Sunday, February 26, 2017

2013



14.01.2013
தைப் பொங்கல் விழா. மறவன்புலவு வள்ளக்குளம் பிள்ளையார் கோயில். 82 அடியார் ஒரே நேரத்தில் பொங்கினர்.
அவ்வாறு விழா நடைபெறுவதை என் நண்பர்களுக்குச் சொன்னேன்.
1. நீர்வேலி திரு. தி. மயூரகிரி சர்மா அவர்கள் அலங்கார வாழைக்குட்டிகள் 50 தந்தார்கள்.
2. தான் தமிழ் ஒளித் தொலைக்காட்சியினர் பதிவு செய்து பரப்பினார்கள்.
3. சுவிற்சர்லாந்து சிவன் கோயிலாரின் சிவன் தொலைக்காட்சியினர் பதிவுசெய்து உலகம் முழுவதும் பரப்பினார்கள்.
4. சென்னை, திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் 100 புடைவைகள் தந்தார்கள்.
5. சேலம் திரு. தனகோடி அவர்களும் சென்னை அண்ணா நகர் திரு. சண்முகம் அவர்களும் இணைந்து 98 நாட்குறிப்பு நூல்கள் தந்தார்கள்.
6. சென்னை, ஸ்ரார் பேப்பர் மார்ட், திரு. உசேன் பாய் அவர்கள் 120 பயிற்சி ஏடுகள் தந்தார்கள்.
7. சென்னை, கணபதி நிகழகம் திரு. இரமேசர் அவர்கள் 50 நாட்காட்டிகள் தந்தார்கள்.
8. இணுவில் அண்ணா தொழிலகம் உரிமையாளர் திரு. பொ. நடராசா அவர்கள் 100 பொங்கல் பானைகள் தந்தார்கள்.
தமிழகத்தில் தந்த அன்பளிப்புகள் கப்பலில் வந்து சுங்கத்தைத் தாண்டி, மறவன்புலவு வந்து சேர 1 மாத காலமாயிற்று.
அப்பொருள்களை மாசிமக நாளன்று 25.2.13 அன்று 82 அடியாருக்கும் கொடுத்தோம்.
இலங்கை நாடாளுமன்றத்தின் குழுநிலைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்திரகுமார் அவர்கள் வந்திருந்தர்கள்.
சாவகச்சேரிப் பிரதேச சபை உறுப்பினர் திரு. சங்கரன் தங்கராசா அவர்கள் வந்திருந்தார்கள்.
மறவன்புலவின் மூத்தோருள் ஒருவரான திரு. அருணாசலம் அவர்கள் வந்திருந்தார்கள்.
மறவன்புலவு கிராம சேவையாளர் திரு. தி. மகாலிங்கம் அவர்கள் வந்திருந்தார்கள்.
அருள்மிகு பிள்ளையாருக்கு மாசி மக வழிபாடு. வழிபாடு. பின்னர் 82 அடியவர்களுக்குப் தமிழகத்துப் பொருள் வழங்கல்.
நிகழ்ச்சிகளைப் படமாக்கியவர் இ. சிவரூபன்.

13.02.2013
சுவிற்சர்லாந்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் சென்ற ஈழத் தமிழர், சூரிச்சு மாநகரில் அமைத்த கோயில் சிவன் கோயில். கோயிலாரை நேரில் பார்த்திலேன். பாபு என்ற அன்பர் என்னிடம் தொலைப்பேசியில் இடையிடை பேசுவார்.
எனினும் நெடுங்காலம் அறிந்தவர் போல அண்ணை அண்ணை என வாஞ்சையுடன் அழைப்பர், தமிழகத்தில் அவர்களின் பணிகளை ஒருங்கிணைக்கக் கேட்பர்.
இன்று காலை முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயம் சென்றேன். அன்பே சிவம் என்ற பெரிய பெயர்ப்பலகை கண்டேன். கணிணிப் பயிற்சி மையம் கண்டேன். சூரிச்சுச் சிவன்கோயிலார் பணி.
முரசுமோட்டைக்கு அடுத்தவாரம் வரவுள்ள 200 தையல் எந்திரங்கள் பற்றி விளக்கினார்கள். சூரிச்சுச் சிவன் கோயிலார் அனுப்புவதாகச் சொன்னார்கள்.
20 ஆண்டு கால சுவிசு வாழ்க்கை. அங்கே சிவன்கோயில். அதில் வருவாய், அந்த வருவாய் ஈழத்தின் அலமந்து ஓய்ந்து மறுவாழ்வு தேடும் மக்களுக்கு. சிறப்பாக இளம் தளிர்களுக்கு. மாணவச் செல்வங்களுக்கு.
30 ஆண்டுகால முயற்சி. கடும் முயற்சி. வன்முறை சார்ந்த முயற்சி. முயற்சி செய்தோம் என்பதே வெற்றி.
முயற்சியை விடாது தொடர்கிறோம் வெவ்வேறு வழிகளில் தொடர்கிறோம். பணிவோம் அல்லோம் என அப்பர் கூறியன நினைவில் நிறுத்தும் பணியாகத் தொடர்கிறோம் எனச் சூரிச்சு சிவன் கோயிலார் பணி அமைகிறது.

06.03.2013
யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் புலமை மரபின் வாரிசுகளுள் ஒருவரான புலவர் பார்வதிநாதசிவம்.
தனது 77ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்புற்றிருந்தார்.
கொக்குவில் நந்தாவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் 06.03.2013 பிற்பகல் 2 மணிக்கு ஈமச் சடங்குகள் நடைபெறும்.
பெரும்புலவர் ம. க. வேற்பிள்ளையின் பெயரர் புலவர் பார்வதிநாதசிவம்.
சிதம்பரம் ஆறுமுகநாவலர் வித்தியாசாலையில் தமிழாசிரியராக இருந்தவர் ம. க. வேற்பிள்ளை.
பின்னர் தலைமை ஆசிரியராகி ஓய்வுபெற்றார்.
1930இல் சிதம்பரத்தில் காலமானார்.
ம. க. வேற்பிள்ளையின் மாணவர்களுள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் முதன்மையானவர்.
யாழ்ப்பாணம் வந்த தண்டபாணி தேசிகர், மட்டுவிலில் சில ஆண்டுகள் தங்கி இருந்து, ம. க. வேற்பிள்ளையிடம் பாடம் கேட்டவராவார்.
தண்டபாணி தேசிகரின் மாணாக்கர்களுள் கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். ஆகியோர் அடங்குவர். இந்தச் செய்தியை கலைஞர் கூறுவார். எம். ஜி. ஆர். கூறவும் நான் கேட்டிருக்கிறேன்.
ம. க. வேற்பிள்ளை புலோலியில் சிவபாதசுந்தரனாரின் உடன்பிறப்பான மகேசுவரியைத் திருமணம் செய்து ஐந்து ஆண்மக்களைப் பெற்றார்.
இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து உலகம் பலவிதம் நெடுந்தொடரை எழுதியவர் மூத்த மகன் ம. வே. திருஞானசம்பந்தம். நெற்றியில் திருநீறும் தலையில் குடுமியும் கையில் பொல்லுமாக அவர் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் வீதி, ஓடை ஓழுங்கைச் சந்திப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு இந்து சாதனம் அலுவலகம் வருவார். அதே நேரம் நான் அந்த வழியே பள்ளிக்குச் செல்வேன்.
என் தந்தையாருக்கு ம. க. வேற்பிள்ளையின் ஐந்து ஆண் மக்களும் நல்ல நண்பர்கள். அவ்வழி அவர்களுடன் நானும் பழகும் வாய்ப்புப் பெற்றேன்.
இவர்களுள் ம. வே. மகாலிங்கசிவம் மூன்றாமவர். மென்மையானவர். மேன்மையானவர்.
ம. வே. மகாலிங்கசிவத்துக்கு மகன் புலவர் பார்வதிநாதசிவம்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பார்வதிநாதசிவம் கற்றமோது புலவர் பாவேந்தர் பாரதிதாசனை அடிக்கடி சென்று சந்திப்பார்.
தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார் புலவர் பார்வதிநாதசிவம்.
என்னை ஒத்த வயதினர். சிரித்த முகத்தினர். காற்றடித்தால் விழுந்துவிடுவாரோ என நான் அஞ்சுமளவு மெலிந்த உடல் வாகு அவருக்கு. அவரும் நானும் அன்போடு பழகினோம்.
மட்டுவிலுக்கும் மறவன்புலவுக்கும் இருந்த நெடிய தொடர்பின், இறுக்கமான பிணைப்பின், அன்புக் கொடுக்கல் வாங்கலின் பேணலாக, எங்கள் தலைமுறையில் நாங்கள் இருவரும் திளைத்தோம்.
அவர் உடல்நலமற்ற செய்தி அறியேன்.
தெரிந்திருந்தால் ஓடோடிச் சென்றிருப்பேன்.
அவர் ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளையாதவர்.
தான் காலமானேன் எனத் தெரிவித்த இன்று எனக்குத் துன்பத்தைத் தந்தார்.
அவர் இல்லையே என்ற துயரம் நெஞ்சை அடைக்க, கண்கள் குளமாக, எழுதுகிறேன்.
இன்று அன்னாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவேன்.
மட்டுவில் ஈந்த புலவர் பரம்பரை தொடரும்.
அவர் மகன் ம. பா. மகாலிங்கம் அந்த வழியில் தொடர்கிறார்.

11.03.2013
புலவர் பார்வதிநாதசிவம் மறைந்த செய்தியைப் பகிர்ந்தேன்.
கொக்குவில் நந்தாவில் ஒழுங்கை சென்றேன். மகன் மகாலிங்கம் இதுந்தார். அப்படியே அப்பாவின் உருவ அச்சில். மற்றொரு மகன் இருந்தார் அப்படியே அவர் மாமன் மயிலங்கூடலூர் நடராசன் அச்சில்.
மயிலங்கூடலூர் நடராசனின் உடன்பிறப்பே, புலவர் பார்வதிநாதசிவத்தின் துணைவியார்.
சில மாதங்களுக்கு முன் நாயன்மார்கட்டில் மயிலங்கூடலூர் நடராசனார் இல்லம் சென்றிருந்தேன். மறதிநோய். இயல்பாக இருக்கிறார். எல்லாவற்றையும் மறந்துவிட்டார்.
அவர் துணைவியார் அவரை மிகக் கவனமாகப் பேணுகிறார்.
என் செய்தியைப் படித்த மெல்போண் நகரப் பொறியியலாளர் சிறீஸ்கந்தராசா அவர்கள் எனக்கு எழுதிய ஆங்கில வரிகள் புலவர் பார்வதிநாதசிவத்தின் தந்தையார் மகாலிங்கசிவம் இல்லத்தின் சிறப்புகளையும் அவர் மக்களின் தமிழ்ப் புலமையையும் விரித்துக் காட்டின. அந்தக் கடிதமே ஓர் இலக்கியப் பேழை.
காலமான செய்தியைக் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அவரும் இரங்கல் செய்தி வெளியிட்டுக் குடும்பத்தாருக்கும் எனக்கும் அனுதாபம் கூறினார் எனக் கலைஞர் தொலைக்காட்சி, தினமணி, யாழ்ப்பாணம் தினமுரசு ஆகியவற்றில் வந்த செய்தியைப் புலவரின் மகனார் திரு. மகாலிங்கம் இன்று காலை எனக்குத் தெரிவித்தார்.

11.03.2013
இரண்டரைச் சகிமீ. பரப்பளவு.
425 இல்லங்கள்.
160 இல்லங்கள் வதிவில்.
ஏனையோர்? வந்து போவர்.
1999 தைப்பூசம் தொடக்கம் 2009 நவராத்திரி வரை மறவன்புலவு முழுவதும் உயர்பாதுகாப்பு வலையம்.
2010 பங்குனி தொடக்கம் 2011 பங்குனி வரை ஓராண்டு காலத்தில் சுவிசு அரசு மறவன்புலவில் அமைத்தவை,
300 கல் வீடுகள், 300 கிணறுகள், 300 கழிப்பிடங்கள், 200 மாணவர் பயிலும் பள்ளி, சமூகக் கூடம், யாவும்
1,500 மக்கள் வாழும் இவ்வூரில் 82 மாணவர் உள்ளூர்ப் பள்ளியில்.
பள்ளியில் 5 கணிணிகள். அவற்றுள் 4 திருட்டுப் போய், கண்டுபிடித்து நீதிமன்றத்தில்.
ஒரே ஒரு கணிணிக்கும் ஆசிரியர் இல்லை. கடந்த 2012 கார்த்திகையில் மலேசியா அன்பர் திருமதி சித்திரா வாசு அவர்களின் நன்கொடையால் இணைய இணைப்பும் பெற்றனர்.
எனினும் பள்ளிக் கணிணியோ பயன்பாட்டுக்கு வரவில்லை.
அரசின் மீளெளுச்சித் திட்டத்தில் பெற்ற கணிணி, அச்சான், துணைப் பொருள்கள் யாவும் சமூகக் கூடத்துள். பயன்பாடு மிகக் குறைவு. நான் பார்த்தபொழுது தூசி படிந்த நிலையில் இருந்தன. அச்சானில் அவ்வப்பொழுது நகல் எடுப்பர்.
மாசி மக நிகழ்ச்சிக்கு அடியவர்களை அழைக்க ஊர் முழுவதும் சுற்றினேன். வீடுகளுக்குச் சென்றேன்.
11ஆம் வகுப்புத் தேர்வு எழுதி மதிப்பெண்களுக்குக் காத்திருக்கும் இளைஞர் இருவரைச் சந்தித்தேன். சகலகலாவல்லி வித்தியாசாலையில் கடந்த ஆண்டு என் காட்சி உரையைக் கேட்ட இருவரும் என்மீது பரிவுகொண்டனர்.
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த என்னைத் தம் ஈருருளியில் ஏற்றிவந்து விட்டனர்.
என் வீட்டில் கணிணியைக் கண்ட அவர்களுக்குக் கணிணி கற்பதில் ஆர்வம் இருந்தது.
வாருங்கள் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன் என்றேன்.
ஒருவர், இருவர் எனத் தொடங்கிய வகுப்பு 25 மாணவராக விரிந்தது.
7 நாள்கள் பயிற்சி. கணிணி, திரை, இயக்கி, சொடுக்கி, விசைப்பலகை என அறிமுகமாகி, வந்த ஒவ்வொருவரும் செய்முறைப் பயிற்சி பெறுமாறு விரிந்தது.
எழுதியில் தமிழ99 விசைகளைச் சொல்லிக் கொடுக்குமளவு நீண்டது.
ஒருநாள் திரு. சிவரூபன் எனதில்லம் வந்தார். பயிற்சிக் காட்சிகளைப் படமாக்கினார்.
அடுத்த பயிற்சிக் காலம் ஏப்பிரல் 5க்குப் பின் வரும் பள்ளி விடுமுறைக் காலம். எழுதி, விரிதாள் எனப் பயிற்சி கொடுக்க உள்ளேன்.

21.03.2013
வணக்கம். காரைக்குடி கம்பன் திருநாள் அழைப்பிதழ் இன்று கிடைக்கப்பெற்றேன்.
முதல் நாள் (21.03.2013) திருநாள் மங்கலத்தில்
தமிழ்த் திருமுறைகள் பன்னிரெண்டையும் மின்னம்பலத்தில் இசையோடு ஏற்றியும்
உலகமொழிகள் பல்வற்றிலும் மொழியாக்கம் செய்தும்
செயற்கரிய தமிழ்த்தொண்டாற்றும் பெரியார்
திரு மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்குப் பாராட்டு நடைபெறுகிறது
என்பதையறிய மகிழ்ந்தேன்.
போற்றுதல் - சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்.
ஐயாவை வணங்கி வரவேற்கிறேன்.
நல்லாரைக் காணவும் கேட்கவும் அமைகிற வாய்ப்பு மகிழ்ச்சிதருகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
Anna Kannan
4:04 PM (17 hours ago)
to vallamai, mintamil, தமிழ், me
கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம்,
மறவன்புலவு க. சச்சிதானந்தன் (Sachithananthan) அவர்களுக்கு 23.12.2012 அன்று,
மதிப்புறு முனைவர் பட்டம் (Honoris Causa D.Sc.) வழங்கிச் சிறப்பித்தது.
அந்த நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தேன்.
இப்போது 21ஆம் நாள் (21.03.2013)
காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையம்,
சச்சிதானந்தன் அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கிறது.
சச்சி ஐயாவுக்கு எங்கள் வாழ்த்துகள்.

21.3.2013
காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஒரு அழகான கோயில்.
அந்தக் கோயிலில் எனக்கு 21.3.2013 அன்று நிகழ்ந்தவை படங்களாக இணைப்பில்.

தமிழ்த் தாய்க் கோயிலின் வாழ்த்துப் பெற விதந்துரைத்தவர் கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன்.

22.03.2013
2013/3/22 Karuannam Annam
அனுப்பிய செய்தி.
காரைக்குடிக் கம்பன் விழா முதல்நாள் திருநாள் மங்கலம் குறித்தவண்ணம் நேற்று தொடங்கிற்று.

1938 ல் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தப்பட்டு பவளவிழாக் காணும் நிகழ்ச்சி. கம்பன் அடிப்பொடி திரு சா.கணேசனாரின் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.
கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் போன்ற அறிஞர்கள் அரும்பணி தொடர்கிறார்கள்..
இந்த ஆண்டில் நமது இணைய நண்பர் பெரியவர் பெரும் தொண்டாளர் திரு மறவன்புலவு க.சச்சிதானந்தமன் அவர்களது திருமுறைக்கும் தமிழுக்குமான தொண்டு முடிசூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
முதலில் மாலை 5.15க்கு தமிழ்த் தாயின் சிலை முன்பாக ஒதுவார் உலகம் யாவையும் பாடல் இசைத்த பின்பு ஐயாவுக்குப் பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்பட்டது.
இரத்தினக்கம்பள விரிப்பின் வழி கோவிலூர் மடாலயம் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிகர், கவிக்கோ அப்துல் இரகுமான், சரஸ்வதி இராமனாதன் அம்மா, நாஞ்சில்நாடன் மற்றவர்கள் அழைத்துவரப்பட்டார்கள்.
தமிழ்த்தாய் போற்றி, கம்பன்போற்றி, கணேசனார்போற்றிப் பாடல்களுக்குப் பின்னர் ஐந்துபண்கள் வழி கம்பன் அருட்கவி ஐந்து இசைக்கப்பட்டது.
நிகழ்வுகளுக்குப்பின் ஐயா அவர்களுக்குச் சரிகை துப்பட்டா, சரிகை தலைப் பாகை, பொன்னாடை முதலியவை சுவாமிகளின் திருக்கரங்களால் அணிவிக்கப்பட்டது.
மேலிருந்து மலர் சொரியப்பட்டது. ஐயா அவர்களது பொன்னம்பலனின் திருமுறைகளை மின்னம்பலத்தில் ஏற்றிய தொண்டும் அறிவியல், தமிழ்ப் பணிகளும் சுவாமிகளால் பாராட்ட்ப்பட்டன.
ஐயா அவர்கள் பணிவுடன் பாராட்டை ஏற்றார். தன் பணியைத் தொடரக் கிடைத்த ஊக்கமாகத் தமிழும் சிவமும் கண்களாகப்பெற்ற காரைக்குடிப்பகுதிப் பெருமக்கள் அளித்த பாராட்டைக்கொள்வதாகக் கூறினார்.
முன்னதாக நண்பர் திரு காளைராசனுடன் சச்சிதானந்தன் ஐயாவையும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களையும் சந்தித்து உரையாடியதை எங்களின் நற்பேறாக எண்ணுகிறேன்.
மறவன் புலவு பொங்கல் விழா வழிபாட்டையும், அறுவடைத் துவக்க விழா வழிபாட்டையும், பிள்ளைகளுக்கு முழு நிலவு நிகழ்ச்சியையும் இணைய வழி கண்டதுபற்றி ஐயாவிடம் பகிர்ந்துகொண்டேன்.
திரு காளைராசன் திருப்பூவணக் காசி ஒலிவட்டுக் கொடுத்து ஆசி பெற்றார்.
ஐயா மகிழ்ந்து கவிக்கோ அவர்களிடம் இணைய குழுக்கள் பற்றியும் கருத்துப்பரிமாற்றம்பற்றியும் இணைய நட்புப் ப
ற்றியும் உயர்வாகக் குறிப்பிட்டார்கள். கவிக்கோவும் ‘முகநக நட்பது நட்பன்று’ குறளைச் சொல்லி மனம் இனிக்கும் இணைய நட்பைப் பாராட்டினார்.
நிழற்படம் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


26 மார்ச் 2013, 06:07 AM · 

கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரி மற்றும் சாஸ்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் பேரா. முனைவர் சங்கரநாராயணன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. என்சுமன் (Hensman) முன்பு கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். வெள்ளி நாக்கர் சீனிவாச சாத்திரியாருக்கு ஆங்கிலம் கற்பித்தவர்.
அந்த இருக்கையில் பேரா. சங்கரநாராயணன் இருந்தவர்.
நேற்று அவர் எனக்கு அனுப்பிய குறிப்பு.
From: Sankara Narayanan
To: "Maravanpulavu K. Sachithananthan"
Date: Mon, Mar 25, 2013 at 10:16 PM
My dear Sachithananthan,
This whole afternoon I have been talking of you, of your services, to a small gathering in Sankara College, Kumbakonam. Some students were among the audience.
My talk was about an article in Dinamani (தினமணி) dated 01-02-2012 wherein Dr. Abdul Kalam had acknowledged the greatness of a Mathematics teacher, Kanakasundaranar, -details of whom- he got to know inquiring you, when he met you in Delhi Tamizh Sangam, months ago.
In a college which starts every day with a special prayer, thotakashtakam (தொடக்க அட்டகம்), that sings the greatness of the teacher of teachers, composed by a disciple of Adi Sankara, my recalling the acknowledgement in the article was well in order.
Then I told them all how Dr. Sachithananthan takes care of documenting information regarding teachers known for their service, which is but the proper objective correlative of the prayer in another form.
For an ardent chanter of Tiruvaachakam, the one line kavacham, kokazhi aanda gurumanithan thaal vaazhha, (கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க) suggests and edifies all that should be known and need to be known.
Prof. SAS.


31.03.2013
தந்தை செல்வா நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினேன்.
கைதடி தங்கராசா, சித்தார்த்தன், சிவாசிலிங்கம் மேலும் பல அன்பர்கள் உடன் இருந்தனர்.
படங்கள் உதவி, தஈமவிக அன்பர்.

31.3 அன்னாரது பிறந்த நாள்.
நினைவகம் 100 அடி உயரம்.
அடித்தளத்தில் இருந்து உச்சி வரை, கட்டடப் பணிக் காலத்தில் (1977-1979) அருகில் இருந்தேன், தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழு, செயலாளராக.

02.04.2013
சிவரூபன் ஒருவர். முரளி மற்றவர்.
மறவன்புலவு வளர்ச்சியில் ஆர்வம் உள்ள தொண்டர்கள்.
மறவன்புலவு இளைஞர் திறமை மிக்கவர்கள் என்பதைக் காட்டும் இவ்விருவரும் எப்பொழுதும் உற்சாகமாக இருப்பவர்கள்.
இவர்களுடன் நேற்று 1.4.13 மதியம் மறவன்புலவில் நிகழ்ச்சியில் கலந்து மகிழ்ந்தேன். படத்தில் தொலைவு வரிசையில் அவர்கள் இருவரின் இடப்புறமாக நான்.
இணைப்புப் புகைப்படம் சிவரூபன் தொகுப்பிலிருந்து

இன்று அமாவசை.
தெலுங்கு, கன்னடம், சிந்தி போன்ற பல்லின மக்களுக்குப் புத்தாண்டு நாள்.
சென்னையில் இருந்து 30.3. 2013 அன்று என்னோடு மறவன்புலவுக்கு வந்தவர் என் சிந்தி இன நண்பர் இரமேசர் மிரச்சந்தானி.
போர்க் காயங்களுடன் திருத்தியும் திருத்தாமலும் பற்றாக்குறை வசதிகள் கொண்ட என் வீட்டில் தங்கியுள்ளார்.
இன்று அவருக்குப் புத்தாண்டு நாள்.
காலை அவருடன் வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் சென்றேன். அவருக்கு மகிழ்ச்சி. வழிபாட்டை அடுத்து திருநீறும் புத்தாடையும் கொடுத்தனர் கோயிலில்.
சப்பாத்தியும் உருளைக் கிழங்குக் கூட்டும் காலை உணவு. வாழையிலையில் கீரைச் சோறும் சாம்பாரும் தயிரும் மதிய உணவு.
27.4.2013 வரை யாழ்ப்பாணத்தில் மறவன்புலவில் என்னோடு தங்கியிருப்பார் இரமேசர்.

4.5.2013
தென்மராட்சி, சாவகச்சேரிப் பிரதேச சபை. நாவற்குளிப் பகுதியின் கிளை அலுவலகம் தச்சன்தோப்புச் சந்தியில். அங்கே ஒரு நூலகம். நூலகர் திருமதி. சிவசுப்பிரமணியம். 2010இல் மறவன்புலவில் இருந்தபொழுது அவர் அழைத்தார். நூலகத்தில் உரையாற்றக் கேட்டார். அப்பொழுது முடியவில்லை.
இந்தமுறை, உலகப் புத்தக நாள் விழாவுக்கு வருமாறு கேட்டார். 27.4.13 அன்று காலை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா. சாவகச்சேரிப் பிரதேச சபைத் தலைவர் திரு. துரைராசா அவர்கள் தலைமையில் விழா. சாலை வளரச்சித் தொழினுட்ப அவலுவலர் திரு. சீவபாலன், கந்தையா-கனகம்மா அறநிலை திரு. மயில்வாகனம் நல்லாசிரியர் திரு. சுப்பையா ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.
திருமதி சிவசுப்பிரமணியம் படைப்பாற்றலுள்ளோரைப் போற்றும் பண்பாளர். தென்மராட்சியின் சமகாலப் படைப்பாளிகளை அழைத்துப் பாராட்டுபவர். எப்படியாவது தேடிக் காண்கிறார். மாதம் ஒருமுறை பாராட்டுகிறார்.
நூலகத்திற்கு நாள்தொறும் வரும் மாணவர் தொகை கூடுதலாக உள்ளது. திருமதி சிவசுப்பிரமணியத்தின் விடா முயற்சியே காரணம்.

5.5.2103
மறவன்புலவுக்குக் குடிபெயர்ந்து தங்கிய காலம் 5 மாதங்கள்.
அங்கு என் புற முயற்சிகள்.
1. மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலைக்கு இணைய இணைப்பு. (2012 ஆவணி)
2. மறவன்புலவின் 85 வேளாண் குடிமக்கள் கலந்து ஒரே நேரத்தில் பொங்கிய தைப் பொங்கல் விழா. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழக, தமிழீழ அன்பர்கள் தந்த பரிசுப் பொதி. (2013 தை)
3. 17 சிறார்களுக்கு வெள்ளிக்கிழமைதோறும் இசைத் தமிழ் வகுப்பு. (2013 தை தொடக்கம்)
4. 25 சிறார்களுக்கு நாள்தொறும் தமிழ்க் கணிணிப் பயிற்சி. (2013 மாசி தொடக்கம்)
5. மறவன்புலவு மாதர் திருமகள் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கம் வழியாக 40 வீட்டுப் பெண்களுக்கு ஊதுவத்தித் தொழிலில் இந்திய (கர்நாடக மாநிலத்து) வல்லுநர் வழங்கும் பயிற்சி. தொடர்ந்து அவர்கள் வருவாய் ஈட்ட மூலப்பொருள் வழங்கல், உற்பத்தி, சந்தை ஏற்பாடு. (2013 சித்திரை தொடக்கம்)
6. மறவன்புலவுக்கும் கெற்பலிக்கும் 1983இல் புலம்பெயர்ந்த 40 + 61 மலையகத் தமிழ்க் குடும்பங்களுக்கு 25 ஆண்டுகளாக காணி உறுதி வழங்காமலிருந்த அறவழிப் போராட்டக் குழுவுடன் உறுதி வழங்குமாறு 2010 புரட்டாதி முதலாகப் போராட்டம். இதை விரும்பாத குழுவிலுள்ள சிலர் படைப் புலனாய்விடம் என் மீது புகார். இந்தப் புகார் தொடர்பான விசாரிப்புகள். வேறு புகார்களும் இங்கிருந்து போக, பல்வேறு விசாரிப்புகள். எனினும் இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
7. மறவன்புலவு மீளெழுச்சித் திட்ட ஆட்சிக்குழுவுக்குத் தேர்ந்ததால் (தலைவராகுமாறு கேட்டனர், மறுத்தேன்) அங்கும் என் சிறிய பங்களிப்புகள். (2013 மாசி தொடக்கம்).
8. ஓய்வுபெற்ற ஊர்த் தலைமைக்காரர் பதவிநீட்டிப்பை ஊக்குவித்தல். (2013 சித்திரை 17)
9. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் மீளமைப்புத் திருப்பணித் தொடக்கநிலை படிப்படியாக.
நன்றி

11.05.2013
மீரிகமத்தில் தொழில் பயிற்சி. பார்த்து வா. நண்பர் ஈசுவரன் ஆணை. மீரிகமம் சென்றேன். ஒரு ஊர் முழுவதும் ஊதுவத்தி உருட்டிப் பிழைக்கிறார்கள். பயிற்சியும் மூலப் பொருளும் சந்தையும் இந்திய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்.
மறவன்புலவுக்கு இந்தத் தொழில் ஏற்றதல்லவா?
பயிற்சியளிக்க வருமாறு அழைத்தேன்.
மறவன்புலவு மாதர் சங்கத்தாருடன் தொடர்பு ஏற்படுத்தினேன்.
விளைவு...
பாருங்கள் பகிருங்கள்
நன்றி

14.05.2013
உது சரிவாது.
உதென்ன விசர் வேலை.
ஏன் உவர் உதிலை மினக்கடுகிறார்?
வேறு வேலையில்லை.
எத்தனை பேர் சறுக்கிய குதிரை.
சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
இப்படியாக எதற்கும் எதிர்மனது.
யாழ் குடா நாட்டில் சற்றே கூடுதலாக எதிர் மனது.
நேர் மனது பற்றிய கலந்துரையாடல்.
யாழ்ப்பாணத்து நல்லூர்.
முருகப் பெருமான் கோயிலின் தெற்கு வீதி.
கோயிலுக்கு நேரே பின்புறம்.
மங்கையற்கரசி வித்தியாலயம்.
காலை 0845 தொடக்கம் 0930 வரை. 
பின்னர் 0940 தொடக்கம் 1015 வரை.
75 மாணவர்கள்.
சிறுவர், வளரிளம் பருவத்தார்.
எனக்குத் தந்த தலைப்பு நேர் மன நோக்கு.
மாணவர் என்னுடன் ஒன்றினராம்.
பாடசாலை அதிபர் செகநாதன் கூறினார்.
மாணவர் உற்சாகத்துடன் கலந்துரையாடினர்.

19.05.2013
வல் என்ற வேர்ச் சொல்.
வலி, வலிமை, வல்லான், வல்லமை என வளைந்தும் விரிந்தும் சொற்களாகின.
வல்லமை தாராயோ எனப் பாரதியார் இழைத்தார்.
மை விகுதியுடன் பாரதியாரின் சொல்லாட்சியில் பொருள் பொதிந்தது, வேர் விரிந்தது.

அந்தச் சொல் மின்னம்பலத்தில் இதழுக்காயது.
வலிமை என்ற பொருள் தொக்கி நிற்கிறது.
மின் இதழ் என்ற பொருள் துலங்கி நிற்கிறது.
http://www.vallamai.com/
வல்மைக்குப் புதுப் பொலிவு கண்டு, பொருள் விரித்த புலவர் அண்ணா கண்ணன்.
அவர் பங்களூரில் யாகூவராக, ஈரோடு பவளசங்கரியார் வல்லமையின் பரப்புநரானார்.
மின்னம்பலப் பொலிவு கண்டு ஆரும் பொறுப்பினரானார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னையும் மின் இதழ் ஆலோசகர் குழு உறுப்பினராக்கினரார்.
எழும்பூரில் எனதில்லத்தில் கூடிய ஆலோசனைக் குழுக்கூட்டம் பசுமையாக நினைவில்.
பெரும் புலவர்களுக்கு விருந்தோம்பும் பேறன்றி வேறறியேன்.
உருண்டோடிய நான்கு ஆண்டுகளில் திரண்டோடிய தமிழ்ச் சொல்லமைந்த கருத்துச் செறிவால் வல்லமைந்து நல்லமைந்ததால் நான் மகிழ்வுறுகிறேன்.
ஒரு பொந்து. புலமைப் பொந்து. அப்பொந்துள் ஒரு பொறி. அது தீப்பொறி. அண்ணா கண்ணன் ஏற்றிய பொறி.
புலமைக் களமாக, கருத்தாளர் தளமாக, இனிமைக் குளமாக, மின்னம்பலத்தை வளமாக்கும் வல்லமை வாழ்க.
http://www.vallamai.com/
நான்காண்டு வளரச்சியைப் புள்ளிவிவரமாக்கும் ஆற்றல், வரைபடமாக்கி விளக்கும் வல்லமை, பவளசங்கரியாருக்குமுண்டு அண்ணா கண்ணனாருக்குமுண்டு.
சொடுக்குவோர், தட்டுவோர், திறப்போர், நுழைவோர், நுழைந்தும் மீளாதார், நாடிநுழையும் நாட்டினர், நகரத்தினர், என்ற விவரங்கள் மலைக்க வைக்கும் தகவல்களாய், திகைப்பூட்டும் திரட்டாக அமைந்து, இதழ்ப் பணிக்கு உற்சாகத்தை ஊக்கத்ததைத் தருமாம். சோர்வுகள். தொய்வுகளை அடையாளமிட்டு, செம்மை நோக்கி வளர்க்க உதவுமாம்.
 நன்றி

28.5.2013
பெயர் சொல்லிக் கூப்பிட்டேன், கை தட்டி விளித்தேன், குரலை உயரத்தி உங்களைத்தான் என்றேன்.
10 மீ. தொலைவில் நிற்கிறார். அவருக்குக் கேட்கவில்லை. சற்றுமுன் வீட்டுக்கு வந்து பேசிச் சென்றவர், அவருக்குக் காது நன்றாகக் கேட்கும்.
பக்கத்தில் நிற்கிறார், கூப்பிட்ட குரலுக்குச் செவிசாய்க்கவில்லை.
அருகில் சென்றேன். அழைத்தேன். திரும்பிப் பார்த்தார். என்ன சொல்கிறீர்கள் என்றார் போலும். எனக்கும் சரியாகக் கேட்கவில்லை.
செய்தி சொன்னேன், என்ன என்ன எனக் கேட்டார்.
வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தோம். வெளியே வந்ததும் ஒருவரோடு ஒருவர் பேசமுடியவில்லை.
வானத்தைப் பார்த்தேன். பறவை எதுவுமே பறக்கவில்லை.
வயல்வெளியைப் பார்த்தேன். மாடுகள் மேய வரவில்லை. மாடுகள் மேயும் புல்தரையில் கிளம்பும் பூச்சிகளைக் கவ்வக் கொக்குகளும் இல்லை.
கடும் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து வீசுகிறது. விடை மாதம், வௌளுவா நாள். அதுவே வைகாசி விசாக நாள். அன்று காற்றின் வேகம் கடுமையாகியது.
வெளியில் பேச்சுக் கேட்கவில்லை. பறவைகளால் பறக்கமுடியவில்லை. மாடுகள் மேய்ச்சலுக்கு வர முடியவில்லை.
குளத்தில் அலை அலையாய் வடகிழக்கு நோக்கிய பாய்ச்சல். தாமரைகள் இலை மடித்துக் கொடுத்தன. தாமரை மலர்களின் கீழிதழ்கள் காற்றோடு பறந்தன.
படை வீரர் ஒரே நேரத்தில் வேல்களைச் சாய்த்துத் தலைவனை வணங்குவது போல, விரியாத தாமரை மொட்டுகள் தலை சாய்த்துக் காற்றை வணங்கின.
சோழகம். மறவன்புலவில் பட்டம் விடும் காலம். அக்காலத்தின் இடையே கடும் காற்று. காற்றின் சினம் பார்க்க.
பகிர்க.

02.06.2013
31.5 தொடக்கம் சென்னையில் உள்ளேன்.
2 மாத காலம் மறவன்புலவில், யாழ்ப்பாணத்தில், தீவகத்தில், வலிகாமத்தில், பரந்தனில், கிளிநொச்சியில், வவுனியாவில் அநுராதபுரத்தில், திருக்கேதீச்சரத்தில் உலவினேன்.
அங்கு 36 பாடசாலைகளுக்குச் சென்றேன். பாடசாலை முதல்வர்களின், ஆசிரியர்களின், மாணவர்களின் அன்பில் திளைத்தேன்.
நாவற்குழி மகா வித்தியாலய நூலகத்துக்கு நூல்கள் வழங்கினேன். தென்மராட்சிப் பிரதேச சபையின் நாவற்குழிக் கிளை நூலகத்துக்கு நூல்கள் வழங்கினேன்.
நல்லூர் மங்கையற்கரசி வித்தியாசாலையில் நேர்மன நோக்குக் கூறினேன். நல்லூர், சாவகச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கம்பன் விழா நிகழ்ச்சிகளுக்கு மறவன்புலவின் மாணவச் செல்வங்களை அழைத்துச் சென்றேன். தமிழகத்தில் இருந்து உரையாற்ற வந்த என் அன்பரகளுக்கு அறிமுகம் செய்தேன்.
கண்டாவளைப் பிரதேசச் செயலர், சாவகச்சேரிப் பிரதேசச் செயலர், யாழ்ப்பாண மேலதிக அரச அதிபர், கிளிநொச்சிக் காவல் நிலையத்தினர், சாவகச்சேரிக் காவல் நிலையத்தினர், யாழ் மாநகராட்சி ஆணையாளர் மக்கள் வங்கி அலுவலர்கள் என அலுவலகங்களில் முகம் தெரியாத பலர் மறக்கமுடியாத அன்புகாட்டினர். எம் ஊரின் நன்மைக்காக அமைச்சர் வாசுதேவா நாணயக்காராவும் அவர் உதவியாளர் மோகனும் தொலைப்பேசியில் கேட்டதும் செய்த உதவிகள் மறக்கமுடியாதன.
திருக்கோயில் சொத்துகளைப் பேணுவதற்கு மறவன்புலவு மக்கள் காட்டிய ஆர்வத்தால் மெய்ம்மறந்தேன். திருக்கோயில் வளாகத்தை மீளமைக்கும் திருப்பணிக்காகத் தயார்செய்யவும் இக்காலத்தில் முடிந்தமை திருவருளே.
மறவன்புலவு மாணவர் கணிணிப் பயிற்சியின் பெறுபேறாக ஊரில் உள்ள 256 தொலைப்பேசியாளரின் விவரங்களைத் தொகுத்து மறவன்புலவுத் தொலைப்பேசி என்ற நூலைத் தயாரித்தனர். 200 படிகள் அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
மறவன்புலவு மாதர் சங்க 50 பெண்கள் ஊதுவத்தி உருட்டும் தொழிற்பயிற்சி பெற்றதை ஏற்கனவே சொல்லியிருந்தேன். அவர்களைச் சுய உதவிக் குழுவாக்கி, உற்பத்திக் கூட்டுறவு அமைப்பாக்கும் பணி திருமிகு அங்கயற்கண்ணியின் முயற்சியால் தொடர்கிறது. உருட்டிய ஊதுவத்திகளுக்குத் தொகைகள் பெற்றனர். மேலும் உருட்ட மூலப்பொருள் பெற்றனர். உற்சாமான முயற்சி.
திருவாசகம் முழுவதும் சிங்களத்தில் மொழிபெயர்த்து முடிந்தமை இக்காலத்திலே. கல்முனையில் இருவர் மொழிபெயர்த்துத் தந்தனர். முகில்வண்ணன் வே. சண்முகநாதன் ஒருங்கணைத்த பணி. யாவும் www.thevaaram.org தளத்தில் பார்க்கலாம். அடுத்து 9ஆம் திருமுறை மொழிபெயர்ப்பாக முயற்சி. அகில இலங்கை இந்து மாமனறத் தலைவர் திரு. நீலகண்டனுடன் நேரில் பேசி நிதி ஆதாரங்கள் கேட்டுளேன்.
என் நண்பர் ஈசுவரனின் 144 பக்கச் சிறுகதைத் தொகுதி, திரு. சந்திரசேகரம் அவர்களின் அறிமுறைக் கேத்திர கணிதம் என்ற 541 பக்க நூல் யாவும் இக்காலத்தில் என் பங்களிப்புடன் அச்சிடத் தயாராகின.
யாழ்ப்பாணத்தில் காந்தளகம் பதிப்பகம் வழியாக நூல்களை விற்பனை செய்யும் முயற்ச்சிக்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர் திரு. மரியநாயகம். 1964 தொடக்கம் 1978 வரை யாழ்ப்பாணம் சிறீ காந்தா அச்சகத்தில் என் தந்தையாருடன் புத்தக விற்பனையில் பணிபுரிந்தவர், மீண்டும் என்னுடன் தன்னை இணைத்துக் கொண்டார். அவரின் உதவியால் கார் ஒன்றை வாங்கினோம். ஏறத்தாழ மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான நூல்களைப் 10 நாள்களில் விற்பனை செய்த சாதனையாளர் திரு. மரியநாயகம்.
மறவன்புலவில் கோயில்களில் திருவிழா, காவடி விழா, அன்பர் ஒருவரின் மகளின் மணவிழா, ஒருவரின் பிறந்த நாள் விழா, இருவரின் இறப்பு, கொக்குவிலில் புலவர் பார்வதிநாதசிவம் காலமானமை யாவும் இக்காலத்தில் நான் சென்ற நிகழ்வுகள்.
புலவர் பார்வதிநாதசிவம் இறந்தார் எனக் கலைஞர் கருணாநிதிக்குத் தெரிவித்தேன். கலைஞரின் தமிழாசிரியர் தண்டபாணி தேசிகர். தண்டபாணி தேசிகரின் குருவானவர் மட்டுவில் க. வேற்பிள்ளை. அவரின் பெயரன் புலவர் பார்வதிநாதசிவம், இநத விவரத்தைக் கலைஞருக்குத் தெரிவிக்க அவர் உடனே இரங்கல் செய்தி வெளியிட, ஊடகங்கள் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரப்பிடப் புலவர் பார்வதிநாதசிவத்தின் மறைவுச் செய்தியே யாழ்ப்பாணப் புலவர் மரபின் தமிழகத் தொடர்புத் துலக்கச் செய்தியாயிற்று.
திருக்கேதீச்சரத்தில் வெளியான நமசிவாயத்தார் நினைவு நூலுக்கும் பிரான்சில் வெளியான கோவை நந்தனின் கழுகு நிழல் நூலுக்கும் காரைக்குடியில் வெளியான கம்பன் அடிசூடி நூலுக்கும் இக்காலத்தில் நான் எழுதிய கட்டுரைகள் உள்ளடக்கமாயின.
என் மூக்குக் கண்ணாடியைத் தொலைத்தேன், கைப்பேசியைத் தொலைத்தேன். சோழகக் காற்றின் சினத்தால் என் வீட்டுக் கூரைத் தகடுகள் பறந்தன. இணைய இணைப்புத் தராது பிற்பகுதியில் என் மடி கணிணி முணுமுணுத்ததால் சாவகச்சேரித் தீபன் வலையகத்தில் என் இணையப் பணிகளை நிறைவுசெய்வேன்.
இவை மறவன்புலவில் நான் தங்கிய என் இரு மாதகாலப் பணிகள். திருமுறைக்குக் கன்னட மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்புப் பணிகள் தொடர்பாக மைசூர் மந்தியா ஆதிசுன்சுனகிரி மடத்தாரும் திருமலை திருப்பதி தேவத்தானத்தாரும் அழைத்த வண்ணம் இருந்தனர். சென்னை வந்துளேன் அப்பணிகள் பார்க்க.


03.06.2013
வடிவேற்கரசன் காலமானார் என்ற செய்தியால் சோர்வுற்றேன். 1970இல் அவரோடு பழகத் தொடங்கினேன். 271 செட்டியார் தெரு அவரது வணிக நிலையம். அதுவே எனது பொதுப்பணிகளுக்கு முகவரி.
நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கம் சண்முகநாதன், பேரின்பநாயகம், யாழ்ப்பாணம் நோதர்ண் தொழிலகம் சண்முகலிங்கம் யாவரையும் சந்திக்கும் இடமாக அவரது வணிக வளாகத்தின் மூன்றாவது மாடி.
நேற்று மணவை அசோகன் செய்தி சொன்னதும் துணுக்குற்றேன். வல்வெட்டித்துறையின் மூத்த குடிமக்கள்.
அவரது தந்தையார் யாழ்ப்பாணம் பெரிய கடையில் காங்கேயன்துறை வீதி தொடங்கும் இடத்தில் ஓட்டு வணிகம் செய்தவர். கோழிக்கோடு ஓடுகளுக்கு யாழ்ப்பாணத்தில் பெரு மதிப்பு. யாழ்ப்பாணத்துப் புகையிலையை மலையாளத்துக்கு ஏற்றிச் செல்லும் அவரது கப்பல்கள் கோழிக்குகோடு ஓடுகளுடன் யாழ்ப்பாணம் வருவன.
யாழ்ப்பாணத்தில் துறைமுகம், சுங்கம், குடிவரவு-அகல்வு அலுவலர்கள் எனச் சுறுசுறுப்பாக இயங்கிய காலம்.
வடிவேற்கரசன் கொழும்பைத் தலைமையகமாக்கி வணிகத்தில் கொடிபறக்க வாழ்ந்தவர். கொக்குவில் பெருமகன் நீதிராசாவின் மகளைத் திருமணம் செய்தவர்.
பேபி, தொண்டைமாநாதன் என இரு தம்பியர். யாவரும் வணிகர். 1983இல் கொழும்பிலுள்ள அனைத்தையும் தொலைத்து மூவரும் குடும்பங்களுடன் சென்னையில் வாழத்தொடங்கினாலும் வணிகம் அவர்களது மூச்சாக இருந்தது.
தமிழரசுக் கட்சியின் தூண்களாக விளங்கிய குடும்பம். கட்சியின் நிதி வளத்தின் ஊற்றுக் கண்களுள் வல்வெட்டித்துறை விஆர்வி குடும்பமும் ஒன்று. அமிர்தலிங்கம் மீது அளவற்ற அன்பு வைத்தவர் வடி. வன்முறைப் போராட்ட முறையை நாடாதவர், ஒதுங்கி இருந்தவர்.

அருமை நண்பரை இழந்து வாடுகிறேன்.

11.06.2013
என் மனதில் பதிந்தவர்கள்
என் மண்ணில் பிறந்தவர்கள்
ஒருவர் பாலி ஆற்றைப் பாடுகிறார்
மற்றவர் இருளைக் கிழித்துக் காட்டுகிறார்.
நெடுந்தீவு தந்த கவிஞர் செயபாலன்
தன் முதற் கவிதையின்
ஆங்கில மொழியாக்கத்தைக் கூறியதும்
MY FIRST POEM
The Pali river, quietly flowing By V.I.S. JAYAPALAN
(translated and edited by LAKSHMI HOLMSTRÖM)
வந்த என் வரிகள்
அழகுப்பாலி ஆற்றின் நீரோட்டம்
அடுக்குச் சொற்களின் தேரோட்டம்
தெளிந்தநீர் ஊற்றின் உணர்வோட்டம்
தெம்மாங்குத் தேனின் இசையோட்டம்
நெடுந்தீவின் நேற்றைய பசுத்தோட்டம்
நெஞ்சிலோ செயபாலன் நினைவோட்டம்
கொஞ்சும் தமிழுக்கோ கொண்டாட்டம்
இலட்சிமியின் ஆங்கிலம் வண்டாட்டம்
மட்டுவில் தெற்கில் பிறந்த சிவநாதன்
அமெரிக்காவில் புகழ் பெற்ற அறிவியலாளர்
ஒபாமா அவரை அழைத்துப்
பாராட்டி விருது வழங்கினார்
என்றதும் வந்த வரிகள்.
பகலில் பார்க்கலாம், இரவில் பார்க்கலாமா?
பார்க்கலாமே என்கிறது அறிவியல்.
இரவுப் பார்வையில் வாழ்பவை
ஆந்தையும் கோட்டானும்.
இருளைக் கிழித்துப்
பொருளைக் கண்டறியும் நுட்பத்தில்
நுண்மாநுழைபுலம் பெற்றுப்
புத்தாக்கச் சிந்தனைகளைப் புகுத்திய பெற்றியாளர்
தென்மராட்சி ஈந்த தேன் தமிழர்
மட்டுவில் புறந் தந்த மாண்பாளர்,
ம.க. வேற்பிள்ளை காலப் பாடசாலையில் பயின்றவர்,
பின்னர் நான் பயின்ற யாழ். இந்துக்கல்லூரியில் பயன்றவர்,
பேராதனை சென்று பொறியியல் பயின்றவர்,
விரிவுரையாளராகி,
அமெரிக்கா சென்று
ஆய்வகத்தில் கண்விழித்து உழைத்தவர்,
அரும்பாடுபட்டு உயர்ந்த செம்மல் சிவநாதனார்,
யாழ். பல்கலைக்கழகத்திலும்
ஆய்வுநெறிக்கு ஆவன செய்கிறாரே,
எந்தையும் தாயும் உலவிய மண்ணின் மைந்த,
மட்டுவில் ஈந்த மாண்புறு செல்வ,
மனம் நிறைந்து உளம் குளிர்ந்து
சிந்தை தெளிந்து வாழ்த்துகிறேன்,
நோபல் பரிசை நோக்கிய மட்டுவிலாராகுவீராக.

10.06.2013
யாழ்ப்பாணம் போய வந்தீர்களே, எப்படியிருக்கிறீர்கள்? என்றார் சீதாராமன்.
குறை ஒன்றும் இல்லை, என்றேன்.
என்ன நீங்களும் மாறிவிட்டடீர்களா? என்றார்.
நல்லாய் இருந்தேன், நல்லாய் இருக்கிறேன், நல்லாய் இருப்பேன் என்றேன்.
மனத்தில் விடுதலை பெற்றவன், புறத்தால் பாதிக்கப்படேன் என்றேன்.
சுண்ணாம்பு அறைக்குள் இருந்தவாறே,
மாசில் வீணை, மாலை மதியம், வீசு தென்றல், வீங்கும் இள வேனில், மூசும் வண்டு நிறைந்த குளிர்மையான பொய்கை, யாவற்றையும் கண்ட அனுபவம் முன்பே சொல்லப்பட்டதே என்றேன்.
செவ்வாய்க் குற்றம், சனியின் பார்வை, வியாழனின் மாற்றம், ராகுவும் கேதுவும் விழுங்கும் நிலை, சூரியனின் வெம்மை யாவும் இருந்தாலும் அவை குற்ற மற்ற நன்மையைத் தருவன, ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல என முன்னர் அழுத்தம் திருத்தமாகத் திரும்பத் திரும்பப் பேசிய செய்தியைச் சொன்னேன்.
நேர் மன நோக்கு இருந்ததால் இருப்பதால் இருக்குமாதலால் நல்லாக இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன், இடுக்கட்பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கக் கோரேன் என்றேன்.
நடுக்கத்தைக் கெடுப்பதை நா சொல்ல, என் உளமே புகுந்த ஈசன் எந்தை நீழலில் நலமாக, நலமாக இருப்பதே வாழ்வு என்றேன்.
உங்களுடன் தொலைப்பேசியில் பேச விழைவதே திருமுறை வழியாக என்னை மீள் உற்சாகத்துள் கொண்டுவருவதற்காக என்றார் சீதாராமன். நான் அழைத்தால் தாள் அடைக்காது திறவுங்கள், பேசுங்கள், என்றார்.
கொழும்பில் வீரபாகு எனக்கு நண்பர். ஈசுவரனின் தம்பி அவர்.
அவருக்கு நண்பர் சீதாராமன். பங்களூரில் இருந்து வடக்கே 60 கிமீ. தொலைவில் 1000 மீ. உயரத்தில் சிற்றூரில் அழகான வசதியான வீட்டில் வாழ்கிறார்.
அவருக்கு என்னுடன் தொலைப்பேசியில் பேசுவதில் ஒரு சுகம். குழைந்து குழைந்து பேசுவார். அவரது நினைவாற்றல் அபாரம்.
தெலுங்கரான அவர் நாவலப்பிட்டியில் தொடக்கக் கல்வி பயின்றவர், தமிழ் ஆசிரியர் ஆத்மசோதி முத்தையா. எனவே தேவார திருவாசகங்களில் சீதாராமன் மூழ்கியவர்.
பேசத் தொடங்கினால் விடமாட்டார்.

11.06.2013
கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் இதழ் பார்க்க

12.06.2013
ஓலைச்சுவடிகள் குறித்த தேசியப் பயிலரங்கு
ஓலைச்சுவடிகள் மற்றும் தொல் பழங்கால எழுத்துகள் தொடர்பான இலவய தேசியப் பயிலரங்கு, ஆசியவியல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுவடிப் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சூன் 24ஆம் தேதி தொடங்குகிறது.
செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் தேசியப் பயிலரங்கு சூன் 24ஆம் தேதி தொடங்கி சூலை 14ஆம் தேதி வரை 21 நாள்கள் நடக்கின்றது. பயிலரங்கைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தொடங்கி வைக்கிறார்.
இப்பயிலரங்கில் இளம் தமிழறிஞர்கள், தமிழாய்வில் ஆர்வமுள்ள ஜப்பானியர், அமெரிக்கர், மலேசியர், சீனர், மொரீசியசு நாட்டினர் எனப் பல்வேறு நாட்டவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
பண்டைய எழுத்துகளின் வளர்ச்சி, பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து, சாரதா எழுத்து, சுவடிப் படிப்பு, சுவடிப் பாதுகாப்பு, கல்வெட்டு, சுவடிகளைக் கணினியில் பதிவு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகன பயிற்சி.
மேலும், 40-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். பயில்வோருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
பயிலரங்கில் பங்கேற்க, ஆசியவியல் நிறுவனத்தை 9840526834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

12.06.2013
யாழ்ப்பாணத்தில் நாஉ. திரு. யோகேசுவரனக்குச் செயலாளர். அப்பொழுது அவரை அறிவேன்.
திடீரென ஒருநாள் சென்னையில் 1990களில் என்னைச் சந்திக்கிறார்.
காந்தளகத்தில் என்னுடன் இணைகிறார்.
சில ஆண்டுகள் பணி புரிகிறார்.
யேர்மனிக்கு அனைத்துலகப் புத்தகக் காட்சிக்குக் காந்தளகம் சார்பில் போகிறார்.
இன்று இலண்டனில் அவர் செய்தியாளர், சைவ சித்தாந்த அறிஞர், தமிழாய்வாளர். பெயர் பற்றிமாகரன்.
61 வயதிலும் தமிழைப் பாடமாகக் கொண்டு முதுகலைத் தேர்வு எழுதத் தமிழகம் வந்துளார் 56 வயது மனைவி இரீத்தாவுடன். மனைவியும் தேர்வு எழுதினார்.
ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இருக்கைக்கு ஏற்பாடு செய்கிறார். இலண்டனில் 2013 ஆகத்து, அனைத்துலகத் தமிழியல் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இவரும் ஒருவர்.
தமிழகம் முழுவதும் அவரைப் பாராட்டுகிறது.
சென்னையில் அவருக்கு வரவேற்பு. அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 14.6.13இல் அவரும் உரையாற்றுகிறார், அவர் மனைவியும் உரையாற்றுகிறார்.
நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும் பணி என்னுடையது. அழைப்பிதழ் பார்க்க.

14.06.2013 சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், காலை 1100 மணி தொடக்கம் மாலை 1730 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு.
தொல் தமிழ் இலக்கியங்களில் இருந்து நேற்று வரையான தமிழ் இலக்கியங்களில் மானுடத்தின் விழிப்பின் புலமைசார் கண்ணோட்டம்.
மானுட உறவில் தொடங்கி மானுடத் தகவல் வரையான வளர்ச்சியும் மானுட விழிப்பும் என அவர் பயணித்தார். தொல்காப்பியரைத் தொட்ட வேகத்தில் சிவத்தம்பியைக் காட்டினார். இளங்கோவைக் காட்டிய கண்ணாடியில் மார்க்ஸ்சைப் பார்த்தார்.
ஒரு மணி நேரத்தில் அவரின் பல்துறைப் புலமையை செவிகைக்காது கேட்டு, இமைகொட்டது பார்த்து, என் அறிவைப் பெருக்கினேன். என்போன்றே அங்கிருந்த பேராசிரியர்கள், அறிஞர், மாணவர் தேர்ந்து தெளிந்தனர்.
தினமலர் இராம சுப்பையர் நினைவுச் சொற்பொழிவு.
பிற்பகலில் திருமதி இறீத்தா பற்றிமாகரன் சொற்பொழிவாற்றினார். தவத்திரு தனிநாயக அடிகள் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு.
இலண்டனில் தமிழோசையாக, வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் முழங்கி வருபவர். அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மேடையில் ஒரு மணிநேரம் அனைவரையும் தன் பொழிவால் கட்டிவைத்தார்.
தவத்திரு தனிநாயக அடிகளின் வாழ்க்கையும் மானுடமும் பற்றிய பல செய்திகளை வாரி இறைத்தார், அள்ளித் தந்தார்.
பிற்பகல் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும் பேறு என்னுடையதாயிற்று.
படங்களைப் பார்க்க, செயதியையும் படங்களையும் பகிர்க.

2013 ஜூன் 15 அன்று, மறவன்புலவு க.சச்சிதானந்தன் (Sachithananthan) அவர்கள், சென்னை, அம்பத்தூரில் உள்ள என் தமக்கை இல்லத்துக்கு வந்திருந்து, எங்களை வாழ்த்தினார். இரா.பாலாஜி, வேதவல்லி, ஹேமமாலினி (Hemamalini Lokanathan) ஆகியோர் படத்தில் உள்ளனர். சச்சி அய்யாவின் அன்புப் பிடியில் நான்.

19.06.2013
1997 மாசி. கைதாகிச் சிறை செல்கிறேன்.
கைது செய்த அரசு தமிழக அரசு.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்.
ஒரு மாதம் சிறையில்.
பிணையில் வெளியே வருகிறேன்.

உலகத் தமிழர் பேரமைப்பின் முதலாவது மாநாட்டைப் திரு. பழ. நெடுமாறன் கூட்டுகிறார். என் வீட்டுக்கு அருகே தொன் பொசுக்கோ அரங்கில் மாநாடு.
சிறைக்குச் சென்று வந்தபின் பிணை விதிகளை மீற முடியாததால் மாநாட்டுக்குச் செல்லவில்லை. திரு. பழ. நெடுமாறன் அவர்களின் அன்பர்கள் வழக்கறிஞர் தீனதயாளன், அவர் துணைவியார் வழக்கறிஞர் திருமதி தமித்தலட்சுமி தீனதயாளன்.
மாநாடு தொடங்க ஒரு வாரத்துக்கு முன்னதாகத் திரு. தீனதயாளன் ஒருநாள் காந்தளகம் வந்தார். மாநாட்டு மலருக்குக் கட்டுரை கேட்டார். மாநாட்டுக்கு ஏதாவது செய்யக் கேட்டார்.
உலகின் 245 நாடுகள், அவற்றுள் இறைமையும் தன்னாதிக்கமும் ஐநா. உறுப்புரிமையும் கொண்ட நாடுகள், அந்நாடுகளில் மக்கள் தொகை, தமிழர் தோராயத் தொகை என ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொடுத்தேன். மாநாட்டு மலரின் அறிமுகப் பக்கங்களாக அப்பட்டியல் அமைந்தது.
16.6.2013 மாலை 1700 மணி. திரு. பற்றிமாகரன், திருமதி இறீத்தா பற்றிமாகரன் ஆகிய இருவருடனும் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களைப் பார்க்கச் சென்றேன். மறவன்புலவார் எனக் குழைந்து அழைத்து என்னுடனான 28 ஆண்டுகாலப் பழக்கத்தால் விளைந்த அன்பைப் பகிர்ந்து, எம்முடன் நெடுநேரம் பேசிக்கொண்டிந்த அவர், தமிழில் எழுத்துச் சீர்மை எனத் தான் எழுதிய புத்தகப் படி ஒன்றைத் தந்தார். அந்தப் புத்தகத்தில் ஒரு பக்கத்தில், உலகெங்கும் தமிழர் பற்றி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலருக்கு நான் கொடுத்த புள்ளி விவரங்கள் இருந்தன.
1997இன் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வரவேற்பு முகப்பாக இரு படங்களை, உலகப் படங்களைத் தயாரித்தேன். ஒன்றில் உலகின் நாடுகளில் தமிழர் தொகை. மற்றதில் உலகெங்கும் தமிழர் காலந்தோறும் பயணித்து உலகுக்குப் பயனுறுத்திய விளக்கம்.
உயர்ச்சியை விழைந்தோம் உலகோடு, உலக வளர்ச்சியை வகுத்தோம் தமிழோடு என்ற வரிகள் இரண்டாவது படத்தின் தலைப்பு.
14.6.13 அன்று அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்றேன். அயலகத் தமிழர் துறைப் பேராசிரியை முனைவர் வளர்மதி, இரு பகுதிகள் கொண்ட ஒரு தொகுதியான நூலின் படிகளைத் தந்தார். அந்த இரு பகுதிகளிலும் உயர்ச்சியை விழைந்தோம் உலகோடு, உலக வளர்ச்சியை வகுத்தோம் தமிழோடு என்ற என் தலைப்பு வாசகத்தையே நூலுக்கு வரவேற்பு வாசகமாக்கிப் பதிப்பிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
மாடியில் உள்ள கருத்தரங்க அறைக்குச் செல்லப் படியேறினோம். மேல் தளத்துக்கு வந்ததும் சுவரில் பெரிய அளவில் படம். உலகப் படம். உலகெங்கும் காலந்தோறும் தமிழர் பயணித்து உலகுக்குப் பயனுறுத்திய படம். 1997இல் நான் தயாரித்த படம்.
படங்களைப் பார்க்க, பகிர்க.

19.06.2013
தமிழர் கால்வாய். வட கடலில் இருந்து தென் கடலுக்கு.
165 கிமீ. நீளம். 300 மீ. அகலம். 12 மீ. ஆழம்.
மற்றொரு பெயர் சேது சமுத்திரத் திட்டத்தின் சேதுக் கால்வாய்.
கடந்த இரு நாள்களாக ஊடகத்தினர் பலருக்கு நான் ஆலோசகர். கால்வாய் தொடர்பான விளக்கங்கள் கேட்டனர்.
கலைஞர் தொலைக் காட்சி, புதிய தலைமுறைத் தொலைக் காட்சி, பொலிமர் தொலைக் காட்சி என உரையாடல்களுக்கு அழைப்பு. சென்று பங்குபற்றினேன்.
திமுக விவசாயிகள் அணித் தலைவர், இராச்சிய சபை உறுப்பினர் சேலம் கே. பி. இராமலிங்கம், என் அருமை நண்பர் சுபவீ, பூவுலகின் நண்பர்கள் சீனிவாசன், அதிமுகவின் மூத்த பேச்சாளர் ஆவடி குமார் என யாவருடனும் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பைத் தந்தனர்.
2004 தொடக்கம் இந்தத் திட்டம் என்னை ஊடகங்களின் காதலனாக்கியது. வளர் தொழில் ஆசிரியர் திரு. ஜெயக்கிருஷ்ணன், தினமணியில் அப்பபொழுது பணியாற்றிய திரு. குணசேகரன் இருவரும் என்னை விடாது வலியுறுத்தி விளக்கங்கள் அளிக்க அப்பொழுது ஊக்குவித்தனர்.
எனது செவ்விகளின் வரிகளை அக்காலங்களில் தன் மேடை உரைகளிலும் அறிக்கைகளிலும் முதலமைச்சர் கலைஞர் மேற்கோள் காட்டுவார். நேரில் அழைத்துப் பாராட்டுவார்.
அக்காலங்களில் சேது சமுத்திரத் திட்டத் தலைவர் இரகுபதி அடிக்கடி காந்தளகம் வருவார், அல்லது அவரது அலுவலகத்துக்கு நான் போவேன். வல்லுநர்கள் பலருடன் நானும் அவருக்கு ஆலோசகன். தில்லியில் இருந்து அமைச்சர் டி ஆர் பாலு அதிகாலையிலேயே அழைப்பார், அன்றைய நாடாளுமன்றத்தில் வரவுள்ள வினாக்களை என்னிடம் கூறுவார்.
31.5 சென்னை வந்தேன். 2.6இல் கலைஞரிடம் சென்று பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தேன். அங்கு என்னைக் கண்ட ஊடக நண்பர்கள் எப்படியோ முகர்ந்து மீண்டும் என் பங்களிப்பை விடாது கோரி வருகிறார்கள். அவர்களின் தமிழன் கால்வாய்க் காதலன் நானல்லவா? என் வரை படங்களும் உயிரோவியங்களும் அவர்களின் தகவல் தளமல்லவா?
2004இல் நான் வரைந்து கொடுத்த படங்கள் பார்க்க, பகிர்க.

21.06.2013
பன்னிரு திருமுறையின் 18628 பாடல்களுள்
11ஆம் திருமுறையின் 1385 பாடல்கள்
இதுவரை முழுமையாகக் குரலிசையில் பதிவாகவில்லை,
ஆனி 5, 2044 (19.6.13) புதன்கிழமை அத்திருப்பணி தொடங்கியது. பார்க்க, பகிர்க.
தருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில்
சிங்கப்பூர் திருமுறை அடியவர்கள்
2009 தையில் தொடக்கி வைத்த
குரலிசைப் பதிவுத் திருப்பணி.
பெரியபுராணம் 4274 பாடல்கள்
திருக்கோவையார் 400 பாடல்கள்
திருமந்திரம் 3000 பாடல்கள்
யாவும் சிங்கப்பூரார் திருப்பணியாகச்
சைவ உலகம் பெற்ற பேறு.
1400 ஆண்டுகளுக்கு மேலாகச்
செய்யமுடியாமலிருந்த திருப்பணி.
தருமபுரம் சுவாமிநாதனின்
திருமுறைப் பாடல்களின் குரலிசையையும்
உலகெங்கும் வாழும் எவரும்
எக்கட்டணமுமின்றிக்
கேட்க வழிசெய்த
திருப்பணியாளரும் சிங்கப்பூராரே.
சங்கப் புலவர் நக்கீரர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
தெய்வப் புலவர் சேக்கிழார்.
860 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
1200 ஆண்டு கால இடைவெளி.
இக்கால இடைவெளியில்
நக்கீரர் தொடக்கம் சேக்கிழார் வரை
27 அருளாளர் பாடிய 18,268 பாடல்கள்
பன்னிரு திருமுறை.
1 திருமுறை, பாடல்கள் 1,469 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
2 திருமுறை, பாடல்கள் 1,331 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
3 திருமுறை, பாடல்கள் 1,358 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
4 திருமுறை, பாடல்கள் 1,070 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
5 திருமுறை, பாடல்கள் 1,015 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
6 திருமுறை, பாடல்கள் 981 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
7 திருமுறை, பாடல்கள் 1,026 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
8 திருமுறை, பாடல்கள் 1,058 (658 பாடல்கள் (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை, 400 பாடல்கள் ஓதுவார் திருவரங்க யயாதி குரலிசை).
9 திருமுறை, பாடல்கள் 301 (தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை).
10 திருமுறை, பாடல்கள் 3,000 (ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை)
11 திருமுறை, பாடல்கள் 1,385 (ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை பதிவில்)
12 திருமுறை, பாடல்கள் 4,274 (ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை)
மொத்தம் பாடல்கள் 18,268
மேற்காணும் 18,268 பாடல்களையும்
இசைப் பாடல்களாகக் கேட்க,
சிங்கப்பூர்த் திருமுறை அடியவரகள் நிதி தர
அடியேன் இத்திருப்பணியை ஒருங்கிணைக்கும் பேறுற்றேன்.
எவ்விதக் கட்டணமின்றிக் கேட்க
www.thevaaram.org
மின்னம்பலத் தளம் செல்க.
இவற்றுள்
10ஆம் திருமுறையில் 500 பாடல்களையும்
11ஆம் திருமுறையில் 1000 பாடல்களையும்
இன்னமும் தளத்தில் ஏற்ற வேண்டி இருப்பதால் அவற்றைக் கேட்கக் காத்திருக்க.

26.06.2013
இலங்கையில் இடதுசாரி அமைச்சர்கள் கூறியன.
http://onlineuthayan.com/News_More.php?id=653902125326898174
13ஆவது திருத்தத்தில் கை வைத்தால் கச்சதீவு கைமாறும்;
இலங்கை இடதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை
13ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல் மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்தி தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதைவிடுத்து 13ஆவது திருத்தத்தில் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சதீவு பறிபோய்விடும்.''
இவ்வாறு நேற்று அபாயச் சங்கு ஊதியுள்ளனர் 13ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்காக அணிதிரண்ட ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாரி அமைச்சர்கள்.
13 ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள இலங்கை சம சமாஜக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரட்த்தினா, ரெஜினோல்ட் கூரே ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறியதாவது:
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்துத் தமிழ் மக்களின் மனங்களை வென்று, தேசிய நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அதற்கான தகுந்த சந்தரப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், கடந்த 26 வருட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாகாண சபை முறைமைய இல்லாதொழிக்குமாறு சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர்.
13ஆவது திருத்துக்கமைய மாகாணசபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கியிருந்தால் நாட்டில் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. ஒரு தேசிய பொலிஸ் திணைக்களத்தின் கீழ், மாகாண பொலிஸ் திணைக்களங்கள் இருந்தால் பிரச்சினை இல்லை.
13ஆவது திருத்தத்தினூடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து மாகாணசபை முறைமையை சக்திப்படுத்த வேண்டும்.
இதனூடாகச் சிறுபான்மையினருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்களுடன், இணைந்து நாம் செயற்படுகின்றோம் என்பதை நாம் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
அமைச்சர் ராஜித சேனாரத்தினா கூறியதாவது:
டொனமூர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது தமக்குத் தனி இராச்சியம் வேண்டுமென உடரட்ட (மலையகச்) சிங்கள மக்கள் கோரினர். ஆனால் தமிழர்களோ நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்று அப்பொழுது கூறினர். 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டுமென்று பலர் கூறுகின்றனர்.
அத்துடன் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த நாட்டில் ஒரு அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு 26 வருடங்களின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது?
அன்று மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டபோது அது தமிழீழத்திற்கு வித்திடும் என்றனர். ஆனால் அவர்கள்தான் இன்று மாகாணசபையில் அமர்ந்து சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றனர்.
வடக்கு மக்களுக்காக வழங்கிய உணவுக் கோப்பையைப் பறித்து எடுத்துவிட்டு, இப்போது அவர்களுக்குக் கோப்பை அல்ல, ஒரு பிடி சோறுகூடக் கொடுக்க முடியாது என்பது புதுமையான அரசியல். இது அரசியல் தார்மீகம் அல்ல.
சிங்கள இனவாதிகள்தான் தமிழ் இனவாதிகளைப் போஷித்தனர். புலிகள் இருந்தபோது அதிகாரங்களைத் தரமுடியாது என்றனர். இப்போது புலிகள் இல்லை அதிகாரங்ளும் இல்லை என்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன, 13ஆவது திருத்தத்தினூடாக வடக்கு மக்ளுக்குப் பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, மறுபுறத்தில் தேசிய பொலிஸ் திணைக்களத்தினூடாக அதைப் பறித்தெடுத்தார். அத்துடன், காணி அதிகாரத்தை வழங்கினார், ஆனால் தேசிய காணி திணைக்களத்தினூடாக அதையும் பறித்தெடுத்தார்.
இப்படியாக ஒரு கையில் கொடுத்து மறுகையில் பறித்தெடுத்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் இவரும் மாறுபட்ட நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.
அமைச்சர் டியூ குணசேகர கூறியதாவது:
13ஆவது திருத்தச் சட்டம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கமையக் கொண்டுவரப்பட்டதொன்றல்ல எனக் கூறுகின்றனர். 1978ஆம் ஆண்டு முதல் 18 அரசமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மக்கள் விருப்பத்திற்கமைய நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மட்டுமேன் எனக் கேள்விஎழுப்புவது நல்லதல்ல.
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதற்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டின் பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக தமது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இனப்பிரச்சினை தொடர்பில் அவர்களால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது.

26.06.2013
மறவன்புலவில் எனக்கு அன்பர்
திரு. நடேசுவரன் கணபதிப்பிள்ளை.
மிக மென்மையானவர். ஆசிரியர்.
கணிப்பொறிப் பயன்பாட்டில் மேம்பட்டவர்.
மாணவர்களுக்குக் கணிப்பொறி கற்பிப்பவர்.
அஃது அவரது பணியல்ல என்றாலும்.
அவரது முகநூல் பக்கத்தில்
இன்று காலை பார்த்த செய்தியும்
காணொலி இணைப்பும் தருகிறேன்.
அதற்குப்பின்னர்
என் பின்னூட்டத்தையும் தருகிறேன்.
அவரது செய்தி.
நண்பர்களே!
பார்ப்பனனையும் பாம்பையும்
ஒன்றாகக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்
பார்ப்பனனையே முதலில் அடியுங்கள்.
பாம்பைவிட மிகக்கொடியவன் இவன்.
அடியுங்கள் அடியுங்கள் ...........
போலியான பார்ப்பனர்களாளேதான்
இந்து மதம் பாழ்படுகின்றது.
யாழ்ப்பாணத்து ஐயர் ஓருவரின் குதப்பல் விளையாட்டு என்ற காணொலி
http://shar.es/xATYA
என் பின்னூட்டம்.
பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அரச்சித்தால்..
என்ற வரிகள்
திருமூலரின் திருமந்திரம்
511ஆம் பாடலில் வருவன.
பார்ப்பனர் வேறு சிவாச்சாரியார் வேறு.
படிக்க ஆறுமுகநாவலர்.
இலங்கையில் பார்ப்பனர்
(சிலப்பதிகாரம் கூறும் மறை முது பார்ப்பான்)
மிகக் குறைவு.
மறை = ஸ்மிருதி = ஸ்மார்த்தர் = பார்ப்பனர் = பிராமணர்.
பிராமணர் அல்லது ஸ்மார்த்தர் கையால்
திருநீறு வாங்காதே என்றார் ஆறுமுகநாவலர்.
யாரும் சிவாச்சாரியார் ஆகலாம்,
பார்க்க திருமந்திரம் 511ஆம் பாடல்,
அருணைவடிவேலு முதலியார் உரை,
தருமபுரம் ஆதீனம் வெளியீடு,
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php…
தொண்டு, பூசனை, ஒடுக்கம், தெளிதல்
(என்ற சரியை, கிரியை, யோகம், ஞானம்) ஆகிய வழிகளில்,
கிரியை வழியை மட்டுமே வலியுறுத்தி,
தமக்கு வாழ்வாதாரமாக்கும் சிவாச்சாரியார் பலரால்
மூடநம்பிக்கையில் மூழ்கும்
அடியவர் எண்ணிக்கையைக் குறைக்க
அப்பர், சம்பந்தர் இருவரும் அன்றே வழிகாட்டினர்.
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்றும்
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்பு புகுவேன் என்றும்
அப்பர் கூறிய வரிகள்,
கருவறைக்கு நேரே சென்று
பூசனையை எந்த அடியவரும் செய்யலாம்
என்பதை வலியுறுத்துவன.
கிரியை மட்டுமே வழிபாடாகாது.
தொண்டு தொடங்கித் தெளிதல் வரை
யாவும் உள்ளத்தைப் பெருங்கோயிலாக்குவன,
ஊனுடம்பை ஆலயமாக்குவன
என்பது திருநெறி.
தமிழோடு இசை பாடவும்
நன்றாகத் தமிழ் செய்யவும்
கருவறை வரை சென்று பூசனை செய்யவும்
யாவருக்கும் வாய்ப்பு உண்டு என்பதைத்
திருமந்திரம் 511ஆம் பாடலுக்கு
அருணைவடிவேலு முதலியாரின் நீண்ட உரை
வலியுறுத்தி வழிகாட்டும்.

28.06.2013
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து
வெற்றி பெற்றவர்களின் பட்டியல்.
Rono Dutta has become head of United Airlines, the biggest airline in the world ( Fleet size -705 Aircraft and 381 destinations worldwide).
Vikram Pundit was head of Citigroup until recently, which operates Citibank, one of the largest banks in the world.
Rana Talwar has become head of Standard Chartered Bank, one of the biggest multinational banks in Britain, while still in his 40s.
Lakhsmi Mittal has become the biggest steel baron in the world, with steel plants in the US, Kazakhstan, Germany, Mexico, Trinidad and Indonesia.
Subhash Chandra of Zee TV has become a global media king, one of the few to beat Rupert Murdoch.
Gururaj Deshpande. His communications company, Sycamore, is currently valued by the US stock market at over $30 billion, making him perhaps one of the richest Indians in the world
Arun Netravali has become president of Bell Labs, one of the biggest research and development centers in the world with 30,000 inventions and several Nobel Prizes to its credit.
Silicon Valley alone contains over 100,000 Indian millionaires.
Indra Krishnamurthy Nooyi has been the CEO of PepsiCo Inc. since 2006, a Fortune 500 company.
Sabeer Bhatia invented Hotmail and sold it to Microsoft for $ 400 million.
Victor Menezes, born in Pune in 1949, was number two in Citibank until late last year.
Shailesh Mehta is CEO of Providian, a top US financial services company.
Rakesh Gangwal of US Air, Jamshd Wadia of Arthur Andersen, and Aman Mehta of Hong Kong Shanghai Banking Corp. are other top notches.
In Washington DC, the Indian CEO High Tech Council has no less than 200 members, all high tech-chiefs.

28.06.2013
Sarojini Kasianandan Theanalli Kasianandan sachi mama felt our pain too and has done a big research. மறவன்புலவு க. சச்சிதானந்தன் Mama unglai pondra nalla ullangalin aatharavum ookuvipum podhum engaluku. Thadakalai thagarpom

01.07.2013
தமிழர் வரலாற்றில் முதல் முறையாக,
பன்னிரு திருமுறைகள் தெலுங்கில்.
திருமலை திருப்பதி தேவத்தான நிதி உதவி.
தருமபுரம் ஆதீனம் மேற்பார்வை.
முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்,
136 பதிகங்கள், 1469 பாடல்கள்.
தெலுங்கு மொழிபெயர்ப்பு
விசாகப்பட்டினம் சசிகலா திவாகர்
3.7.2013இல் திருப்பதி செல்கிறேன்,
நூலின் மாதிரிப் படி கையளிக்கிறேன்.
இறை உணர்வு,
இலக்கியம்,
இசை,
வரலாறு,
புவியியல்,
அறிவியல்,
தொழினுட்பம்
தத்துவம் என அறிவுக் களஞ்சியமானவை
பன்னிரு திருமுறைகள்.
அயல் வழக்குகளுக்கும் பன்னிரு திருமுறைகளை எடுத்துச் சென்று மனித வளர்ச்சிக்குத் துணைபோகும் ஆர்வத்தால் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் முயற்சியை முன்னெடுத்தேன்.
தருமபுரம் ஆதீனம் தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்களின் திருமுன் இக்கருத்தை வைத்தேன். திருவுளம் மகிழ்ந்து வாழ்த்தினார்கள், ஆசி வழங்கினார்கள்.
சீகாழியைச் சேர்ந்தவரும் விசாகப்பட்டினத்தில் வாழ்பவருமாகிய படைப்பாளி திரு. வே. திவாகர் அவர்கள் இப்பணியில் எனக்கு ஒத்துழைக்க முன்வந்தார்.
திருஞானசம்பந்தர் தேவாரம் முழுவதையும் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் அரும்பணியை இருமொழிப் புலமையாளராகிய தன் துணைவியார் தலைமையாசிரியை திருமதி சசிகலா அவர்கள் செய்து தருவார் எனக் கூறினார். திருமதி சசிகலா அவர்கள் அன்றிலிருந்தே மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். மொழிபெயர்ப்பைத் தக்கவர்களிடம் காட்டினார்கள். உரிய ஆலோசனைகள் பெற்றார்கள். காலத்துக்குக் காலம் எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் திரு. தி. வே. வேங்கடராமன் அவர்களிடம் இம்முயற்சியை எடுத்துக் கூறினேன். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இதுபற்றி அன்னார் கூறினார். 26.10.2009இல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு விண்ணப்பித்தேன். தமிழ் தெலுங்குப் புலமையாளரின் கூட்டத்தில் விளக்குமாறு தேவஸ்தானத்தினர் என்னை அழைத்தார்கள். திருப்பதி சென்று எடுத்துக்கூறினேன்.
17.7.2010இல் நடைபெற்ற கூட்டத்தில் பன்னிரு திருமுறைகளைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்க ரூ. 1,316,760 ஒதுக்கித் தீர்மானம் நிறைவேற்றினார்கள். பணியைத் தொடங்குமாறு எனக்கு ஆணை அனுப்பினார்கள்.
திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு முதலாக, பன்னிரண்டாம் திருமுறை ஈறாக 18,268 பாடல்களுள் 9,200 பாடல்களுக்குத் தெலுங்கு மொழிபெயர்ப்பு முடிந்தது.
திருமதி சசிகலா 1, 2, 3 திருமுறைகள்,
பேரா. சத்தியவாணி 4, 5, 6, 9 திருமுறைகள்,
பேரா. அரம்பை பேரா. பரிமளம் 8 திருமுறை,
பேரா. மூர்த்தி + பேரா. முனிரத்தினம் 7, 11 திருமுறைகள்,
திருப்பதி பேரா. முனிரத்தினம் 10 திருமுறை,
திருப்பதி பேரா. செயப்பிரகாசம் 12ஆம் திருமுறை
என மொழிபெயர்ப்பாளர்கள்.
இறையுணர்வை வளரக்கும் பத்தி இலக்கியம்.
இசை பெருக்கி இன்பம் தரும் கருவூலம்.
அள்ள அள்ளக் குறையா அறிவுக் களஞ்சியம்.
தெலுங்கு மக்கள் படித்துப் பயன்பெறுவார்கள், பேறுறுவார்கள்.
அயலவர்களிடையே இணக்கமும் இசைவும் பெருகும்.
அறிவுப் பரம்பலில் ஈடுபடுமாறு அனைவரையும் சிவனார் ஆட்கொள்கிறார்.
அவரின் திருவருள் அனைவருக்கும் பெருகுகிறது.
04.07.2013
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய
பிரதாப முதலியார் சரித்திரம் நூலைத் தெலுங்குக்கு மொழிபெயர்த்ததால் அந்த மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகதமி விருது பெற்றவர்.
இசுரேலின் செரூசலம் பல்கலைக்கழக்த்தில் தெலுங்கு மொழி கற்பிக்க ஆண்டுதோறும் இரு மாதங்கள் பயணிப்பவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர், இப்பொழுது திருப்பதி வேங்கடேசுவரப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.
சேக்கிழாரின் பெரியபுராணத்தைத் தெலுங்குக்கு மொழிபெயர்ப்பவர் அவரே. போர. முனைவர் எசு. செயப்பிரகாசர்.
அவருக்கே ஆர்வம் இருந்து சேக்கிழாரை மொழிபெயர்க்கத் தொடங்கியவர். திருமலை திருப்பதி தேவத்தானப் பன்னிரு திருமுறை மொழிபெயர்ப்புத் திட்டத்தை அவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன்.
தானாக மொழிபெயர்த்தவற்றை எமக்கு அனுப்பியதுடன் தொடர்ந்து மொழிபெயர்த்து அனுப்பியும் வருகிறார். நேற்று 3.7.13 மதியம், திருப்பதியில் அவரில்லம் சென்றேன். அவரோடு இருந்த நேரங்கள் பொன்னானவை.
அவரது துணைவியார் ஆங்கிலப் பேராசிரியை. அவரது மகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.
படங்கள் பார்க்க.

05.07.2013
காரைக்காலம்மை வழிபட்ட கோயில் திருவாலங்காடு.
அருகே ஒரு சிற்றூர்.
அங்கே பிறந்தவர் பேரா. முனைவர் முனிரத்தினம்.
பிறவியிலேயே பார்வையற்றவர்.
8ஆம் வகுப்பு வரை திருவாலங்காட்டில் கல்வி.
முனைவர் பட்டம் வரை திருப்பதியில் திருவேங்கடேசுவரப் பல்கலைக்கழகத்தில்.
பின்னர் திருப்பதியில் திருவேங்கடேசுவரப் பல்கலைக்கழகத்தில். பேராசிரியர். ஓய்வுபெற்ற பின்னரும் மொழிபெயர்ப்புப் பணியில் இடைவிடாது ஈடுபடுகிறார்.
அவரது நண்பரின் துணைவியார் பேரா. சரசுவதி. தமிழ்ப் பேராசிரியை. திருக்காளத்திக் கலைக்கல்லூரி முதலவர்.
தமிழை வாசிப்பவர் பேரா. சரசுவதி.
தெலுங்காக்குபவர் பேரா. முனிரத்தினம்.
10101026
తమిళంతో బాటు ఆర్యాన్నీ అనుగ్రహించిన దయామయుడు :
వర్షాకాలము, వేసవికాలము, మంచు కురిేన చలికాలము అన్నీ
నశించి ఈ భూమి అంతా నీటిలో మునిగిపోయే ప్రళయకాలంలో
ఔత్తరాహిక ఉత్తరాది భాష అయిన సంస్కృతాన్ని, దక్షిణాది
భాష అయిన తమిళాన్ని శివుడు ఉమాదేవికి ఉపదేశించాడు.
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.
மேற்காணும் திருமந்திரப் பாடல் பேராசிரியர் முனிரத்தினம் தெலுங்குக் கவிநடையில் தந்த மொழிபெயர்ப்பு.
பேரா. செயப்பிரகாசம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேரா. முனிரத்தினத்தை எனக்கு அறிமுகம் செய்தார். திருமந்திரத்தின் 3000 பாடல்களைத் தெலுங்கில் தாருங்கள் என்றேன். ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார்.
இதுவரை 800 பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். 3.7.13 மதியம் அவரை அழைத்தேன். கவியரங்கத்தில் இருக்கிறேன். மாலை வீட்டுக்கு வாருங்கள் என்றார்.
திருப்பதி விசயா நகரில் அழகான வீட்டில் மனைவி மக்களுடன் வாழ்கிறார். மகள் பொறியியல் கற்கத் தமிழ்நாட்டுக் கல்லூரிக்குச் செல்கிறார். மொழிபெயர்ப்புப் பணியில் மனைவியாரும் உதவுகிறார்.
திருவாலங்காட்டடீசர் மீது தமிழ் வெண்பாக்களாகப் பாடி வரும் தமிழ்க் கவிஞர் அவர். தெலுங்கிலும் கவிஞர்.
படங்கள் பார்க்க. பகிர்க.

06.07.2013
உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 20.11.2013 அன்று 72ஆவது பிறந்த நாள்.
70ஆவது பிறந்த நாளின்போது அவருக்காக உருவாக்கிய வலைப்பதிவு இங்கே: http://sachi70.blogspot.in/
அய்யாவைப் பற்றிய எனது முந்தைய பதிவு: http://annakannan.blogspot.in/2009/12/blog-post.html
தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி அய்யா, நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.
இந்தப் படம், 05.07.2013 அன்று மாலை, எங்கள் பெங்களூரு இல்லத்தில் எடுத்தது. படம்: Hemamalini Lokanathan

06.07.2013
கன்னல் தமிழ், களிதெலுங்கு, கவின் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசுவோர் வாழும் ஊர் குப்பம்.
மும்மொழிகளின் முக்கூடல் குப்பம், ஆந்திரா.
அங்கே, திராவிடர் பல்கலைக்கழகம்.
கலை இளவலாகப் சென்னைப் பல்கலைக்கழகத் தங்கப் பதக்க விருதாளர். 1981
கலை முதுவலாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தங்கப் பதக்க விருதாளர். 1983
இரு முறையும் துணைவேந்தரின் சிறப்புப் பரிசாளர்.
சென்னை இராணி மேரிக் கல்லூரியின் சிறந்த மாணவிக்கான விருதாளர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
யாவிலும் தெலுங்கு இலக்கியத்தைப் பாடமாகக் கொண்டு பயின்றவர்.
பின்னர் தமிழைப் பாடமாகக் கொண்டு முது கலை பயின்றவர்.
கிழக்குக் கோதாவரியில் பிறந்தவர். விசயவாடாவில் தவழ்ந்தவர். சென்னையில் வளர்ந்து வாழ்ந்தவர். தாமிரபரணிக்காரரான தமிழரைத் திருமணம் செய்தவர்.
ஆசியவியல் நிறுவனம், சென்னைப் பல்கலை எனப் புலமை வாழ்வை அமைத்தவர், இப்பொழுது திராவிடர் பல்கலையில் பேராசிரியர்.
பெயர் பேரா. முனைவர் வே. சத்தியவாணி.
பன்னிரு திருமுறையில் 9ஆம் திருமுறையை முழுவதாக மொழிபெயர்த்து முடித்தவர்.
அப்பர் மேல் அடங்கா ஆர்வத்தால் 4, 5, 6 திருமுறைகளைத் தெலுங்குக்கு மொழிபெயர்த்து வருகிறார்.
4.7.13இல் குப்பம் சென்றேன், சந்தித்தேன், மதிய உணவு அவரது அருமையான சமையல்.
வெண்டைப் பொரியலும் வெள்ளைநிற மென்சோறும்
தொண்டை கரகரக்க இரசமும் - பண்டைய
கோதாவரியும் தாமிரபரணியும் இணைந்தன் பண்பாடே
சீதைசத்திய வாணிதந்த விருந்து.
அவர் மொழிபெயர்த்த அப்பர் பாடல் கவிதை நடையில்
ஒலிபெயர்ப்பு
మాదర్ప్ పిఱైక్కణ్ణి యానై మలైయాన్ మహళొడుం పాడిప్
పోదొడు నీర్సుమన్ దేత్తిప్ పుహువా రవర్బిన్ పుహువేన్
యాదుఞ్ సువడు పడామల్ ఐయా ఱడైహిండ్ర పోదు
కాదన్ మడప్పిడి యోడుఙ్ కళిఱు వరువన కండేన్
కండే నవర్దిరుప్ పాదఙ్ కండఱి యాదన కండేన్.
மொழிபெயர்ப்பு
మదిదోచు జాబిల్లి తాలిచి హిమవంతుని గారాలపట్టితో కూడు వాని పాడి
పొద్దుతో పూచుపూవుల చల్లని నీటితో అర్చించ తలనిడి ఏగువారి వెంట నే
పోదు కైలాశయాత్ర ఏ ఆనవాలులు తోపనీక వారిని వెనువెంట
కాదనక పోతుకరి ఆడు ఏనుగ తోడ రాన్ కంటి
కంటిని ఆ మాతాపితరుల తిరుపాదము కానరానిది నే కంటి
தமிழ் மூலம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
படங்கள் பார்க்க, பகிர்க

7.7.2013
தமிழில் இருந்து கன்னடத்துக்கு மொழியாக்கமாகி, இன்று வரை கிடைக்கும் நூல்களுள் முதன்மையானது அரிகரர் இரகளை.
12ஆம் நூற்றாண்டில் பெரிய புராணம் அரங்கேற்றிய 60 ஆண்டுகளின் பின்னர் அதன் கன்னட மொழியாக்கமாக அரிகரர் இரகளை அரங்கேறியது.
அதற்குப் பின்னர் அடுத்த 100 ஆண்டுகளுள் மீண்டும் சூரங்கக் கவியாரின் புராதன சரித்திரமும் பெரிய புராணத்தின் கன்னட மொழியாக்கமே.
பன்னிரு திருமுறையின் 9ஆம் திருமுறையை மொழிபெயர்த்தவர் பேரா. மலர்விழி. பங்களூர், மாநிலக் கல்லூரிக் கன்னடப் பேராசிரியையான அவருக்குத் தாய்மொழி தமிழ்.
வைரமுத்துவின் கவிதைகளின் திரட்டை மொழிபெயர்த்தமை அவரது முதல் அநுபவம். இப்பொழுது செம்மொழி நிறுவனத்துக்காகச் சங்க இலக்கியங்களை மொழிபெயர்க்கிறார் பங்களூர்த் தமிழ்ச் சங்கம் வழியாக.
5.7.13 மாலை பங்களூரில் அவரைச் சந்தித்தேன்.
பெரிய புராணத்தின் பிற்பகுதியான 1912 பாடல்களை மொழிபெயர்க்கும் பணியிலுள்ளார். முற்பகுதியை மங்களூர்ப் பேராசிரியர் சங்கர கேடிலர் கன்னடத்துக்கு மொழிபெயர்த்துச் சென்னைப் பல்கலை வெளியிட்டது.
கவிஞர் முனைவர் அண்ணா கண்ணன் என்னுடன் வந்திருந்தார். அவர் பேட்டி கண்ட காணொலி காண்க பகிர்க. படங்களும் இணைப்பில்

07.07.2013
தமிழில் திருவாசகம், திருச்சதகம் முதலாவது பாடல்.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே.
கன்னட ஒலிபெயர்ப்பு
ಮೆಯ್ದಾನ್ ಅರುಂಬಿ ವಿದಿರ್ವಿದಿರ್ತ್ ತುನ್ವಿರೈ
ಯಾರ್ಗೞಱ್ಕೆನ್
ಕೈದಾನ್ ತಲೈವೈತ್ತುಕ್ ಕಣ್ಣೀರ್ ತದುಂಬಿ
ವೆದುಂಬಿಯುಳ್ಳಂ
ಪೊಯ್ದಾನ್ ತವಿರ್ಂದುನ್ನೈಪ್ ಪೋಟ್ರಿ ಸಯಸಯ
ಪೋಟ್ರಿಯೆನ್ನುಂ
ಕೈದಾನ್ ನೆಹಿೞ ವಿಡೇನ್ಉಡೈ ಯಾಯ್ಎನ್ನೈಕ್
ಕಂಡುಹೊಳ್ಳೇ.
கன்னட மொழிபெயர்ப்பு
ಎನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡವನೇ ಸರ್ವ ವ್ಯಾಪಿಯಾದವನೇ, ನಿನ್ನ ಸುವಾಸಿತ ಪಾದಗಳ ಸೇರಲು ನನ್ನ
ದೇಹ ತವಕಿಸುತ್ತಿದೆ. ನಡು ನಡುಗುವ ಕೈಗಳ ತಲೆಯ ಮೇಲೆ ಇರಿಸಿ ನಮಸ್ಕರಿಸುತಿಹೆ. ಕಂಗಳಲ್ಲಿ
ಆನಂದಭಾಷ್ಪ ಪ್ರವಹಿಸುತ್ತಿದೆ. ಅಸತ್ಯ ಮರೆಯಾಗಿದೆ. ನಿನಗೆ ನಮಿಸಿ, ಸ್ತುತಿಸುವ ಆಚಾರವನ್ನು
ಕಳೆದುಕೊಳ್ಳಲಾರೆ. ನನ್ನ ವೇದನೆಯ ಕಂಡು ನಿನ್ನ ಭಕ್ತರಲ್ಲಿ ಒಧಿಬ್ಬನೆಂದು ನನ್ನನ್ನು ಸ್ವೀಕರಿಸು ವಂತವನಾಗು ತಂದೇ !
மொழிபெயர்த்தவர் பேரா. முனைவர் செயலலிதா.
ஆந்திரா, குப்பம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையில் போரசிரியர்.
திருவாசகம் 658 பாடல்களையும் மொழிபெயர்த்து முடித்த அன்னாரை எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தவர் சென்னைப் பல்கலைக்கழகக் கன்னடத் துறைத் தலைவர் பேரா. முனைவர் தமிழச்செல்வி.
4.7.13அன்று குப்பம் சென்று பேரா. செயலலிதாவைச் சந்தித்தேன். முன்பும் பல முறை சந்தித்திருக்கிறேன்.
இந்த முறை அவரது அடுத்த மொழிபெயர்ப்புக்கான திருமுறை பற்றிக் கேட்கப் போனேன். மாணிக்கவாசகரின் திருக்கோவையாரை எடுத்துச் செய்வதாக உறுதி கூறினார்.
கர்நாடகம் மந்தியா மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதல்மாணவியாகித் தங்கப் பதக்கம் பெற்றவர். புலமை நாட்டத்தினால் தமிழ் கற்றவர்.
முனைவர் பட்டம் வரை ஈடுபாட்டுடன் கன்னடமும் தமிழும் அவரது விருப்ப பாடங்கள்.
செம்மொழி நிறுவனத்துக்காகத் தொல்காப்பியம் முழுவதையும் கன்னடத்துக்கு மொழிபெயர்த்தவர்.
பசவரின் ஆக்கங்கள் முழுவதையும் தமிழுக்கு மொழிபெயர்த்தவர். பசவ சமிதித் திருமடத்தாருக்காக.
அவரது புலமைப் பங்களிப்பினால் பன்னிரு திருமுறைகள் கன்னடத்துக்குச் சென்று சேரும்.

10.07.2013
எனக்கு நண்பர்.
கல்முனை பாண்டிருப்பில் வாழ்பவர்.
2000 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மண்ணின் உரிமைக்காரர்.
பொறியியலாளர், மேலாண்மை வல்லுநர்
எனினும் தமிழில் எழுத்தாளர்.
முகில்வண்ணன்
எனும்
வேலுப்பிள்ளை சண்முகநாதன்
மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்,
கவிஞர் காசி ஆனந்தனின் அமிர்கதழியில் உள்ள அமைப்பு,
பல இலட்சக் கணக்கான ரூபாய்களைப் படைப்பாளிகட்கு அள்ளி வழங்குகிறது.
எழுத்தாளராகிய என் இனிய நன்பர் முகில்வண்ணனுக்கும் 2012 படைப்புகளுக்கான பரிசும் பாராட்டும் வழங்குகிறது.
முகில் வண்ணனை வாழ்த்துங்கள்
படம் பார்க்க, விபரம் தெரிந்து கொள்க.

11.07.2013
சென்னை ஐஐடி (IIT)
உலகின் புகழ்பூத்த பொறியியல் கல்லூரிகளுள் ஒன்று.
எளிதில் எவரும் மாணவராக நுழைவனுமதி பெறுதலரிது.
அங்கே எம்டெக் (M. Tech.) படித்தவர்.
பூனேயின் புகழ்பூத்த அறிவியல் ஆய்வு நிறுவனம் இந்திய ஆராய்ச்சி நிறுவனம். அங்கே ஆராய்ச்சியாளர்.
ஒரே நாளில் தூக்கி எறிந்தார், துறவு பூண்டார்.
ஆதிசுன்சனகிரித் மடத்தில் தவத்திரு பாலகங்காதர அடிகளைக் குருவாக்கித் துறவியானார்.
45 வயதான தவத்திரு நிர்மலானந்தா அடிகளார் இப்பொழுது ஆதிசுன்சனகிரித் திருமடத்தின் குருமகாசந்நிதானம். 72ஆவது தலைவர்.
அவர் அழைத்து 2013 மார்ச் 28ஆம் நாள் ஆதிசுன்சனகிரித் திருமடம் சென்று சந்தித்தேன். பன்னிருதிருமுறையைக் கன்னடத்துக்கு மொழிபெயர்க்க நிதி ஆதாரம் வழங்கத் திருமடத்தில் ஆலோசித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளின் முன் இதே திருமடத்தின் 71ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு பாலகங்காதர அடிகளாரைப் பார்க்க பங்களூர் சென்றேன். அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் அங்கு என்னை அனுப்பினார்கள்.
மூன்றாவது சந்திப்புக்காக 6, 7, 8 சூலை 2013இல் திருமடத்துக்குச் சென்றேன். அங்கே தங்கினேன். தவத்திரு நிர்மலானந்தா அடிகளாருடன் கலந்தாலோசித்தேன்.
8. 7. 13 ஆனி அமாவாசை. காலை வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அடிகளார் கேட்டுக்கொள்ள, ஆர்வத்துடன் பங்குபற்றினேன்.
காணொலி பார்க்க.
http://youtu.be/9m7sUeXw3xw
படங்கள் பார்க்க.

14.07.2013
1956, 1957ஆம் ஆண்டுகளில் வாரந்தோறும் சுதந்திரன் இதழை என் தந்தையார் வாங்கி வாசிக்கத் தருவார். அந்த இதழில் கா. சிவானந்தன், காசி ஆனந்தன் என்ற பெயர்களில் வரும் ஆக்கங்கள் என உள்ளத்தைக் கவர்ந்தன. என்னையும் என் உறவினர் சுருக்கமாக ஆணந்தம் என அழைத்த காலங்கள்.
1960ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் அறிவியல் இளவல் வகுப்பில் நான், விலங்கியலை முதற் பாடமாகக் கொண்டு. தமிழை முதற் பாடமாகக் கொண்டு கவிஞர் காசி ஆனந்தன் கலை இளவல் வகுப்பில்.
நான் கல்லூரி விடுதியில், அவரே தேனாம்பேட்டை எல்டாம்சு சாலைச் சந்திப்பில் தனியார் விடுதியில்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு நாம் இருவரும் ஒரே வகுப்பில். பேரா. மு. வ. பேரா. அமுப. பேரா. சிபா. பேரா. சோன்சன், பேரா. வேங்கடசுப்பிரமணியம் என எம் இருவருக்கும் வகுப்பு நடத்திய பேராசிரியர்கள். மூன்று ஆண்டுகள் ஒரு சாலை மாணாக்கர்களாக.
செந்தழிப்பான சிரித்த முகத்துடன் சச்சி சச்சி என அவர் குழைந்து குழைந்த வகுப்பிலும் வெளியேயும் அழைக்க, நான் உருகுவேன்.
1968இல் கொழும்பில் அவைரையும் அவர் விரும்பியவரையும் கல்கிசைக் கடற்கரை, தெகிவளை விலங்குக் காட்சிச்சாலை என நானும் மனைவியும் என் மகிழுந்தில் அழைத்துச் சென்றதை முந்த நாளும் நினைவுகூர்ந்தார்.
1977இல் அகமும் புறமும் அறமும் புறமுமாய் உள்ளதே என அவர் முறையிட, நானும் என் மனைவியும் அழைப்பாளராக, செல்வச் சந்நிதியில் திருமணம், வீரசிங்கம் மண்டபத்தில் வரவேற்பு.
1986இல் சென்னைக்கு வந்தபின்னர் அவரோடு மீண்டும் நெருக்கமான ஈடுபாடும் உறவும்.
1990 நவம்பர் தொடக்கம் மார்ச்சு 5 வரை நாம் இருவருமாக எடுத்த அரசியல் முன்னெடுப்புகள் இருவரையும் பாதித்தன. அவர் இந்தியாவை விட்டுப் போக முடியவில்லை. என் கடவுச்சீட்டுகளை தடா நீதிமன்றத்தில் சிபிஐ முடக்கியது.
முந்த நாள் சச்சி என என் காது குளிர அழைத்தார். அவரது மூத்த அக்காவின் மருகர் தமிழகத்தில் காலமாக அது தொடர்பான போக்குவரவு ஒழுங்குகளை, அவரது அக்காவின் மருகரின் உடலை மட்டக்களப்புக்கு அனுப்பும் வழியைக் காட்டினேன்.
இன்று காலை திருப்போரூர் முருகன் கோயில் செல்லும் வழியில் கேளம்பாக்கத்துக்கு அவரில்லம் சென்றேன்.
53 ஆண்டுகளான உறவில் ஒருமுறையேனும் நெருடலோ, உரசலோ, விரிசலோ, மதிப்புக் குறைவோ, அன்புக் குறைவோ
இல்லாத தலைநாட் போன்ற விருப்பினராய்ப் பேசிக்கொண்டிருந்தாம்.
இத்தனைக்கும் அவரின் அரசியல் அணுகுமுறை வேறு. என் அணுகு முறை வேறு.
படங்களைப் பாருங்கள்.

14.07.2013
மகாத்மா காந்தி படம் எங்கள் வீட்டில் தொங்கிய காலம். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் அவர் எனத் தந்தையார் சொல்லித் தருவார்.
எங்கள் வீட்டுக்குத் தெற்காக ஒரு வளவு. அங்கு பல ஓலை வீடுகள். அந்த ஓலை வீடுகளுக்குள் இருந்தவர்கள் தமிழகத்திலிருந்து வந்தோர். யாவரும் நாள் கூலிக்காகப் பணிக்குப் போவோர். ஆண்களும் போவர், பெண்களும் போவர்.
தெருமுனையிலே ஒரு மரக்காலை. அங்கே மர அறுவையாளர். நீண்ட வாள்களால் பெரு மரங்களைப் பலகையாக்குவோர். மலையாள தேசத்தவர்.
சந்தியிலே ஒரு தேனீர்க் கடை. கொச்சியான் கடை. அந்தச் சாலை நெடுகிலும் கொச்சியான் கடைகளே தேனீர்க் கடைகள்.
பள்ளியிலே என் கணித ஆசிரியர் இந்தியத் தமிழர். ஓவிய ஆசிரியர் இந்தியத் தமிழர். மேல் வகுப்புகளில் உயிரியல் ஆசிரியர் இந்தியத் தமிழர்.
இந்தியா, தமிழகம் பற்றிய அறிமுகம் இவ்வாறாக இருந்த காலங்களிலே எம் வீட்டில் வந்து ஒரு மாணவர் தங்கி இருந்தார். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தவர். கோடை விடுப்புக்காக வந்திருந்தார். 1958 வைகாசியில்.
மென்மையான உள்ளம், மேன்மையான இயல்புகள். சிரித்த முகம். சிவந்த மேனி. சுறுசுறுப்பான இயல்பு. பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனின் மூத்த மகன், அ. ச. ஞா. மெய்கண்டான்.
இந்தியத் தமிழகத்தவரைத் தொலைவிலிருந்தே பார்த்து வந்த எனக்கு, ஒரு மாத காலம் கூடவே இருந்து பழகும் வாய்ப்பு. அவரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தவர் என் உடன்பிறவா அண்ணன் ஆ. கந்தையா.
தமிழகம் பற்றிய என் கண்ணோட்டத்துக்குப் புதுமை தந்தவர் அ. ச. ஞா. மெய்கண்டான்.
1958இல் தொடங்கிய அன்பு உறவு. அன்று அவருக்கும் என்க்கும் ஏற்பட்ட அண்ணன் தம்பி உறவு, இன்று வரை மாறாமல் உள்ளது. அதே அன்பு, அதே ஈர்ப்பு, அதே மதிப்பு.
அவருடன் மட்டுமன்று, செனஅனை வந்த நான், அ. ச. ஞா அவர்களின் கண்காணிப்பில் மாணவனாக, இல்லத்தில் நான் ஒருவனாக, யாவருடனும் எனக்குள்ள அன்பு குறையவில்லை. அவர்கள் என்மீது கொண்ட அன்பும் குறையவில்லை, 55ஆவது ஆண்டாக நீளும் உறவும் அன்பும் பாசப் பிணைப்பும்.
அ. ச. ஞா. மெய்கண்டானின் மருமகள் வழிப் பெயர்த்திக்கு இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் காதணி விழா. கட்டாயம் வரவேண்டும் என அழைத்திருந்தனர். சென்றிருந்தேன்.
அ.ச. ஞா. மெய்கண்டான், அ. ச. ஞா. சரவணன் இருவருடனும் படத்தில் நான். மூன்றாவது படம் அ. ச. ஞா. சரவணன்.

14.07.2013
சேதுக் கால்வாயத் திட்ட அமைப்புத் தலைவர் திரு. இரகுபதி அவர்கள் 2005ஆம் ஆண்டில் ஒருநாள் காந்தளகம் வந்தார்கள். என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதற்குப்பின் சென்னைத் துறைமுக விருந்தினர் மாளிகையில் நடைபெறும் கலந்துரையரல்களுக்கு என்னை அழைப்பார்கள்.
தமிழக அரசின் திட்டக்குழுத் தலைவர் பேரா. நாகநாதன், அண்ணாபல்கலைக் கழகப் பேரா. இராமச்சந்திரன், (பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்), இந்திய அரசின் சுற்றுச் சூழல் அமைப்பின் மூத்த அதிகாரிகள் அந்தக் கூட்டங்களுக்கு வருவார்கள்.
அமைச்சர் திரு. தி. ஆர். பாலு அவர்களும் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள். கருத்துக் கேட்பார்கள். திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, தமிழர் தேசிய அமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் மதிமுக தலைவர் திரு. வைகோ, பொதுவுடைமைக் கட்சி திரு. மகேந்திரன் என, யாவருக்கும் தேவையான தகவல்களை அவர்கள் கேட்கும்பொழுதெல்லாம் வழங்குவேன்.
கடந்த சில வாரங்களாகக் கேட்போருக்காக, அதுவும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான கருத்துகளைக் கேட்போருக்காக இற்றைப்படுத்திய அடிப்படைத் தகவல்களை உங்களுடன் பகிர்கிறேன்.
நான் அப்பபொழுது வரைந்த படங்களையும் உங்களுக்காக இணைத்துள்ளேன்.
தமிழ் நாட்டின் மொத்தக் கடற்கரையின் நீளம் 1,076 கிமீ. அதனுள் கோடிக்கரைக்குத் தெற்கே கால்வாய் அமையும் கடலை ஒட்டிய கரை 545 கிமீ. நீளம் (50.6%).
நாகப்பட்டினம் மாவட்டம்170 கிமீ.
திருவாரூர் மாவட்டம் 20 கிமீ.
தஞ்சாவூர் மாவட்டம் 45 கிமீ.
புதுக்கோட்டை மாவட்டம்39 கிமீ.
இராமநாதபுரம் மாவட்டம் 271 கிமீ.
மொத்தம் 5 மாவட்டங்களில் 545 கிமீ.
தமிழ் நாட்டில் 442 மீனவ ஊர்கள் உள. அவற்றுள் 224 ஊர்கள் (50.6%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் 60 மீனவ ஊர்கள்.
திருவாரூர் மாவட்டம் 04 மீனவ ஊர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 27 மீனவ ஊர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் 34 மீனவ ஊர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் 99 மீனவ ஊர்கள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 224 மீனவ ஊர்கள்.
தமிழ் நாட்டில் தோராயமாக 5.5 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர் (2011 கணக்கு). அவர்களுள் 3.79 இலட்சத்தினர் (69%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி வாழ்கின்றனர்
நாகப்பட்டினம் மாவட்டம் 140,000 மீனவர்.
திருவாரூர் மாவட்டம் 13,000 மீனவர்.
தஞ்சாவூர் மாவட்டம் 21,000 மீனவர்.
புதுக்கோட்டை மாவட்டம் 15,000 மீனவர்.
இராமநாதபுரம் மாவட்டம் 190,000 மீனவர்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 379,000 மீனவர்
தமிழ் நாட்டில் தோராயமாக 40,000 மீன்பிடிக் கலங்கள் உள (2011 கணக்கு). அவற்றுள் 21,000 000 மீன்பிடிக் கலங்கள் (53%) சேதுக் கால்வாய் வழித்தடத்தை ஒட்டிய தமிழக மீனவர்களிடம் உள.
நாகப்பட்டினம் மாவட்டம் 1500 கரையோரக் கலங்கள் 4,000 விசைப் படகுகள்.
திருவாரூர் மாவட்டம் 50 கரையோரக் கலங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 1000 கரையோரக் கலங்கள் 200 விசைப் படகுகள்.
புதுக்கோட்டை மாவட்டம் 200 கரையோரக் கலங்கள் 50 விசைப் படகுகள்.
இராமநாதபுரம் மாவட்டம் 10,000 கரையோரக் கலங்கள் 4,500 விசைப் படகுகள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 12,750 கரையோரக் கலங்கள் 8,750 விசைப் படகுகள்
தமிழ்நாட்டின் கடல் உயிரின வள உற்பத்தி மொத்தம் தோராயமாக 4 இலட்சம் மெட்ரிக் தொன். அதில் இந்த 5 மாவட்டங்களில் 2.5 இலட்சம் மெட்ரிக் தொன் (60%)கடல் உயிரின வளத்தைக் கரையேற்றுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் 100,000 மெட்ரிக் தொன்.
திருவாரூர் மாவட்டம் 2,800 மெட்ரிக் தொன்.
தஞ்சாவூர் மாவட்டம் 15,200 மெட்ரிக் தொன்.
புதுக்கோட்டை மாவட்டம் 12,000 மெட்ரிக் தொன்.
இராமநாதபுரம் மாவட்டம் 120,000 மெட்ரிக் தொன்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 250,000 மெட்ரிக் தொன்.
தமிழ்நாட்டின் 50% கடற்கரைநீளத்தில் வாழும், 70% மீனவர்கள், 60% கடல் உயிரினவள உற்பத்தியைக் கரையேற்றுகிறார்கள்.
இந்த ஐந்து மாவட்டங்களே மீன் உற்பத்திக் களஞ்சியங்கள். இந்த மீனவர்கள் எங்கே மீன் பிடிக்கிறார்கள்?
இந்த 5 மாவட்ட மீனவர்களுள் 65% சதவீத மீனவர்கள் வடகடலில் மீன் பிடிக்கிறார்கள்.

19.07.2013
தமிழ் மொழி தென் மொழி.
சமக்கிருதம் வடமொழி.
தமிழ்ச் சொலும் வட சொலும் தாள்நிழற் சேர என்றார் சம்பந்தர். (01077004)
தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி ஆகிய எந்த மொழிகளிலும் இறைவனைப் போற்றலாம் என்றார் சம்பந்தர். (02092007)
சிவனை, ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றார் அப்பர் . (06023005)
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றார் அப்பர். (06087001)
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் சிவன் என்றார் திருமூலர். (10103009)
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே என்றார் நம்பியாண்டார் நம்பிகள். (11033072)
தமிழ் மொழியில் தமிழர் வழிபடுவர், மற்றவர் அவரவர் மொழிகளில், வடமொழியிலும் திசைமொழிகளிலும் சிவனை வழிபடுவோர். எனினும் தமிழர் வழக்குக் கூர்மையடைந்தது. எனவே அயல்வழக்காழராகிய மற்றவர்களுக்குப் பகிரவேண்டும்.
அயல் வழக்கினரும் தமிழ் வழக்குகளைப் பயின்றால் மேலும் கூர்மையடைவர், மேம்படுவர், சிவனைப் போற்றுவர் என்பார் சேக்கிழார். சம்பந்தரின் பிறப்பு அதற்காகவே என்பர் அவர். (12280024)
காஞ்சிபுரத்தில் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் சீனிவாச தீட்சிதர். நாயக்க மன்னர் காலத்தவர். சேக்கிழாரின் பெரிய புராணத்தை வடமொழியில் தந்தார். தேவநாகரியில் எழுதாமல் கிரந்தத்தில் எழுதினார். நூலின் பெயர் உபமன்யு பக்த விலாசம். இந்தப் புலமைப் பணிக்காக நாயக்க மன்னன் அவருக்கு ஒரு வீட்டைப் பரிசளித்தான். இந்தச் செய்தி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டில் உளது. (சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் என்னுடன் பகிர்ந்த செய்தி)
தமிழ் வழக்கை வட வழக்கிற்குக் கொடுக்கும் முயற்சியாக மேலும் இரு புலமையாளர் பெரிய புராணத்தை வடமொழியில் யாத்தனர். அண்மைக் காலத்தில் திருமுருகாற்றுப்படையைக் கும்பகோணத்தைச் சேர்ந்த புலமையாளர் வடமொழிக்கு மொழிபெயர்த்ததை என் கவனத்துக்காக்கியவர் பேரா. சங்கரநாராயணணன். தேவநாகரியில் அமைந்த அந்த மொழிபெயர்ப்பைத் தேவாரம் தளத்தில் சேர்த்தோம்.
நேற்று, வியாழக்கிழமை 18.07.2013 காலை 1130 மணி. மேற்கு மாம்பலம், பேரா. தியாகராசன் இல்லம். பேரா. தியாகராசன், பேரா. கோதண்டராமன், பேரா. காமாட்சி, திருமதிகள் மதுமிதா, நித்தியா யாவருடனும் நான் இருந்தேன்.
தருமபுரம் ஆதீனத்தின் முயற்சியாக, என் ஈடுபாட்டுடன், 4, 5, 8(திருவாசகம்) மூன்று திருமுறைகளும் வடமொழிக்கு மொழிபெயர்ப்பாகி உள்ளன. 4 (1070 பாடல்கள்), 5 (1015 பாடல்கள்) திருமுறைகளின் மொழிபெயர்ப்பாளர் பேரா. காமாட்சி. 8(திருவாசகம் 658 பாடல்கள்) மொழிபெயர்ப்பாளர் பேரா. கோதண்டராமன். 2010 முதலாக இந்த முயற்சிகள் தொடர்கின்றன. பார்க்க முந்தைய காணொலிகள்.
http://youtu.be/gSQS1DvU5iE
இந்த மொழிபெயர்ப்புகளை மீளாய்ந்து செம்மைப்படுத்தும் பெரும் பணியைப் பேரா. தியாகராசன் ஏற்றுக் கொண்டார்கள்.
வடமொழியிலிருந்து தமிழுக்குச் சிவனின் புராணங்களான, போற்றிகளான நூல்களை மொழிபெயர்த்து அனுபவமுள்ள கவிஞர் மதுமிதா 9ஆம் திருமுறையை (301 பாடல்கள்) வடமொழிக்கு மொழிபெயர்க்க உடன்பட்டார்.
இப்பணிகளை ஒருங்கிணைக்கத் திருமதி நித்தியா உடன்பட்டார். யாவரும் மதிய உணவில் கலந்து விடைபெற்றோம். பார்க்க, படங்கள்.

23.07.2013
மறவன்புலவு சச்சிதானந்தன் (Sachithananthan) அவர்களின் இல்லத்தில் 13.07.2013 அன்று நடைபெற்ற வல்லமை அன்பர்கள் சந்திப்பின்போது எடுத்தது.
இடமிருந்து வலம்: பேரா.நாகராஜன் வடிவேல், நூ.த.லோகசுந்தரம், சம்பத் ராமசாமி, இன்னம்பூரான், அண்ணாகண்ணன், மறவன்புலவு சச்சிதானந்தன், விசாலம், Madhumitha Raja, ஆதிரா முல்லை.
படம் - பெருவை பார்த்தசாரதி

27.7.2013
24.7 சென்னையில் இருந்து கொழும்புக்கு
26.7 வெள்ளி காலை மறவன்புலவில்
26.7 வெள்ளி மதியம் கண் கலங்கும் நிகழ்ச்சி.
1. தந்தை,
2. மகன்,
3. மச்சான்,
4. மச்சானின் தம்பி,
5. நண்பர்,
6. அவர் மகன்
ஆக ஆறு பேர். ஒருவருக்கு முன் மற்றவர் என ஒவ்வொருவராக வெட்டிக் கொலை. துண்டு துண்டாக உடல்கள்.
அவர்கள் அறுவரும் பண்பட்ட இயல்பினர், அன்பு நெஞ்சினர். அவர்கள் புல் மீது நடந்தால் புல்லுக்கும் நோகாது. அத்துணை மென்மையானவர்கள்.
1. தந்தையானவர் எனக்கு அண்ணன் முறையான சண்முகராசா, ஓய்வுபெற்ற இறைவரி அலுவலர்.
2. அவருக்கு மகன் நிருத்தன், பதின்ம வயதினர், மாணவர்.
3. சண்முகராசாவின் தாயின் தம்பி மகன் மணிவாசகர், துறைமுகத்தில் பொறியிலாளர்.
4. மணிவாசகனின் மனைவிக்குத் தம்பி முறையான சிவநேசன்.
5. சண்முகராசாவின் இறைவரி அலுவலக நண்பர் அருமைநாயகம்.
6. அருமைநாயகத்தின் மகன்.
அவர்களின் அவலச் சாவுக்கு ஒரே காரணம்,
ஒரே ஒரு காரணம், அவர்கள் தமிழர்.
கொன்ற நாள் சூலை 29, 1983.
இடம் கொழும்பில் கிருலப்பனைக்கும் தெகிவளைக்கும் இடையே எங்கோ ஓரிடத்தில்.
26.7 வெள்ளி மதியம் மறவன்புலவு அருள்மிகு முருகையன் கோயிலில் அறுவருக்கும் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
கலங்கிய கண்கள்,
பொருமும் உள்ளம்,
ஆற்றாமையின் ஏக்கம்,
மீளாரா மீளாரா என நெஞ்சம் நெக்குருக,
மணிவாசகரின் மனைவி விமலா வழிகாட்டலில்
கலக்கத்தை,
ஏக்கத்தை,
ஆற்றாமையை,
பொருமலைப் போக்க
முருகனிடம் வேண்டுதல்,
உற்றவர், உறவினர், நண்பர் யாவருமாய் வேண்டுதல்.
யாரொடு நோவோம்? யார்க்கெடுத்து உரைப்போம்?
முருகா உன்னைத் தவிர...
மறவன்புலவில் சோழகக் காற்று வீசும் காலம் முடிந்து
ஆடியில் மழை பெய்யவேண்டும்.
சோழகம் பலத்து வீசுகிறேதே!
மதியத்துக்குப் பின் மப்பும் மந்தாரமும்.
மாலை நேரத் தூறல்.
இரவில் இதமான குளிர்மை.
வெள்ளி மாலை அருள்மிகு பிள்ளையார் கோயிலில் தேவார வகுப்பு.

02.08.2013
தெலுங்கானா மாநிலம் உருவாவதால் பயன்?

இன்று காலை நான் படித்த மிக அருமையான கட்டுரை.

பின் வரும் இணைப்புப் பார்க்க.

Bifurcation of Andhra Pradesh.
(This post was based on an answer originally published at Quora on Bifurcation of Andhra Pradesh. And I personally felt that this was one of the best, most in depth analysis ever seen on the issue...
MIRRORTOINDIA.WORDPRESS.COM

03.08.2013
மீசாலை, கண்டிச் சாலைச் சந்திப்பு.
பழமுதிர்சோலை.
கூட்டுறவாளர் அமைப்பு.
295 பழ உற்பத்தியாளரின் விற்பனை நிலையம்.

உள்ளே போனால் பழங்கள்,
பழச்சாறு, பழம் சார்ந்த அனைத்தும்.
மீசாலையை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் பழக் கடைக்குள் புகுந்தேனா? வியப்பில் ஆழ்ந்தேன்.
திரு. காந்தனின் வழிகாட்டலில் செயற்படும் நிலையம்.
மிக நவீன உள்கட்டமைப்பு.
மிக நவீன வடிவமைப்பு.
மேலாக,
மிகக் கவனமான பராமரிப்பு.
சென்னையில் பழகியவர், தமிழகத்தில் முன்னோர் வாழ்ந்ததால் அவர் தமிழகத்தவரா, ஈழத்தவரா?
ஆனாலும் மீசாலைக்கு வந்தார்.
மண்ணின் மகனாகி மண்ணின் உயர்ச்சிக்கு உழைக்கிறார்.
அவரைப் பார்க்க
என்னுடன் வந்தவர்
படத்தில் எனக்கு வலப்புறமாக நிற்கும்
மேனாள் கடற்றொழில் திணைக்கள இயக்குநர் சிறீக்கந்தராசா.
படம் பார்க்க.

08.06.2013
கத்தரிக்காய் + வாழைக்காய் (விநாகரி + உப்பு) சிறிதுமல்ல, பெரிதுமல்ல, நடுத்தர அளவுத் துண்டுகள், வெட்டி அரை அவியலாகப் பொரியல்.
புடலங்காய் + பருப்பு அவியல்
பீற்றூடின் அவியல்
வெள்ளரிக்காய் வட்டத் துண்டுகளாக.
வெண்டைக்காய் சாம்பார்.
பருப்பு இரசம்.
அப்பளம்.
பாவக்காய்த் தொக்கு + கட்டித் தயிர்.
தொடக்க மாகப் பூரி இரண்டு அல்லது மூன்று.
பின்னர் சம்பா அரிசிச் சோறு.
சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தட்டில் குறையக் குறையத் திலகவதியார் சளைக்காமல் சேர்த்துக் கொண்டே இருந்தார்.
ஈசுவரன்,
தஞ்சாவுர்ப் பாணி ஓவியர், காரைக்குடி திரு. ஆவுடையப்பன் (0091 9884285507)
நான்.
மூவருமாய் மேசையில் இருந்த அனைத்தையும் நாக்குக்குச் சுவையாக்கினோம்.
ஈற்றில் பாயசம், வாழைப்பழம் என அருமையான விருந்து.
நேற்று 7.7.13 மதிய விருந்து.
ஆடி ஆயிலியம். ஈசுவரன் பிறந்த நாள் மங்கலம்.
கொழும்பில் அவர் இல்லம் சென்று 71 வயது நிறைந்து 72 வயதுக்குள் புகும் என் நண்பரை வாழ்த்தும் பேறு என்னுடையதாயிற்று.
1959ஆம் ஆண்டு ஆனி மாதம் பச்சையப்பன் விடுதியில் நான் 5ஆம் எண் அறை. ஈசுவரன் 8ஆம் எண் அறை. விடுதியில் சேர்ந்த முதல் வாரத்தில் அவர் எனதறைக்கு வந்தார். அவரது தாயார் கொடுத்தனுப்பிய நெய்யுருண்டை தந்தார்.
நேற்று வரை அவர் தரும் விருந்துக்கு ஈடு இணை இல்லை. அவர் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை.
அவர் இல்லத்தில் உள்ள ஒவ்வொருவரும் என் மீது காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை.
நான் பெற்ற பேறு, ஈடு இணை இல்லாப் பேறு.

17.08.2013
300 வீ'டுகள்,
300 கழிவறைகள்,
300 கிணறுகள்,
1 பாடசாலை,
1 மக்கள் மன்றம் என மறவன்புலவுக்கு சுவிற்சர்லாந்து வழங்கிய கொடை சொல்லிலடங்கா.
அரசிடம் கேட்டு மறவன்புலவுக்குச் சாலைகள், மின்சாரம் ஆகிய உள்கட்டமைப்புகளையும் பெற்றுத் தந்தோர் சுவிற்சர்லாந்தினரே.
மக்கள் நல வாழ்வுக்கென 29.07.2013 அன்று மாலை மறவன்புலவில் சுவிற்சலாந்தின் உதவித் திட்டத்தார் நடத்திய தெரு நாடகத்தின் சில பதிவுகளைக் காணொலியாகக் காண்கிறீர்கள்.
பார்க்க, பகிர்க.
http://youtu.be/pTJinR3Oi_I

அறிந்து தீவினை செய்தேன்.
அறியாமல் தீவினை செய்தேன்.
இவை என்னைத் துன்புறுத்துகின்றன.
என்னைக் காப்பாற்றுவாய்.
தீவினைகளைப் போக்குவாய்.
தீவினை நீங்கினால் என் மனத்தில் தூய்மை பெருகும்.
நலன் அளிக்கும் எண்ணங்கள் என் மனத்தில் பெருகும்.
திருக்காளத்தி வந்தேன்.
பொன்முகலி ஆற்றில் நீராடினேன்.
திருக்கோயில் வலம் வந்து வழிபட்டேன்.
உன் திருவடிகளை வணங்குபவன் நான்.
நீயோ எல்லாம் வல்லவன்.
நான் செய்த தீவினைகளைப் போக்க வல்லவன்.
வழிபடுகிறேன் போக்குவாய், போக்குவாய்.
அவை போய்விடும் போய்விடும்.
அறியாமலேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம். (திருமுறை 11009074)
1961ஆம் ஆண்டு மகா சிவராத்திரிக்கு முதன் முதலாகத் திருக்காளத்தி சென்றேன்.
அழைத்துச் சென்றவர் திருக்காளத்தி வாழ் வேங்கடாசலம் என்பவர். தெலுங்கர்.
விடுதியில் என் அறைக்குப் பக்கத்து அறை நண்பர்.
பின்னர் பலமுறை திருக்காளத்தி சென்றிருக்கிறேன்.
1998 கார்த்திகையில் என் தந்தையாருக்குரிய நினைவேந்தலைப் பொன்முகலி ஆற்றங்கரையில் ஆற்றினேன். என் துணைவியார், என் மகள் சிவகாமி, என் பெயரன் அரன் யாவரும் கூட இருந்தனர்.
20.08.2013
சாலை ஒன்றுக்குக் கல் பரவி மேம்படுத்துக, மக்கள் கேட்கிறார்கள்.
வட மாகாணத்தில் உள்ள பிரதேச சபை ஓரிலட்சம் ரூபாய் நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஒதுக்குகிறது.
ஏதோ ஒரு சன சமூக நிலையத்துடன் பணி ஒப்பந்தம் செய்கிறது. அந்தச் சனமூக நிலையம் செய்ய முன் வரவில்லை.
ஒப்பந்தத்தை நீக்குகிறார்கள். புதிதாக ஒரு சனசமூக நிலையத்துடன் ஆறாம் மாதத்தில் ஒப்பந்தம் செய்கிறார்கள். அரசின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளரும் சேர்ந்து தீர்மானித்த ஒப்பந்தப் பணி.
அந்தச் சனசமூக நிலையம் பணி செய்யவேண்டிய பகுதியில் இல்லை. வேறு ஒரு பகுதியில் இருக்கும் சனசமூக நிலையம். ஆனால் பெயரில் ஒற்றுமை.
மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். விழித்துக் கொள்கிறது பிரதேச சபை. ஒப்பந்தத்தை நீக்கிவிட்டுப் புதிய ஒப்பந்தத்தை அந்தப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு வழங்குவார்களாம்!!!
தை மாதமளவில் தீர்மானம். ஆவணி மாதமாகியும் பணி நிறைவேறவில்லை. அந்தத் தீர்மானம் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை, மக்களைத் தவிர.
இத்தகைய திறமையாளர் மாகாண சபைக்கு வாக்குக் கேட்கிறார்கள், எந்த முகத்துடன்?
பிரதேச சபையை நடத்தத் தெரியாதவர்களுக்கா மாகாண சபைக்கு வாக்கு என மக்கள் கேட்கிறார்கள்.
தோல்விக்கு மேல் தோல்வியைச் சுமக்கும் வலிமை மக்களுக்கு.

03.09.2013
நேற்று மாலை கொழும்பு அருள்மிகு மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். வழிபட்டேன். அறங்காவலரைச் சந்தித்தேன்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இரு நாள்களிலும் நடைபெறும் வழிபாடுகளுக்குப் பெருமளவு சிங்கள மொழி மட்டும் தெரிந்த அடியவர்கள் வருவதைக் கூறினார்.
கோளறு பதிகம் 11 பாடல்களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். மனப்பாடமாகச் சொல்கிறார்கள். சிங்கள வரிவடிவங்களில் இருந்தால் அவர்கள் தவறின்றிப் படிப்பார்கள் என்றார்.
உடனே அவரிடம் சிங்கள வரிவடிவப் பாடல்களை 5 பக்கங்களில் தயாரித்துக் கொடுத்தேன்.
சைவ வினாவிடை சிங்கள மொழிபெயர்ப்பு 100 படிகள் கொடுத்தேன்.
திருவாசகம் சிவபுராணம் சிங்கள வரிவடிவத்திலும் மொழிபெயர்ப்பாகவும் கொடுத்தேன்.
திருவாசகம் முழுவதையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ள செய்தி சொன்னேன். கோயிலாரே அச்சிட்டுப் பதிப்பும் வாய்ப்பு உள்ளது.
ඉරණ්ඩාම් තිරුමුරෛ
இரண்டாம் திருமுறை
තිරුඥානසම්බන්දර් තේවාරම්
திருஞானசம்பந்தர் தேவாரம்
කෝළරු පදිහම්
கோளறு பதிகம்
අරුළ්මිහු මයූරබදි පත්තිරහාළි අම්මන් කෝයිල්
அருள்மிகு மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்
මයූරා ඉඩම් மயூரா இடம் කොළුම්බු 06 கொழும்பு 06
ඉරණ්ඩාම් තිරුමුරෛ
இரண்டாம் திருமுறை
තිරුඥානසම්බන්දර් තේවාරම්
திருஞானசம்பந்தர் தேவாரம்
කෝළරු පදිහම්
கோளறு பதிகம்
පණ්: පියන්දෛක්කාන්දාරම්
பண்: பியந்தைக்காந்தாரம்
02085001
වේයුරු තෝළිබංගන් විඩමුණ්ඩහණ්ඩන් මිහනල්ල වීණෛ තඩවි
මාසරු තිංගළ්හංගෛ මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
ඥායිරු තිංගළ්සෙව්වාය් පුදන්වියාළම් වෙළ්ළි සනිබාම් පිරණ්ඩු මුඩනේ
ආසරුනල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085002
එන්බොඩු කොම්බොඩාමෛ යිවෛමාර් පිලංග එරුදේරි යේළෛ යුඩනේ
පොන්බොදි මත්තමාලෛ පුනල්සූඩි වන්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
ඔන්බදො ටොන්රොඩේළු පදිනෙට්ටො ටාරුම් උඩනාය නාළ්හ ළවෛදාම්
අන්බොඩු නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085003
උරුවළර් පවළමේනි යොළිනී රණින්දු උමෛයෝඩුම් වෙළ්ළෛ විඩෛමේල්
මුරුහලර් කොන්රෛදිංගණ් මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
තිරුමහළ් කලෛයදූර්දි සෙයමාදු පූමි තිසෛදෙය්ව මාන පලවුම්
අරුනෙදි නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085004
මදිනුදන් මංගෛයෝඩු වඩබා ලිරුන්දු මරෛයෝදු මෙංගළ් පරමන්
නදියොඩු කොන්රෛමාලෛ මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
කොදියුරු කාලනංගි නමනෝඩු තූදර් කොඩුනෝය්හ ළාන පලවුම්
අදිහුණම් නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085005
නඥ්ජණි කණ්ඩන්එන්දෛ මඩවාළ්ද නෝඩුම් විඩෛයේරු නංගළ් පරමන්
තුඥ්ජිරුළ් වන්නිහොන්රෛ මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
වෙඥ්ජින අවුණරෝඩු උරුමිඩියුම් මින්නුම් මිහෛයාන පූද මවෛයුම්
අඥ්ජිඩු නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085006
වාළ්වරිය තළදාඩෛ වරිහෝ වණත්තර් මඩවාළ් තනෝඩු උඩනාය්
නාණ්මලර් වන්නිහොන්රෛ නදිසූඩි වන්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
කෝළරි යුළුවෛයෝඩු කොලෛයානෛ කේළල් කොඩුනාහ මෝඩු කරඩි
ආළරි නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085007
සෙප්පිළ මුලෛනන්මංගෛ යොරුබාහ මාහ විඩෛයේරු සෙල්ව නඩෛවාර්
ඔප්පිළ මදියුමප්පුම් මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
වෙප්පොඩු කුළිරුම්වාද මිහෛයාන පිත්තුම් විනෛයාන වන්දු නලියා
අප්පඩි නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085008
වේළ්බඩ විළිසෙය්දන්රු විඩෛමේ ලිරුන්දු මඩවාළ් තනෝඩුම් උඩනාය්
වාණ්මදි වන්නිහොන්රෛ මලර්සූඩි වන්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
ඒළ්හඩල් සූළිලංගෛ අරෛයන්ර නෝඩුම් ඉඩරාන වන්දු නලියා
ආළ්හඩල් නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085009
පලබල වේඩමාහුම් පරනාරි පාහන් පසුවේරුම් එංගළ් පරමන්
සලමහ ළෝඩෙරුක්කු මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
මලර්මිසෛ යෝනුමාලු මරෛයෝඩු තේවර් වරුහාල මාන පලවුම්
අලෛහඩල් මේරුනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085010
කොත්තලර් කුළලියෝඩු විසෛයර්කු නල්හු කුණමාය වේඩ විහිර්දන්
මත්තමු මදියුනාහ මුඩිමේ ලණින්දෙන් උළමේ පුහුන්ද අදනාල්
පුත්තරෝ ටමණෛවාදිල් අළිවික්කුම්අණ්ණල් තිරුනීරු සෙම්මෛ තිඩමේ
අත්තහු නල්ලනල්ල වවෛනල්ල නල්ල අඩියා රවර්ක්කු මිහවේ.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
02085011
තේනමර් පොළිල්හොළාලෛ විළෛසෙන්නෙල් තුන්නි වළර්සෙම්බොන් එංගුම් නිහළ
නාන්මුහන් ආදියාය පිරමා පුරත්තු මරෛඥාන ඥාන මුනිවන්
තානුරු කෝළුනාළුම් අඩියාරෛ වන්දු නලියාද වණ්ණම් උරෛසෙය්
ආනසොල් මාලෛයෝදුම් අඩියාර්හළ් වානිල් අරසාළ්වර් ආණෛ නමදේ.
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

04.09.2013
இன்று கொழும்பிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன்.
24. 07. 13 தொடக்கம் 03. 09. 13வரை இலங்கையில் இருந்தேன்.
1. வள்ளக்குளம் அருள்மிகு பிள்ளையார் கோயில் பணிகள், மறவன்புலவில் ஆடியில் நாளுக்கு ஏர்மங்கலம், நாளுக்கு வித்திடல், என் மறவன்புலவு வீட்டைத் திருத்தும் பணிகள், வளவு மற்றும வயல் பணிகள்.
2. தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டேன்ய
3. புத்தக விற்பனைப் பணிகள், வணிக நிறுவனமாகக் காந்தளகம் பதிப்பகத்தை, மாநகர சபை மற்றும் பிரதேசச் செயலகத்தில் பதிவு செய்து முடித்தல்,
4. மறவன்புலவு வடக்குச் சாலையைச் தார்ச் சாலையாக்கும் பணியில் தடங்களை நீக்க முனைதல்,
5. மறவன்புலவில் 17 ஆண்டுகலுக்கு முன் காணாமல் போன இரு இளைஞர்களைத் தேடல்,
6. பன்னிரு திருமுறை சிங்கள மொழிபெயர்ப்புக்கு நிதி தேடல்
7. ஈசுவரன் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாப் பணி.
8. தேவாரம் தளம் பணிகள்.
9. மறவன்புலவு மாணவர்களுக்குப் புலர் காலை வேளைகளில் அடிப்படைக் கணிணிப் பயிற்சி, மறவன்புலவு மீளெழுச்சித் திட்ட ஆட்சிக்குழுக் கூட்டம், மறவன்புலவு சுவிஸ் உதவி நிறுவனத் தெரு நாடகம், மறவன்புலவு தும்புத் தொழிலகக் காணியில் துப்புரவு,
10. தச்சன்தோப்பில் அறநெறிப் பாடசாலை மாணவருக்குக் கருத்துரை,
11. எழுதுமட்டுவாள் தென்னை வளர்ப்புத் திட்ட முன்னோட்டக் கருத்துரை
12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக விழா
என ஒரு மாதமும் 10 நாள்களும் (41 நாள்கள்) இலங்கையில் பறந்தோடின.
செப்தெம்பர் 13, 14, 15
கோலாலம்பூரில் அனைத்துலகத் திருமுறை மாநாடு.
கலந்துகொள்வகதற்காக,
06. 09 அன்று காலை கோலாலம்பூர் புறப்படுகிறேன்.

06.09.2013
சச்சி அய்யா அவர்கள், 04.09.2013 அன்று இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து, 06.09.2013 அன்று மலேசியாவுக்குச் செல்ல இருந்தார். இடையில் இருந்த ஒரு நாளில் 05.09.2013 அன்று எங்கள் தாம்பரம் இல்லத்துக்கு வந்து, பிறந்து பத்து நாளே ஆன என் மகளை நேரில் பார்த்து வாழ்த்தினார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட படம் (self photo).

08.09.2013
சென்னையில் இருந்து 6.9 மதியம் கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.
கோலாலம்பூரில் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்களிலும் அனைத்துலகத் திருமுறை மாநாடு.
மாநாட்டுப் பணிகளில் உதவ முன்னதாகவே வந்து சேர்ந்தேன்.
கடந்த ஓராண்டு காலமாகவே மாநாட்டு அமைப்பாளர்களுக்கு என்னாலான ஒத்துழைப்பை நல்கி வருகிறேன்.
மேலும் விவரங்கள் தருவேன்
பார்க்க பகிர்க
http://youtu.be/-0RgP8UBj80

09.09.2013
கோலாலம்பூரில் திரு. வாசு இல்லத்தார் அன்புகூர்ந்து 8.9 இரவு எனக்கு விருந்து தந்தனர், பெற்றாலிங்கு பிராமணாள் சமையலறை என்ற உணவு விடுதியில். வாசு, சித்திரா, பிரவீன், திவ்வியா, அசோகர், தனுசியார் மற்றும் நான் படங்களில்
10.09.2013
கோலாலம்பூர் சுபாங்செயா, பன்னிரு திருமுறை வளர்ச்சி மன்றம், 09. 09. 2013. பிள்ளையாருக்கு ஆவணி நான்காம்பிறைப் பெரு விழா. படங்கள்.

12.09.2013
படமாக்கிய கடிதத்தை 
மலேசிய இந்து சங்கத் 
தேசியத் தலைவர் அனுப்பினார்.
பார்க்க


15.09.2013
மலேசியாவில் இந்துத் தொண்டுக்கான உயர்விருது.
மலேசிய இந்து சங்கம் வழங்கிய விருது.
சங்கரத்தினா விருது
15.09.2013 மதியம், 
கோலாம்பூர் பெற்றாலிங்கு செயா குடிமக்கள் மண்டபம் 
மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சண் வழங்குகிறார்.
உடனிருப்பவர் மலேசிய இந்து சங்கத் துணைத் தலைவர் கந்தசாமி.
நிகழச்சி முதலாவது உலகத் திருமுறை மாநாடு
36ஆவது திருமுறை விழா
படங்கள் பார்க்க



22.09.2013
200 ஆண்டுகளின் முன் தமிழரின் உறவுகள், வாழ்ந்து வளம்பெருக்கிய, செறிந்து கோலோச்சிய நிலம், என மரபணு ஆய்வாளர் கூறுவர்,
Spencer Wells (1969) in his Deep Ancestry describes how Ramasamy Pitchappan showed closer linkages using Y-chromosome markers (p.124). The Piraan Malai Kallar community near Madurai carries a piece of genetic trail as a direct genetic link to the Aboriginal community of Australia.
Josephine Flood (2006) discusses the biological angle in The Original Australians, Story of the Aboriginal People (p.185) quoting the work of Alan Redd and Mark Stoneking. These two geneticists studied Mitochondrion Deoxyribo Nucleic Acid from present day aboriginals to find that they are ten times closer to Indians than to New Guineans. They estimated that the time of separation of Australian Aboriginals from southern Indians was at 3390 years with 95% certainty. Josephine also quotes the study of geneticists Pellekaan linking southern Indians with Australian Aboriginals.

தமிழை ஒத்த மொழி பேசிய மக்களை, தமிழரை ஒத்த வாழ்வியல் முறை கொண்ட மக்களை 200 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலேயர், விரட்டினர், துரத்தினர், எதிர்த்தோரைக் கொன்றனர்.
இன்று ஆத்திரேலியா ஆங்கிலேயர் நாடு. தமிழரின் உறவுகளின் தாயகம் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாகியதே.
சிட்னியில் துறைமுகத்தில் ஒரு செப்பேடு. ஆங்கிலேயர் எழுதியது. தமிழரின் உறவுகள் பற்றியது. கண்டேன்,
தமிழர் உறவுகள் பற்றிய செய்திச் செப்பேடு, அருகே அவர்களை விரட்டிய ஆங்கிலேயரின் ஆளுநர் வீடும் பிரதமர் வீடும் படங்களாக..

25.09.2013
பன்னிரு திருமுறைகளை மலாய் மொழிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை முடுக்கிவிட 18.09.2013 புதன்கிழமை காலையில் கூடினோம்.
கோலாலம்பூரில் தவத்திரு சுவாமி பாலயோகி அவர்களின் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தில் கூடினோம்.
முன்னாள் அமைச்சர்தான்சிறீ குமரன், பன்னிரு திருமுறை வளர்ச்சி மையம் ஓதுவாமூர்த்திகள் ஆதிமூலம், மருத்துவர் டாத்தோ கதிரேசன், மலேசிய இந்துச் சங்க மேனாள் தலைவர் டாத்தோ வைத்தியலிங்கம் அவர்களுடன் நான்.
முன்னெடுப்பு முறைகளில் மாற்றம் வரும், புதிய அணுகு முறையில் செல்வோம், முயற்சி வெற்றி பெறும்.
படம் பார்க்க.

30.09.2013
ஆத்திரேலியக் கூட்டரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
திருமதி சூலியா ஓவென் (பரமத்தா - தொகுதி),
திரு. மைக்கேல் உரோலாந்து (கீரீன்வே - தொகுதி)
நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு. சார்ல்சு கவுசல்யர் (இசுற்றாத்பீல்டு - தொகுதி)
திரு. சோபிரி இலீ (பரமத்தா - தொகுதி)
திரு. நாதன் இறீசர் (தொங்கபே - தொகுதி)
பரமத்தா நகராட்சி மேயரின் சார்பாக நகராட்சி உறுப்பினர் திரு. சாடதர் சவுத்திரி
நியூ சவூத் வேல்சு மாநில மூத்த தமிழ்க் குடிமக்கள் சங்கத்
தலைவர் திரு. திரு. அருண் இராசரத்தினம் (நல்லூரைச் சேர்ந்தவர்),
துணைத் தலைவர் நவரத்தினவேல் (புத்தூரைத் சேர்ந்தவர்)
சிட்னி தமிழ் நூலகப் பொறுப்பாளர் திரு. உலோகநாதன்,
மருத்துவர் சோமசுந்தர பாரதி (நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பெயரன்)
திரு. நடராசா (மட்டுவிலார், பனை வளச் சபை மேனாள் தலைவர்)
நாட்டிய மேதை கார்த்திகா கணேசர்
திரு. சிவா பசுபதி (குடியரசுத் தலைவர் சே. ஆர். செயவர்த்தனாவின் சட்டமா அதிபர்)
இப்படி ஒரு கூட்டம். பெருங் கூட்டம். மூத்தோர் கூட்டம். மனைவியருடன் தமிழ்ப் பண்பாட்டு உடைநடையுடன் வந்த பெருங்கூட்டம்.
200 பேருக்கும் கூடுதலான கூட்டம்.
பரமத்தா நகராட்சி மண்டபத்தில்
29.09.2013 ஞாயிற்றுக்கிழமை
நியூ சவூத் வேல்சு மாநில மூத்த தமிழ்க் குடிமக்கள் சங்கத்தின்
பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைக்
குத்துவிளக்கேற்ற நீங்களும் வாருங்கள்,
நிகழ்வைத் தொடக்கிவையுங்கள்
என என்னை அழைத்தவர்
தலைவர் திரு. அருண் இராசரத்தினம்.
மகிழ்ச்சியுடன் குத்துவிளக்கேற்றினேன். படங்கள் மேலும் விவரங்கள் தருவன, பார்க்க, பகிர்க.

28.09.2013
தொடர் வண்டிகள் ஓடவில்லை.
பேருந்துகள் ஓடவில்லை.
தானிகள் ஓடவில்லை.
வாடகை மகிழுந்துகள் ஓடவில்லை.
சென்னை வானூர்தி நிலையத்தில் 27.9 மாலை 1800 மணிக்கு வந்திறங்கி, நிலையத்துக்கு வெளியே வந்தேன்.
வெறிச்சோடிக் கிடந்தன நிலைய முன்புறும் வெளியே தெருக்களும்.
ஈருருளிகள், உந்துருளிகள் சாரி சாரியகப் பயணித்தன. இடையிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழுந்துகள்.
பயணி ஒருவரை இறக்க வந்த ஓட்டுநர்
என்னை அன்புடன் அழைத்தார்.
எழும்பூரில் எனதில்லத்தில் சேர்த்தார்.
மாலை 1900 மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தேன்.
பிற்பகல் 1400 மணிக்குத் தமிழக முதல்வராக இருந்த செயலலிதா, 1415க்குத் தன் பதவியை இழந்தார்.
மாலை 1700 மணிக்குத் தண்டனைக் காலம் 4 ஆண்டுகள் எனத் தீர்ப்புச் சொன்னதும் சிறைக்குப் போனார்கள் போலும்!
அதனால் தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 1400 மணி தொடக்கம் கடையடைப்பும் சாலை மறியலும் சார்ந்த கடுமையற்ற வன்முறையுமாய்த் தொடர, மாலையில் அந்த நிகழ்வுகள் என்னை வரவேற்றன.

28.09.2013
குழந்தைவேலு ஒரு கவிஞர்.
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எதற்கும் பொருத்தமாகக் கவிதை எழுதுவார்.
மறவன்புலவில் வள்ளக்குளத்தடியில் மருத மரத்தடியில் அவரின் கவிதை புனையும் ஆற்றலை நேரில் கண்டு என்னிடம் வியந்து சொன்னவர் பேரா. முனைவர் ஆ. கந்தையா.
வள்ளக்குளம் அருள்மிகு பிள்ளையார் மீது 101 பாடல்கள் அந்தாதித் தொடையில் பாடியுள்ளார்.
என் தந்தையாரின் தாயாரின் மூத்த தமக்கையாரின் கணவரே கவிஞர் குழந்தைவேலு. மறவன்புலவுக்கு மேற்கே கோவிலாக்கண்டி அவரது ஊர்.
என் பெரிய பெயர்த்தியார் காலமானபின் வேறு திருமணம் செய்துகொண்டார். அவ்வழி அவருக்கு மூன்று பெண்கள். அப்பெண்களுள் ஒருவரான தங்கம்மாவைத் திருமணம் செய்தவர் தம்பியையா.
தம்பியையாவின் மூத்த மகன் நாகநாதன். அவருக்கு 80 வயது. ஆத்திரேலியாவில் சிடனியில் விழா எடுத்தனர். அவரது மகன் நாகேந்திரா இலண்டனில் இருந்து வந்கிருந்தார். விழா எடுத்தோர் சிடனி வாழ் மகளும் மருகரும் பெயரரும்.
விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்.
வந்திருந்த பெருங்கூட்டத்தில் மறவன்புலவாரை மட்டும் வைத்து ஒரு படம் எடுத்தனர். எனக்குப் பக்கத்தில் 80 வயதான நாகநாதனார்

01.10.2013
ஆத்திரேலியா, நியூ சவுத் வேல்சு, சிட்னிக்கு மேற்கே,
பரமத்தா நகராட்சி மண்டபத்தில்
29.09.2013 ஞாயிற்றுக்கிழமை
நியூ சவூத் வேல்சு மாநில மூத்த தமிழ்க் குடிமக்கள் சங்கத்தின்
பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் 
குத்துவிளக்கேற்ற நீங்களும் வாருங்கள்,
நிகழ்வைத் தொடக்கிவையுங்கள்
என என்னை அழைத்தவர்
தலைவர் திரு. அருண் இராசரத்தினம்.
மகிழ்ச்சியுடன் குத்துவிளக்கேற்றினேன்.
மேலும் சில படங்கள்
விவரங்கள் தருவன, பார்க்க, பகிர்க.

08.10.2013
சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் எனக்கு அனுப்பிய கடித வரிகள் கீழே.
I am by direction to inform you that as per the decision of the syndicate dated 27.08.2013, you have been nominated as Non-Academic Member in the reconstituted Board of Studies in Tamil Language (PG) for a period of 3 years from 1-09-2013 to 31-8-2016.
அவர்களின் விருப்பை ஏற்றுப் பணிபுரிய ஒப்பினேன்.
1963இல் சென்னைப் பல்கலைக் கழக அறிவியல் இளவல் தேர்வில் (பச்சையப்பன் கல்லூரி வாயிலாக) முதல் வகுப்பில் வெற்றிபெற்றேன். 1963 ஐப்பசியில் பட்டமளிப்பு விழா. படம் பார்க்க.
பின்னர் அங்கேயே அறிவியல் முதுவல், கலை முதுவல் பட்டங்கள் பெற்றேன்.
தோக்கியோ பல்கலை, நன்யாங்கு பல்கலை, சதாம்ப்ரன் பல்கலை, யாழ்ப்பாணப் பல்கலை, கற்பகம் பல்கலை என என் தேடல் மற்றும் பயிற்சிக் களங்கள் தொடர்ந்தன.
இப்பொழுது எனக்கு வந்த அழைப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்துடனான நெடிய தொடர்பின் பேறு.

No comments: