Friday, May 29, 2026

நல்லைக் குரு முதல்வர்

 சித்திரை 22 செவ்வாய் 


மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்

வணக்கம் 

நல்லையில் குரு முதல்வர் வெற்றிட நிலை ஏற்புடையதாக இல்லை. 


எனக்குத் தெரிந்த பலர் இருக்கிறார்கள். 

அவர்களுள் ஒருவர் அந்த வெற்றிடத்தை நிரப்பலாம் எனக் கருதுவது உண்டு. 


சைவ நெறி உயிர்களைப் பேசும்.

அருளுக்கும் இருளுக்கும் இடையே ஊசலாடும் உயிர்களைப் பேசும். 

ததி யுறு மத்தில் சுழலும் உயிர்களைப் பேசும்.


இருளில் இருந்து உயிர்கள் விலகி 

அருள்நோக்கி நகரத் தடுப்பவை 

மும்மலங்கள் எனும்.


மும்மலங்களைக் கட்டுக்குள் கொள்ள 

தொண்டு பூசை ஒடுக்கம் தெளிவு 

என நான்கு நிலை வழிகாட்டல்களை உயிர்களுக்கு கொடுக்கும்.


அருள் நோக்கிய நகர்வில் 

மும்மலத்தார் 

இருமலத்தார் 

ஒருமலத்தார் 

என மூன்று பிரிவினராக உயிர்கள்.


மூன்று மலத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்.


காமம் 

சினம் 

மோகம் 

தன்னலம் 

தற்பெருமை 

பொறாமை 

இந்த ஆறு குணங்கள், இயல்புகள் மனிதருக்கு.


சைவக் குரு முதல்வர் தகுதி. 

மனிதருக்குரிய ஆறு குணங்களுள் பலவற்றை கட்டுக்குள் வைத்திருப்பவர் மாமனிதர். 

பிறப்போடு வந்த இந்த ஆறு குணங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தொடர்ச்சியாக முயல்கின்றவர் மாமனிதர்.


மும்மலத்தாராயிருந்து 

இருமலத்தாராகி 

ஒரு மலத்தராகு நோக்கில் கடுந் தவரே 

தவ முதல்வர் மாமனிதர்.


தொண்டராய் பூசகராய் ஒடுக்க நாடுவராய் தெளிவுச் சிந்தையராய் சித்தராகுவோர் மாமனிதர்.


சைவ நெறியின் சிறப்பே

மனிதர் குறை உடையவர் எனும் மலத்தார்.

இறைவன் குறைவிலாதவன் எனும் நின்மலன்.


சைவ நெறியின் இப் பின்னணியில் 

நெறி நின்றோரைத் தேடுவதே குருமுதல்வராக முதற்படி.


1 இல்லறத்தராய்த் துறவு நோக்கிய பயணத்தார் காமக் குற்றச்சாட்டு இல்லாதோர் தகுதியானோரே. 


2 மோகத்தால் பொருள் கையாடிய குற்றச்சாட்டு இல்லாதோர் தகுதியானோரே.


3 12 திருமுறைகளை ஆழ்ந்து ஈடுபாட்டுடன் கற்று உணர்ந்து வழிநடப்போரும் தகுதியானோரே. 

14 திருநெறிகளை உணர்ந்து கற்பதில் ஆர்வம் கொண்டோரும் தகுதியானோரே.


4 குரு முதல்வர் என்றாலே சிவலிங்க பூசகர். நாள்தோறும் சிவலிங்க பூசை செய்வதற்கான தீக்கை நிலை பெற்றவர். அத்தகையோர் தகுதியானோரே.


5 முதல்வர் என்றாலே காப்பவர் என்றும் பொருள். வரலாறும் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிந்து கணித்து சைவ நெறியை முன்னெடுக்கக்கூடிய பெருமகன் ஆளுமைத் தலைமகன் வினைத் திறனர் தகுதியானவரே.


6 ஒன்றுக்கு மேற்பட்ட சீடர்களைத் தம்பிரான்களாக உருவாக்குபவர் தகுதியானவரே.


இத்தகையோர் எத்தனை பேர்? நம்மிடையே. பலர், பலர். அவர்களுள் ஒருவரைக் காண்பது அரிதா?


நன்றி


சித்திரை 22 செவ்வாய் 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் 


நல்லூர் குரு முதல்வர் வெற்றிடம் ஏற்புடையது அன்று.


தேடலில் தகுதிகள் தொடர்பான ஐந்து குறிப்புகளை எழுதி இருந்தேன் 

மேலும் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன். 


சிவன் தொடர்பான குறிப்புகள் செய்திகள் தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழில் தொடர்ந்தன.


எனினும் சைவம் என்று சொல் மணிமேகலையிலேயே தொடங்குகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து திருவனந்தபும் (வஞ்சி) சென்ற மணிமேகலை அங்கு சைவ வாதியிடம் சிவ தத்துவத்தைக் கேட்டு அறிவதாகச் சாத்தனார் எழுதியுள்ளார்.


அடுத்துக் காரைக்காலம்மையார் தொடங்கி சேக்கிழார் ஊடாக மெய்கண்டார் மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாச்சாரியார் ஆறுமுக நாவலர் எனச் சைவச் சொல்லாட்சி இன்று வரை தொடர்கிறது.


மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கி இருந்ததைச் சொல்லும் சேக்கிழார் அவர் மடத்தை அமைத்துச் சென்றதாக எங்கும் சொல்லவில்லை. எனினும் இன்றைய மதுரை ஆதீனத்தார் அந்த நிகழ்வையே திருமடத்தின் தொடக்கமாகக் கொள்கின்றனர்.


தமிழ்நாட்டின் ஏனைய சைவத் திருமடங்கள் 500 ஆண்டுகளுக்கும் குறைவான கால வரலாறே கொண்டன.


ஈழத்தில் சைவத் திருமட வரலாறு இல்லை. எனினும் காலத்துக்குக் காலம் தமிழக ஆதீனங்களின் தம்பிரான்கள் (கூழங்கைத் தம்பிரான் உள்ளிட்டோர்) இங்கு வந்ததும் இங்கிருந்தோர் அங்கு சென்று தம்பிரான்கள் ஆனதும் வரலாறு.


சைவம், சைவத் திருமடங்கள் என்பன அண்மைய அமைப்பு முறைகள். 

இல்லறம் கட்டாயம் என்று வரன்முறையை மீறி இளம் வயதில் இருந்தே துறவு என்ற வரன்முறையைத் திருமடங்கள் சைவத்துள் நுழைத்தன.


சைவத்திலே முன்பில்லாத முறை நுழைந்ததின் பின்புலம் புத்தர் சமணர் திருமடங்களின் அமைப்பு முறை. ஆதிசங்கரரின் பரப்புரைகளும் திருமட நிறுவல்களும் மற்றொரு காரணம்.


துறவி: அவருக்கு வாரிசாகத் துறவி. புத்தத் தலாய் இலாமா மடத்தலைவராக இருக்கும் காலத்திலேயே அவர் அவருக்கு வாரிசு பஞ்சன் இலாமா தேடும் தேடல் குழு அமையும் வாரிசு உருவாகிவிடுவார்.


சங்கர மடங்களிலும் வாரிசு நிலை, பட்டத்துத் துறவி என்ற பதவி நிலை.


தருமபுர ஆதீனத்தின் இன்றைய குரு முதல்வர் எழுதுகிறார். நீ தம்பிரானாக இருக்கிறாய். எத்தனை பிள்ளைகளைத் திருமடத்தில் சேர்த்தாய் எனத் தன்னிடம் 26ஆவது குருமகா சன்னிதானம் கேட்டதாக 


குரு பரம்பரை உருவாக்கம், தம்பிரான்கள் உருவாக்கம் என்பன ஆதீன குரு முதல்வர்களின் தலையாய கடன். புத்த சமண வழமைகளைப் பின்பற்றிய சைவ ஆதீன மரபு.


முன்பு 5 தகுதிகளை எழுதினேன் 


ஆறாவது தகுதியாக குரு முதல்வராக வருபவர் ஒன்றுக்கு மேற்பட்ட சீடர்களை தம்பிரான்களாக உருவாக்கக் கூடியவராக வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.


அண்மையில் அடைந்த நல்லை ஆதீன சன்னிதானம் தனக்குப் பின் வாரிசாக எவரையும் உருவாக்கவில்லை. 


ஏனைய திருமடங்களில் இல்லாத ஆர்வலர் குழுவான தனக்கு நிதி வழங்குவோரைச் சார்ந்திருக்கும் சூழலை உருவாக்கினார். ஏனைய திருமடங்களில் சொத்துக்கு முதல்வர் குரு முதல்வர். இங்கே சொத்துக்கு முதல்வராக ஆர்வலர் குழுவினர்.


ஆர்வலர் குழுவினர் தனக்கு ஒதுக்கிய நிதியை முறையாக ஆதீனத்துக்கு வழங்குவதில்லை. தனக்குத் தருவதில்லை என என்னிடம் அண்மையில் அடைந்த சன்னிதானம் அவர்கள் பலமுறை வருந்திக் கூறியிருக்கிறார்கள்.


வாரிசுகள் வரக்கூடாது என்று அந்த ஆர்வலர் குழு கருதினார்களோ தெரியவில்லை. நல்லூர் குரு முதல்வர் வெற்றிடம் தொடர வேண்டுமென ஆர்வலர் குழுவினர் விரும்புகிறார்களோ தெரியவில்லை.


குரு முதல்வரே சொத்தின் முதல்வராகவும் வேண்டும். வாரிசை உருவாக்குபவராகவும் வேண்டும். ஆட்சி அவர் கையில் இருக்க வேண்டும். ஏனைய ஆதீனங்களில் குரு முதல்வருக்குக் காணிக்கை கொடுப்பவர்கள் குரு முதல்வரைக் கட்டுப்படுத்த முடியாதே.

No comments: