Tuesday, November 29, 2016

புத்த மயமாக்கல், மதமாற்ற முயற்சிகள்

புத்த மயமாக்கலையும் மதமாற்ற முயற்சிகளையும் 1975இல் எதிர்த்தோம்.
மறவன்புலவு. . சச்சிதானந்தன்

காலம் 1975ஆம் ஆண்டு,
இடம் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம்.
அகில இலங்கை இந்து மாமன்றச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தலைவராக நீதியரசர் சிவசுப்பிரமணியம். அங்கே, திருவாளர்கள். கே. சி. தங்கராசா, கேணல் சபாநாயகம், . நமசிவாயம், தி. சண்முகராசா, கந்தசாமி, ஐ. தி. சம்பந்தன் எனச் சைவத்தில் காவலர்களா பலர், இந்து சமய சங்கங்களின் பேராளர் பலர் கூடியிருந்தனர்.
விவேகானந்த சபை, கதிர்காமத் தொண்டர் சபை, சைவபரிபாலன சபை, திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச் சபை, இந்து இளைஞர் மன்றங்கள், சைவ முன்னேற்ற மன்றங்கள் முதலியவற்றின் பேராளர் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து வந்து கூடியிருந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களைப் பராமரிக்க, பேண, திருப்பணி செய்ய இந்து அறநிலையச் சட்டம் இருப்பது போல, இலங்கையில் உள்ள கோயில்களைப் பேண, சொத்துக்களைப் பராமரிக்க, இலங்கை அரசும் அத்தகைய சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கிய சட்டவரைவு ஒன்றின் நகலை அங்கு கூட்டத்துக்கு வந்தவர்கள் முன்னதாகவே அஞ்சலில் பெற்றிருந்தனர்.
சிறீமாவோ தலைமையில் நடந்த ஆட்சிக் காலம். சுதந்திரக் கட்சியின் தலைமையில் பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி பீடத்தில் இருந்தது. தமிழரான குமாரசூரியர் அமைச்சராக இருந்தார்.
மக்கள் குழுக்கள், தொழிலாளர் குழுக்கள் பரவலாக உருவாகின. இக்குழுக்களின் ஆலோசனையே எல்லா மட்டங்களிலும் வலிமை வாய்ந்த ஆலோசனையாகக் கொண்ட காலம்.
இந்து மாமன்றத் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கொண்டு வந்த சட்ட வரைவில், ஒவ்வொரு இந்துக் கோயிலுக்கும் வழிபடுவோர் குழு அமைந்து, அந்தக் குழுவே கோயில் நடாத்துவதில் ஆலோசனைகளை வழங்கும் என்ற குறிப்பும் இருந்தது.
சட்டவரைவில் கோயிலின் ஆட்சி தொடர்பான பல நல்ல விதிமுறைகளும் இருந்தன.
நீதியரசர் சிவசுப்பிரமணியம், கே. சி. தங்கராசா. கேணல் சபாநாயகம் போன்றோர் சட்டவரைவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் இந்து மாமன்றம் அந்த வரைவை அரசுக்கு விதந்துரைக்க வேண்டும் என மற்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தனர்.
அதே நேரம் நானும் இருபது இளைஞர்களும் பக்கத்தில் பம்பலப்பிட்டி இந்து இடைநிலைப் பாடசாலையில் கூடினோம். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த முழக்க அட்டைகளைக் ஏந்தினோம். சட்ட வரைவுக்கு எதிரான வரிகள் சற்றுக் கடுமையாகவே அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன.
வரிசையாக நடந்தோம். சரசுவதி மண்டபத்தை அடைந்தோம். கூட்டம் நடந்த இடத்தைச் சுற்றி அட்டைகளை ஏந்தியவாறு நடந்தோம். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
எம்மைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர், அலமந்து போய்விட்டனர். எங்களை வேடிக்கை பார்த்தனர். கூட்ட நிகழ்ச்சி தொடரவில்லை. நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம்.
வரைவின் நகல் ஒன்றை எடுத்தேன். தலைவரின் பின்பக்கமாக நின்றேன். தீயிட்டுக் கொழுத்தினேன்.
சிறிது நேரத்தின் பின் திரு. சண்முகராசா எம்மிடம் வந்தார். சட்டவரைவுத் தீர்மானம் தோல்வியடையச் செய்வது எமது பொறுப்பு. நீங்கள் கலைந்து செல்லலாம் எனக் கூறினார். விவேகானந்த சபைத் தேர்வுச் செயலாளராக இருந்த திரு. கந்தசாமியும் எம்மிடம் அதையே கூறினார்.
நாம் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினோம். மண்டபத்தின் மறுமூலையில் அமைதியாக இருந்தோம்.
சட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்து மாமன்றக் கூட்டம் முடிந்ததும் தலைவராக இருந்த நீதியரசர் சிவசுப்பிரமணியம் தனது பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.
அன்று என்னுடன் வந்த இளைஞர்களுள் பலர் படித்த இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர். பொறியியல் கல்லூரி மாணவர்களான ஞானானந்தன், தில்லைநாதன், விஜேந்திரா, கருணாகரன், பாலேந்திரா இராசமனோகரன் சட்டக் கல்லூரி மாணவர் கந்தையா நீலகண்டன் எனப் பலர் இருந்தனர்.
சட்டவரைவை நாம் எதிர்த்தமைக்கு வலுவான காரணங்கள் இருந்தன. தமிழ்ப் பகுதிகளில் உள்ள கோயில் ஆட்சி முறையோ, சொத்து ஆட்சி முறையோ நிறைவாக இருந்தமை காரணங்களல்ல. அங்கு கோயில்கள் பலவற்றில் ஆட்சிச் சீர்கேடுகள் மலிந்திருந்தன.
தமிழ்ப்பகுதிகட்குப் புறத்தே இருந்த கோயில்கள் எமக்குக் கவலையைத் தந்தன. பல நூற்றாண்டுகளூடாகக் கதிர்காமத்தில் நாம் இழந்த உரிமைகளைச் சிந்தித்தோம்.
திருகோணமலைக் கோவில் பகுதியை புனித நகரமாக்கலாமா என ஆராய முனைந்ததால் தமிழ் அமைச்சர் திருச்செல்வம் 1968இல் பதவி துறக்க நேரிட்டதை எண்ணினோம்.
உகந்தை முருகன் கோவில் புத்த பிக்குகளின் பிடிக்குள் வருவதை அறிந்தோம்.
சேருவலைப் பிக்குகள் வேரவிலை, மூதூர், புல்லுமலை ஆகிய இடங்களில் இந்துக் கோவில்களைப் புத்த கோயில்களாக்கும் முயற்சிகளை அறிந்தோம்.
வழிபாட்டுக் குழுக்களை ஆட்சி செய்ய அனுமதித்தால், முன்னேச்சரம் திருக்கோயில் புத்தர் ஆட்சிக்கு மாறிவிடும். ஏனெனில் அங்கு வழிபடுபவர்களுள், புத்தர்களே அதிகம்.
திருக்கேதீச்சரத்தில் பிற மதத்தவரும் ஆட்சிக்குழுவில் அமர்வர். பாலாவிக்கு அப்பால் அடம்பன் சந்தியில் கிறித்தவ உலூர்தம்மன் வளைவு இருந்தது.
திருகோணமலைத் திருக்கோயில் சிங்கள வழிபாட்டாளர் கைக்கு மாறிவிடும். வற்றாப்பளையில் இருந்து உகந்தை வரை உள்ள பல கோயில்களில் புத்த சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும். வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் இந்த முறை தொடரும். யாழ்ப்பாணக் குடாநாடு மட்டும் காக்கப்பட்டிருக்கலாம்.
புத்த மதம் (1972 தொடக்கம்) அரச ஆதரவு பெற்ற மதமாக இருக்கும் வரை, புத்த விரிவாக்கம் இந்துக் கோவில்களுக்குள் வழிபாட்டுக் குழுக்கள் மூலம் நடைபெறுவதை நீதிமன்றங்கள் கூடத் தடுத்து நிறுத்தி இருக்கமுடியாது.
மதமாற்றிகளின், மிசனரிமாரின் இலக்கு மாந்தராக, பிற்பட்ட ஏழைச் சைவ மக்கள் இருக்கும் வரை வழிபாட்டுக் குழுக்களுள் மிசனரிமார்கள் எளிதாக ஊடுருவ முடியும். மன உறுதி வளராத, பொருளாதார வளமற்ற, ஆட்சியாளரின், மிசனரிமார்களின் கைப்பொம்மைக்காரரால், இத்தகைய சட்டங்கள் இந்துக் கோயில்களின் ஆட்சித் தலையீடுகள் வழியே, நம்பிக்கையுடன் வழிபடும் அடியவர் உரிமையில் தலையிடுவது ஒரு பக்கம், மதக் கலவரத்துக்கு வழிகோலும் சட்டமாக மாறிவிடக்கூடிய பேராபத்து மறுபக்கம் இருந்தது.
எனவேதான் இந்தச் சட்ட வரைவு நகலை இந்து மாமன்றத்தினர் அரசக்கு விதந்துரைப்பதை எதிர்த்தோம். இந்து மாமன்றம் விதந்துரைத்தால் இந்துக்களின், ஒப்புதலுடன் சட்டத்தைக் கொண்டு வந்தோம் எனச் சிறீமாவோ அரசு மார்தட்டுமல்லவா?
ஏனெனில் இந்துச் சங்கங்கள் அனைத்தும் அனைத்திலங்கை இந்து மாமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருந்தன.
இத்தகைய ஆதரவின்றியே அரசு சட்டமாக்கியிருக்கக் கூடிய பெரும்பான்மைப் பலம் அரசுக்குப் பாராளுமன்றத்தில் இருந்தது. இந்து மாமன்றம் ஆதரித்ததன் வழியாக, இந்துக்கள் தம் தலையில் தாமே உயிருடன் கொள்ளிக் கட்டையை வைத்திருப்பர். எனவே நாம் சிறீமாவோ ஆட்சியின் முயற்சியை எதிர்த்தோம்.
சட்ட முன் வடிவு நிலையிலேயே அந்தத் திட்டத்தை எரித்தோம். அன்று அரசின் முயற்சி தோற்றது.

-      30 சூலை / 05 ஆகத்து 1993, பாரிசு ஈழநாடு, வாரமலர்

No comments: