குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் இந்து
மற்றும்இந்துத் தமிழ் ஈழம் எனும் கருத்துரு
ஊடகப் புலமையர் திபிசெ செயராசர்
புதன் 10.04.2024
அறிமுகம்
சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தனும் அவரின் தோழர்களும் கிறித்தவ எதிர்ப்பில் உடன் நோக்கில் வெற்றி பெற்றனர். இந்து - கிறித்தவ மோதலினால் தமிழ்த் தேசிய வலிவைக் குறைப்பதிலும் நெடுநோக்கில் அவர்களின் நடவடிக்கைகள் வெற்றியே. தமிழ் தேசியத்தின் வரலாற்று எதிரிகள், கடந்த காலத்தில் தமிழர்களைப் பிளக்க முயன்றனர், முடியவில்லை. அவர்களால் முடியாததைச் சச்சிதானந்தன் நிறைவேற்றினார். இதில் முரண் நகை என்னவெனில், தமிழ்த் தேசியப் பண்ணையில் இளமை தொட்டு வளர்ந்தவரே, தன்னைத் தமிழ்த் தேசியராக இன்றும் கருதிக்கொள்பவரே சச்சிதானந்தன்.
ஊடகத்தார் திபிசெ செயராசராரின் கட்டுரை
இலங்கைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். எனினும் இக்காலத்திலேயே ஊடகங்கள் முன்னுரிமைச் செய்திகளாக்குகின்றன. குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கர் முதலாக ஊடக முதலாளி திலித்தர் சயவீரர் ஈறாக, பலரின் பெயர்களை ஊடகங்கள் வேட்பாளராக்கி அலசுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தல் களம், தளம்பல் நிலையில் கலங்கி உள்ளது. மெல்லிய இக்கலக்கலைத் தடித்த கூழாக்க இந்துத் தளத்தை விரிவாக்க முயல்வோர் இந்துக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்மொழிந்துளர். இந்துவே குடியரசுத் தலைவருக்கான பொது வேட்பாளர் என அரசியல் ஆர்வமுள்ளோரும் சிந்திக்கின்றனர். இது போதாதென்று, இந்து அமைப்பின் தலைவர் ஒருவரும் இலங்கை வாழ் இந்துக்களுக்கான பொதுவேட்பாளரை முன்மொழிந்துள்ளார். இந்துக்களே, “பொது வேட்பாளரான மனோ கணேசனுக்கு வாக்களியுங்கள்” எனக் கோருகிறார்.
இலங்கையில் சிவ சேனையின் நிறுவனர் - தலைவர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன். 5 ஏப்ரல் 2024, "ஈழநாடு" தமிழ் நாளிதழில் இவரின் அறிக்கை. சச்சிதானந்தன் என்றும் அழைப்பர். மறவன்புலவார் எனவும் அழைப்பர். குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் உள்ள யாழ்ப்பாணம் - மறவன்புலவு இவரின் ஊர் என்பதால்.
இலங்கையில் இந்துக்கள் பெரும் அச்சுறுத்தலில் உளர். இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் புத்த தீவிரர், கிறித்தவத் தீவிரர், முகமதியத் தீவிரர் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர். இந்த மூன்று மதங்களோடு ஒப்பிடும்போது, இலங்கையில் இந்துக்களுக்கு அரசியல் உரிமைகள் மிகக் மிகக் குறைவே. இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் கூறுகிறார்.
மூன்று பெரிய தேர்தல்கள் வர உள. இந்தத் தேர்தல்களில் ஆழமாக வேரூன்றிய இந்துப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களுக்கே இந்துக்கள் தங்கள் ஆதரவை வாக்காகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் அழைக்கிறார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மலையகம் எனப் பரந்து வாழும் 20 இலட்சம் இந்துக்கள், பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர். மனோ கணேசனைப் பொது இந்து வேட்பாளராக முன்னிறுத்துக. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கே வாக்களிக்க. சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் இந்துக்களை அழைக்கிறார்.
மனோ கணேசன்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன். 2015இல் உருவாகியதே தமிழ் முற்போக்குக் கூட்டணி. 2015 மற்றும் 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் 6 நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்ற கூட்டணி. இலங்கையின் மலையகத் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு. இந்தப் பின்னணியில் மனோ கணேசன் குடியரசுத் தலைவருக்கான இந்துக்களின் பொது வேட்பாளராவாரா? எப்படி!
இது தொடர்பாக மனோ கணேசனைத் தொடர்பு கொண்டேன். இந்துக்களின் பொது வேட்பாளராக விரும்பவில்லை என மனோ கணேசன் என்னிடம் எதுவும் கூறவில்லை. அவரோடு பேசியபின் அவர் விரும்பவில்லை என நான் ஊகித்தேன். சச்சிதானந்தனின் கூற்றைக் குறிப்பிட்டேன். “அது அவருடைய (சச்சிதானந்தன்) பார்வை” என்றார். மனோ கணேசன் நாத்திகரல்லவா? இந்து அல்லவே! மனோ கணேசன் கிண்டலடித்தார்.
இந்துக்களின் பொது வேட்பாளராக மனோ கணேசன் இல்லை என்றாலும், சிவ சேனைத் தலைவர் போன்ற இந்துத்துவ ஆதரவாளர்கள் தம் முயற்சிகளை விரைவில் நிறுத்த வாய்ப்பில்லை. அவர்களின் முயற்சிகள் தொடரும். சைவ சமய வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்றி, இந்துப் பெரும்பான்மைப் பகுதிகளில் புத்த விகாரைகளைக் கட்டும் இன்றைய சூழ்நிலையில், இந்துக்களின் வெறுப்பு வளர்ந்தே வருகிறது. எனவே, இந்துப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இந்துக்களை அணிதிரட்டுவது எளிதானதே.
வேலன் சுவாமிகள்
குடியரசுத் தேர்தலிலுக்கான இந்துத்துவ வேட்பாளருள், யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகளும் ஒருவர். கட்டுப்பெத்தையில் படித்த பொறியியலாளர், ஆன்மீக நாட்டத்தால் சின்மயா மிசனில் சேர்ந்தார், காவி உடை அணிந்தார். சில காலத்தின் பின்னர் சின்மயா மிசனை விட்டு நீங்கினார். சிவகுரு ஆதீனத்தை நிறுவினார்.
அரசியல் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். தளையிட்டனர். பிணையில் வெளிவந்தார். எனவே அவர் ஓர் "அரசியல் சுவாமி". அவருக்கு இந்திய இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவும் இருக்கலாம். இலங்கை இந்துக்களுள் இந்துத்துவாக் கருத்தாளர் அண்மைக் காலங்களில் ஊடுருவியுளர். அறியாமையாலோ தம் நலனுக்காகவோ இவர்கள் இந்துவையும் இந்துத்துவத்தையும் இணைத்துக்கொண்டனர். இந்துவாக இருப்பதும் இந்துத்துவாவைப் பின்பற்றுவதும் ஒன்றல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ்
இந்துத்துவா என்றால் என்ன?
அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஆக்சுபோர்டு அகராதி: இந்துத்துவா எனில் இந்து மயமாதல். இந்துத் தேசியத்தின் கருத்தியலே இந்துத்துவா. இந்தியத் துணைக் கண்டத்தின் பொதுப் பண்பாடே இந்துத்துவா.
மனிதப் புவியியல் அகராதி: இந்துத் தேசியத்தின் பண்பாட்டு அடையாளம் இந்துத்துவா. அனைத்து இந்துக்களும் தம்முள் பகிரும் பண்பாட்டுக் கூறுகளே இந்துத்துவம்.
தெற்காசியாவுக்கான அரசியல் மற்றும் பொருளாதார அகராதி: இந்து ஒற்றுமைக்கான கூட்டு அடையாளத்தை உருவாக்குவதே இந்துத்துவாவின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று.
இந்துத்துவா என்பது இந்தியாவின் இராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்), சார்ந்த அமைப்புகளான சங்க பரிவாரின் (சங்க குடும்பம்) முதன்மைக் கொள்கை. சங்க பரிவார் என்பது இராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையிலான இந்துத்துவா குழுக்களுக்கான நிழற் குடை. 1925இல் நிறுவிய இராட்ரிய சுவயம்சேவக சங்கம், இந்தியாவைத் தளமாகக் கொண்டது, படைக் கட்டமைப்பை ஒத்த அமைப்பு. சங்க பரிவாரின் நடுவில் ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்துவை மேம்படுத்துக. இந்துக்கு முன்னுரிமை தருக. இதற்கான வியூகங்களை ஆர்எஸ்எஸ் அமைத்து, தேசியவாத இலட்சியங்களையும் இலக்குகளையும் ஒருங்கிணைத்து, இந்து அரசு, இந்து ஆட்சி, இந்து தேசம் அமைத்தலே பணி.
ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளாக, விசுவ இந்து பரிசத்து, (விஎச்பி), பட்சரங்க தளம், பாரதிய சனதாச் கட்சி (பிஜேபி), அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்து (ஏபிவிபி) மற்றும் பல அமைப்புகள் உள்ளன. அவற்றில் சில சிறிய அமைப்புகள், வழிபாட்டு முறைகள் அல்லது அரசியல் கட்சிகள்.
தோராயமாக 585,000 உறுப்பினர்களைக் கொண்டதே ஆர்எஸ்எஸ். 57,000 க்கும் மேற்பட்ட கிளைகளும் தோழமை அமைப்புகளும் உள. தொழிற்சங்கப் பிரிவு (பாரதிய மத்தூர் சங்கம்), பெண்கள் பிரிவு (இராட்ரிய சேவிகா சமிதி), மாணவர் பிரிவு (அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத்து) மற்றும் பொருளாதாரப் பிரிவு (சுதேசி யாகரன் மஞ்சு) என்பன சில. பாரதிய சனதாக் கட்சி, புது தில்லியில் ஆளும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம். ஆனால் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கண்காணிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆளும் பாசக அரசில் உள்ள 75% அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களே.
இந்துத்துவ மயமாக்கல்
இலங்கை இந்துத்துவ மயமாகுதல் வருத்தம் தருவதே. இலங்கைத் தமிழ்ச் சமூகம் எனில் இந்துக்களின் சமூகமே. யாழ்ப்பாணத் தமிழ் இந்துக்கள் சைவ சமயத்தினரே. உறுதியான சைவப் பற்றினர் எனினும் தமிழ் இந்து சமூகம் பொறுமையானோரே, நல்லிணக்க ஆர்வலரே. இலங்கை அரசியலில் தமிழர்களாக இருப்பதே சிக்கல். இந்துக்கள் அல்லது கிறித்தவர்களாக அன்றித் தமிழர் என்பதாலேயே பாதிப்புற்றனர்.
மேனாட்டு மேலாதிக்க எதிர்ப்பின் மீட்சி
சிங்களவரும் தமிழரும் மேனாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்தனர். தேசிய மறுமலர்ச்சியை விழைந்தனர். இதில் சிங்களவரும் தமிழரும் சிற்சில வேறுபாடுகளுடன் ஒரே வழியைப் பின்பற்றினர். அவர்களுக்கு மொழியைவிட மதம் முதன்மைத் தேசியமானது. அநகாரிக தர்மபாலரின் புத்த மறுமலர்ச்சி. ஆறுமுக நாவலரின் சைவ மறுமலர்ச்சி. இவர்கள் காட்டிய தேசிய மீளெழுச்சி சமயங்கள் சார்ந்ததே.
விடுதலைக்குப் பின் இந்த மறுமலர்ச்சியின் தொடர்ச்சி பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள புத்தத் தேசியமே சிங்கள மக்களின் மறுமலர்ச்சியின் எழுச்சியாகத் தொடர்ந்தது.
சிங்கள புத்தத் தேசிய எழுச்சியின் பலிகடாக்களான தமிழர், மொழி சார்ந்து எழுந்தனர். மதம் சார்ந்ததாகக் கிளரவில்லை. சிங்களத் தேசிய எழுச்சிக் காலத்தில் தமிழ்த் தேசியம் எழுந்தபோது அது மதச்சார்பற்றதாக மாறியது. தமிழ் இந்துத் தேசிய எழுச்சியாக அன்று.
இதற்குப் பல காரணங்கள். இரண்டு சிறப்புக் காரணங்கள். அரசியல் தலைவராக கிறித்தவர் சா. யே. வே. செல்வநாயகம் ஒருவர். மொழிப் பண்பாட்டுத் தலைவராகக் கத்தோலிக்கர் சேவியர் தனிநாயகம் மற்றவர். தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர் அருட்தந்தை தனிநாயகம். தம் பெருமைமிகு பாரம்பரியத்தை தமிழர் அறிந்து இறும்பூதெய்த அவரும் காரணர்.
தமிழ்ப் பேசும் மக்கள்
சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்திற்கு செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்க் கப்பலின் தலைசிறந்த தலைவனாக அவரது இருப்பு. மொழியைத் தளமாகக் கொண்ட மதச்சார்பற்ற தமிழ்த் தேசியத்தின் போக்கே அவரின் வழி. தமிழ் இந்துக்களையும் கிறித்தவர்களையும் அரவணைத்தார். முகமதியர்களையும் "தமிழ்ப் பேசும் மக்கள்" என்ற கருத்துள் இணைத்தார். அவரால் மொழிவழித் தேசியத்துக்கே வெற்றி. அவரது அரவணைப்பை முகமதியர் உதறினர். இன - மொழி அடையாளத்திற்கு மாறாக இன - மத அடையாளத்தை முகமதியர் தேர்ந்தனர்.
எனினும் இந்து - கிறித்தவ ஒற்றுமை மேலோங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளி அமைப்புகளும் அடிப்படையில் மதச்சார்பற்றவையே. எவ்வாறாயினும், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த ஒற்றுமை சில அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
மதமாற்றம்
முதலாவது காரணம்,
புதிதாக முளைத்த நற்செய்தி மதமாற்றச் சபைகள். அவை உருவாக்கிய உறுத்தல்களும் உளைச்சல்களும். முன்பு உருவான கிறித்தவ தேவாலயங்கள், தமிழ்ப் பகுதி இந்துக்களுடன் நிலையான புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. வாழுங்கள், வாழ விடுங்கள் என்பதை இரு சாராரும் ஏற்றனர். இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்ற முயற்சிக்கவில்லை. புதிய நற்செய்தி மதமாற்றச் சபைகளும் குழுக்களும் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய கிறித்தவர்களில் பலர் புதிதாக மதம் மாறியவர்களுக்கான வெறியுடன், வைராக்கியத்துடன், ஆர்வத்துடன், இந்துக்களை மிதித்தனர். தமிழ்ப் பகுதிகளில் இந்து -கிறித்தவ உறவுகளை உறுத்தினர், உடைத்தனர்.
அரசியலாரும் ஊடகத்தாரும்
இரண்டாவது காரணம்,
இந்துச் சார்பு அரசியலாரினதும் ஊடகத்தாரினதும் எழுச்சி.
தமிழ் அரசியலில் கத்தோலிக்கர் பலர் உளர். புரட்டட்டாந்தியர் பலர் உளர். கடந்த கால, இக்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த கால மாகாண சபை உறுப்பினர்கள், கடந்த கால உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் எனக் கிறித்தவர் பலர் அடங்குவர். அண்மைக் காலமாகக் கிறித்தவ அரசியலாருக்கு எதிராக மதக் கூச்சலை எழுப்பி, அரசியல் நன்மையைப் பெறச் சில இந்து அரசியலார், மறைமுகமாகவோ நேரடியாகவோ முயல்கின்றனர். பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர் இந்துக்கள் என்பதால், கிறித்தவ எதிரப்பு உணர்வுகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பர்.
மேலும் தமிழ் அரசியலின் மதச்சார்பற்ற தன்மையும் சிதையத் தொடங்கியுள்ளது. தமிழ் அரசியல் கூட்டங்களின் தொடக்கத்தில், தமிழ்த் தாய் வாழ்த்து இசைப்பதே முந்தைய வழமை. இக்காலத்தில் தமிழ் அரசியல் கூட்டங்கள் இந்து மத வழிபாட்டுடன் தொடங்குகின்றன.
இக்கால அரசியலார் ஒருவர், நெற்றியில் திருநீறு பூசுவார். வடமொழி மந்திரங்களை ஓதுவார். அதன் பின்னரே தன் உரையைத் தொடங்குவார். திருநீறு அணிவதோ வடமொழி மந்திரங்களை உச்சரிப்பதோ தவறல்ல. எனினும் கடந்த காலங்களில் அரசியல் கூட்டங்களில் இம்முறைமையைப் பின்பற்றியதில்லை.
அப்பட்டமான கிறித்தவ எதிர்ப்பு உணர்வு காட்டும் அரசியலாரையும் இக்காலத்தில் காண்கிறோம். இது மேலும் வருத்தத்துக்குரியது. உத்தரப் பிரதேசத்தின் பாசக முதல்வர் யோகி ஆதித்தியநாதர் போன்று அடிக்கடி காவி உடை அணிபவர் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். இந்துக்கள் மட்டுமே கூடும் அவையில், நீள் வெண்ணுடை அணிந்த அருட்தந்தையரைக் கண்டால் காரித் துப்புவார். அத்கைய அருவருப்பான பழக்கம் அவருக்கு.
அநீதிகளுக்கு எதிராகத் தமிழ் இந்துக்கள், தமிழர்களாக அல்ல, இந்துக்களாகவே போராட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்தை அண்மைக் காலமாக மற்றொரு தமிழ் நாளிதழ் பரப்பிவருகிறதே.
ஆர்எஸ்எஸ் - பாசக
மூன்றாவது காரணம்,
இலங்கையில் இந்து - கிறித்தவ ஒற்றுமைக் குலைவுக்கு ஆர்எஸ்எஸ் – பாசகவும் காரணமே. 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாசக அரசு ஆட்சியில். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து இந்து ஆர்வலர் வரத் தொடங்கினர். குறிப்பாக, வடபகுதிக்குத் தீவிர வலதுசாரி இந்து ஆர்வலர்கள் வருகை தந்தனர். இவர்கள் சங்க பரிவாரத்தின் பல்வேறு சிறிய அமைப்புகளையோ அரசியல் கட்சிகளையோ சேர்ந்தவர்கள். இலங்கைத் தமிழ் இந்துக்களைத் தேடி வந்தனர். இவர்களின் வருகையால் வடக்கில் இந்து - கிறித்தவ உறவுகள் சீர்குலைந்தன.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு அடிக்கடி வருவார். முகமதியரை வெறுப்பவர். கிறித்தவரை வெறுப்பவர். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முகமதிய எதிர்ப்பு வன்முறைக்காக இவரைச் சிறையில் அடைத்தனர். பாதிப்புற்ற முகமதியரை மருத்துவமனையில் பார்க்க வந்த இந்து சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியதற்காக இவரைச் சிறையில் அடைத்தனர். குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்காவின் தலைமை ஆலோசகர் சாகல இரத்தினநாயக்கவை அருச்சுனர் சம்பத்தர் ஒருமுறை சந்தித்தார். கொழும்பு அரசில் தனக்கு மிகவும் செல்வாக்கு இருப்பதாகக் காட்டவே இச்சந்திப்பு.
இந்துத் தேசிய அரசு
இலங்கைத் தமிழ் அரசியலில் பாசக - ஆர்எஸ்எஸ் தாக்கமே இந்துத் தமிழீழம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தமிழர்களுக்கான தனித் தமிழ் நாட்டுக் கனவு முடிவுக்கு வந்தது. இருப்பினும், இந்துத் தேசிய அரசாக இருந்தால், தமிழ் மாநிலத்தை உருவாக்குவதற்குப் புதுதில்லி முன்வரும் என்ற பரப்புரை எழுந்துள்ளது. மதச்சார்பற்ற நாடு என்பதே தமிழீழக் கோரிக்கை. ஆனால் இப்போதோ ஆர்எஸ்எஸ் - பாசக அரசு, இந்துத் தமிழ் ஈழம் அமைக்க மட்டுமே உதவுமாம்.
இந்தியாவில் பொறுப்புள்ள எவரும் இந்து ஈழம் என்று குறிப்பிடுவதில்லை, ஆனால் சங்க பரிவாரத்தின் கீழ்மட்ட செயற்பாட்டாளர் பலரும், புலம்பெயர் தமிழ் மக்களின் ஏமாற்றுக் குரல் வீரர்களும் இந்துத் தமிழீழம் திட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களுள் ஒருவர் இலங்கைத் தமிழ்த் தேசியக் கவிஞர் காத்தமுத்து சிவானந்தன் என்ற காசி ஆனந்தன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்துத் தமிழ் ஈழம் கிறித்தவர்களை விலக்குகிறது. இச் சொல்லே இந்து - கிறித்தவ உரசல்களுக்கு அடித்தளம்.
இந்து - கிறித்தவப் பிளவு
இந்து - கிறித்தவப் பிரிவினையைச் சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் கையில் எடுக்கிறார். பிளவை மேலும் விரிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலைக் கழகத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சோற்றுக் கத்தோலிக்கர் என்றார். உலகெங்கும் சிலர் மதம் மாறிய கிறித்தவர்களை சோற்றுக் கிறித்தவர்கள் என இழிவாக அழைப்பர். அவர்களின் முன்னோர்கள் சோற்றுத் தட்டுக்காக கிறித்தவத்தை ஏற்றார்களாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியலாரைச் சந்தித்தது. இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகிய ஐவர் அக்குழுவில் இடம்பெற்றனர்.
சிவ சேனைத் தலைவர் ஓர் அறிக்கையில் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுள் 84% இந்துக்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழுவிலோ 60% இந்துக்களே. 16% கிறித்தவர்களுக்குக் குழுவில் 40% எப்படி? எனக் கேட்டார். அடைக்கலநாதன் கத்தோலிக்கர். சுமந்திரன் புராட்டட்டான்ட்டர். இதையே சச்சிதானந்தன் சுட்டினார்.
சச்சிதானந்தனும் சிவ சேனையும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் கிறித்தவ மறுமலர்ச்சிக் கூட்டங்களை, எழுச்சி நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்திய பெருமையை அடிக்கடி கூறிவருகின்றனர். அவர்களின் வியூகம் எளிமையானது. இத்தகைய கூட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் துண்டு அறிக்கைகள் வெளியிடுவர். மக்களிடை பரப்புவர். மறைமுக மிரட்டல் தொடரும். பின்னர் இத் துண்டு அறிக்கைகள் காவல்துறையில். கிறித்தவக் கூட்டங்கள் நடந்தால் சமாதானம் கெடுமாம். காவல் நிலையத்தில் முறையீடு. கூட்டங்களுக்கான உரிமத்தைத் திரும்பப் பெறக் காவல்துறையை வற்புறுத்துவர். அதனால் கூட்டங்களுக்குத் தடை.
சிவ சேனைத் தலைவர் சச்ச
No comments:
Post a Comment