைத் தடுக்கமுடியாது, நீங்கள் விரும்பினால் குடியியல் வழக்குத் தொடுக்கலாம், காவல் நிலையத்துக்கு வாராதீர்கள் என்றார் ஆய்வாளர்.
வெளியே வந்ததும் அருட்தந்தை சொன்னார், அளவெட்டியில் நடந்ததை மறக்காதீர், நீதிமன்றம் எங்கள் சார்பானது. நிதி வளமும் எங்களிடம். நான் சொன்னேன், அருள் வளம் எங்களிடம், வேறில்லை.
சிதம்பர நிலம் அமைந்த இடம் மறவன்புலவல்ல. 25 கிமீ. அப்பாலுள்ள பண்டத்தரிப்பின் சாந்தை ஊர். சாந்தையில் 650 சைவக் குடும்பங்கள். 5 பெந்திக்கோசுக்கு அண்மையில் மாறிய குடும்பங்கள். மாற்றியவர் அந்த அருட்தந்தை.
14.12.2016 நாளன்று முதன் முறையாகப் பண்டத்தரிப்பு, சாந்தை சென்று சிதம்பர நிலத்தையும் திருப்பணியையும் பார்த்தேன். கடம்பனும் காண்டீபனும் திருவருளை வழுத்தி, திருப்பணியைத் தொடர்கின்றனர்

25.06.2016
11 ஆனி 2047 (25.06.2016) சனிக்கிழமை
கோவா இந்து விழிப்புணர்வு மாநாடு.
இறுதி நாள் நிகழ்வுகள்.
இனப்படுகொலை நடுவேயும் இலங்கை இந்துக்களின் உறுதியான பண்பாட்டு வாழ்வுமுறையைப் பாராட்டுவதாக என்னைப் பாராட்டி, வழியனுப்பினார்கள். இதழ்களில் செய்தியாக்கினார்கள்.

28.06.2016
2 ஆனி 2047 (26.06.2016) ஞாயிற்றுக்கிழமை
காலை, சென்னை
தொக்கா பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சன் தொக்காவில் சிலை திருட்டு நிலைச் செவ்வி. என் இனிய நண்பர் விசயர்.
மக்கள் தொக்காவில் சென்னை, காந்தளகப் பொறுப்பாளர் கலைமாமணி பா. சசிரேகா.
தமிழகத்திலிருந்து திருடிக் கடத்திய கைவண்ணச் சிலைகளை அடையாளம் கண்டு இந்தியாவுக்கு மீட்பதில் வரலாறு படைப்பவர் விசயர்.
http://poetryinstone.in தளத்தில்,
"பல நேரங்களில் நம் கண் முன்னே செல்லும் காட்சிகள் நம் அகக் கண்முன்னே தெரிவதில்லை"
எனக் கூறி நம் அகக் கண்களைத் திறப்பவர்.
விசயரைப் போலவே, அவர் தந்தையார் சுந்தரேசனார், அவரின் சித்தப்பா projectmadurai.com கலியாணசுந்தரனார் (சுவிசு) என்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள்.
விசயரோ சிங்கப்பூரில் கப்பலார் நிறுவனத்தில் உயர்நிலைப் பொறுப்பாளர். பல நாடுகளுக்குச் சுற்றுபவர்.
அவரைத் தொக்காவில் கண்டேன். செவ்வி கேட்டேன். கண்களை எடுக்கமுடியவில்லை, காதுகளைத் திருப்ப முடியவில்லை. செய்திகள், அலசல்கள், வழிகாட்டல்கள் என அவர் சொல்லாடல் எனக்கு அறிவூட்டியது.

26.06.2016
12 ஆனி 2047 (26.06.2016) ஞாயிற்றுக்கிழமை, மாலை
சென்னை, தாம்பரம் மேற்கு
கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன்
இல்லம் சென்றேன். 
மும்பையில் பணி.
விடுப்புக்குச் சென்னை வந்திருந்தார்.
காக்கும் அன்னையின்
கைவிரல் தடவிக்
கன்னம் வருடிக்
கருமயிர் கோதி
வாக்கில் வனப்பாய்ப்
பள்ளி எழுச்சி
பாடியே எழுப்ப
வார்ப்புக் கவிஞரோ
தூக்கம் என்னைத்
தூங்கச் சொல்கிறதே
எனவே ஐக்கூ
பாடினார் கவிதை
ஆக்கும் காலை
அழகின் கவின்மலர்
அன்புறை ஏமாஈந்த
கண்ணனின் நித்திலா.

02.07.2016
ஆனி 18, 2047 (02.07.2016) சனிக்கிழமை
சென்னை மயிலாப்பூர் திருவாசக மாநாடு
பார்க்க https://youtu.be/MoO96Gje2dg
தமிழக அரசு, ஆட்சிப் பணியில் உச்சநிலை
தலைமைச் செயலாளர் பணி
தமிழகத்தின் அரசு எந்தித்தைத் தாங்கி, முடுக்கி அமைச்சுத் துறைச் செயலாளர் வழியும் மாவட்ட ஆட்சியர் வழியும் 6 கோடித் தமிழரின் வாழ்வியலுடன் அரசு கலக்கும் பணி.
இந்திய ஆட்சிப் பணி அல்லது ஐஏஎசு தேர்வில் வெற்றி பெற்றுப் போட்டிகளின் நடுவே முன்னேறித் தலைமைச் செயலாளர் ஆனவர் தி. வே. வேங்கடராமன் அவர்கள்.
கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவர் எம் சி இராமச்சந்திரன், புரட்சித் தலைவி செ. செயலலிதா ஆகிய முதலமைச்சர்களிடம் உள்துறைச் செயலராய்த் தலைமைச் செயலராய்ப் பணிபுரிந்தவர்.
திருவாசக மாநாட்டுக்கு வந்தோருக்கு என்னை அறிமுகம் செய்தார்.

06.07.2016
ஆனி 20, 2047 (04.07.2016) திங்கள், மாலை,
சென்னை ஆள்வார்ப்பேட்டை நாரத கான சபை அரங்கம்
சந்தம் இல்லாமல் பாடல் இல்லை.
பாடுவதால் பாடல்கள், குறட் பாக்கள்.
திருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளபெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ்வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழ விடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும்.
இனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண் வழிப் பாடல்கள் அவை.
கருவிலே இசைக்குத் திருவானவர், மழலையாகத் தன் மிழலையில் பண்ணிசைத்தவர், 2 வயதிலேயே சென்னை, சங்கீத வித்துவ சபையாரின் பாராட்டுப் பெற்றவர், கித்தார் இசை மேதை இரவிசங்கர் உள்ளிட்ட உலக இசை விற்பன்னர்களின் போற்றுதலுக்கானவர், சித்திர வீணை வித்தகர் இரவி கிரண், திருக்குறள் பாடல்கள் 1330ஐயும் 169 இராககங்களில் அமைத்து உலகுக்குத் தருகிறார்,
அமெரிக்காவில் வாழும் அவரின் கொடையை இந்தியாவில் அறிமுகம் செய்ய, 04.07.2016 மாலை, சென்னை, பிரம்ம கான சபையார், ஆள்வார்ப்பேட்டை நாரத கான சபை அரங்கில் விழாவாக்கினர்.
பத்மசிறீ விருதாளர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்க, பாசக இல. கணேசன் வெளியிட, பத்மபூசண விருதாளர் சுதா இரகுநாதன் மதிப்புரைக்க, சென்னையின் கலையுலகமே விழாவில் திரண்டது, இரவி கிரணை வாழ்த்தியது.
இளங் கலைஞர் பங்கேற்றனர். திருக்குறளைப் பாடினர், அரங்கத்துக்கு அணி சேர்த்தனர். காயத்திரி கிரிசர் தொடக்கம் சின்மயா உடன்பிறப்புகள் வரை, இரவி கிரண் தொடுத்த பண்களில் இசை எடுத்தனர், அவையோர் செவி மடுத்தனர், மயங்கினர்.
பரதத்தில் திருக்குறளைத் தந்து நால்வர் ஆடினர். சொற் கட்டோ, ஒத்திசையோ இல்லை. தாள இலயத்தில் குரலிசைக்குப் பதம் பிடித்தனர் பரதத்தார். வரிகளை மீட்டும் தராததால் பதங்களின் வண்ணத்தை வரைந்தாரில்லை. கைவழி கண்கள் செல்ல, கண்கள் வழி கழுத்தசைய, கன்னங்கள் உணர்வு காட்ட, கால்கள் தாள இலயத்தில் அடியெடுக்க, அரங்கம் முழுவதையும் ஆடல் களமாக்கினர் நால்வரும்.
வான் சிறப்புப் பாடல் பத்தையும் நால்வருமாய்ப் பரதமாக்கையில் மேகம் கறுத்தது. நீர்க் கம்பிகள் ஒளியில் தெறித்தன. நான் குடை விரிக்க முயன்றேன். அரங்கத்தில் மழை பொழிந்ததோ என மயங்கினேன். தர்பார் இராகம் மடை திறக்க, ஆதி தாளம் வரப்புடையாத ஓடையானது.
நன்மைக்கு ஒரு பதம், தீமைக்கு வேறொன்று. நாடுதலுக்கு ஒன்று, நலம்புரிந்த தன்மைக்கு ஒன்று, ஆள்வதற்கு ஒன்று. இதனைக்கும் இவனுக்கும் அண்மை காட்டியவர், அதனைக்கும் அவனுக்கும் சேய்மை காட்டினார். அதற்குரியனாகச் செயல் எனக் கண்கள் பேசின. பிரம்ம கான சபைச் செயலாளர் இரவியின் மகள் தீப்தி, விரைந்து மாற்றிவந்த உடல்மொழியால் தெரிந்து வினையாடல் குறள் பத்தையும் விளக்கினார். கீரவணி இராகத்தில் விரிந்தவர் ஆதி தாளத்தில் ஒடுங்கினார்.
உன்னால் முடியும் தம்பி.. என உற்சாமூட்டித் தொடங்கினார். மனத் தளர்ச்சியில் அவரே தளர்ந்தார். சுதாகரித்து முயற்சிக்கு மீண்டார். முடிக்காத பணிக்கான முயற்சி வீண் என்றார். பேடியின் கையில் வாள் காட்டினார். ஊக்கமின்மைக்குச் சான்று காட்டினார். மடி (சோம்பல்) சொல்கையில் கைவைத்துத் தலைசாய்ந்தவர், மாமுகடிக்கு வெறுப்புப் பதம் காட்டினார். தெய்வத்தைக் கும்பிட்டுக் காட்டியவர் ஊழையும் காட்டினார். வினையின் உறுதி காட்டுகையில் முகமும் கைகளும் பேசின. கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் ஆள்வினையுடைமையின் பத்துப் பாடல்களுக்கும் பதம் பிடித்தார். கமாசு இராக இசையை மிசிரச்சாப்புத் தாளம் கட்டுக்குள் வைத்ததால் சசிரேகா அளந்து அடியெடுத்து ஆடினார்.
மோப்பக் குழைந்து அனிச்சமானவர், மென்மை தவழந்து மலரினும் மெல்லியளானார். விரல்களில் மலரைக் காட்டியவர், கண்களிலும் காட்டினார், காதலன் சொன்னதாக. முத்துப்பல் வரிசையை விரல் வழி காட்டினார். மூங்கிலனைய தோளைக் கண்களால் சுட்டினார். மாந்தளிர் மேனிக்குக் கைகளை நழுவினார், மூக்கில் விரல் குவித்து மணந்து மயக்கமூட்டும் நறுமணம் காட்டினார். வேல்விழிக்கு மையெழுதினார், காதலியைக் காட்ட. கண்களை விரித்தவர், காதலியின் முகம்போல நிலவே நீ ஒளிர் என்றார். அனிச்சக் காம்பை முள்ளாக நீக்க காலை மடித்து வண்ணம் காட்டினார். சிருங்காரச் சுவைக்கு யுவகலா பாரதி சிறீதேவி முரளியின் பரதமோ எனுமாறு நலம்புனைந்துரைத்தலின் பத்துப் பாடல்களின் நளினகாந்தி இராக இனிமையை ஆதி தாளம் வழிநடத்தியதே.
கட்டைவிரல் சுட்டுவிரலுடன் சேர்ந்து உப்புக் கிள்ளி ஊடலுக்கும் கூடலுக்கும் இடைவெளியை அந்த அளவுக்கு மேல் நீட்டாதீர் என்றார். ஊடலுக்கு முகம் சுளித்தவர் கூடலுக்கு நாணியே தழுவிய கையினரானர். பெரும் பிணக்கைக் கடுமுகமாக்கினார். சிறு பிணக்கைக் கண்களுள் புதைத்தார். நிழல் நீரில் குளிர்மை காட்டினார், ஊடலில் அன்பை அளவிட்டார். ஊடலை நீட்டிக்க வேண்டாமெனக் கையசைத்தார். அடங்கா ஆசை கூடலுக்கே என ஏங்கினார். ஒருவன் ஒருத்தியின் அன்புப் பெருக்கத்துக்குப் புலவி கட்டாயம் என வள்ளுவர் கூறும் புலவியின் பத்துப் பாடல்கள், திலங்கு இராகத்தில், கண்டசாப்பு தாளத்தில் நடனமாமணி பிரியா முரளிக்குப் புகலிடம் தந்ததால், ஊடாத அரங்கத்தை வாடாது காத்தார்.
பரதத்தினை அடுத்து இளங்கலைஞர் திருக்குறளைப் பதிகம் பதிகமாக இசைத்தனர், நிகழ்ச்சி நிறைவுவரை.

11.07.2016
ஆனி 27, 2047 (11.07.2016) திங்கள்கிழமை, காலை 0900 மணி. சென்னை, வேலப்பன்சாவடி, கயலட்சுமி திருமண மண்டபம்.
இரவிச்சந்திரன் உமா இணையரின் இரண்டாவது திருமகளாரின் திருமணம்.
இந்து விழிப்புணர்வு அமைப்பின் தமிழகத் தொடர்பாளர் உமா. தமிழகப் பொறுப்பாளர் சிறீராமும் வந்திருந்தார். மேற்கே காந்தாரம் தொடக்கம் கிழக்கே ஐராவதி வரை, வடக்கே கயிலாயம் தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை அகன்ற நிலப்பரப்பு இந்து அரசாட்சி நிலப்பரப்பு என்ற கொள்கையர் இந்து விழிப்புணர்வாளர்.
தொண்டை மண்டல வேர்களைக் கொண்ட இல்லம்.

13.07.2016
சென்னைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் பாராட்டு.
மதிப்பிற்குரிய ஐயா திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் (டிசம்பர் 5, 1941) .... 75 வயதே நிரம்பிய இளைஞர். யாழ்ப்பாணத்தின் மறவன்புலவு என்ற ஊரில் பிறந்தவர். தந்தையார் திரு. கணபதி அவர்கள் ... தாயார் திருமதி தங்கம்மாள் அவர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விலங்கியல், முதுகலை கடல்சார் உயிரியல், முதுகலை தமிழ் பயன்றவர். ஐக்கிய நாடுகள் உணவு வேளாண் துறையில் 23 நாடுகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். சில ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். '' காந்தளகம்'' என்ற ஒரு தமிழ் நூல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். ''பதிப்புத் தொழில் உலகம்'' என்ற ஒரு இதழையும் நடத்திவருகிறார். இவையெல்லாம் பொதுவாக ஒரு மனிதரைப்பற்றிக் கூறும்போது கூறக்கூடியவைதான்!
ஆனால் இவரது தனிச் சிறப்பு... எழுதுவதற்கு இடமில்லை! தமிழ் உணர்வாளர்... சமூகப் போராளி ... அவர் ஏற்றுக்கொண்ட ஆன்மிகத்தில் அளப்பறிய பணிகளை மேற்கொண்டுவருபவர்... பன்னிரு திருமுறைகளை இந்தியமொழிகளில் மட்டுமல்லாமல், பிற உலகமொழிகளிலும் ஒலிபெயர்ப்பு செய்து கொடுத்துள்ளவர்... பேச்சு ஒலியியல் அடிப்படையில் பன்னிருதிருமுறைகளை ஒலிபெயர்க்க எனது பேச்சொலியியல் பேராசிரியர் க. முருகையன் அவர்களுடன் அவர் மேற்கொண்ட முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கு அளித்தார். தலைவர்கள் ( மூதறிஞர்கள் இராஜாஜி, அண்ணாதுரையிலிருந்து இன்றைய அரசியல்தலைவர்கள் வரை) தமிழறிஞர்கள் ( பேராசிரியர்கள் மு.வ.., அகத்தியலிங்கம், இங்கிலாந்து ஆஷர், பொற்கோ என்று பட்டியல் விரியும்). ஈழப்போராட்டத்தில் போராளிகளுக்கு மருத்துவ உதவி செய்ததற்காகவே சிறையில் அடைக்கப்பட்டவர்) சென்னையில் நடைபெறும் தமிழ்தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் எந்தவொரு கூட்டத்திலும் முதலாவதாக வருகை தருபவர்... நான் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் நடத்தியுள்ள கணினித்தமிழ் தொடர்பான அனைத்துக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.. எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பவர்.... அவரது முகநூல் பக்கத்தில் படங்கள் என்ற பட்டியில் பார்த்தால்... இடம்பெறாத தமிழறிஞர்கள், தலைவர்கள் இருக்கமுடியாது! அந்த அளவு அனைவரிடம் நட்பு பாராட்டுபவர். மிக முக்கியமான அவரது பண்பு .... நான் வியக்கிற பண்பு.... அடக்கம் .. எளிமை.. எந்தவித ஆடம்பரமும் இல்லாத ஒரு அறிஞர்... அனைவரிடமும் ... வயது வேறுபாடின்றிப் பழகும் மனிதப் பண்பு!. அவரை முகநூலில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவையேயில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை ... அவரைப்பற்றி எனது முகநூல் பக்கத்தில் எழுதவேண்டும் என்று... எழுதிவிட்டேன்!
அவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு... https://ta.wikipedia.org/…/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%A…

24.07.2016
09 ஆடி 2047 (24.07.2016) ஞாயிறு மாலை 1800 மணி
கொழும்பு, கோட்டை, இல்ரன் (Hilton) விடுதி.
தமிழ்நாட்டின் தொழிலதிபர், செவாலியர், டாக்டர், கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், கவிச்சக்கரவர்த்தி, வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி கொழும்பு வந்திருந்தார்.
ஒவ்வொன்றும் 8 அடி உயரமான 16 சிலைகள். திருவள்ளுவர் சிலைகள். ஈழத் தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாகச் சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்தார். சென்னையில் அவரிடம் நான் வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த அன்பளிப்புகளைச் செய்துளார். கொழும்பில் அவை உள்ளன.
அவரைக் காண வந்த என் நண்பர்கள், இலங்கைத் திரைத்துறையின் எசு ரி தியாகராசா, மலையக இலக்கிய அன்பர், விக்கிரமசிங்கா, அண்ணாச்சியின் உதவியாளர் பீற்றர் ஆகியோருடன் படத்தில்.

25.07.2016
10 ஆடி 2047 (25.07.2016) திங்கள் பிற்பகல் 1400 மணி
கொழும்பு, வத்தரமுல்லை, இசுருபாய, கல்வி அமைச்சு வளாகம்.
The idea of putting up statues for Thiruvalluvar in Sri Lanka was mooted by Maravanpulavu K.Sachithananthan of Jaffna and Chennai. When Sachithananthan put it across to Santhosam, he had in mind just four statues to be installed in the Northern and Eastern Provinces. But Santhosam offered to gift sixteen. And when Sachithananthan asked the Sri Lankan State Minister of Education K.Radhakrishnan for assistance to bring them in from India and install them, the Minister said that he would take up the responsibility of installing them by making it a government project.
இலங்கையில் 16 திருவள்ளுவர் சிலைகள் ஒரே நாளில் கையளிப்பு.
கரு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உரு: தமிழ்நாட்டின் தொழிலதிபர், செவாலியர், டாக்டர், கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், கவிச்சக்கரவர்த்தி, வி. ஜி. சந்தோசம்
திரு: மாண்புமிகு இராசாங்கக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன்.
8 அடி உயரமான 16 திருவள்ளுவர் சிலைகளைக் கல்வி அமைச்சு வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். மாண்புமிகு கல்வி அமைச்சர் அகிலா விராசர் காரியவாசம் ஒவ்வொரு சிலையாக ஒவ்வொரு பயனாளி அமைப்புக்கும் கொடுத்தார். (பட்டியல் இலங்கைப் படத்தில் இணைப்பில்)
அதன்பின்னர் நூற்றுக்கணக்கானோர் பங்களித்த. கையளிப்பு விழாக் கூட்டம்.

05.08.2016
August 5th 2016 1800 hours
Many people we meet, pass as flashes in our mind. Quick responses and quick disappearances. Objectives achieved, progress made but with disconnected future.
Not always. The first meeting itself becomes an event. First meeting appears not as the first. As though we had connections in the immediate past and in the forgotten past. As though we were acquainted since birth or even before that. As though we were familiar with each other through pages of history.
Not only the familiarity and the related conjunctions. In the absolute concordance of perceptions and values the meeting passes as an event. Many objectives appear to be common. Many work programs jut into each other. Could this be termed as working chemistry?
Also the first meeting becomes the point to begin a long term collaboration and association not for mutual benefit but for common causes.
That was what happened to me and Mr. V. K. Ramachandra. We had never met before. We had nor personal knowledge of each other. Neither knew of other’s background. We did not know each other’s’ credibility rating. However, we plunged into a project for a larger cause.
When I shared my views at his tiny office inside the Arulmiku Rudhra Kaliamman Temple on audio recording with pann, the 4,274 hymns of Sekizhar’s Periya Puranam for posterity, he smiled. He did not speak a word. That was my first meeting.
That was my short stay of a week in Singapore during January 2009, at the premises of Arulmiku Rudhra Kaliamman Temple as the guest of a large number of admirers, lovers, chanters of Panniru Thirumurai. They were a loose gathering of Saiva Tamil devotees, apparently not bound to each other by any dictum or structure of an organization. They all had many matters in common. They loved each other. They respected each other. They appreciated each other. By then they had imbibed all aspects of modernity to decorate Tamil Saiva cultural luminescence. I found in them, living examples of exemplified human nature shaped through Tamil Saiva traditions.
Was Mr. V. K. Ramachandra leading them? Was he guiding them? He was the President of the Trust of Arulmiku Rudhra Kaliamman Temple. Yet no, he was not. He was their first servant, a volunteer par excellence. He spoke few words. He never preferred a platform. Being an engineer by profession, his knowledge of managing the affairs of a Hindu temple, it appeared to me was minimal. But all matters related to the temple management happened to be in near perfection.
He took me to his house to meet his family. His wife belonged to the clan of Sir Waithilingam Duraisamy, a doyen in pre-independent politics of the then Ceylon, who rose to be the Speaker of the House of elected representatives. She happened to be the sister of my friend and co-worker, an unorthodox, independent-minded person, Advocate Rajarajeswaran Thangarajah of Jaffna.
When I was leaving Singapore, a smiling Mr. V. K. Ramachandra told me that Arulmiku Rudhra Kaliamman Temple Trust will make the initial contribution to the audio recording project. It was a substantial contribution. If all the 18,268 hymns of Panniru Thirumurai are audible to anyone anytime, anywhere in the globe, தேமதுரத் தமிழோசை உலமெலாம் பரவும்வகை செய்த today, freely, the beginning was made at the office of Mr. V. K. Ramachandra.
That was the beginning of a long term association. I was blessed to be at Arulmiku Rudhra Kaliamman Temple for short sojourns during the following years.
Whenever Mr. V. K. Ramachandra came to Chennai, India, I always made it a point to reach him at the residence of his friend, a senior police officer, at Thiruvanmyoor to take him around Chennai for cultural feasting.
Today, when the most respectful Sivasubramaniam Rajasundaram Aiyah informed me of the peaceful passing away of Mr. V. K. Ramachandra, I could not dam the tears rolling down my cheeks non-stop.
Saiva Tamil world is grateful to this simple, humble, dedicated, friendly, lovable soul, who without fun or fare, seeking no fame, contributed immensely to the continuation of the rich, beautiful and all-encompassing Tamil Saiva culture and tradition.
To all who are deprived of his company and his service, specially to those loved ones at home, whom he cherished to be with always, my condolences.


11.09.2016
மின்னம்பலத்தில் நான் சுட்டு எடுத்த பின் வரும்
பத்திகளைப் படிப்பார்
சிரித்து வெடிப்பார்,
வியப்பைக் குடிப்பார்
தெளிவால் துடிப்பார்.
கடவுளே.... கடவுளே....
Vladimir Putin, the Russian president, addressed the Duma, (Russian Parliament), and gave a speech about the tensions with minorities in Russia:
"In Russia, live like Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, it should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, and live the life of Muslim's then we advise them to go to those places where that's the state law
"Russia does not need Muslim minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell 'discrimination'. We will not tolerate disrespect of our Russian culture. We better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Muslims are taking over those countries and they will not take over Russia. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of Sharia Law and Muslims.
"When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the Russian national interest first, observing that the Muslims Minorities Are Not Russians."
The politicians in the Duma gave Putin a five minute standing ovation.
பத்துக் கட்டளைகளின் தொடக்கமே முடக்கம்
God went to the Arabs and said,
"I have Commandments for you that will make your lives better."
The Arabs asked,
" What are Commandments? Can you give us an example?"
God said,
" For example ............. . Thou shall not kill."
The Arabs were shocked,
"What? Not kill? No way! Killing and massacring our enemies, is our birth-right, and the only reason for our existence.. No, we are not interested. "
So God went to the Africans and said,
" I have Commandments. "
The Africans wanted an example.
God said,
"For example ........... Honour thy Father and Mother."
The Africans were dismayed. They said,
" Father? Yo crazee maan! Can't tell for sure who our fathers are, maan!"
So God went to the Mexicans and said,
"I have Commandments. "
The Mexicans wanted an example.
God said,
" For example ........... Thou shall not steal."
The Mexicans were flabbergasted. They said,
" No steal? No steal?? Hey Senor, you mad or something? We no steal, then how we live, huh? Gracias, but no! "
So God went to the French and said,
"I have Commandments. "
The French wanted an example.
God said,
"For example ............ . Thou shall not commit adultery."
The French were stunned. They said,
"What? Not commit ze adultery ....... ? Non, non, non. Non Monsieur. Pardonnez nous. Alor! we, ze French, must have ze romance. We need romance and spice to our bored lives,merci bien! go some where else huh? Just pizz-off!"
So God went to Sri Lanka
"I want to give you commandment"
God said
"Thou should be free of corruption, be honest should not tell lies to people -specially the masses
Sri Lankan a politician said
"You must be joking Machung God. How we can come to power, dupe these 'headless cattle' who shout "Jaya Weva" even if you lift up your Sarong, and then earn enough money for the next 7 generations ?.Adey don`t try to spoil our fun, Mass-ina,
Look somewhere else for your commandments"
So disappointed and Frustrated God went to Israel to meet Jews
To the Jews God said,
"I have Commandments.. "
The Jews asked,
"Commandments? How much do they cost?"
God replied,
"Nothing. They are free."
The Jews answered,
"Good. Okay, We shall take Ten of them "! Do you offer any discounts?!!"

22.09.2016
23.09.2016 வெள்ளிக்கிழமை 1400 மணி
மன்னார், பண்பாட்டுப் பெருவிழா.
வடக்கு மாகாண முதலமைச்சர் விருது.
2010இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தேன். படையினர் என்னைத் தேடியதால், இரவோடு இரவாகச் சென்னை சென்றேன். பின்னர் வரமுடியவில்லை.
2012இல் யாழ்ப்பாணத்துக்குப் போகாதே என்றனர். ஆலோசனைகளை மீறி, தான் தொக்கா திரு. குகநாதன் துணையுடன் எதையும் தாங்கும் இதயத்துடன் மறவன்புலவு வந்தேன். சுவர்கள் மட்டுமே இருந்த எம் வீட்டைத் திருத்தி வாழத் தொடங்கினேன்.
படை, புலனாய்வினர், காவலர் எனப் பல முனைகளில் விசாரணைகளைச் சந்தித்தேன், பயங்கரவாதியே, சச்சிதானந்தனே, திரு. சச்சிதானந்தன், சச்சிதானந்தன் ஐயாவே எனப் படிப்படியாக மாற்றம் பெற்று அழைத்து வந்தனர். கடந்த வாரமும் காவலர் இருவர் என்னிடம் வந்தனர், ஐயா.. ஐயா.. என அன்பொழுகப் பேசினர். விவரங்கள் கேட்டனர்.
ஆனாலும் என் தமிழ் அன்பர்கள் என்னைக் கைவிடவில்லை. சமூகம் என்னைக் கைவிடவில்லை.
2013இல் தென்மராட்சி அறிஞர் விருது. முதலமைச்சர் நேரில் வந்து வழங்கினார்.
2015இல் கலா சாகரம் விருது. தென்மாராட்சிப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையினர் வழங்கினர்.
2016 ஆகத்து 26ஆம் நாள் எனக்கு அழைப்பு. உங்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுகளில் ஒன்றைத் தருவதாக உள்ளனர் என்றார்கள். அன்பையும் அறத்தையும் அருளையும் கைக்கொள்ள முயல்வோர் கைகளால் விருதுகளை வாங்கலாம், அப்படியில்லையே எனக் கூறி விருது வேண்டாம் மறுத்தேன். அவ்வாறு மறுக்கையில் என் கூட இருந்தவர் தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் இராம இரவிகுமார்.
https://www.facebook.com/profile.php…
03.09.2016 அவர் பதிவு வரிகள்
இலங்கை முன்னேஸ்வரம் திருக்கோவிலில் தரிசனம் செய்து விட்டு மறவன்புலவு சச்சிதானந்தம் அய்யா அவர்களுடன் பயணித்தேன்.
இலங்கை அரசிடமிருந்து விருது தருவதாகச் சச்சி அய்யாவுக்கு போனில் அழைப்பு வந்தது. இரத்தக் கறைபடிந்த கை உடைய சிங்கள அரசின் விருதை ஏற்கமாட்டேன் எனக் கூறினார் அய்யாவின் இந்தப் பதில் கேட்டு அதிர்ந்து போனேன்
விருதுக்கு அலையும் மனிதர்கள் மத்தியில் இவரை போன்ற புனிதர்களும் உள்ளனர்
மற்ற அனுபவம் தொடர்ந்து பதிவிடுகிறேன்
2016இல் வடமாகாண முதலமைச்சர் விருது. மன்னார் செல்வேன் மகிழ்ச்சியுடன் பெறுவேன்.

புரட்டாதி 23, 2047 (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை.
வவுனியா வேப்பங்குளம் வைரவர் கோயில் மண்டபம்.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்து சிவ அடியார்கள் வந்தனர். சிவ சேனையாக மாறினர். சிவ சேனையை ஒருங்கிணைப்வர்களுள் ஒருவனாக அடியேன்.
முன்னர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இலங்கையில் இந்துக்களின் நாட்டைப் புத்த நாடாக மாற்றாதே என்ற முழக்கத்துடன் ஒருநாள் உண்ணா நோன்பு. பார்க்க, படிக்க,
http://r.news.hindujagruti.org/link.php…

புரட்டாதி 24, 2016 (10.10.2016) திங்கள் கிழமை.
இன்று கேட்கக்கூடாத செயதியைக் கேட்டேன். திக்குமுக்காடினேன்.
"வாழ்க்கை எனக்கு நோய் முதலிய எந்தத் துன்பத்தைக் கொடுத்தாலும் இதுநாள் வரை நான் பெற்றுள்ள இன்பங்களுக்காக வாழ்க்கை மீது நான் கொண்டுள்ள நன்றி உணர்ச்சி மாறவே மாறாது." எனச் சொன்னவர் ரெ. கார்த்திகேசு. 2007 யூன் வல்லினம் செவ்வி.
1940இல் பிறந்தவர். 76ஆவது வயதில் இன்று காலமானார் என்ற செய்தியால் திக்குமுக்காடினேன்.
அவரது எழுத்துகளைப் படித்துவருவேன். அவரின் இலக்கியச் சுவைஞர்களுள் ஒருவன்.
மலேசியாவில் அடிக்கடி சந்தித்து அன்பு பகிர்வேன். யதார்த்தமாகப் பேசுவார். ஆனாலும் அவர் பேசுவது மிகக் குறைவு.
மறைவுச் செய்தியால் வாடினேன், தொய்ந்தேன்.

No comments: