Friday, August 05, 2022

கோபாலபுரத்தில் நான்

 2022 நினைவு நாள் பதிவு

கோபாலபுரத்தில் நான்

மறவன் புலவு க. சச்சிதானந்தன்

இரவு 8 மணி. கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்திற்குப் போகிறேன். வருவதை முன்கூட்டியே சொல்லி இருந்தேன். வாயிலில் மகன் தமிழரசு, மகள் செல்வி இருவரும் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.

என்னை அழைத்துச் சென்றனர். மாடிப்படி ஏறிக் கலைஞரின் அறைக்குச் செல்கிறேன். அந்த அறைக்கு எத்தனை முறை சென்றிருப்பேன்.

கலைஞர் என்னைப் பார்க்கிறார். கூர்ந்து பார்க்கிறார். நாற்காலியைக் காட்டுகிறார். அப்பொழுது வாயால் பேச முடியாது. காது அவ்வளவாக கேட்காது. எழுதினாலும் புரியாத உடல் நலக்குறைவு அவருக்கு.

மீண்டும் என்னைப் பார்க்கிறார். ஏதோ சொல்ல முயல்கிறார். எனக்குப் புரியவில்லை. மகனும் மகளும் அவரின் உதவியாளரைப் பார்த்து, 'அப்பா என்ன சொல்கிறார்' எனக் கேட்கிறார்கள். உதவியாளருக்கும் புரியவில்லை.

எனக்குத் தேநீர் கொடுக்குமாறு உதவியாளரிடம் கைகாட்டுகிறார். தேனீர் தந்ததும் குடித்தேன். சற்று நேரத்தில் போகலாம் என எழுந்தேன். அமருமாறு கை காட்டுகிறார். சிறிது நேரம் செல்ல மீண்டும் எழுந்தேன். அமருமாறு மீண்டும் கை காட்டுகிறார்.

அரை மணி நேரம் வரை நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மீது அவர் கொண்டிருந்த வாஞ்சை; நான் அவர் மீது கொண்டிருந்த மதிப்பு, அன்பு; அந்த அரை மணி நேரத்தில் மீண்டும் நேருக்கு நேர் பகிர்ந்து கொண்டோம்.

அதற்குப் பின் அவரை நான் பார்க்கவில்லை. பார்க்க முயலவும் இல்லை.

ககரத்தில் ஒரு சொல் தொடங்கும். அதே ககரத்தில் அடுத்து வரும் சொற்களும் தொடரும். அடுக்குமொழில் வசனங்களாகும்.

கலைஞர் கருணாநிதி அடுக்குமொழி வரிகள் வழி எனக்கு அறிமுகமாகிறார் 1952இல், என் பதின்ம வயதுத் தொடக்கத்தில்.

''பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்."

பராசக்தி - திரைப்பட வரிகள் பல, எழுபது ஆண்டுகளாக, இன்றைவரை எனக்கு மனப்பாடம்.

பதின்ம வயது முடியும் காலத்தில் 1959-1966 நான் பச்சையப்பன் கல்லூரி மாணவன். சைவமும் தமிழும் ஊறிய பின்னணி எனக்கு. எனவே பெரியார், அறிஞர் அண்ணாதுரை போன்றவர்களை நான் நெருங்கக் கூடாது என்ற கட்டுப்பாடுடன் மாணவப் பருவத்தில் வாழ்ந்தேன்.

1967: இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்சி மாநாடு; அமைச்சர் திருச்செல்வத்திற்கு உதவியாக நான் சென்னையில்; நுங்கம்பாக்கத்தில் முதலமைச்சர் அண்ணாதுரை வீட்டிற்கு அமைச்சர் திருச்செல்வத்திற்கு அழைப்பு. நானும் சேர்ந்து செல்கிறேன். அங்கே தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம். முதல் முதலாகக் கலைஞர் கருணாநிதியை அங்கு தான் பார்க்கிறேன்.

வங்காளதேசத்தில் இருந்து கொழும்புக்கு 1977 தை முதல் வாரத்தில் திரும்பும் வழியில் சென்னையில் சில நாள்கள் தங்கினேன். எதிர்பாராத விதமாக என் அருமை நண்பர் மணவைத்தம்பி அவர்களைச் சந்திக்கிறேன்.

"பிரதமர் இந்திரா திமுக ஆட்சியைக் கலைத்தார். கலைஞர் முதலமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கினார். கலைஞரை யாரும் பார்க்கவோ, அவரிடம் செல்லவோ அஞ்சுகிறார்கள்.

இலங்கைத் தமிழருக்குக் கலைஞர் ஆற்றிய நன்மைகளுக்காக நீங்கள் அவரைச் சென்று பார்த்து ஆறுதல் கூறலாம்" என மணவைத்தம்பி அவர்கள் என்னிடம் சொல்கிறார்.

உடன்பட்டேன். நானும் மணவைத்தம்பி அவர்களும் கோபாலபுரம் இல்லம் சென்றோம். கலைஞருக்கு ஆறுதல் கூறினோம்.

அடுத்த 40 ஆண்டுகள் (1977-2017). இலங்கையில் இருந்த காலத்திலும் சென்னையில் இருந்த காலத்திலும் அவரோடு எனக்குள்ள தொடர்பு நெருக்கமாகவும் இறுக்கமாகவும் தொடர்ந்தது.

இலங்கையில் இருந்தாலும் விவரங்கள் கேட்க எனக்கு அவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வரும்.

1986 - 2012 வரை சென்னையில் நான் குடியிருந்தேன். காலை 5 மணிக்கு அவரிடம் இருந்து அழைப்பு வரும். விவரங்கள் கேட்பார். “வேலையாக இருக்கிறீர்களா? சந்திக்கலாமா? என்ற அவரின் கனிவுக் குரல் அழைப்பாக வரும். சென்று சந்தித்து உரையாடுவேன்.

அவர் துணைவியர் தயாளு அம்மாள், இராசாத்தி அம்மாள் இருவரும் என் மீது அன்பு கொண்டவர்கள். அவ்வாறே மக்கள், அழகிரி தொடக்கம் கனிமொழி வரை என் மீது அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவரின் உதவியாளர்களுக்கு நான் கோபாலபுரம் வீட்டின் செல்லப்பிள்ளை.

1993 என் தந்தையார் இறந்த போது என் வீட்டிற்கு வந்து நெடுநேரம் இருந்தார். எனக்கு ஆறுதல் சொன்னார். அவ்வாறே என் மகளின் திருமணம் அதே ஆண்டு நடந்த போது நிகழ்வு முழுவதும் கலந்து கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்த நாளில் நான் தில்லியில் இருந்தேன். திரும்பியதும் நினைவிடம் சென்றேன். அழுத கண்ணீருடன் கோபாலபுரம் சென்றேன். இல்லத்தவர் அனைவரையும் சந்தித்துத் துயர் பகிர்ந்து கொண்டேன்.

அவர் எழுத்துகள் வழியாக எழுபது ஆண்டுகால அறிமுகம். நேரில் 40 ஆண்டுகள் தொடர்பும் அன்பும் பாசமும் மதிப்பும்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆட்சியில் இருந்தாலும் அவர் செய்யக்கூடியதை அவரிடம் கேட்பேன். நான் கேட்டு அவர் செய்யாமல் விட்டது எதுவும் கிடையாது. எனக்காக எதையும் கேட்பதேயில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவே அவரிடம் எப்பொழுதும் எதையும் கேட்பேன். அவர் நெஞ்சத்தில் அவர் உள்ளத்தில் அவர் மனத்தில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்றும் நிறைந்திருக்கும். 40 ஆண்டு காலம் நான் அதற்குச் சாட்சி.

























No comments: