Monday, March 02, 2026

கச்சைதீவு 1974 ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு முன்னரே இலங்கைக்கே சொந்தமானது! தொடர்:” -01- கடந்த (2024) இந்திய தேர்தல் களத்தில், தமிழ் நாட்டில், கச்சதீவு பிரதான பேசு பொருளாக. தேர்தல் பிரசாரத்தில் முன் நிறுத்தப்பட்டுள்ளமை மிகுந்த கவலையை அளித்தது! குறிப்பாக இந்தியப் பிரதமர் மதிப்பார்ந்த் மோடிஜியே இதைக் கையில் முதலில் எடுத்தவர். நாமறிந்த வகையில், நூறு வருடங்களுக்கு மேலாகவே கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய நிர்வாகமும் அதன் வழிபாட்டு திருநாள் ஏற்பாடுகளும் அவ்வாலயத்தின் மூப்பராக நெடுந்தீவில் இருந்து செயற்பட்டு வந்தவர் இறையடி ஞானப்பிரகாசம் அவர்களாவர். அவருக்குப் பின்னர்; அவரின் புதல்வர் இறையடி அந்தோனிப்பிள்ள அவர்கள், அவ்வாலய மூப்பராக அவர் வந்தார். அவரைத் தொடர்ந்து, அவரை ஞானத்தந்தையாகக் கொண்ட புலவர் ஏ. டபிள்யூ. அரியநாயகம் அவர்கள் அவ்வாலயத்தின் மூப்பராகச் சேவை ஆற்றினார். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப்போர் காரணமாக, 1983ல்கச்சதீவு திருவிழாவும் அங்கு யாத்திரைகளும் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகத் தடைபட்டது. ஆரம்ப காலத்தில் நெடுந்தீவு பக்தர்கள் மட்டுமே கட்டுமரங்களிலும், வத்தைகளிலும் சென்று, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்குகொண்டு வந்துள்ளார்கள். நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்திலிருந்து கூடு என்று அழைக்கப்படும் சுற்றுலாவுக்குரிய எழுந்தருளி ஆசனப் பீடம் போன்ற புனிதப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. தவக்காலம் ஆரம்பமாகி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்தேறி வந்ததுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திரப்படகுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே மன்னார், ஊர்காவற்றுறை, பாசையூர், குருநகர் மக்களும் அதிக அளவில் செல்லத் தொடங்கினர் என்று எம்மவர்கள் சொல்லிக்கொள்ளுகிறார்கள். முன்னர், எம்மூர் மீனவ உறவுகள் பலர், கச்சதீவு பெருநாள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, தங்கள் கட்டுமரங்களில், மீன்பிடி உபகரணங்கள் சகிதம் கச்சதீவு சென்று, தங்கியிருந்து மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள். திருவிழா நிறைவு பெற்றதும் திரும்புவார்கள் என்பதும் ஒரு வரலாறு. திருவிழாவிற்குச் செல்லும் எம்மவர்கள் சிலர் அத்தீவில் விளைந்திருக்கும் காட்டுக் கரணைக்கிழங்கு (எம்மவர்கள் அதை வீணாலைக் கிழங்கு என அழைப்பர்.) மற்றும் அவரைக்காய் போன்ற மூலிகை வகை தாவர உணவுப் பொருட்களையும் சேகரித்து எடுத்து வருவதுண்டு. ஆலயம் வரும் யாத்திரியர்களின் வசதிகருதி தொடக்கத்தில் ஆலய பரிபாலன குழுவினரும், பின்னர் நெடுந்தீவு கிராம சபையின் ஏற்பாட்டில்: ஆலய சுற்றுப்புறங்களில் உள்ள பற்றைகளை அகற்றுதல், சுற்றுப்பிரகார வீதி துப்பரவு செய்தல், தங்குவதற்கான தற்காலிக கொட்டகைகள் மற்றும் கழிவு கூடங்கள் அமைத்தல் போன்ற பல அவசிய கருமங்களைச் செய்துகொடுத்து வந்தது. அதன் பிற்பாடு இந்த வேலைகளை யாழ்பபாண கச்சேரி (செயலகம்) நிதி ஒதுக்கி கேள்விப் பத்திர (Tender) மூலம் நடைமுறைப் படுத்தியது. அத்தியாவசிய தேவைக்காக நாநூறு கலன் (ஏ.கு. 450லீற்றர்) அளவுகள் கொண்ட கொள்கலன்களில் குடிநீர் நிரப்பி “வத்தை” என்று அழைக்கப்படும் பெரிய பாய்த்தோணி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டதும் நாம் நேரில் பார்த்த, அறிந்த விடயங்கள். தேவாலய உற்சவம் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஞாயிறு திருப்பலி, சுற்றுப் பிரகாரம் மற்றும் கொடி இறக்கல்கல் வழிபாட்டுடன் நிறைவுக்கு வரும். அன்றைய தினம் பிற்பகல்இரண்டு மணிக்கு முன்னர் யாவரும் கச்சதீவை விட்டுச் சென்றுவிட வேண்டுமென்பது அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட (எழுதப்படாத) சட்டமாக இருந்து வந்துள்ளது! இவ் விழாக் காலங்களில் இலங்கை கடற்படையினர் கச்சைதீவுக் கடலில் நங்கூரமிட்டு இருப்பார்கள். அவ்வேளைகளில் யாத்திரீகர்களுக்கு அவசர உதவி செய்யத் தயாராக இருப்பதுடன், தரித்து நிற்கும் வேளைகளில் குடி நீரும் வழங்குவார்கள். 1975ம் ஆண்டுகளுக்குப் பின்னரே கடற்படையினரின் தீவிர உரோந்து நடவடவடிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டமை நினைவு கூரத்தக்கது. நெடுந்தீவு, குறிகாட்டுவான், ஊர்காவற்றுறை, மற்றும் அலுப்பாந்தி( யாழ்பபாணம்) போன்ற இடங்களில் விசேட சுங்க நிலையங்கள் அமைத்து சுங்கப்பகுதியினர் யாத்திரீகர்கள்; போகும்போதும் வரும்போதும் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்லாதவாறும், நுளையாதவாறும் ஆய்வு செய்து அனுப்பிய காலங்களும் பிற்காலத்தில் 1982 வரையில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. மூப்பர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் காலத்திற்கு முன்னரே ; நெடுந்தீவுப் பங்குக்குட்பட்ட ஆலயமாகவே கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயம் செயற்பட்டு வந்துள்ளது. நெடுந்தீவுப் பங்குத்தந்தையும், இந்தியா மானாமதுரை பங்கின் மத குரு ஒருவரும் இணைந்தே வழிபாடுகளை ஒப்புக்கொடுத்து வந்துள்ளனர் என்பது பலரும் அறிந்த விடயம். தொடர் இரண்டு நாளை மறுதினம்