Sunday, July 10, 2016

மிலக்வைற்றுக் கந்தையா கனகராசா

மாசெறிந்து மிகப்புழுக்கிப் பிறித்தொலிக்கப் = உவர்மண் சேர்த்து மிகவும் புழுங்கும்படி வெள்ளாவியில் வைத்து (திருமுறை 12190121 - சேக்கிழார்).

துணி தோய்க்க உவர்மண் அல்லது சவர்க்காரம் சேர்த்தல் தொல் மரபு. தமிழரின் அறிவியல் மரபு. 

சவர் = உவர்
காரம் = alkaline
சவர்க்காரம் = soap

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இத் தொல்மரபுக்கமையச் சவர்க்காரம் செய்து வந்தோர் இருந்தனர்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நான் வாழ்ந்த வீட்டுக்குக் கிழக்கே ஐந்து வளவுகள் கடந்த வீட்டில் சவர்க்காரம் கந்தையா இருந்தார். அவர் வளவில் குடிசைக் கைத்தொழிலாகச் சவர்க்காரம் செய்வார்கள்.

தந்தையார் கந்தையா வழி வேதிப் பொருள்களைக் கைத்தொழிலாகத் தயாரித்தவர் கனகராசா.

கொழும்பில் ஆங்கிலேய இலீவர் பிரதர்சார் சன் லைற் சவர்க்காரத்தைப் புகுத்தியதும் கனகராசா தம் பொருளுக்குச் சந்தை சேர்க்க 1950களின் தொடக்கத்தில் மில்க் வைற் சவர்க்காரம் எனப் பெயரிட்டதுடன் தொழிலகத்தையும் நவீன எந்திரமயமாக்கி ஆங்கிலேயக் கம்பனியாருடன் போட்டியிட்டு, தனக்கென இலங்கை முழுவதும் ஒரு சந்தை வலைப்பின்னலை வைத்திருந்தார்.

1958 ஆனியில் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தது. சிங்களவர் தமிழரைத் தாக்கினர். பிரபாகரனின் உள்ளத்தைப் பாதித்த நிகழ்வான, பாணந்துறைச் சிவன் கோயில் குருக்களைச் சிங்களவர் உயிருடன் எரித்த நாள்கள் அவை.

அந்த நாள்களில் காங்கேயன்துறை வீதியில் கதிரேசன் கோயிலுக்கு அருகில் என் தந்தையார் 1952இல் தொடங்கிய சிறீகாந்தா அச்சகம் புத்தகசாலை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

கலவரம் தொடங்கி நடந்த நாள்களில் கடையடைப்புக் கோரிக்கையுடன் திரு. கனகராசா தன் வண்டியில் நகரெங்கும் சுற்றிவந்து துண்டு விளம்பரம் கொடுத்து வந்த பொழுது, சிறீ காந்தா அச்சகப் புத்தகசாலைக் கதவை மூடி, வாயிற் படிக்கட்டில் என் தந்தையாருடன் இருந்த மாலை வேளையில் திரு.கனகராசா எனக்கு நேரடி அறிமுகமானார்.

இவர்தான் சவர்க்காரம் கந்தையாவின் மகன் எனத் தந்தையார் பின்னர் கூறினார். தமிழுணர்ச்சிப் பிழம்பாகத் திரு. கனகராசா யாழ்ப்பாணம் பெரிய கடை எங்கும் உலாவினார். கோபக் கனலுடன் அனைத்து வணிக நிலையங்களையும் இழுத்து மூடுவித்தார்.

வெற்றிபெற்ற தொழிலதிபராக, வணிகராக அவரை அறிந்திருந்த மாணவப் பருவத்தினனாகிய நான், தமிழுணர்வுப் பிழம்பாக, செயல்வேகத்தின் ஆளுமையாக அன்றே கண்டேன்.

அதன்பின்னர் அவரின் நடவடிக்கைகளை அறிந்திருந்தேன். எம் வீட்டுக்கு அருகில் அவர் தொழிலகம். அங்கு என்ன நடந்தாலும் தெரியும். ஆனால் நேரடித் தொடர்பிருக்கவில்லை.

1973 ஆவணியில் யாழ்ப்பாணம் வந்து, நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளை முடுக்கிக் கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என்ற கடுமையில் கொழும்பு அரசு இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்தின் அரச ஊழியர்கள் எம்மைப் பாராமுகமாக இருந்த காலத்தில், திரு. கனகராசா என்னிடம் வந்தார். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் 1973 ஆவணி தொடக்கம் 1974 தை வரை மாநாட்டுப் பணிகளைத் தன் பணியாகக் கொண்டவர் திரு. கனகராசா. தமிழ் உணர்வாளர்களின் வெண்ணெய்த் திரட்சிக்கு மத்தாக இருந்த காலங்களில் அவருக்கும் எனக்கும் இடையே அன்பு பெருகியது.

அவர் மறையும்வரை அந்த அன்பும் பாசமும் இணைப்பும் திரு. திருமதி கனகராசா மற்றும் அவர் பெறா மகன் திரு. தவகோபால் மூவருடனும் தொடர்ந்தது.

இன்று 28.7.2014 காலை 1100 மணிக்குக் கொக்குவில் இந்துக் கல்லூரியில் அவர் நினைவு நாள்.

மிகவும் எளிமையாகத் தமிழில் மாணவர்களுக்குத் திரு. கனகராசாவை அறிமுகம் செய்யும் பேறு என்னுடையதாயிற்று. 


No comments: