Saturday, November 06, 2021

போரில் இறந்தோரை நினைவுகூரும்

 


போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர் காலங்களிலேயே தீர்மானித்துள்ளனர். 

போர் முடிந்த பின்பும் இறந்தோரை நினைவுகூர்ந்து சடங்குகள் இயற்றி வரும் சைவர்களைத் திசை திருப்பாதீர். 

உரோம கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டிக்கமைய நினைவு கூர்க எனப் புதிய நாளைக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சைவர்களை நோக்கிக் கூறுவதைக் கண்டிக்கிறேன்.

ஏற்கனவே வழமையில் இருந்த சந்திராயன நாட்காட்டியின் வளர்பிறை தேய்பிறைக் கணிப்பில் வானியல் அறிவின் துணையுடன் சைவர்கள் இறந்தோரை நினைவுகூரும் வழக்கத்தை மாற்றக் கத்தோலிக்க ஆயர்கள் முயல்வதைக் கண்டிக்கிறேன்.

கிறித்து பிறந்தநாளில் இருந்து வருகின்ற நாட்காட்டியைக் கொண்டு சைவராகிய இறந்தோரை நினைவுகூரும் நாளை நிர்ணயிக்காதீர்.

சைவர்களைக் கிருத்தவ மயமாக்கும் கடந்த 400 ஆண்டுகால முயற்சியின் தொடர்ச்சியாகவே ஆயர்கள் கூட்டம் நினைவு கூரும் நாளை அறிவித்துள்ளதைக் கண்டிக்கிறேன்.

சைவர்கள் வழமைபோல இறந்தோரை வழிபாட்டுடனும் உணர்வு மீநிற்க உறவுகள் நடுவணாக, நினைவுகூர்வர்.

கத்தோலிக்க ஆயரின் அடிமை மோகக் கோரிக்கைக்கு அமையச் சைவர்கள் தம் நினைவு கூர்தல் முறைமைகளை வழமைகளை மாற்றமுடியாது. 

கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இறந்த கத்தோலிக்கர்களுக்குத் தாம் விரும்பிய நாளில் அல்லது நாள்களில் வழிபட்டு நினைவுகூர்தலையே சைவர்களாகிய நாங்கள் ஆதரிக்கிறோம்.

கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டியை சைவர்கள் மீது திணித்துச் சைவ மரபுகளை உடைத்தெறிய முயலும் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தின் அறிவித்தலை எச்சரிப்புடன் கண்டிக்கிறேன்.

ஆயர் கூட்டம் தமிழரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் 

மறவன்புலவு சச்சிதானந்தன் 
சிவ சேனை 

ஆட்டை வெட்டினார். சுவைத்துப் பாரத்தோம். 
மாட்டை வெட்டினார். கை தட்டினோம்.
மனிதரையே வெட்ட வந்துள்ளனர்.

திருக்கேதீச்சர வளைவை உடைத்தனர். கண்டிக்க மறுத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம்.

பிள்ளையார் சிலையை உடைத்து அகற்றி அந்தோனியார் சிலை வைத்தனர். பொறுமை காத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம்.

இப்பொழுது போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றியுள்ளனர். தமிழரின் வாழ்வியலையே தீர்மானிப்பவர் கத்தோலிக்க ஆயர் கூட்டம் என்ற மிதப்பில் நினைப்பில் திமிரில்.

பிள்ளையார் சிலையை உடைத்து அந்தோணியார் சிலையை வைத்ததுபோல 

திருக்கேதீஸ்வர வளைவை உடைத்து நந்திக் கொடியைக் காலால் மிதித்தது போல 

துயிலும் இல்லத்தை உடைக்கக் கோருவது போலப் 

போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றுவதாகக் கூறுகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்க வந்துள்ளனர் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தார்.

கார்த்திகை மகம் ஆறுமுக நாவலருக்கு நினைவு நாள் அன்று. 
ஐப்பசிச் சதயம் இராசராச சோழனுக்கு நினைவு நாள் அன்று.
வைகாசி வளர்பிறை அட்டமி நவமி சங்கிலி மன்னனுக்கு நினைவு நாள் அன்று. 

இந்த நினைவு நாள்களை நாங்களே தீர்மானிப்போம் தமிழர் அல்லர் என்கின்ற திமிர் நிலைக்கு வந்துள்ளனர் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தார்.

வானத்தில் நிலவு, சூரியன், 27 நாள் மீன்கள், அவற்றின் அசைவுகள் பற்றிய துல்லிய கணக்கீடுகள்.

அந்தக் கணக்குகள் தரும் வானியல் அறிவு மீநிற்க, இறப்பு நினைவு நாள் பிறந்த நாள் திருமண நாள் தமிழரின் வாழ்வியலோடு இணைந்த வானியல் சார் நாள்கள். 

இந்தக் கணினி அமைப்பே கிழக்கே வியத்நாமில் இருந்து மேற்கே காந்தாரம் வரை, வடக்கே இலாசாவில் இருந்து தெற்கே கதிர்காமம் வரை பரந்த நிலப்பரப்பில் வாழ்வோரின் துல்லிய வானியல் கணக்கீடு.

தொல்காப்பியர் தந்த கணக்கு 
திருவள்ளுவர் தந்த கணக்கு 
அவ்வையார் தந்த கணக்கு 
இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தந்த கணக்கு 
யாவும் வானியல் கணக்கு.

தமிழரே கணக்கியலையும் வானியலையும் தூக்கி எறியுங்கள் 

இறந்தோர் நினைவு நாள்களை 
உங்கள் பிறந்த நாள்களை 
உங்கள் திருமண நாள்களை 
நாங்கள் கத்தோலிக்க ஆயர் கூட்டமாகக் கூடித் தீர்மானிப்போம்.

துயிலும் இல்லங்களை உடைத்தெறியும் நிலைக்குச் சமமான நிலையே இறந்தோர் நினைவு நாளை மாற்றும் நிலை என்கின்றார் ஐங்கரநேசன்.

சைவர்களின் தமிழர்களின் இறந்தோர் நினைவு நாள்களைத் தமிழர் அல்லாதவர் தீர்மானிக்கலாமா? என கேட்கிறார் சைவப் பெரியார் ஆறு திருமுருகன்.

கூடாரத்துக்குள் ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த அரபு நண்பரின் கதை ஆகிவிட்டதே தமிழர் நிலத்தில் கத்தோலிக்கருக்கு இடம் கொடுத்தது என்று அங்கலாய்ப்பர் தமிழ் உணர்வாளர்.

தமிழரைப் புண்படுத்திய தீர்மானம்
தமிழ் உணர்வுகளை உடைத்தெறிந்த தீர்மானம், போரில் இறந்த நினைவு நாள் தொடர்பான ஆயர் கூட்டத்தின் தீர்மானம் கொடுமையானது. 

அந்தத் தீர்மானத்தை மீளப் பெறுகிறோம். 
வரலாற்றுத் தவறான தீர்மானத்தை எடுத்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சொல்ல வேண்டும்.

அதுவரை கத்தோலிக்க ஆயர்களுக்கு எதிரான தமிழரின் போராட்டம் தொடரும்.





No comments: