Monday, May 20, 2024

மறவன்புலவு சச்சிதானந்தன் சங்கரன் கோவில் அருணகிரி உரையாடல் 1

 யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை


பகுதி 1


கடந்த 15 ஆண்டுகளில், தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் 35 பேர்களை 

நேர்காணல் கண்டு, 

இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கின்றேன். 


காந்தளகம் பதிப்பக நிறுவுநர்,

யாழ்ப்பாணம் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், 30 ஆண்டுக் காலப் பழக்கம். 

என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும், பற்றும் கொண்டவர். 


காந்தளகம் பதிப்பகத்தில் சார்பில் 400 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.

எண்ணற்ற நாடுகள் சுற்றி வந்தவர். 80 வயது. 

இப்போதும், சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திற்கு வருமாறு என்னைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார். 

 

தற்போது அவர் சென்னை வந்திருக்கின்றார். 

எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். 


யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை குறித்து நிறைய தரவுகள் தந்தார்.

இரண்டு மணி நேர உரையாடலை 

அலைபேசியில் பதிவு செய்து தட்டச்சு செய்து இருக்கின்றேன். 


அதன் முதல் பகுதி இந்தப் பதிவில் தருகின்றேன். 

தொடர்ந்து பல பகுதிகள் வரும்.


உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழ்கின்ற யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, 

இந்தக் கட்டுரை மலரும் நினைவுகளாக இருக்கும்.  


படியுங்கள். 

உங்கள் கருத்துகளை எழுதுங்கள். 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் பேசுகிறேன்….


அருணகிரியாரின் வேண்டுகோளை ஏற்றேன்; பேசுகிறேன்.


என் சொந்த ஊர், யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே, 

16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறவன்புலவு. 

நான் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள என் தாயார் வீட்டில்தான் பிறந்தேன்.


1941ஆம் ஆண்டு கார்த்திகை மாதம். 

கார்த்திகை விளக்கீட்டுக்கு அடுத்த நாள் இரவு. பின்னிரவு இரண்டு மணிக்கு என் தாயாருக்கு வலி ஏற்பட்டது. 

மருதனார்மடம் மகப்பேறு மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்காக, அப்பா ஒரு வண்டி பிடித்து வரப் போனார்.


குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டிதான். 

அந்த வேளையில், எந்த வண்டியும் கிடைக்கவில்லை. எனவே, மகப்பேறு பார்க்கின்ற மருத்துவச்சி ஒருவரை அழைத்து வந்தார். 

அவரது உதவியுடன் விடிகாலை நான்கு மணிக்கு நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.


என் தந்தையார் கணபதிப்பிள்ளை. தாயார் தங்கம்மா. தந்தையார் ஆசிரியர். எனக்கு ஓர் அக்கா இருந்தார். நான் பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு தங்கை பிறந்தார். எங்களை வளர்ப்பதே அம்மாவுக்குத் தலையாய பணியாக இருந்தது.


என் அக்காவும், தங்கையும், 

வண்ணார்பண்ணையில் இருந்து வடக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதனார்மடம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவர்கள். 

மருத மரங்கள் நிறைந்த இடம். அங்கே ஒரு மடம் இருந்தது. எனவே, அந்த ஊர், மருதனார்மடம் எனப் பெயர் பெற்றது.


யாழ்ப்பாணம் நகரத்தில் என் தாயார் வீடு இருந்த பகுதியில் குடிகள் நெருக்கமாக இருக்கும். 

ஆனால், மறவன்புலவு வீடோ, 

வயல்வெளிகள் சூழ்ந்து, மாரியில் பச்சைப் பசேல் எனவும் கோடையில் மணல் வெளியாகவும் காட்சி அளிக்கும்.


நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில்  என் தாயார் வீட்டில் என்றாலும், நான்காம் வகுப்புப் படிக்கின்ற வரையிலும், மறவன்புலவில்தான் வளர்ந்தேன். 

குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டியில்தான் யாழ்ப்பாணத்திற்குப் போய் வருவோம்.


குதிரை வண்டியை வக்கி வண்டி என்றும் சொல்லுவார்கள். 

ஐந்தாறு பேர் இருந்தால், கால்களை வைத்துக்கொள்வதற்கு வக்கி போல ஒரு இடம் இருக்கும். எனவே, அதை வக்கி வண்டி என்று சொல்லுவார்கள்.


அப்போது யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த அளவில்தான் கார்கள் ஓடின.


மறவன்புலவில் என் இளமைக்கால வாழ்க்கை இனிமையானது. 

எங்கள் வீட்டைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வயல்வெளிகள்தான்.

இப்போதும் அப்படித்தான். 


நாள்தோறும் காலை ஆறு மணிக்கெல்லாம் ஆச்சி எழுந்து விடுவார். 

காரணம், அந்த நாள்களில் வீடுகளில் கழிப்பு அறைகள் கிடையாது. பெண்கள் வெளியேதான் போய் வர வேண்டும். பகலில் என்றால் எங்காவது புதர்கள் போன்ற மறைவு இடங்களைத்தான் தேடிப் போக வேண்டும்.


அதன்பிறகு ஆச்சி வயலுக்குப் போகும்பொழுது, அவருடன் நானும் போவேன். 

விடிகாலை 6 மணிக்குக் கீழ்வானத்தில் சூரியனைப் பார்க்கும்பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.


எங்களிடம் 45-50 மாடுகள் இருந்தன. 

அவற்றை அவிழ்த்து மேய்ச்சலுக்கு விடுவேன். 

வயல் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில், வள்ளைக்குளத்தில் குளிப்போம். பிள்ளையார் கோவிலுக்குச் சென்று திருநீறு அணிந்து கொண்டு, சந்தனக் கட்டையை அரைத்துப் பொட்டு இட்டுக் கொள்வோம்.


கோவிலிலேயே ஆச்சி தேவாரம் சொல்லித் தருவார். படித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வருவோம். 

அம்மா சமைத்து வைத்து இருப்பார்.


எனக்கு இரண்டு வயதாக இருந்தபொழுது, மருதனார்மடம் மருத்துவமனையில் என் தங்கை பிறந்தார். அதற்காக, அந்த மருத்துவமனையிலேயே இரு வாரங்கள் தங்கி இருந்தோம்.


அப்பா பணிமுடிந்து மாலை வேளைகளில் 

மருத்துவ மனைக்கு வருவார். 

என்னையும் அக்காவையும் அப்பா கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய், 

யாழ்ப்பாணம் போகின்ற தொடர் வண்டியைக் காண்பிப்பார். 

ஒவ்வொரு நாளும் போய்த் திரும்பி வரும்பொழுது 

ஓமப் பொடி வாங்கித் தருவார்.


அங்கே நாங்கள் தங்கி இருந்த நாள்களில், 

ஒவ்வொரு நாளும் உறவினர் உணவு கொண்டு வருவார்கள். அல்லது நாங்கள் சமைத்துச் சாப்பிடுவோம்.


அப்பொழுது காலையிலும், இரவிலும் பிட்டு அல்லது இடியப்பம் உணவு. 

சிறுவனாக இருந்தபொழுது, தோசை, இட்லி நான் பார்த்ததே இல்லை. 

வழக்கமாக, சிவப்பு அரிசியில் சமைத்த பிட்டு, இடியப்பம்தான் சாப்பிடுவோம்.


ஒருநாள் யாரோ கோதுமை மாவில் சமைத்த வெள்ளைநிற இடியப்பம் கொண்டு வந்து கொடுத்தார்கள். 

அது எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. 

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், வெள்ளை இடியப்பம்தான் வேண்டும் எனக் கேட்டு நான் அழுது அடம் பிடிப்பேன்.


சிறுவனாக இருந்தபொழுது, 

அம்மா உடம்பு முழுவதும் மருத்து எண்ணெய் தடவி விடுவார்கள். அது மணக்கும். 

ஏணைக்குள் கிடத்துவார்கள். அப்போது ஏணைக்குள் நெளிந்துகொண்டே கிடப்பேன்.


அதேபோல, அக்கா, தங்கையையும் தனித்தனி ஏணைகள் (தொட்டில்) கட்டிக் கிடத்துவார்கள்.


இரு மணி நேரமளவில் வெளியே எடுத்து, 

சீயக்காய் அல்லது அரப்புத் தூள் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள். சவக்காரம் (சோப்பு) எதுவும் கிடையாது. அதை அக்காலத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை.


அவர்கள் திரைப்படம் பார்க்கச் செல்லும்பொழுது, என்னை ஆச்சியுடன் வீட்டில் விட்டு விட்டுப் போவார்கள். 

நானும் வருவேன் என்று அழுது அடம் பிடித்ததும் நினைவு இருக்கின்றது.


யாழ்ப்பாணத் தமிழர்களின் வீடுகளில், சமையல் அறை தனியாக இருக்கும். 

அதை நாங்கள் குசினி என்று சொல்லுவோம். 

அப்போது வீடுகள் பெரும்பாலும் மண் சுவர்தான். மேற்கூரையைப் பனை ஓலை அல்லது தென்னங்கீற்றுக் கிடுகால் வேய்ந்து இருப்பார்கள். 

அப்படி ஒரு மண் வீட்டில்தான் நான் வளர்ந்தேன்.


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மண் தரையைச் சாணி போட்டு மெழுகுவார்கள். 

ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மேற்கூரையைப் பிரித்து, மீண்டும் புதிதாகக் கிடுகு வேய்வார்ள். 

தலை வாரும் சீப்புகளைத் தாழ்வாரக் கிடுகுகளுள் சொருகி வைப்போம்.


வீட்டுக்கு உள்ளே ஓர் அறை மட்டும்தான். 

வெளியே கூரையுடன் விராந்தை எனும் திண்னைதான். திண்ணைக்குத் தட்டிகள் கட்டுவர். 

காற்று வரத் திறப்பதும் மழைக்கு மூடுவதுமாகத் தட்டிகள் இறப்பில் தொங்கும். 

திண்ணையில் உட்கார்ந்து படிப்போம். 

அங்கேயே பாய் போட்டுப் படுத்து உறங்குவோம்.


எங்கள் வீட்டு முற்றம் அழகாக இருந்தது. 


அப்பா அம்மா திருமணத்திற்காக நட்டு வளர்த்த இரண்டு முள் முருங்கை மரங்கள் இருந்தன. 

முற்றம் முழுமையும் பால் போன்ற வெண்ணிற மணல்தான்.


முற்றத்தில் புல் முளைக்க விட மாட்டார்கள். 

ஒவ்வொரு நாள் காலையிலும், அப்பாவின் தாயாரும், நாங்களும் முற்றத்தை விளக்குமாறு வைத்து நன்றாக அரித்துக் கூட்டுவோம். 

சிறு கற்கள், கிழிஞ்சல்கள், சருகுகள் இல்லாமல் நன்றாகத் துடைத்து எடுத்து விடுவோம். 

புற்களை வெட்டி எடுத்து விடுவோம்.


காரணம், மறவன்புலவில் ஏராளமான வகை வகையான பாம்புகள் இருந்தன. புற்கள் வளர்ந்தால் பாம்புகள் மறைந்து நெளிந்து வரும். 

வீட்டுக்குள் பாம்பு வந்தால் அடித்துக் கொல்லுகின்ற வழக்கம் கிடையாது. 

அதற்குக் கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டுவார்கள். கற்பூரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்து 

சற்று நேரத்தில் திரும்பிப் போய்விடும்.


நாகப் பாம்பை நல்ல பாம்பு என்பர். 

புடையன், சாரை, விரியன், கட்டு விரியன், வயற்கோவியன், பச்சையன், மண்ணுண்ணி எனப் பாம்புகள். 

பறக்கும் பாம்புகள் மரத்தில் இருப்பதாகவும் கூறுவர்.


முற்றத்தில் புற்கள் இருந்தால், 

தேள், கொடுவால் தேள், பூரான் என்னும் மட்டைத் தேள், எறும்புப் புற்று, கரையான் புற்று, மழைக்காலத்தில் அட்டைகள், தவளைகள், தேரைகள் யாவும் காலுக்குள் அகப்படும்.


முன் முற்றத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது. 

நாங்கள் வேப்பங்குச்சியால் பல் துலக்குவோம். அடுப்புக் கரி இடக் கையில், வலக்கைச் சுட்டு விரலால் தொட்டுத் தொட்டுப் பல் துலக்குவோம்.


மறவன்புலவிலும் வண்ணார்பண்ணையில் 

அம்மா வீட்டிலும் சுற்றிலும் வேலிகளுக்குப் பூவரச மரங்கள்தான்.


வேப்ப மரத்திலும் பூவரச மரத்திலும் அணில்கள் நிறைந்து இருந்தன. 

ஓணான்கள் வகை  வகையாக ஊர்ந்தன. 

பல் வகைப் பறவைகள் வந்து போயின.


மறவன்புலவில் அம்மா குசினிக் கொட்டில் வாசலில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடக் கூப்பிடுவார்கள். 

நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி ஓடுவேன். வாழைப் பொரியல் சேர்த்து ஒரு பிடி சோறு கொடுத்து சாப்பிடச் சொல்லுவார்கள். 

அப்படி ஒவ்வொரு உருண்டை சாப்பிடும்பொழுதும், நானும், அக்காவும், தங்கையும் வீட்டு முற்றத்தின் எல்லைக்கு ஓடிச்சென்று திரும்பி வருவோம்.


என் தந்தைக்கு ஒன்பது வயதாக இருக்கும்பொழுது அவரின் தந்தையார்,

இறந்து போனார். 

அப்பா மட்டும்தான் ஒரேயொரு ஆண் பிள்ளை. அவருக்கு முன்பு பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து போனார்கள். 

எனவே, என் அப்பாவைக் கோயிலுக்கு விற்றுப் போட்டார்கள். 

எனவே, அவரை கோயிலின் பிள்ளை என்று சொல்லுவார்கள்.


அருணகிரி


நீங்கள் விற்பனை என்று சொல்லுகின்றீர்கள். 

இங்கே நாங்கள் நேர்ந்து விடுதல் என்போம்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


விற்றார்கள் என்றால், காசுக்கு விற்பது அல்ல.


பிள்ளையார் அப்பா, இனி இது உன் குழந்தை. 

நீதான் பார்த்துக் கொள் என்று சொல்லி விடுவார்கள். முறைக்காக,  கோயில் ஐயா 

அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார். 

அது அந்தக் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு. அவ்வளவுதான்.


என் பாட்டனார்தான் அந்தக் கோவிலுக்கு அறங்காவலர். அடுத்து என் அப்பா அறங்காவலர்.


அப்பா சிறுவனாகத் தனிப் பிள்ளை, 

கோயிலின் பிள்ளை என்பதால், பத்து வயது வரை பள்ளிக்கே போகவில்லை. 

ஆச்சி போக விடவில்லை. எனக்கு ஒரே ஆண் பிள்ளை நீதான். உன்னை வெளியே விட மாட்டேன். நீ படிக்கவே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.


அதன்பிறகு யாரோ ஒரு ஆசிரியர் வந்து, 

ஆச்சியைச் சினந்து பேசி, அப்பாவை  வடக்கே நுணாவிலில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார். இதை அப்பா என்னிடம் சொன்னார். 


பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புராணம் படிப்பார்கள். 

மற்றவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள். 

பாடல்களுக்குக் கருத்துச் சொல்லுவார்கள். 

மாலை நேரங்களில் அப்படிப்பட்ட சூழல் நிலவியது. அதைப் புராண படனம் என்பார்கள்.


கந்த புராணம் படிப்பார்கள், திருவிளையாடல் புராணம் படிப்பார்கள். மார்கழி மாதம் திருவெம்பாவைக் காலத்தில், திருவாதவூரார் புராணம் படிப்பார்கள். சிவராத்திரியின் பொழுது, சிவராத்திரி புராணம் படிப்பார்கள். 

சித்திரை மாதம், முழு நிலாச் சித்திரைக் கஞ்சிக்கு சித்திரபுத்திர நாயனார் புராணம் படிப்பார்கள்.


அருணகிரி


நானும் எங்கள் தெருப் பிள்ளையார் கோயிலில் சித்திரபுத்திர நாயனார் புராணம் படித்து இருக்கின்றேன்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


அப்படியா? மகிழ்ச்சி.


புராணங்கள் படிக்கின்ற பண்டிதர்கள் எங்கள் ஊரில் பலர் இருந்தார்கள். 

பாடல்களின் தொடர்களை அவர்கள் கொண்டு கூட்டிச் சொல்லுவார்கள். 

அதாவது, அவன் அழகன், வலிய தோளினன், கையில் வில் வைத்து இருப்பான் என்றெல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லிக்கொண்டே வந்து, 

கடைசியில் இத்தகைய இராமன் என்று சொல்லி முடிப்பார்கள்.


ஆனால், கதையைத் தொடங்கும்பொழுது, 

இன்று நான் உங்களுக்கு இராமனைப் பற்றிச் சொல்லப் போகின்றேன் என்று சொல்லித்தான் தொடங்குவார்கள். நடித்துக் காட்டுவார்கள். இசையோடு பாடுவார்கள், இசையோடுதான் பொருள் சொல்லுவார்கள்.


இவ்வாறு புராண படனங்களை, நாள்தோறும் கேட்டு வளர்ந்தேன். 

அதுதான் எனக்கு தமிழ் மீது, பண்பாட்டின் மீது, சைவத்தின் மீது பற்றினை ஊட்டி வளர்த்தது.


நாள்தோறும் காலையிலும் ஆச்சி எங்களைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தேவாரம் சொல்லிக் கொடுப்பார். படிக்காமல் விட மாட்டார்.


குழந்தை நாச்சியார் என்பது எங்கள் ஆச்சியின் பெயர். எனவே, எங்கள் வீட்டு மாடுகளில் கு என்ற எழுத்தை அடையாளமாகப் பொறிப்போம். 

அவருடைய தந்தை பெயர் இராமநாதன். 

எனவே, அவரது தம்பி, தன்னுடைய மாடுகளுக்கு இ என்ற குறி பொறித்து இருந்தார்.


ராமநாதன் என்று தமிழ்நாட்டில் எழுதுகின்றார்கள். ஆனால், ஈழத்தில் இ சேர்த்துத்தான் எழுதுவோம். சொல்லுக்கு முதல் எழுத்து எப்படி வரும் எனத் தமிழ் இலக்கணம் வரையறுத்து இருக்கின்றபடிதான் எழுதுகின்றோம். 

அப்படித்தான் பெயர்கள் சூட்டுவோம். 


நீங்கள் லண்டன் என்று எழுதுகின்றீர்கள். 

நாங்கள் இலண்டன் என்றுதான் எழுதுகின்றோம்.


அம்மா 90 வயதில் சென்னைக்கு வந்து இந்த எழும்பூர் வீட்டில் தங்கி இருந்தார். 

அப்போது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சாப்பாடு பரிமாறும்பொழுதும் கூட, 

இரசம் கொண்டு வரட்டுமா? என்றுதான் கேட்பார். 

இ என்பதை அழுத்தமாகச் சொல்லுவார். 

விருந்தாளிகள் சிரிப்பார்கள். அவர் மட்டும் அல்ல, எங்கள் ஊரில் எல்லோருமே அப்படித்தான் பேசுவார்கள். 

அதுபோல வில்லியம் என்ற பெயரை, உவில்லியம் என்றுதான் எழுதுகின்றோம்.


என் இளமைக் காலத்தில் அமைதியான வாழ்க்கை. குறைவு இல்லாத வாழ்க்கை. 

என் பெற்றோர் என்னை அடித்தது மிகமிகக் குறைவு. காரணம், என் அப்பா அவரது பெற்றோருக்கு ஒரேயொரு ஆண் பிள்ளை. அவருக்கும் நான் ஒரேயொரு ஆண்பிள்ளை. எனவே, நான் செல்லப்பிள்ளை.


வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்கள் என்னைத் தொடக்கூடாது என்று ஆச்சி சொல்லுவார். 

அவருக்குக் கிட்டப் போகதே என்பார். 

இங்கே வா என்று என்னை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொள்ளுவார்.


ஆனால், அந்தக் கண்ணோட்டம் எல்லாம், 

நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியபிறகு, அப்படியே மாறிப் போய்விட்டது. 

அங்கே என் வயதை ஒத்தவர்கள், ஏனைய பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து உரையாடி, 

மகிழ்ச்சியாக இருந்தோம்.


மறவன்புலவில் ஒவ்வொரு நாளும் காலையில் ஆச்சியுடன் சேர்ந்து மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்கு விடுவதும், 

மாலையில் அவையாகத் திரும்பி வந்ததும் கல்லில் அல்லது கட்டையில் கட்டுவதுமான வேலைகளைச் செய்தேன்.


பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுதும் 

கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் வீட்டுக்கு வருவோம்.


அதன்பிறகு மாடுகளைக் கட்டைக்குள் கட்டப் போவேன். ஆச்சிதான் பராமரித்து வந்தார். 

அப்பாவுக்கு ஈடுபாடு இல்லை. ஆச்சியின் தம்பியும் மாடுகள் வைத்து இருந்தார். அவரும், நாங்களும் ஒரே வளாகத்தில்தான் இருந்தோம்.


பகல் முழுமையும் அலைந்து திரிந்த மாடுகள், மாலையானதும் சரியாக வீடு திரும்பி, கட்டைக்கு அருகில் வந்து நிற்கும். அது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். அத்தனை மாடுகளுக்கும் ஆச்சி தனித்தனியாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். கொம்பி வா, சிகப்பி வா என்று அழைப்பார்.


அருணகிரி


அப்படி என்னென்ன பெயர்கள்? 

முடிந்த அளவு சொல்லுங்கள்.


காந்தளகம் சச்சிதானந்தன்


கொம்பி, சிகப்பு, குண்டுமணி, செவ்வாய், இருட்டி, மொந்தன் என மாடுகளின் பெயர்கள். 

ஒவ்வொரு மாட்டுடனும் பேசுவேன். 

உருவு தடத்தை வைத்தால், அந்த மாடுகள் தானாகவே வந்து அதற்கு உள்ளே கால்களை வைக்கும். 

அதுவும் எனக்கு வியப்பாக இருக்கும். 

மாடுகளைத் தட்டிக் கொடுப்பேன்.


விடியற்காலையில் சென்று கயிறை அவிழ்க்கும் போது, மாடுகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

ஒரு சில மாடுகள் மூர்க்கத்தனமாக இருக்கும். 

அதன் அருகே போகாதே என்று ஆச்சி தடுப்பார்.


இருந்தாலும் நான் மெல்ல அருகில் சென்று தடவிக் கொடுத்துப் பழக்கி விடுவேன். 

அவற்றுக்கு நம்மீது அன்பு ஏற்பட்டு விடும். 


மாடுகளைக் கட்டி வைக்கின்ற இடத்தை, 

பட்டி என்று சொல்லுவார்கள்.


மாடுகள் கன்று ஈன்றால், வீட்டில் கொண்டு வந்து கட்டுவார்கள். பால் கறந்து குடிப்போம்.


ஒவ்வொரு வயற் பாத்தியிலும் இரண்டு நாள்கள் மாடுகளைக் கட்டுவோம். 

பிறகு அடுத்த வயற் பாத்தியில் கட்டுவோம். அன்றைக்கு மாடுகளை அவிழ்த்துவிட்ட பிறகு, 

45 கற்கள் அல்லது கட்டைகளையும் மண்ணில் இருந்து பிடுங்கி, அடுத்த பாத்தையில் கொண்டு போய் ஊன்றி விட்டுத்தான் வீடு திரும்புவோம். 

சாணங்களை எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைப்போம்.


காய்ந்து போன சாணங்களை எடுத்துத் தூளாக்குவோம். அடுத்த உழவுக்கு முன்பு, அதை வயலில் பரவுவார்கள்.


நானும் வயலில் இறங்கி உழுது இருக்கின்றேன். அப்போதும் ஆச்சி, நீ சும்மா இரு என்று சொல்லுவார்.


ஒரு சில மாடுகள் திரும்பி வராது. வேறு பட்டிக்குப் போய் விடும். வீட்டில் இருக்கின்ற உதவியாளரிடம் சொன்னால், அவர் போய்த் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கட்டுவார். மாடுகள் சினைப்பட ஏறுகின்ற காலத்தில் அப்படி மாறிப் போய்விடும்.


ஆவணி மாதத்தில் அருமையான நிகழ்ச்சி. 

அதன்பிறகு விதைப்புக் காலம். அப்பொழுது மாடுகளை வீட்டில் வைத்து இருக்க முடியாது. 

மறவன்புலவில் கிட்டத்தட்ட 1000 மாடுகள் வரையிலும் இருந்தன.


ஒரு நாள் குறிப்பார்கள். 

ஆவணி சதுர்த்திக்கு மறுநாள் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்துதான் நாள் குறிப்பார்கள். 


குறித்த நாளன்று தெருவார ஆலடிக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு போவார்கள். 

அங்கிருந்து தெற்கே அவை போகும். 

கடல் வற்றிய காலத்தில் அப்படியே நடந்தே கடந்து, கேரதீவுக்குச் சென்று, மூன்றாம்பட்டி, வெள்ளாங்குளம் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வருவார்கள்.


அது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்றது. யானைக்காட்டு  வழியே போக வேண்டும்.


அருணகிரி


யாழ்ப்பாணத்தை ஒட்டி யானைகள் இருக்கின்றதா?


மறவன்புலவு சச்சிதானந்தன்


இல்லை. ஆனால், இங்கிருந்து தெற்கே போகும்பொழுது கேரதீவு. இடையில் ஆழம் இல்லாத கடல். 

கடந்தால் பூநகரி. அடுத்தது, முழங்காவில், அடுத்து வெள்ளாகுளம். மாடுகளைக் கொண்டு போகலாம். பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடைப்பட்டது யானைக் காடுகள். 

ஒருசிலர் குடும்பத்தோடு சென்று அங்கேயே தங்கி இருந்து மாடுகளைப் பராமரித்துக் கொள்ளுவார்கள்.


அங்கே நான்கைந்து மாடுகளை ஒரு பிணைச்சல் போட்டுக் கட்டி விடுவார்கள். 

ஐந்தாறு மாதங்கள் கழித்து, சிவராத்திரியை ஒட்டி திரும்பவும் மறவன்புலவுக்கு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.


அருணகிரி


அப்படி எத்தனை நாள்கள்?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 180 நாள்கள், பாதி ஆண்டு அங்கேதான் நிற்கும்.


அந்தக் காலத்தில் வௌளாங்குளம் கொண்டு போகாமல் வீட்டிலும் மாடுகளை வைத்துக் கொள்ளலாம். 

பாலுக்காக வீட்டில் மாடுகளை வைத்து இருப்பார்கள். அப்படி ஒருசில மாடுகள்தான் இருக்கும். 

ஆனால் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடக் கூடாது. 

பனை ஓலையில் இழைத்த முகப் பெட்டி கட்டி, வெளியே கொண்டு செல்வர்.


ஒரு கதிரினை மாடு தின்றாலும், அது பாவம் என்று கருதுவார்கள். 

மற்றவனுக்கு கேடு நேர்ந்துவிட்டதே? 

ஐயோ இந்தப் பாவத்தை நான் செய்து விட்டேனே? என்று வருந்துவார்கள். 

கதிர்களை அந்த அளவுக்குத் தூய்மையாகக் கருதுவார்கள்.


மழைக்காலத்தில் முற்றம் எல்லாம் தண்ணீர் தேங்கி சதுப்பு நிலம் ஆகி விடும். 

மாடுகள் படுத்து உறங்க முடியாது. 

நின்று கொண்டே இருக்கும். 

கன்றுகள் பாடு பார்க்க வேதனையாக இருக்கும்.


மாட்டுத்தொட்டில் மேற்கூரை பனை ஓலை கொண்டு வேய்ந்து இருப்பார்கள். சில நாள்களில் அப்பா மாட்டுக் கொட்டில் போட்டு இருப்பார். 

ஆனால் அது மிகக்குறைவு. ஏன் என்றால், வெயில் காலத்தில் அது தேவை இல்லை.


விதைப்புக் காலத்தில், கோயிலில் நாள் விதைப்பு செய்வோம். 

உழவுப் பணிகளுக்கோ, வண்டி ஓட்டுவதற்கோ ஆச்சி, சிறுவனான என்னை விடவே மாட்டார். 

அவரது கரிசனம் எல்லாம் தன் பரம்பரை தொடர வேண்டும் என்பதுதான். அதற்காக என்னை அப்படிப் பாதுகாத்து வளர்த்தார். அது அவரது இயல்பு. 

அதனால் பண்பட்ட வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.


கார்த்திகை மாதம் வெள்ளம் வரும். 

வயல்களில் ஓரடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கி நிற்கும். தவளை கத்தும், மீன்கள் துள்ளும். 

கொக்குகள் கொத்தித் தின்னும். தவளைகளைப் பாம்புகள் விழுங்கும். அழுக்கணவன் நாரைகள், காகங்கள், நத்தை கொத்திகள் எனப் பல் வகைப் பறவைகள் சுற்றி வரும்.


நிலத்தில் கலப்பை கொண்டு உழுகின்றபொழுது, பின்னால் வரிசையாக கொக்குகள், காகங்கள், நாரைகள் அணிவகுத்து வரும். 

மண்ணில் இருந்து வெளியே வருகின்ற பூச்சி புழுக்கள் வெட்டுக்கிளிகள் அவைகளுக்கு நல்ல தீனி.


அப்பொழுது உழவுக் கருவிகள் எதுவும் கிடையாது. ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என இரண்டு வகை வண்டிகள் இருந்தன. 

குடும்பத்தோடு போகும்பொழுது கூரை போட்டு இருப்பார்கள். அதைக் கழற்றி வைத்து விட்டால், நெல் மற்றும் பொருட்களை ஏற்றிக் கொண்டு போகலாம்.


நாம்பன் மாடுகள் இருந்தன. நான்கு எருதுகள் இருந்தன. அவைகளை குளிப்பாட்டத் தனிக்குளம் இருந்தது. நான்தான் ஓட்டிக்கொண்டு போய்க் குளிப்பாட்டுவேன்.


அவற்றுக்கு நாணயம் போடுவது ஒரு கலை. 

மூக்கு நாணயம் (மூக்கணாங்கயிறு) போட்டு, கழுத்தில் சங்கிலி கட்டு, அதில் சலங்கைகளைக் கட்டித் தொங்க விட்டு இருப்பார்கள். எனவே, தொலைவில் நடந்து வரும்பொழுதே மணி ஓசை கேட்கும்.


மழைக் காலத்தில் வரம்பில் புல்லை வெட்டி மாடுகளுக்குத் தீனி போடுவார்கள். 

மாடுகள் மீது அவர்கள் வைத்து இருக்கின்ற பற்று, பாசம், ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பது என அந்தத் தொடர்புகள் எல்லாம் ஒரு குடும்பப் பிணைப்பு. 


ஒருவர் வீட்டு மாடு, அடுத்தவர் வீட்டுக்குப் போகாது. உரியவர்களைக் கண்டவுடன், மா என்று பாசத்துடன் குரல் கொடுக்கும்.


சூடு மிதித்து வருகின்ற நெல்லை 

பொலி என்று சொல்லுவோம். 

அந்தப் பொலியில், முதலில் எடுத்து வைப்பது மீசுபொலி. பிளஅளையார் கோயிலுக்குக் காணிக்கை. கோவில் ஐயாவுக்கு, கோயிலில் வேலை செய்வோருக்கு, முடி வெட்டுவோருக்கு, வெள்ளை கட்டுவோருக்கு, எல்லோருக்கும் என ஓராண்டுக்கு உரிய பங்கை அங்கே வைத்து பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.


இப்படியாக வௌளாங்குளத்துக்கு மாடு ஓட்டிக்கொண்டு போய் வருவோருக்கும் 

ஒரு பங்கு உண்டு. 

அதை அவர்கள் வாங்கிக் கொள்ளுவார்கள். அதன்பிறகு, நாங்கள் எங்கள் பங்கு நெல்லை வீட்டுக்குக் கொண்டு வருவோம். பத்தாயத்தில் போடுவோம்.


அது பத்துக்குப் பத்து அறை. 

நான்கு முதல் ஐந்து அடிகள் விட்டத்தில், எட்டு அடிகள் உயரத்தில் ஒரு களஞ்சியம் போல பனை ஓலையால் இழைத்துப் பின்னி வைத்து இருப்பார்கள். அதற்கு உள்ளேதான் நெல்லைப் போட்டு வைத்து இருப்பார்கள். அதை சிலர் மரத்தாலும் செய்து வைத்து இருப்பார்கள்.


விதைப்பு நடக்கின்ற காலங்களிலேயே வீட்டில் இப்படிப் பின்னல் வேலைகளும் நடக்கும். 

எனவே எந்த நேரமும் வேலைதான்.


சூடு மிதிப்பதற்குப் பாய் தேவை. 

பெயர் கதிர்ப் பாய். அவை ஒவ்வொன்றும் 25 அடி நீளம் ஏழு அல்லது எட்டு அடி அகலம் இருக்கும். 

அப்படிப் பத்துப் பதினைந்து பாய்கள் தேவை.


சூடு மிதிக்கவும் நெல்லைக் குவிக்கவும் காயப் போடவும், புழுங்கல் அவித்தால் காயப்போடவும் கதிர்ப் பாய், ஆண்டுக்கு ஒருமுறைதான் பயன்படும். 


அல்லது திருமணங்கள் நடைபெறும்பொழுது, 

இறப்பு வீடுகளின் முற்றங்களில் விரித்து உட்காருவார்கள். அதையும் பின்ன வேண்டும்.


எனவே, அப்பா, அம்மா, ஆச்சி என எல்லோருமே ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்.


எங்கள் ஆச்சியின் தம்பியார் எல்லாவற்றிலும் வல்லவராக இருந்தார். 

மரம் செதுக்குவார், இரும்பை வளைப்பார், பாய் பின்னுவார், மாட்டு வண்டிக்கு, கொழுவுக்கு எண்ணெய் போடுவார்.


பகல் உணவு தாமரை இலையில்தான் சாப்பிடுவோம். அதற்காக, தாமரைக் குளத்திற்குப் போய், தாமரை இலைகளைப் பிடுங்கி வருவார். 

அவருடன் நானும் போய் வருவேன்.


தண்ணீர்க் குழாய் கிடையாது, மின்சாரம் கிடையாது, குப்பி விளக்குதான். எனக்கு விவரம் தெரிந்தபிறகுதான், கண்ணாடி பொருத்திய விளக்குகள் வந்தன. 

மண் எண்ணெய் கிடையாது. விளக்குகளை தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெயில்தான் எரிப்பார்கள்.


எங்கள் வீட்டில் பாலும், நெய்யும் நிறைய இருக்கும். அரிசி, காய்கறிகளுக்குக் குறைவு இல்லை. 

வேலி ஓரங்களில் பயத்தங்காய் பயிரிட்டு விடுவோம். அது மாசி மாதம் காய்க்கும். அதுபோல, முருங்கை, கறிவேப்பிலை, கத்தரிச் செடி, மிளகாய்ச் செடி எல்லாம் வீட்டைச் சுற்றி வளரும். அப்படி தன்னிறைவு பெற்ற வீடு.


நான் சிறுவனாக இருந்தபொழுது நாட்டில் பட்டினிச் சாவுகள் இருந்தன. 

எனவே, அரசாங்கம் கூப்பன் அட்டைகள் கொடுத்தார்கள். 

அதற்கு ஒவ்வொரு வாரமும், மாவு, சீனி, வெள்ளை அரிசி கொடுத்தார்கள்.


அவற்றை நாங்கள் வாங்கி வருவோம். 

பயன்படுத்துவது இல்லை. மாடுகளுக்குத்தான் உணவாகப் போடுவார்கள். 

அந்த வெள்ளை அரிசியை அரிக்கன் அரிசி, அமெரிக்கன் அரிசி என்ற பல பெயர் சொல்லுவார்கள். ஆனால், நாங்கள் சிவப்பு அரிசி மட்டும்தான் சாப்பிடுவோம்.


வெள்ளை அரிசி சாப்பிடுவதை மானக் குறைவாகக் கருதுகின்ற ஊர், எங்கள் மறவன்புலவு. 


எனவேதான், வெள்ளை அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி மாட்டுக்குத்தான் வைப்பார்கள்.


என்னுடைய இளமைக்காலம், மாணவப் பருவம், செல்வம் எல்லாமே ஒரு குறைவும் இல்லாத வாழ்க்கை. இறைவன் கொடுத்தது. 


தொடர்ச்சி இதற்கு அடுத்த பதிவில்.


பதிவு 

அருணகிரி 

சங்கரன்கோவில் 

12 நவம்பர் 2022

மீள் பதிவு 

19 மே 2024

யாழ்ப்பாணம் 

FB Arunagiri Sankarankovil

மறவன்புலவு சச்சிதானந்தன் அருணகிரி உரையாடல் 2

 யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை


மறவன் புலவு சச்சிதானந்தன் அருணகிரி உரையாடல்

12.11.2022


பகுதி 2


மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் அருணகிரி உரையாடல் தொடர்ச்சி. 


யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை


மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் அருணகிரி உரையாடல்.


சிறுவனாக இருந்தபொழுது எனக்கு இரண்டு நோய்கள் தாக்கின. ஒன்று கூவக்கட்டு என்று சொல்லுவார்கள். கொடுப்புக் கட்டு மருவிக் கூவக் கட்டானது. 

கொடுப்புக் கழுத்துப் பகுதி வீங்கி விடும். 

அதுவும் ஒரு தீ நுண்மித் தொற்றுதான். 

எனவே, ஒரு திண்ணையில் என்னைத் தனியாக ஒதுக்கி உட்கார வைத்து விட்டார்கள். 

முருங்கைக்காய் அவியல் கறி, கத்தரிக்காய் அவியல் கறி, வெங்காயம் தருவார்கள். நிறைய மோர் குடிக்கச் சொல்லுவார்கள்.


அருணகிரி


மறவன்புலவில் உங்களுக்குக் குடிநீர் எப்படிக் கிடைத்தது?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


எங்கள் ஊரில் நிலத்தடி நீர் அவ்வளவு சுவையான நல்ல தண்ணீர். வயலுக்கு நடுவே கிணறு இருந்தது. அது ஊருக்கே பொதுக்கிணறுதான். எல்லோரும் வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு போவார்கள்.


சனிக்கிழமைதோறும் அம்மா எங்களை அந்தக் கிணறுக்கு அழைத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து உட்கார வைத்து விடுவார். 

அப்படி இரண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருப்போம். அதன்பிறகு, சீயக்காய் அல்லது ஏதேனும் அரப்பு போட்டுக் குளிப்பாட்டி விடுவார். 

அன்றைக்கு மிளகு ரசம் வைத்துத் தருவார்.


அம்மா யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வீட்டில் கிணற்றுத் தண்ணீரில்தான் குளித்தவர். 

எனவே, அவருக்காக அப்பா எங்கள் வீட்டில் ஒரு கிணறு வெட்டினார்.


நோய்த் தொற்று நீங்கியதும், வீட்டுக் கிணற்றுத் தண்ணீரில்தான் முதல் வார்ப்பு. 

அதற்குப் பிறகும் தொடக்கு மாறாது.


அருணகிரி


தொடக்கு என்றால் என்ன?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தொடக்கு என்றால், வீட்டை விட்டு விலக்கி வைப்பது. மாதம் மூன்று நாள்கள் பெண்களை விலக்கி வைப்பார்கள், 

நோய் வந்தால் தொடக்குதான், 

இறப்பு வீடுகளுக்குச் சென்று வந்தால் தொடக்கு. 

அந்த வேளைகளில் அவர்களைத் தொடக் கூடாது. குளத்தில் போய்க் குளித்துவிட்டுத்தான் வீட்டுக்கு உள்ளே வர வேண்டும்.


அவர்கள் விலக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இடத்தைச் சுற்றிக் கரியால் கோடு போட்டு வைத்து இருப்பார்கள். நான் படுத்துக் கிடந்த இடத்தைச் சுற்றிலும் வேப்பிலை கட்டி இருந்தார்கள். 

அடுத்து எனக்கு அம்மை வந்தபோதும் அப்படித்தான். நாங்கள் பொக்குளிப்பான் அம்மை என்று சொல்லுவோம்.


சின்ன அம்மை உண்டு, மற்றொரு அம்மை என மொத்தம் மூன்று வகையான அம்மைகள் உண்டு. பெயர்கள் மறந்து போய்விட்டன.


அம்மாவின் உறவினர்கள் மறவன்புலவுக்கு வந்து போனார்கள். யாழ்ப்பாணம், நீர்வேலி, அராலி, சித்தங்கேணி என யாவரும் குதிரை வக்கு வண்டியில்தான் வருவார்கள். 

அப்படி வருகின்றவர்கள், முறுக்கு, சீடை எனப் பலவிதமான பலகாரங்கள் செய்து கொண்டு வருவார்கள். காலையில் வருவார்கள். 

மாலை வரை உட்கார்ந்து பேசிவிட்டுத்தான் போவார்கள். அவர்களோடு கடற்கரைக்குப் போய் வருவோம்.


அப்பாவிடம் கேட்காமல், அம்மா வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். 


அப்பா, அம்மாவை மெய்யே என்றுதான் அழைத்தார். 

மெய்யே என்றால், உடம்பே அல்லது உண்மையானவளே என்று பொருள். 


அம்மா அப்பாவை என்னங்க, ஏங்க என்று சொல்லித்தான் அழைப்பார்.


அப்பா, அம்மாவை நீர், வாரும், போறீரா என்றுதான் சொல்லுவார். 

நீர் எங்கே இருக்கின்றீர்? உமக்கு என்ன வேணும்? என்றுதான் கேட்பார்.


ஆனால் அப்பா, தன் அம்மாவை, 

நீ, வா, போ, வாணை போணை, இருக்கிறியோணை, என்ன செய்யுதணை என்றுதான் பேசுவார். 

உனக்கு என்ன வேண்டி (வாங்கி) வரணும்? என்று கேட்பார். அவர்களுக்கு உள்ளே அப்படியான உறவு.


நீ, நான் என்று சொல்லுவதை தரக்குறைவாகக் கருதினார்கள். 

அப்படித்தான் எனக்கும் கற்பித்துக் கொடுத்தார்கள்.


வீட்டில் வெற்றிலைத் தட்டு இருக்கும். 

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக் குடுவை, பாக்குவெட்டி, பாக்கு உரல் எல்லாம் இருக்கும். 

வீட்டுக்கு யார் வந்தாலும், முதலில் வெற்றிலைப் பெட்டியைக் கொண்டு போய் அவர்கள் முன்பு வைத்து விட வேண்டும். 

அதற்குப் பிறகு தண்ணீர் கொடுக்க வேண்டும்.


ஆச்சி வீட்டுக்கு உள்ளே மற்றவர்களை விடவே மாட்டார். 

ஆனால் அப்பா மாறி விட்டார். யார் வந்தாலும், வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்து விடுவார். தேங்காய் சிரட்டையில் செய்த குடுவைகள் தொங்கும். 

அதில்தான் தேநீர் கொடுப்பார்கள்.


அப்பா மூக்குப்பேணியில்தான் கொடுப்பார். அதைப் பார்த்துவிட்டு ஆச்சி, 

இவனோடு கரைச்சலாப் போயிட்டுது என்பார். 


அப்படி ஆச்சி எதிர்த்தாலும், அப்பா மிகத் தெளிவாக இருந்தார். அவரிடம் இருந்துதான் எல்லோரும் சமம் என்ற உணர்வை நான் பெற்றேன். 

என் தாயாரும் அப்படித்தான். என் தந்தையார் என்ன நினைத்தாரோ, அதையும் என் அம்மாவும் செய்தார். அப்படியே என்னையும் வளர்த்தார்.


எல்லா வீடுகளிலும் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே இருக்கின்ற பிரச்சினைகள் எங்கள் வீட்டிலும் இருந்தது. 

அதை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், அப்பா முன்பு இரண்டு பேரும் கட்டுப்பெட்டியாக நிற்பார்கள். எதுவும் பேச மாட்டார்கள். ஆச்சி, அம்மாவைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.


கிராம அதிகாரிகளை விதானையார் என்று சொல்லுவார்கள். 

சிறுவனாக இருக்கையில் விதானையார் அறுளம்பலத்தார். 

அவர் ஓய்வு பெறுகையில், குதிரைகள் பொருத்திய சாரட் வண்டியில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். 

வழிநெடுகிலும் தோரணங்களைக் கட்டித் தொங்க விட்டு இருந்தார்கள். பெட்ரோமாக்ஸ், தீவட்டி விளக்கு வெளிச்சத்தில்தான் அவருக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அவருக்கு மலர் மாலைகள் அணிவித்தார்கள்.


எங்கள் வீட்டில் அப்பா மூன்று படங்களை மாட்டி வைத்து இருந்தார். 

காந்தி, நேரு படங்கள் தனித்தனியாகவும், இருவரும் ஒரு திண்டில் சரிந்து உட்கார்ந்து கொண்டு பேசுவது போல ஒன்றும் என மூன்று படங்கள் இருந்தன.


காந்தியைச் சுட்டுக்கொன்ற பொழுது, அவரது படத்தைக் காட்டிச் சொன்னார்கள். 

அதேபோல, டிஎஸ் சேனநாயகா, கொழும்பு காலி முகத்திடலில் குதிரை ஏற்றப் பயிற்சியின்போது கீழே விழுந்து இறந்தார் என்று சொன்னார்கள். 


எங்கள் ஊர் விதானையார்தான் அதிகாரம். 

அவரை மீறி, காவல்துறை எங்கள் ஊருக்கு உள்ளே வர மாட்டார்கள். கொலை, கொள்ளை, களவு, குடி எல்லாம் உண்டுதான். ஆனால், எங்கள் வீட்டுப் பக்கம் கிடையாது. யாரேனும் குடித்து விட்டு வந்தால், அப்பா அவர்களுடன் பேசவே மாட்டார். 

நீ நாளைக்கு வா என்று அனுப்பி விடுவார்.


ஒருவர் குடிப்பதை நம்மால் தடுக்க முடியாது. 

அதே வேளையில், குடிப்பவர்களுடன் பேசாமல் இருந்து கொள்ள முடியும்.


எங்கள் கிராமத்தில் வீடுகளில் கணவன் மனைவிக்கு உள்ளே பிரச்சினைகள் ஏற்படும். 

மாமியார் மருமகள் தகராறுகள் ஏற்படும். அங்கெல்லாம் அப்பா சென்று பேசித் தீர்த்து வைத்ததையும் கண்டிருக்கிறேன். 

வாத்தியார் சொன்னால் சரி என்று வழமையாகச் சொல்வார்கள்.


சிறுவனாக எனக்குத் தெரிந்த வரையிலும் 

நாங்கள் யாரையும் பகைத்துக் கொள்வது இல்லை. காவல்நிலையத்தில் ஒரு முறைப்பாடும் செய்தது இல்லை.


நாங்கள் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து பனந்தோப்புகளுக்குப் போவோம். ஈச்சம்பழம் பொறுக்குவோம். திடலுக்குப் போய் விளையாடுவோம்.


அப்போது பெரிய உருளையைக் கொண்டு வந்து சாலை போடுவார்கள். அதை வேடிக்கை பார்ப்போம். 

அதில் ஏறி விளையாடி இருக்கின்றேன்.


கோயிலாக்கண்டி என்ற ஊரில் ஏதோ ஒரு பிரச்சினை. எங்கள் தந்தையார் என்னையும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனார். 

அங்கே ஒரு வீட்டில் உட்கார்ந்து பேசினார்கள்.


அப்போது வீடுகளில், செம்பு, மூக்குப் பேணி என ஒரு சில பாத்திரங்கள்தான் இருந்தன. வேறு பெரிய பாத்திரங்கள் எதுவும் கிடையாது. டம்ளர் கிடையாது. சிறியவர்களுக்கு சிறிய மூக்குப் பேணி, பெரியவர்களுக்குப் பெரிய மூக்குப் பேணிதான். எங்கள் வீட்டில் மூன்று அளவுகளில் மூக்குப் பேணிகள் இருந்தன.


அந்த வீட்டில் தகரத்தால் செய்த மூக்குப்பேணியில் அப்பாவுக்கும் எனக்கும் தேநீர் கொடுத்தார்கள். 


அந்த வீட்டில் இருந்து நாங்கள் திரும்பி வரும்பொழுது, அப்பா என்னிடம், நான் அந்த வீட்டில் தேநீர் குடித்தேன் என்று ஆச்சியிடம் சொல்லாதே என்றார்.


அதாவது அப்படித் தேநீர் குடிக்கக்கூடாத வீட்டுக்கு நாங்கள் போயிருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டேன். 

ஆனால் அப்பா தன் வாழ்நாளிலேயே தீண்டாமையை ஏற்கவில்லை.


அருணகிரி


உங்கள் ஊரில் எத்தனை சாதியார் இருந்தார்கள்?


மறவன்புலவு க சச்சிதானந்தன்


மறவன்புலவில் என்னென்ன சமூகங்கள் இருந்தன? என்று நீங்கள் கேட்டீர்கள்.


பிராமணர், பண்டாரம், வேளாளர். 

முதலாவது நிலையில் கோவிலுக்குப் பூசை செய்கின்ற ஐயர்.

அடுத்த நிலையில், மாலை கட்டுகின்றவர்களே, 

சில கோவில்களில் பூசை செய்வார்கள். 

ஐயர் எல்லாக் கோவிலுக்கும் போக முடியவில்லை என்றால், பண்டாரங்களை அனுப்பி விடுவார்கள்.


அடுத்தது வேளாண்மை செய்கின்றவர்கள். 

அவர்களுள் சைவ உணவுக்காரர்கள், அசைவ உணவுக்காரர்கள் இருந்தார்கள்.


சாப்பிடும்போது கண் காணாமல் சாப்பிடுவார்கள். அதாவது, தாங்கள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது. ஐயர்மார் அப்படித்தான் சாப்பிடுவார்கள். 

எங்கள் வீட்டிலும் ஆச்சி அப்படித்தான்.


அந்த வேளாளருக்கு உதவிகள் செய்கின்ற ஒரு சமூகம் இருந்தது. 

கோவியர் என்று பெயர். அந்தச் சாதிப்பெயர் தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ கேள்விப்பட்டது இல்லை. வேளாளருக்கும் கோவியருக்கும் அதிக வேறுபாடு இல்லை.


அப்படி மூன்று நான்கு கோவியர் குடும்பங்கள் சுற்றி இருந்தால்தான், 

ஒருவர் வேளாளராகக் கருதப்படுவார். 

அந்தக் கோவியர்கள் தனித்துப் போக முடியாது. அவர்களுக்குத் தேவையான சாப்பாடு, வீடு துணிமணிகள் எல்லாமே, 

இந்த வேளாளர்தான் செய்து கொடுக்க வேண்டும்.


பள்ளியில் படிக்கும்போது, எனக்குப் பகல் உணவு கொண்டு வந்து ஊட்டி விடுபவர் ஒரு கோவியர்தான். அவர்கள் அந்த வேளாளர் குடும்பத்துக்கு உண்மையாக இருப்பார்கள். நிலத்தில் உழுவார்கள், மாட்டு வண்டி ஓட்டுவார்கள், வயல் வேலைகள் எல்லாம் செய்வார்கள்.


இதே கோவியர், கடற்றொழில் செய்பவராயின் 

கண்டிக் கோவியர். 

அவர்கள் மறவன்புலவின் கிழக்கான கடற்கரையோரப் பகுதியான அடைப்பற்றில் வாழ்பவர்கள். 

கடலில் களம் கட்டுவர், கண்டி கட்டுவர். சங்கு குளிப்பர். 


இவர்களைப் போலவே மீன் பிடிக்கும் கரையார் கோயிலாக் கண்டியில் இருந்தார்கள்.


இவர்களுக்கு அடுத்தபடியாக, 

கோயிலுக்கு வெள்ளை கட்ட, வீட்டுத் துணி வெளுக்க வண்ணக்கர் என்ற வண்ணார். 

முடி வெட்டுகின்ற அம்பட்டர், . பறை அடிக்கப் பறையர். வயல் வேலைக்குப் பள்ளர். மரம் ஏற நளவர்.


சிறுவனாக மறவன்புலவில் நான் அறிந்த சாதிகள் இவை.


எல்லாக் குடும்பத்துப் பிள்ளைகளும் பள்ளியில் ஒன்றாகத்தான் படித்தார்கள். 

அங்கே எந்தப் பாகுபாடும் கிடையாது. 

ஆனால், சாதிக் கண்ணோட்டம் இருந்தது. எங்களுக்குத் தருகின்ற மரியாதையை, மற்றவர்களுக்குத் தர மாட்டார்கள். 


வாத்தியார், என்னை தம்பி என்று கூப்பிடுவார்கள். அவர்களை, டேய் என்றுதான் கூப்பிடுவார்கள்.


அருணகிரி


தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பகுத்தறிவு, சுயமரியாதைப் பரப்பு உரைகள் செய்தது போல, ஈழத்தில் யாரேனும் செய்தார்களா?


மறவன்புலவு சச்சிதானந்தன்.


காந்தி அடிகளின் தாக்கம்தான் இருந்தது. 

என் அப்பாவுக்கு 18 வயதாக இருந்த காலத்தில் காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தார். 

அவரைப் பார்க்கத் தந்தையார் செல்ல விரும்பினார். கூட்டங்களுக்குப் போவதை விரும்பாத ஆச்சி தடுத்தார்.


ஆறுமுக நாவலர், சாதிக் கட்டுப்பாடுகளைக் காக்க வேண்டும். அதுதான் மரபு என்று சொல்லி வந்தார். ஆறுமுக நாவலரின் சக மாணாக்கர் சயம்பர் மறவன்புலவைச் சேர்ந்தவர்.


என் தந்தையார் ஆறுமுக நாவலர் மீது மதிப்புக் கொண்டவர் என்றாலும், 

இந்தப் பிரச்சினையில் அவர் தெளிவாக இருந்தார். அதற்குக் காந்தி அடிகள்தான் காரணம். 

சாதிப் பாகுபாட்டை மறுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்தவர்களுக்கு பேணியில்தான் தேநீர் தந்தார். ஆச்சிக்குப் பிடித்தம் இல்லை. அம்மாவும் அதை ஏற்றுக்கொண்டார்.


தந்தை பெரியார் இலங்கையில் கொழும்புக்கு வந்தார். யாழ்ப்பாணம் வரவில்லை. 

சிறுவனாக இருந்த காலத்தில் தந்தை பெரியாரை நான் அறிந்திருக்கவில்லை.


அருணகிரி


அசைவம் என்றால் ஆடு, கோழிதானே?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


அசைவம் எனச் சொல்ல மாட்டார். 

மச்சம் மாமிசம் உண்பவர் என்பார். 

மச்சம் மாமிசம் சமைக்கும் வீடுகளிலும், சமையல் அறைக்குள் மச்சம் சமைப்பது மிக மிகக் குறைவு. சமையல் அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் மச்சம் காய்ச்சும் சட்டிகளை வைப்பர். 

வெட்ட வெளியில் அடுப்பு மூட்டியே மச்சம் காய்ச்சுவர்.


கோயிலுக்கு விரதம் பிடிக்க வேண்டும். 

செவ்வாய் வெள்ளி விரதம், சித்திரை வைகாசியில் கோயில்களுக்குப் பொங்கல், ஆவணி வரை கோயில் திருவிழாக்கள், ஆடிச் செவ்வாய், ஆவணித் திங்கள், புரட்டாதிச் சணி, கௌரிக் காப்பு, ஐப்பசி வெள்ளி, கந்த சட்டி, கார்த்திகைப் பிள்ளையார் கதை, மார்கழித் திருவெம்பாவை, தைப் பொங்கல், பூசம், மாசி சிவராத்திரி, பங்குனித் திங்கள் எனத் தொடரும் விரத நாள்கள். 

எனவே மச்சச் சட்டிகள் சமையல் அறைக்கு வெளியே. தூய சட்டிகள் சமையல் அறைக்கு உள்ளே.


எங்கள் ஊர் கடற்கரை ஓரம் என்பதால், 

மீன்கள்தான் நிறையக் கிடைக்கும். 

என் ஆச்சியின் தம்பிக்கு, மீனைப் பற்றிப் பேசினாலே கோபம் வரும். 

ஓலையில் செய்த பறியில்தான் மீன் கொண்டு போவார்கள். கூடை போலப் பின்னி இருப்பார்கள். அப்படி அவர்கள் கொண்டு போவதைப் பார்த்தாலே, அங்கே போகாதே என்று கூறி என்னைத் தடுத்து விடுவார். 

அப்படி ஒரு அருவெறுப்பை எனக்கு ஊட்டி விட்டார்கள்.


எனவே, ஆடு வெட்டினார்களா? 

கோழி வெட்டினார்களா? என்பதை எல்லாம் நான் பார்த்ததே இல்லை. 

ஆனால், அம்மன் கோவிலில் கோழி குத்துவதாகச் சொல்லுவார்கள். பங்குனித் திங்கள் கடைசி நாளில் அப்படிச் செய்வதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.


நாங்கள் அந்தக் கோவிலுக்குப் போகக்கூடாது. 

வைரவர் கோவிலிலும் பலி கொடுப்பார்கள்.

அங்கேயும் நாங்கள் போகக் கூடாது.


ஆனால், ஒரேயொரு முறை, 

அந்த அம்மன் கோவிலுக்கு அம்மா அழைத்துக் கொண்டு போனார். பொக்கிளிப்பான் அம்மை நோய் வந்தபோது, முதல் வார்ப்பு வீட்டில் செய்தார்கள். இரண்டாவது வார்ப்புக்கு அந்த அம்மன் கோவில் கிணற்றுக்கு அழைத்துக் கொண்டு போய் தண்ணீர் வார்த்தார்கள்.


அது அம்மை நோய்தானே? 

அதனால், அந்தக் கோவிலுக்குப் போனோம். ஆனால், மொட்டாக்கு போட்டு மூடித்தான் அழைத்துக் கொண்டு போனார்கள். 

மொட்டாக்கு என்றால், தலையில் ஒரு துண்டு போட்டு மூடித்தான் கூட்டிக்கொண்டு போனார்கள். 

அங்கே தண்ணீர் வார்த்துக் குளிக்க வைத்து, புது உடுப்புகள் அணிவித்துதான் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.


அருணகிரி


அம்மைக்குத் தடுப்பு ஊசி குத்தினார்களா? 

எனக்கு மூன்று ஊசிகள் குத்தி இருக்கின்றார்கள். 

இடது கையில் மூன்று பெரிய தளும்புகள் உள்ளன.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்.


அக்காலத்தில் எங்கள் ஊரில் மருத்துவமனையே கிடையாது. 

ஊசி குத்தியதாகத் தெரியவில்லை. 

எனக்குத் தடுப்பூசிக் காயங்கள் தோள் பட்டையில் இல்லை. அக்கா, அம்மா, ஆப்பா, ஆச்சி ஆகியோர் இடது தோள் பட்டைகளில் தடுப்பூசித் தளும்புகள் இருந்தன.


அருணகிரி


மறவன்புலவில் காதல் திருமணங்கள் நடைபெற்றதாகச் சொன்னீர்கள். 

அது ஒரு சமூகத்திற்கு உள்ளே மட்டும்தானா? 

வேறு சமூகக் காதல் உண்டா?


மறவன்புலவு சச்சிதானந்தன்.


உண்டு. மலையகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வந்த எம் உறவினர் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த பெண்ணைப் பணிக்கு வைத்திருந்தனர். 

பெயர் சின்னப்பிள்ளை. 

எங்கள் வீட்டுக்கு உதவுபவர் ஐயம்பிள்ளை. 


ஒருநாள் அம்மா சொன்னார்கள், ஐயம்பிள்ளை சின்னப்பிள்ளையை அழைத்து வந்துவிட்டதாக. திருமண நிகழவு நடைபெற்றதாக எனக்கு நினைவு இல்லை.


குளத்தில் குளிக்கும் காலம் பழக்கம் ஏற்பட்டு விடும். குளத்தங்கரையில் பழகிய ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாலும் சமூகம் ஏற்றுக்கொண்டது.


சிறுவனாக நான் அறிய, குடிகாரர்கள், திருடர்கள், காவல்துறையால் தேடப்படுகின்றவர்கள். காமுகர்கள் எல்லாம் இருந்தார்கள்.


அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருந்தார்கள். 

எங்கள் கோவிலில் புராணம் பாடுகின்றவருக்கு எட்டுக் குழந்தைகள் இருந்தார்கள். 

மழவராயருக்கு ஒன்பது குழந்தைகள்.


முன்பு மதுக்கடைகள் இருந்தன. 

அது மருந்தாகவும் பயன்பட்டது. 

என் ஆச்சி, உடல்நலக் குறைவின்போது, சாராயத்தை மருந்து போல, அளவாகக் குடித்தார். மறவன்புலவில் சாராயம் காய்ச்சுகின்றவர்கள் இருந்தார்கள். 


ஒரு சமுதாயத்தின் அத்தனை விதமான இயல்புகளும், அந்தக் குக்கிராமத்தில் இருந்தன. 


மறவன்புலவு சனசமூக நிலையத்தினர் 

அரசு நிதியில் ஒரு சிறிய கட்டடம் கட்டி, 

அதற்கு உள்ளே அரசு தந்த ஒரு வானொலிப் பெட்டியை 1948இல் வைத்தார்கள்.


அதைக் கேட்பதற்காக நாங்கள் அங்கே போவோம். அங்கே போனாலும் கூட, 

அதை ஏன் கேட்க வேண்டும்? என்று சொல்லி, என்னை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.


கோடை காலத்தில் கண்ணகிக் கூத்தும், காத்தவராயன் கூத்தும் நடக்கும். 

பனங் குற்றிகளை நட்டுப் பலகைகளை அடுக்கிக் கொட்டகை மேடை அமைப்பார்கள். 

இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் தொடங்குவார்கள். விடிகாலை 3, 4 மணி வரைக்கும் சத்தம் போட்டுப் பாடுவார்கள். விளக்கு போட்டு இருப்பார்கள்.


கூத்துப் பார்க்கக் கூட என்னை விட மாட்டார்கள். ஆனால், எங்கள் வீட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். மேடைக்கும் வீட்டிற்கும் இடையில் வயல்வெளிகள்தான்.


அருணகிரி


அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி இருந்ததா?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


கிடையாது. கத்தித்தான் பாடுவார்கள். 

அத்தனைப் பாடல்களையும் மனப்பாடம் செய்து இருப்பார்கள். பூவரச மரத்தின் கீழே உட்கார்ந்து படித்துக் கொண்டே இருப்பார்கள்.


மலேசியாவில் இருந்த எங்கள் உறவுமுறைப் பெரியப்பா குடும்பத்தினர் போர்க்காலத்தில் மறவன்புலவு திரும்பினர். அவர் பெயர் மழவராயர்.


அருணகிரி


உங்கள் பகுதியில் இருந்தும் மலேசியாவுக்குப் போனார்களா?


மறவன்புலவு சச்சிதானந்தன்


அந்த ஒரு குடும்பம் மட்டும்தான் போயிருந்தார்கள். அவருக்கு ஒன்பது பிள்ளைகள். அதற்கு மேலும், அங்கே தோட்டத்தில் ஒரு பிள்ளையைத் தத்து எடுத்து வளர்த்தார்.


அருணகிரி


எப்படி? கப்பலா? வான் ஊர்தியா?


மறவன்புலவு சச்சிதானந்தன்


கொழும்பு சென்று அங்கிருந்து கப்பல் ஏறி, பினாங்கு போனார்கள்.


மூத்தவர்கள் நால்வரும் மலாயாவிலே தங்கினர். அக்கா முறையான இருவர், அண்ணன் முறையான நால்வர் மறவன்புலவுக்கு வந்தார்கள்.


அவர்கள் எங்கள் உறவுக்காரர்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் வருவோம். அங்கு ஓர் அண்ணன் வழியில் என்னைப் பார்த்தார். அவர்கள் வீட்டுக்கு முன்னிருந்த வரம்பில் நடந்தேன்.


அவரோ, 

தம்பி அந்த வயலில் இறங்கி நடந்து வாங்க என்றார். நானும் இறங்கி நடந்தேன். திடீரென ஒரு குழிக்கு உள்ளே விழுந்து விட்டேன். அது அவர் வெட்டி வைத்து இருந்த பொறி. மேலே ஓலைகளை அடுக்கி மண் போட்டு மூடி வைத்து இருந்தார். எனக்கு வேடிக்கை காட்டுவதற்காக அப்படிச் செய்து வைத்து இருந்தார்.


அக்காமார் இருவரும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் படிக்கச் சென்றனர். 

அண்ணன்மாரில் ஒருவர் படிக்கப் போகவில்லை. மற்றவர்கள் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கடைசி அண்ணன் மறவன்புலவிலும் படித்தனர்.


அருணகிரி


நீங்கள் என்ன படித்தீர்கள்? பள்ளிப் பருவம் மற்றும் உயர்கல்வி பற்றிச் சொல்லுங்கள்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


எனக்கு மூன்று வயதில், எங்கள் பிள்ளையார் கோவிலில் வைத்து ஏடு தொடக்கினார்கள். 

அரி ஓம் என்று முதலில் எழுதினேன். 

அடுத்து அ, ஆ கற்றுத் தந்தார்கள். சிலேட்டு பென்சில் வாங்கிக் கொடுத்தார்கள்.


வீட்டில் அம்மாவும் ஆச்சியும் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தார்கள். 

அம்மா மணலில் கையால் தரவி அ, ஆ எழுதிக் காண்பிப்பார். என் விரலைப் பிடித்து எழுத வைப்பார்.


முருங்கை மரத்திற்குக் கீழே, நான் படுத்து உறங்குகின்ற அந்தத் திண்ணைக்கு அருகில்தான் முதன்முதலாக என்னை உட்கார வைத்து அம்மா சொல்லிக் கொடுத்தார்.


நான் அடிக்கடி சிலேட்டை உடைத்து விடுவேன். பென்சிலைத் தொலைத்து விடுவேன். 

அதற்காகவே, அம்மா நிறைய சிலேட்டுகள், பென்சில் பெட்டிகள் வாங்கி வைத்து இருந்தார். 

ஒன்று காணாமல் போய்விட்டால், அடுத்தது எடுத்துத் தருவார்.


1944களிலேயே இலங்கையில் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி இருந்தது. 

கனகரத்தினா என்று நினைவு. அவர்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தக் காலத்திலேயே, 1945 இலேயே, பள்ளியில் பகல் சிற்றுண்டி தருவார்கள்.


8 மணி வாக்கில், நானும் அக்காவும், தங்கையும், ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவு, வயல்வெளிகளுக்கு ஊடாக நடந்து பள்ளிக்குப் போவோம்.


காலை வெயிலில் எங்கள் நிழலின் நீளத்தைக் காலடியால் அளந்து மணியைக் கணக்கிடுவோம்.


நான், சகலகலாவல்லி வித்தியாசாலைக்குப் போகும்பொழுது 

தொப்பி, சப்பாத்து (செருப்பு) அணிந்ததே இல்லை. கொளுத்துகின்ற வெயிலிலும் வெறுங்கால்களுடன்தான் நடந்து சென்றோம். சுடு மணலில் நடப்போம்.


ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு கூட்டு வழிபாடு நடைபெறும். தேவாரம், திருவாசகம்தான் பாடுவார்கள். வெள்ளிக்கிழமை என்றால், சிவபுராணம் சொல்லித் தருவார்கள்.


அந்தப் பள்ளியில் அப்போது 100 மாணவர்கள் வரை இருக்கலாம். அந்த எண்ணிக்கை எனக்கு சரியாகத் தெரியாது.


பள்ளிக்கூடத்தில் பலவிதமான விளையாட்டுகள் கற்றுத் தருவார்கள். கோலாட்டம் உண்டு. தேவாரம், திருவாசகம் பாட வைப்பார்கள். 

இசை, ஓவியம் கற்றுத் தருவார்கள். வாரோட்டம் உண்டு. அடுத்து கபடி போல ஒரு விளையாட்டு. 

அடுத்து 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்டம் எல்லாம் உண்டு.


கைவினைப் பொருட்கள் பின்னுவோம். அதற்கும் போட்டி நடத்தினார்கள். பனை ஓலையில் கொட்டைப் பெட்டி செய்வோம். எங்கள் ஆச்சி வண்ணவண்ணச் சாயங்கள் பூசி அழகாக ஒரு கொட்டைப் பெட்டி செய்து கொடுத்தார். அதை நான் பள்ளியில் போய்க் காண்பித்தேன். அதற்கு எனக்கு ஒரு சான்று இதழ் கொடுத்தார்கள். அப்பா அதை கண்ணாடிச் சட்டம் போட்டு வீட்டுச்சுவரில் மாட்டி வைத்தார்.


மழை பொழிந்தால், காவோலையைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு செல்வோம். 

அது காய்ந்து போன பனை ஓலைதான். 

அவை வழிநெடுகிலும் விழுந்து கிடக்கும். 

அல்லது வெட்டிப் போட்டு இருப்பார்கள். அதை எடுத்து வைத்துக் கொண்டு வருவோம்.


வயல்வெளிகள் முழுமையும் நீருக்குள் மூழ்கி விடும். எனவே, வரப்பின் மீது கவனமாகக் கால் பதித்து நடந்து வருவோம். சில இடங்களில் கால் புதையும். இப்போதும் கூட மழைக்காலத்தில் அப்படித்தான் மூழ்குகின்றது. 


பள்ளியில் ஐந்து அல்லது ஆறு ஆசிரியர்கள். 

அவர்கள் எல்லோருமே அந்த ஊர்க்காரர்கள்தான். தலைமை ஆசிரியர் பொன்னம்பல வாத்தியார் ஒரு கிலோமீட்டர் தொலைவு நடந்தே வருவார். சைக்கிள் ஓட்ட மாட்டார். 

கந்தையா வாத்தியார், நடேசன் வாத்தியார் இன்னும் பல ஆசிரியர்கள் பெயர்கள் நினைவு இல்லை.


வீட்டில் இருந்து வரப்புகள் வழி நடந்து போகும் பொழுது, வழியில் பிள்ளையார் கோயிலும் வள்ளைக்குளமும், பின் பனங் கூடல், அடுத்து ஒரு திடல். 

அந்தத் திடலில் பள்ளிக்கூட ஆசிரியை தங்கியிருந்தார். அவரை அக்கா என நாம் அழைப்போம். அவர்தான் ஒரே ஒரு பெண் ஆசிரியை.


பள்ளிக்கு வராத மாணவர்கள் வீட்டுக்கு 

மாலையில் பொன்னம்பல வாத்தியார் நேரடியாகப் போய்விடுவார். ஏன் வரவில்லை? என்ன குறைபாடு? என்று கேட்பார். எங்கள் வீட்டுக்கும் வருவார். அவரைக் கண்டு நாங்கள் பயந்து போய் மூலையில் உட்கார்ந்து இருப்போம்.


பொன்னம்பல வாத்தியார் ஒரு சித்த வைத்தியரும் கூட. மாலையில் அவர் வீட்டுக்குப் போனால், அங்கே ஐந்தாறு நோயாளிகள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார். மருந்து கொடுப்பார்.


அவர் மறவன்புலவுக்கு வந்து குடியேறியவர்தான். ஆனாலும், கிராம சபை உறுப்பினராக இருந்தார். 

சன சமூக நிலையத்தை வழிநடத்துவார். 

காரணம், அவர் தன் வாழ்க்கையை அவ்வளவு கட்டுப்பாடாக அமைத்துக் கொண்டவர். மற்றவர்களுக்கும் கட்டுப்பாடுகளைக் கற்பித்து ஒழுக்க சீலர்களாக வளர்த்தார்.


நெற்றி நிறைய திருநீறு பூசி இருப்பார்.

உயரம் குறைந்தவர் என்றாலும் பார்க்க வடிவாக இருப்பார். நல்ல உடை அணிந்து, மடிப்புச் சால்வை தோளில் போட்டுக்கொண்டுதான் வருவார்.


எங்கள் பள்ளி தனியார் பள்ளிதான். 

சைவ வித்தியா விருத்திச் சங்கம்தான் நடத்தியது. ஒரேயொரு நீண்ட கொட்டகை அறைதான். மாணவர்களுக்கு சீருடை எதுவும் கிடையாது. 

பத்து, பத்தரை மணிக்கெல்லாம் ஒரு சைக்கிளில் ஒரு பெட்டி கொண்டு வருவார்கள். 

எல்லோருக்கும் பாண் தருவார்கள். 

பாண் என்றால் ரொட்டி.

அது ஒரு இராத்தல், அதாவது அரைக் கிலோ இருக்கும். எனவே, அதை இரண்டாக வெட்டி, ஒரு மாணவருக்கு ஒரு துண்டு தருவார்கள். 

அதற்குத் தேங்காய், செத்தல் மிளகாய் அல்லது பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அம்மியில் அரைத்து அதற்கு மேலே தேங்காய் பூ தூவிச் சம்பலாகத் தருவார்கள்.

அப்படி 1945களிலேயே இலவச சிற்றுண்டி தந்தார்கள். 


பகல் உணவு, வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுவார்கள். 

கோவியர் தூக்கு சட்டியில் எடுத்துக்கொண்டு வருவார். 

பள்ளிக்கு அருகில் உள்ள கொட்டகைக்கு அழைத்துச் சென்று ஊட்டி விடுவார்.

பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை பள்ளி நடக்கும். மீண்டும் நாங்கள் வரப்பு வழியாக நடந்தே வீட்டுக்குத் திரும்புவோம். குளத்தில் தாமரைக் கொட்டையை உடைத்துத் திண்போம்.

அப்போதும் கோவிலுக்குப் போய்விட்டுத்தான் வீடு திரும்புவோம். 

அங்கே அப்பம், வடை, மோதகம் என ஏதேனும் தருவார்கள்.


பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு, 

துண்டு வேட்டி கட்டிக்கொண்டு மாடு மேய்க்கப் போய்விடுவேன். 

இரவில் உட்கார்ந்து குப்பி அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படிப்போம்.


ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழை மட்டுமே கேட்டு வளர்ந்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஆங்கிலம் அறிமுகம் ஆயிற்று.


அருணகிரி

1 முதல் 5 வரை எங்கே படித்தீர்கள்?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையில்தான் படித்தேன். 

என் அக்கா சேர்ந்த அடுத்த ஆண்டு நான் சேர்ந்தேன்.

முதலாம் வகுப்பில் படித்த நான், சுட்டிகையானதாகக் கருதிய ஆசிரியர், 

இரண்டாம் வகுப்புப் படிக்காமல், வகுப்புத் தாண்டி, மூன்றாம் வகுப்பில் அக்காவுடன் சேர்த்தார்.

 4ஆம் வகுப்பு வரை அங்கு படித்தேன்.


4ஆம் வகுப்பு பாதியிலேயே, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். 

அங்கே இந்துக் கல்லூரி தொடக்கப் பாடசாலையில் என்னைச் சேர்த்து விட்டார்கள்.


காரணம் என்ன என்றால், மறவன்புலவுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வந்தால், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம் கிடைக்காது. அங்கேயே உள்ள தொடக்கப் பள்ளியில் படித்தால், அப்படியே ஐந்தாம் வகுப்புக்கு அங்கேயே சேர்ந்து கொள்ளலாம் என்று கருதித்தான் 

அங்கே அப்பா என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். 

மற்றொன்று, அந்தப் பள்ளியில்தான் அப்பாவும் ஆசிரியராகப் பணி செய்து வந்தார்.


ஆனால், நாள்தோறும் மறவன்புலவில் இருந்துதான் யாழ்ப்பாணம் சென்று வந்தோம். 

எப்படி?

காலை ஆறு மணிக்கெல்லாம் தச்சன்தோப்புத் தொடரி நிலையம் போவோம். 

ஓன்றரைக் கிலோமீட்டர் தொலைவு. 

இரட்டைமாட்டு வண்டியில் போவோம்.

அப்பாவுடன் அக்காவும், நானும் அங்கே தொடர்வண்டியில் ஏறி, யாழ்ப்பாணம் போவோம். 


அங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துக் கல்லூரித் தொடக்கப் பள்ளிக்கு நடந்தே செல்வோம். 

எட்டு, எட்டரை மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.


அதேபோல மாலை மூன்று நான்கு மணிக்கு அங்கிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு தச்சன்தோப்பு வருவோம். மாட்டு வண்டி காத்திருக்கும். 

மறவன்புலவுக்கு வந்து விடுவோம். 

அவ்வாறு ஆறு மாதங்கள் கடந்தன.


அதன்பிறகு, 1949ஆம் ஆண்டு நாங்கள் யாழ்ப்பாணத்தில் அம்மா வீட்டுக்கே குடிபெயர்ந்து வந்தோம். 

அங்கே அம்மாவுக்கு ஒரு காணி இருந்தது. 

அவருக்குத் திருமணத்தின்போது சீதனமாகக் கொடுத்த காணி.

அப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்தின்போது, கட்டாயம் ஒரு காணி கொடுக்கின்றது வழமை. 

ஒரு மரபு.


அப்படி அம்மாவுக்குக் கிடைத்த காணியில், 

1950இல் அப்பா ஒரு கல் வீடு கட்டத் தொடங்கினார். தொடர்ச்சியாகக் கட்டவில்லை. விட்டுவிட்டுக் கட்டினார். காங்கிரீட் சிமெண்ட்டில் கட்டி ஓட்டால் மேற்கூரை போட்டார்.

மறவன்புலவிலும் வண்ணார்பண்ணையிலும் மண்வீட்டில், ஓலைக் கூரைக்குள் வாழ்ந்து பழகிய நாங்கள், சீமெந்து கன்கிறீட் ஓடு கொண்ட வீட்டுக்குள் புகுந்தோம்.


மூன்றாம் பகுதி தொடரும்.


அருணகிரி

யாழ்ப்பாணம் 

19 மே 2024